82.அரசர் சிறப்பு

 


"மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட

     வரும்அதிக ரணவீ ரமும்,

  வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,

     வாசிமத கரியேற் றமும்,


கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,

     கைகண்ட போர்ப்ப டைஞரும்,

  கசரத பதாதியும், துரகப்ர வாகமும்

     கால தேசங்க ளெவையும்


இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்

     கிளையாத தளகர்த் தரும்,

  என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,

     ஏற்றம்உள குடிவர்க் கமும்,


அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்

     அரசராம்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மனுநீதி முறைமையும் - மனுவினால் ஏற்படுத்தப் பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக ரணவீரமும் - மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர் வீரமும், வாள் விசயமொடு சரச சாதன விசேடமும் - வாள்கொண்டு வெற்றி பெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும் சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் - குதிரை தேற்றம் யானை ஏளற்றங்களில் பயிற்சியும், கனம் ஆம் அமைச்சரும் - பெருமை மிக்க மந்திரிகளும், பலமான துர்க்கமும் - உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் - பயிற்சி பெற்ற போர் வீரரும், கச ரத பதாதியும் - யானைள, தேர், காலாட்களும், துரக ப்ரவாகமும் - குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய் அறிந்த தானாபதிகளோடு - காலம் இடம் முதலானவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் - போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய சமுத்திரமும் - எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய பெருக்கும், ஏற்றம் உள குடிவர்க்கமும் - (வெளிநாட்டில் இருந்தும்) வந்து சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம் அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் - இங்குக் கூறப்பட்ட இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

      இரணம் - புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம். வாள்விசயம் - போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் - சாமபேத தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு, மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை என்பதைவிடக் (குடி)யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.

"மனுநீதிச் சோழன்" என்னும் அரசன் பற்றி பெரியபுராணத்தில் உள்ளது. மனுநீதியைக் கடைப்பிடித்து ஒழுகுவதில் சிறந்தவனாக இவன் விளங்கினான். "இந்த மனுநீதி பழைய காலத்தைச் சேர்ந்தது. இடைக் காலத்தில் மனுநீதி இடத்துக்கு ஏற்றவாறு திரிக்கப்பட்டது. நாளடைவில் அதன் உரு குலைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது மனுவின் பெயரால் வழங்கப்படுவது ஸ்மிருதி. பண்டை மனுதர்மம் இறந்து பட்டது" என்பது தமிழ்த் தென்றல் திரு வி க அவளர்களின் கருத்து.


No comments:

Post a Comment

பொது --- 1104. எழுபிறவி நீர்நிலத்தில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் எழுபிறவி நீர்நிலத்தில் (பொது) முருகா!  இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர். தனதன...