உலகநீதி - 10

 



"மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்;

    வாதாடி, வழக்கழிவு சொல்ல வேண்டாம்;

திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்;

    தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்;

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்;

    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்;

குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

மறம் பேசி- வீரமொழி கூறி,  திரிவாரோடு (போருக்கு) அலைபவருடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே.

வாதாடி - வாதுகூறி, அழிவு வழக்கு - கெடு வழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே.

திறம் பேசி - வலிமை கூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே.

தெய்வத்தை - கடவுளை, ஒரு நாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.

இறந்தாலும் - இறக்க நேரிடுமாயினும், பொய் தன்னை - பொய்யை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே.

ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே.

குறம்பேசி - குறி சொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய் - சொல்லித் துதிப்பாயாக.


பொழிப்புரை---

வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம் பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவர். மறம் என்ற சொல்லுக்குப் பாவம் என்று ஒரு பொருளும் உண்டு. மறம் பேசி என்பதற்குக் கொலை, திருட்டு, கள்ளுண்ணுதல், குருநிந்தை மற்றும் முறையற்ற காமம்.  முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்றும் பொருள் கொள்ளலாம்.

வழக்கு அழிவு என்பதை அழிவு வழக்கு என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் சென்று அழி வழக்குப் பேசுதல் கூடாது. அழி வழக்கு - வழக்கல்லாத வழக்கு ; பொய் வழக்கு.

வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம் பேசல் - தன் வலிமை முதலியவற்றைத் தானே புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை. "வல்லமை பேசேல்" என்பது ஆத்திசூடி.

கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்க வேண்டும். ஒருநாளும் என்றது இன்பத்திலும், துன்பத்திலும் என்றபடி.

உயிர் நீங்க நேர்ந்த இடத்தும் பொய் கூறுதல் கூடாது. ("பொய்யாமை பொய்யாமை அற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று" என்னும் திருக்குறள்ள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.) உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து.

மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல்.

குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி - சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததைக் குறித்துக் கூறல். வள்ளி அம்மையார் குறி சொல்லவில்லை. தினைப்புனத்தைக் காத்துக் கொண்டு இருந்தார். குறப் பெண்டிர் செய்கை வள்ளிக்கு ஏற்றிச் சொல்லப்பட்டது.


No comments:

Post a Comment

பொது --- 1104. எழுபிறவி நீர்நிலத்தில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் எழுபிறவி நீர்நிலத்தில் (பொது) முருகா!  இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர். தனதன...