"கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்
தெரியாது! கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்!
படியளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
உலகமெலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதின்ஓட்டாங்
குச்சில்முளை வீசி டாதே!"
இதன் பொருள் ---
படி அளக்கும் தண்டலைநீள் நெறியாரே - உயிர்களுக்குத் தக்க வினைப் பயனை ஊட்டும் திருத் தண்டலையில் எழுந்தருளிய நீள் நெறியாரே!
உலகம் எலாம் பரவி மூடி விடியல் மட்டும் மழை பெயினும் - உலகெங்கும் படர்ந்து கவிந்து காலை வரையில் மழை பெய்தாலும், அதின் ஓட்டாங்குச்சில் முளை வீசிடாது - அதனால், ஓட்டாங்குச்சில் முளைக்காது, (ஆகையால்), கொடியருக்கு நல்ல புத்தி சொன்னாலும் தெரியாது - தீயோருக்கு நல்லறிவு கூறினாலும் விளங்காது, கொடையில்லாத மடையருக்கு மதுரகவி உரைத்தாலும் - ஈகைப் பண்பு அற்ற பேதையருக்கு இனிய பாவைப் பகர்ந்தாலும், அவர் கொடுக்கமாட்டார் - அப் பேதையர் ஒன்றும் ஈயமாட்டார்.
படி அளத்தல் : ஊழ்வினைக்கு ஏற்றவாறு வினைப் பயனை நுகர்வித்தல். ‘ஓட்டாங் குச்சில் முளைக்காது' என்பது மரபு மொழி. ‘கொடிறும் பேதையும் கொண்டது விடா' என்பது பழமொழி.
No comments:
Post a Comment