70. இடம் அறிதல்

 


"தரையதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ?

     சலதிமிசை ஓடுகப்பல்

தரைமீதில் ஓடுமோ? தண்ணீரில் உறுமுதலை

     தன்முன்னே கரிநிற்குமோ?


விரைமலர் முடிப்பரமர் வேணிஅர வினைவெல்ல

     மிகுகருட னால்ஆகுமோ?

வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்

     வேறொருவர் செல்லவசமோ?


துரைகளைப் பெரியோரை அண்டிவாழ் வோர்தமைத்

     துட்டர்பகை என்னசெய்யும்?

துணைகண்டு சேரிடம் அறிந்துசேர் என்றௌவை

     சொன்னகதை பொய்யல்லவே?


வரைஊதும் மாயனை அடுத்தலாற் பஞ்சவர்கள்

     வன்போர் செயித்ததன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தரை அதனில் ஓடு தேர் நீள்கடலில் ஓடுமோ? - நிலத்தில் ஓடும் தேர் நீண்ட கடலில் ஓடுமோ?

சலதிமிசை ஓடு கப்பல் தரைமீதில் ஓடுமோ? - கடலில் ஓடும் கப்பல் நிலத்தின் மேல் ஓடுமோ?  ("கடல் ஓடா கால்வல் நெடுந்தேர், கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க)

தண்ணீரில் உறும் முதலைதன் முன்னே கரி நிற்குமோ? - நீரில் வசிக்கும் முதலைக்கு எதிராக (நிலத்தில் வசிக்கும்) யானை நிற்குமோ? ("நெடும்புனலின் வெல்லும் முதலை, அடும் புனலின் நீங்கின் அதனைப் பிற" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.)

விரைமலர் முடிப் பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ? - மணமிக்க மலரணிந்த சிவனார் திருமுடியிலுள்ள பாம்பினை வெல்ல வலிமைமிக்க கருடனால் இயலுமோ?

வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் வேறொருவர் அஞ்சாமல் செல்ல வசமோ? - வேங்கைகள் வசிக்கும் காட்டிலே எவரேனும் அச்சமின்றிச் செல்லமுடியுமோ?

துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்தமைத் துட்டர் பகை என்ன செய்யும்? - தலைவர்களையும் பெரியோர்களையும் அடைந்து வாழ்கின்றவர்களைக் கொடியவர்களின் பகைமை என்ன செய்துவிடும்?

வரை ஊதும் மாயனை அடுத்தலால் அன்றோ பஞ்சவர்கள் வன்போர் செயித்தது? - மூங்கிற்குழலை ஊதும் கண்ணபிரானைச் சார்ந்ததால் அல்லவோ பாண்டவர்கள் தங்களுடைய கொடிய போரை வென்றனர்

துணைகண்டு சேர் இடம் அறிந்துசேர் என்று ஒளவை சொன்ன கதை பொய்யல்லவே? - நல்ல துணையைக் கண்டு பிடித்துச் சேரத்தக்க இடம் அறிந்து நட்புக்கொள் என்று ஒளவை கூறிய கதை பொய்மை அல்லவே!


விளக்கம் ---

"இடன் அறிதல்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியுள்ள திருக்குறள் அதிகாரத்தைப் பொருள் உணர்ந்து ஓதுக. மற்றும், "சேர் இடம் அறிந்து சேர்" என்று ஔவைப் பிராட்டி அருளியதன் விளக்கமாகவே இப் பாடல் அமைந்துள்ளது காணலாம். பின்வரும் பாடல்கள் ஔவைப் பிராட்டியின் அருளுரைக்கு அரண் செய்வதாக அமைந்துள்ளமை காணலாம்.


மனத்தான் மறுவு இலரேனும் தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனந் தீப்பட்டக் கால். ---  நாலடியார்.

இதன் பொருள் ---

புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் எறி புனம் தீப் பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர் - அதுபோலவே, சான்றோர் தம் மனநலத்தால் குற்றம் அற்றவராக இருந்தாலும், தாம் சேர்ந்த தீய இனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.


தக்கார் வழிகெடாது ஆகும், தகாதவரே

உக்க வழியராய் ஒல்குவர், --- தக்க

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்,

முத்தினான் ஆகும் மதி. ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

தக்கார் வழி கெடாது ஆகும் - தகுதியுடையாரது சந்ததி, என்றும் தளராது விருத்தி அடைவதாகும். தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் - தகுதியற்றவர் அழிந்த வழியை உடையவராய்த் தளர்வார், பழியும் புகழும் தக்க இனத்தினான் ஆகும் - ஒருவனுக்கு உண்டாகும் பழியும் புகழும், அவன் சேர்ந்த இனத்தினால் உள்ளது ஆகும், மதி - அறிவானது, மனத்தினான் ஆகும் - (ஒருவனது) மனத்தின் அளவே உண்டாகும்.


கொம்பு உளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி. --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

கொம்பு உளற்கு ஐந்து - கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழத் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் --- திரைக்குப் பத்து முழத் தொலைவிலும், வெம்பு கரிக்கு ஆயிரம் தான் வேண்டுமே - சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழத் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். (ஆனால்), வம்பு செறி - கொடுமைகள் மிகுந்துள்ள; தீங்கினர் தம் கண்ணில் - தீயவர்களின் கண்களில் படாமல், தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி - காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது. (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.


நிந்தைஇலாத் துயவரும் நிந்தையரைச் சேரில்,அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே, - நிந்தைமிகு

தாலநிழில் கீழ்இருந்தான் ஆன்பால் அருந்திடினும்

பால்அதுஎனச் சொல்லுமோ பார். --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

நிந்தை மிகும் தால நிழல் கீழ் இருந்தான் - இழிவு மிகுந்த பனைமரத்தின் கீழ் அதன் நிழலில் அமர்ந்துள்ள ஒருவன், ஆன் பால் அருந்திடினும் - பசுவின் பாலைக் குடித்தாலும்,  பால் அது எனச் சொல்லுமோ பார் - பிறர் அதனைப் பால் அருந்துவதாகச் சொல்லுவார்களோ? நீ அதனை எண்ணிப்பார். (கள் குடிப்பதாகவே சொல்லுவார்கள்). (அதுபோல), நிந்தை இலாத் தூயவரும் - பழிக்கப்படாத மேன்மக்களும்; நிந்தையரைச் சேரில் - பழிக்கப்படும் கீழ்மக்களைச் சேர்ந்தால்,  அவர் நிந்தை அது தம் இடத்தே நிற்கும் - பழிப்புக்கு உரிய அந்த மக்களின் பழிப்புரையானது, தம்மிடமும் வந்து சேர்வதற்கு ஏதுவாகும்.


நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே, -- கொல்லும்விடப்

பாம்புஎன உன்னாரே பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்றுஅடுத்தால் சொல். --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

தூம்பு அமரும் புற்று அடுத்தால் - உள் தொளை பொருந்திய புற்றுக்குப் பக்கத்தில் கிடப்பது; பழுதையே ஆனாலும் - பழுதைக் கயிறே ஆனாலும், (இரவில் அதனைக் காண்பவர்) பாம்பு என உன்னாரே? -கொல்லும் விடத்தைக் கொண்ட பாம்பு என அதனைச் சொல்ல மாட்டார்களோ?  (அதுபோல), நல்லொழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் நல்லொழுக்கம் இல்லாச் சொல் நண்ணுமே - நல்லொழுக்கம் இல்லாத தீயவரைச் சேர்ந்த நல்லவர்க்கும் ஒழுக்கம் இல்லாத பழிச்சொல்லே வந்து சேரும்.


மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை, ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியை, - பெய்த

கலஞ்சிதைக்கும் பாலின் சுவையை, குலம்சிதைக்கும்

கூடார்கண் கூடி விடின். ---  நான்மணிக் கடிகை.

இதன் பொருள் ---

ஒற்றுமை இன்மை ஒருவனை மொய் சிதைக்கும் - தக்காரோடு ஒற்றுமை இல்லாமை, ஒருவனது வலிமையை ஒழிக்கும்; பொய் பொன் போலும் மேனியைச் சிதைக்கும் - பொய்ம்மையான ஒழுக்கம், பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை  வாடச் செய்யும்; பெய்த கலம் பாலின் சுவையைச் சிதைக்கும் - நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம், பாலின் இனிய சுவையைக் கெடுக்கும்; கூடார்கண் கூடிவிடின் குலம் சிதைக்கும் - கூடத் தகாதவரிடத்தில் நட்புக் கொண்டு கூடிவிட்டால், அச்செய்கை தன் குலத்தை அழிக்கும்.


தன்னை அடைக்கலமாக வந்து சார்ந்த விபீடணனை ஏற்றுக் கொள்வது குறித்து இராமபிரான் தன்னைச் சார்ந்து உள்ளோரின் கருத்துக்களை அறிந்து கொள்ள எண்ணி, அவரவர் சொல்வதைக் கேட்கின்றார். "செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்?" என்கின்றான் சுக்கிரீவன். நேரிடையாகப் பகைமை  இல்லாத போதும் அண்ணனைப் பிரிந்து வந்த வீபிடணன் செயல் அறமாகுமா என்பது சுக்கிரீவன் கேள்வி. அரக்கர்களிடையே நல்லவர்கள் இருக்கமுடியாது என்பதும் அவன் கருத்து.

ஆனால், சாம்பவான் கூறும் கருத்து, சிற்றினத்தவர் ஆகிய அரக்கரோடு சேருதல் கூடாது என்பதே. சாம்பவான் கூற்றாக, கம்பர் கூறும் கருத்துக்கள், மேற்கூறிய திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்.

அறிஞரே ஆயினும், அரிய தெவ்வரைச்

செறிஞரே ஆவரேல், கெடுதல் திண்ணமாம்;

நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பது ஓர்

குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ?

இதன் பொருள் ---

அறிஞரே ஆயினும் - கற்றறிந்த அறிஞர்களே ஆனாலும்; அரிய தெவ்வரை - நம்புவதற்கு இயலாத பகைவர்களை;   செறிஞரே ஆவரேல் - சேர்ந்தவர் ஆவார் என்றால்; கெடுதல்  திண்ணமாம் - அவர்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் கெடுவது   உறுதியாகும்; நெறிதனை நோக்கினும் - வீடணன் கூறும் அற   நெறியை  ஆராய்ந்தாலும்;  நிருதர் நிற்பதோர் குறி - அரக்கர்கள் நிற்பதாகிய  ஒரு குறிக்கோளான அறநெறி;  நனி உளது என - மிக உள்ளது என்று; உலகம் கொள்ளுமோ - உலகம் ஏற்றுக் கொள்ளுமோ?


வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,

முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால்-

உற்றுறு நெடும் பகை உடையர். அல்லதூஉம்,

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?   --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

வெற்றியும் தருகுவர் -  (விபீடணனைப் போன்றவர்களை நம்முடன் சேர்த்துக் கொண்டால்) வெற்றி தேடித் தரலாம்;  வினையம் வேண்டுவர் - நமக்குத் தேவையான   யோசனைகளையும் கூறுவர்; முற்றுவர் - நமது காரியங்களை  முடித்தும் தருவர்;   உறுகுறை முடிப்பர் - வேறு ஏதேனும்  குறைகள் இருந்தாலும் அதை மாற்றி நலம் புரிவர்;  முன்பினால்  -(ஆனால்) முன்பிருந்தே;  உற்றுறு நெடும் பகை உடையர் -  நம்முடன் அரக்கர்கள் பெரிய பகை உடையவராவர்;   அல்லதூஉம்    - அதுவும் அல்லாமல்;  சிற்றினத்தவரொடும் --- இவர்களை    ஒத்த சிற்றினத்தவருடன்; செறிதல் சீரிதோ? - சேர்தல் சிறப்புடையதாகுமோ?


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...