உலகநீதி - 8

 


"சேராத இடந்தனிலே சேர வேண்டாம்;

    செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்;

ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்;

    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்;

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்;

    பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்;

வாராருங் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---


சேராத இடந்தனில் - சேரத் தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே.


செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் - ஒருபொழுதும் மறக்க வேண்டாம் - மறக்காதே.


ஊர் ஓடும் - ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோள் சொல்பவனாகி, திரிய வேண்டாம் - அலையாதே.


உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே.


பேர் ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம்.


பிணைபட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி - துணையாகச் சென்று, திரியவேண்டாம் - அலையாதே.


வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை ---


சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது. தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் (காமுகர்) முதலாயினார். "கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்" என்பது சிலப்பதிகாரம். (கள் குடியர்கள், திருடர்கள், காமுகர்கள், பொய்யர்கள், பயனில்லாதவற்றைப் பேசித் திரியும் கூட்டத்தார் ஆகியோரே ஒழிக்கும் உபாயம் அறிந்து ஒழித்து விடுங்கள்) "சேர் இடம் அறிந்து சேர்" என்றார் ஔவைப் பிராட்டியார். ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது. நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்; "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பது திருக்குறள். "நன்றி மறவேல்" என்றார் ஒளவைப் பிராட்டியாரும். "செய்ந்நன்றி கொல்லன்மின்" என்பது சிலப்பதிகாரம். ஊர்தோறும் (அங்கங்கே) சென்று புறங்கூறுதல் கூடாது. குண்டுணி - கோள் சொல்வோன், புறம் பேசித் திரிவோன். "புறம் பேசிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் ஆறம் கூறும் ஆக்கம் தரும்" (ஒருவரைக் காணாத போது இகழ்ந்து பேசி வாழ்வதை விட, செத்துப் போவது அறநூல்களில் சொல்லப்பட்டு உள்ள ஆக்கத்தைத் தரும்) என்கிறார் திருவள்ளுவ நாயனார். "பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலேன்...என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே" என்று பாடினார் அப்பர் பெருமான்.  எனவே, புறம் கேசித் திரிவதை விட, இறந்து போவது நல்லது என்பது தெரிகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்றும் பொருள் கொள்ளலாம். உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது. புகழைத் தருதற்குரிய செயல்களைச் செய்யாதிருத்தல் கூடாது. (பேர், பெயர் - புகழ்.) ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்து கொண்டிருத்தல் கூடாது. கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாக நிற்பது துன்பத்தை யுண்டாக்கும். (பிணை - புணை ; ஈடு - ஜாமீன்.)


No comments:

Post a Comment

உலகநீதி - 8

  "சேராத இடந்தனிலே சேர வேண்டாம்;     செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்; ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்;     உற்றாரை உதாசினங்க...