22. தன் பாவம் தன்னோடு

 



"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்

     நெறியே! நின் செயல் உண்டாகில்

எங்காகில் என்ன? அவர் எண்ணியதெல்

     லாம்முடியும்!, இல்லை யாகில்,

பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்

     வெள்ளெலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன்னுடனே ஆகும் தானே."


இதன் பொருள் ---

செங்காவி  மலர்த் தடம்சூழ் தண்டலை  நீள் நெறியே - சிவந்த குவளை மலர்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள் நெறி" என்னும் திருக்கோயிலில்  எழுந்தருளிய சிவபரம்பொருளே!

நின் செயல் உண்டாகில் - தேவரீருடைய நல்ல அருள்  கிடைத்தால், எங்கு ஆகில் என்ன அவர் எண்ணியது எல்லாம் முடியும் - எவ்விடமாயினும் என்ன? அவர்கள் நினைத்தது முற்றும் முற்றுப் பெறும், 

இல்லை ஆகில் - தேவரீரது  அருள் கிடையா விட்டால், பொங்கு  ஆழிசூழ் உலகில் - நீர் மிகுந்த  கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில், உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக - உள்ளங் காலில் (தசை தேய்ந்து) வெள்ளை எலும்பு தெரியும்படியாக, ஐங்காதம் ஓடிப் போனாலும் தன் பாவம் தன் உடனே ஆகும் - ஐந்துகாத தொலைவு விரைவாகப் போய் அலைவுற்றாலும் தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.

விளக்கம் ---

இறைவன் செயல் நம் ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால்,  "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள்ளெலும்பாய்ப் போக' என்பது மரபுமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே' என்பது பழமொழி.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...