"அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்;
அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்,
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன்றன் கூலி,
சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி,
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி,
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி,
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே."
பதவுரை ---
அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கொடுக்காமல் வைத்த இருக்க வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ கேளாய் - நீ கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவு தனை (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).
விளக்கம் --
வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள்.
No comments:
Post a Comment