86. அரசவைக் கணக்கன்

 


"வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்

     வரவிடுப் போன்ம னதையும்,

  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்

     வருகர தலாம லகமாய்


விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள

     விடஎழு தவாசிக் கவும்

  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்

     மேன்மைரா யசகா ரன்ஆம்;


கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்

     கடிதேற் றிடக்கு றைக்கக்

  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்

     காட்டுவோன் கருணீ கன்ஆம்;


அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அரு ஆகி உரு ஆகி ஒளி ஆகி வெளி ஆகும் அண்ணலே - அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 


வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு பொருளினால் - வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக் கொண்டு, வர விடுப்போன் மனதையும் - ஓலையை விட்டவன் உள்ளத்தையும், மருவி வரு கருமமும் - அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும் - இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய், விரைவாய் அறிந்து - உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர் எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் - அரசருடைய கருத்தில் உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் - தேர்ச்சி பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில் கடிது ஏற்றிடக் குறைக்க - ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் - கடுகை மலை போலவும், மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.

      எழுத்தாளரும் கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம் - நெல்லி. கரதலாமலகம் (கர தல ஆமலகம்) என்பது வெளிப்படை என்பதை விளக்கும் சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல் என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.


No comments:

Post a Comment

35. துறவிக்கு வேந்தன் துரும்பு

“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்      பொன்னிவளம் செழித்த நாட்டில், குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்      களும்பொருளாக் குறித்தி டாமல்...