"வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்
வரவிடுப் போன்ம னதையும்,
மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்
வருகர தலாம லகமாய்
விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள
விடஎழு தவாசிக் கவும்
வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்
மேன்மைரா யசகா ரன்ஆம்;
கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்
கடிதேற் றிடக்கு றைக்கக்
கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்
காட்டுவோன் கருணீ கன்ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
அரு ஆகி உரு ஆகி ஒளி ஆகி வெளி ஆகும் அண்ணலே - அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு பொருளினால் - வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக் கொண்டு, வர விடுப்போன் மனதையும் - ஓலையை விட்டவன் உள்ளத்தையும், மருவி வரு கருமமும் - அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும் - இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய், விரைவாய் அறிந்து - உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர் எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் - அரசருடைய கருத்தில் உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் - தேர்ச்சி பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில் கடிது ஏற்றிடக் குறைக்க - ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் - கடுகை மலை போலவும், மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.
எழுத்தாளரும் கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம் - நெல்லி. கரதலாமலகம் (கர தல ஆமலகம்) என்பது வெளிப்படை என்பதை விளக்கும் சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல் என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.
No comments:
Post a Comment