83. வணிகர் சிறப்பு

 


"நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!

     நெடிதுதூ ரந்தி ரிந்தும்

  நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி

     நீள்நிலத் தரசு புரியும்


வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;

     வருமிடம் வராத இடமும்

  மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட

     வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்


ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்;

     அளவில்பற் பலச ரக்கும்

  அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்

     அறவிடார்; செலவு வரிலோ


ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்,

     அருள் வைசியர்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

அருள் வைசியர் - அருளுடைய மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் - (வணிகத்திற்கு)ப் பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் - மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள் - நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார், சலியார்கள் - சோர்வு அடையார், பொருள் தேடி நீள் நிலத்து அரசு புரியும் வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் - பொருளை ஈட்டி வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களையும் தமது வசம் ஆக்கிக்  கொள்வார்கள், வரும் இடம் வராத இடமும் மனத்தையும் அறிந்து உதவி - (பொருள்) வரும் இடத்தையும் வராத இடத்தையும் (பொருள் வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்) கொடுத்து, ஒன்று நூறு ஆயிட வளர்ப்பார் - ஒரு பொருள் நூறாக வளரும்படி பொருளை ஈட்டுவர், வரு தொலை தொலைக்கும் ஆள் விடுவர் - (பொருள்) வரக்கூடிய நீண்ட தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் - (பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல சரக்கும் அமைவுறக் கொள்வர் - எல்லை அற்ற பலவகையான பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் - விற்பார்கள், கணக்கதில் அணுவும் அற விடார் - கணக்கினில் இம்மியும் பிசக விடமாட்டார்கள், செலவு வரிலோ ஆளி ஒத்தே மலையின் அளவும் கொடுத்திடுவர் - (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல் மலையளவாயினும் செலவழிப்பார்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1104. எழுபிறவி நீர்நிலத்தில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் எழுபிறவி நீர்நிலத்தில் (பொது) முருகா!  இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர். தனதன...