"காகம் பகற்காலம் வென்றிடும் கூகையை;
கனகமுடி அரசர்தாமும்
கருதுசய காலமது கண்டந்த வேளையில்
காரியம் முடித்துவிடுவார்;
மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
மேன்மேலும் மாரிபொழியும்;
மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
மிடியாள ருக்கு தவுவார்;
நாகரிகம் உறுகுயில் வசந்தகா லத்திலே
நலம்என் றுகந்துகூவும்;
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
நாளையில் முடிப்பர்கண்டாய்;
வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
வாடிக்கை நிசம்அல்லவோ!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
காகம் கூகையைப் பகற்காலம் வென்றிடும் - காகம் கோட்டானைப் பகல் காலத்திலே வெல்லும்;
கனகமுடி அரசர் தாமும் கருது சய காலம் அது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்து விடுவார் - பொன்முடி புனைந்த மன்னர்களும் அவ்வாறே தங்களுக்கு வெற்றி உண்டாகும் காலத்தை அறிந்து பகையை வெற்றி கொள்வர்;
மேகமும் கார்காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் - மேகமும் மழைக் காலத்திலே பயிர்கள் விளைவதற்குத் தொடர்ச்சியாக மழைபெய்யும்;
மிக்கான அறிவு உ(ள்)ளோர் மிடியாளருக்குத் தருணம் வருகாலத்தில் உதவுவார் - பேரறிவாளர் வறியவருக்குக் காலம் அறிந்து பொருள் உதவி செய்வார்;
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் - அழகிய குயில் வேனில் காலமே நல்லது என்று விரும்பிக் கூவும்;
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்த அந்த நாளையில் முடிப்பர் - நல்லறிவாளர் தாம் நினைத்ததை அமைதியாக அவ்வக்காலத்திலே நிறைவேற்றிக் கொள்வர்;
வாகு அனைய காலை கல் - அழகிய இளமைப் பருவம் கல்வி கற்க உறுதியானதாகும்; மாலை புல் - முதுமைப் பருவம் அற்பம் ஆனதாகும்; எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ? - என்று கூறும் உலகியல் மொழி உண்மையானது அல்லவோ?
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல் வெல்லும் - வேந்தர்க்கு வேண்டும்பொழுது" என்னும் திருக்குறள் கருத்து இங்கே வந்துளது. வசந்த காலம் : இளவேனில் முதுவேனில் எனப்படும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடித்திங்கள்கள், ‘காலை கல்; மாலை புல்' என்பது பழமொழி. இளமைப் பருவமானது கல்வி கற்கவும், கற்ற நெறியில் நின்று அறம் புரியவும் உகந்த காலம். முதுமையில் செய்வோம் என்பது அறிவீனம். காரணம், நாளை இருப்போம் என்பது உறுதி இல்லை. "இளமையில் கல்" என்றார் ஔவைப் பிராட்டியார்.
"வேதங்களில் மன்னர்களுக்கெனக் கூறப்பட்டுள்ள வேள்விகளை முதலில் நீ செய்ய வேண்டும். அதை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடலாகாது. இன்று இருப்போர் நாளை இருப்பது உறுதியில்லை. எனவே, அந்த அறவேள்விகளை உடனே செய்யத் தொடங்குவாயாக! தமது வாழ்நாள் இவ்வளவு என்று உணர்ந்தவர் உலகில் யாரும் இல்லை." என்னும் கருத்துக்களை மன்னன் காதுகாளில் மாடலன் விதைத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
"வானவர் போற்றும் வழி நினக்களிக்கும்
நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
"அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்,
நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இது என வளர்ந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை." --- சிலப்பதிகாரம்.
"யார் அறிவார் சாநாளும், வாழ்நாளும்" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.
"இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல் என்னாது,
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி,
ஒருவுமின் தீயவை, ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்."
என்பது நாலடியார். " இன்று வருவானோ? இன்னொரு நாள் வருவானோ? அல்லது என்றைக்கு வருவானோ? எனம் என்று எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள். அவன் உங்க்ளின் பின்னாலேயே நின்று கொண்டு, உங்களின் உயிரைக் கவர்ந்து செல்ல அவன் எப்போதுமே தயாராகவே இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஊயவை செய்வதை விட்டு ஒழியுங்கள். இயன்ற வரையில் பெருமை தரும் அறச் செயல்களைச் செய்யுங்கள்" என்கிறது நாலடியார்.
"தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க, மாற்று இன்றி
அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்று உடன் இயைந்து
துஞ்சு வருமே துயக்கு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
அறிவின் மயக்கம், அஞ்சத் தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, தடையில்லாது இறந்து படுமாறு வந்து சேரும். ஆதலால், தோன்றுதற்கு அருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால் ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க.
"வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்,
கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே." --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
உலகத்தீரே! உங்களுக்கு இங்கே வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத, இந்த உடம்பின் பயனற்ற நிழலைப் போல, மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு, உங்கள் கையில் இப்போது உள்ள பொருளும் துணை செய்யாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, கூரிய வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானைத் துதித்து, ஏழைகளுக்கு எக்காலமும், நொய்யில் பாதி அளவாவது பகிர்ந்து கொடுத்து வாழுங்கள்.
No comments:
Post a Comment