67. திருமகள் அருள் உண்டானால்....

 



"திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்

     சிறப்புண்டு; கனதையுண்டு;

சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்;

     செல்லாத வார்த்தைசெல்லும்;


பொருளொடு துரும்புமரி யாதைஆம்; செல்வமோ

     புகல்பெருக் காறுபோல் ஆம்;

புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்

     போலவே நேசம்ஆவார்;


பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும்; அனுதினம்

     பேரும்ப்ர திட்டையுண்டாம்;

பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்;

     பேச்சினிற் பிழைவராது;


வருமென நினைத்தபொருள் கைகூடி வரும்;அதிக

     வல்லமைகள் மிகவும்உண்டாம்;

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் திருமகளின் திருவருள் ஏற்பட்டால் சிறப்பு உண்டு; 

        கனதை உண்டு - பெருமை உண்டு; 

சென்ற வழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும் - போன வழி யாவும் எவரும் பின்பற்றும் பெரிய நெறியாகி விடும்; 

செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக் கொள்ளத் தகாத சொற்களாக இருந்தாலும் (பிறரால்) ஏற்றுக் கொள்ளப்படும்; 

பொருள் ஒரு துரும்பு - எப்பொருளும் எளிதில் கிடைக்கும்; 

மரியாதை ஆம் - பிறர் போற்றுஞ் சிறப்பு உண்டாகும்; 

செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் - செல்வமும் (பிறர்) புகழ்ந்து கூறும் (அளவில்) வெள்ளம் மிகுந்த ஆற்றைப் போல (வடியாது) பெருகும்; 

புவியில் முன்கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் - உலகில் முன்பு தாம் வறுமை உற்று இருந்தபோது பார்த்து மதிப்புக் கொடாதவர்கள் எல்லோரும் (இப்போது) பழகியவர்போல நட்புக் கொள்வர்; 

சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - சாதியிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகும்; 

அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் புகழும் வரவேற்பும் கிடைக்கும்; 

பகையாளி. கூட பிரியமொடு உறவு ஆகுவான் - பகைவனும் அன்போடு நட்புக் கொண்டாடுவான்; 

பேச்சினில் பிழை வராது - பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்; 

வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் - வரவேண்டும் என்று எண்ணிய பொருள் தவறாமல் கிடைக்கும்; 

அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த தொழிலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.


No comments:

Post a Comment

பொது --- 1104. எழுபிறவி நீர்நிலத்தில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் எழுபிறவி நீர்நிலத்தில் (பொது) முருகா!  இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர். தனதன...