உலகநீதி - 6

 



"வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்,

    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்,

மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்,

    முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்,

வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்,

    வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்,

சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்

    திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே!"


பதவுரை ---


வார்த்தை சொல்வார் - (பயனில்லாத சொற்களைக் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே.


மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே.


மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும், சொல் வார்த்தைகளை - உன்னை நல்வழிபடுத்தும் முகத்தான் கூறுகின்ற அறிவுரைகளை, மறக்க வேண்டாம் - மறவாமல் கடைப்பிடிக்க வேண்டும்.


முன்கோபக்காரரோடு - முன்கோபம் உடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே.


வாத்தியார் - கல்வி கற்பித்த ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - கொடுக்காமல் வைத்துக் கொள்ளாதே.


வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.


சேர்த்த - ஈட்டிய, புகழாளன் - புகழுடையவனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன் - வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையை உடைய முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக.


பொழிப்புரை ---

வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. பயனில்லாத சொற்களைப் பேசுவோரை 'மனிதனில் பதர்' என்னும் முகத்தான், "பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல்" என்று திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்து அருளிதை இங்கு வைத்து எண்ணுக. 

உன்னை அவமதிப்புச் செய்தாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. (மிதித்தல் - அடியெடுத்து வைத்தல், சேர்தல்.) "மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும்" என்னும் ஔவையின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக.

பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும். மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான், அரசன் (இக்காலத்தில் மேலதிகாரி) முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர். இவர்கள் நன்னெறிப்படுத்தும் முகத்தானும், தவறு கண்டபோது திருத்தும் முகத்தானும் கூறுகின்ற நல்வார்த்தைகளை மறக்கல் ஆகாது. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" எனவும், "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன் துவர்க்கும், பின் இனிக்கும்" என்னும் முதுமொழிகளைக் கருத்தில் கொள்ளுக.

மிக்க கோபம் உடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று.

கல்வி கற்பித்த ஆசிரியருக்கு உரிய காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது.

வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல் - வழியில் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல்.


No comments:

Post a Comment

14. அற்பருக்கு நல்ல புத்தி வராது

  "சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்      பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும் அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி      நடந்துகதி அடைய மாட்டார்!...