"கொச்சையிற்பிள் ளைக்குதவும் தண்டலையார்
வளநாட்டிற் கொடிதாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுனம் மாதவனே
புத்திசொன்னான்! வகையும் சொன்னான்!
அச்சுதப்பிள் ளைக்கும் அந்த ஆண்டவரே
புத்திசொன்னார்! ஆத லாலே
துர்ச்சனப்பிள் ளைக்கூரார் புத்திசொல்லு
வார் என்றே சொல்லு வாரே!"
இதன் பொருள் ---
கொச்சையில் பிள்ளைக்கு உதவும் தண்டலையார் வளநாட்டில் - சீகாழியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தருக்கு அருள்புரிந்த திருத்தண்டலை இறைவரின் செழிப்புமிக்க நாட்டிலே, முனம் வச்சிரப் பிள்ளைக்கு மாதவனே புத்தி சொன்னான் - முற்காலத்தில் வச்சிரப்படையினை உடைய நஇந்திரனுக்குப் பெருந்தவமுடைய துருவாச முனிவர் அறிவு புகட்டினார். வகையும் சொன்னான் - நடந்துகொள்ளும் முறையையும் அவனுக்கு அறிவுறுத்தினார். அச்சுதப் பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே புத்தி சொன்னார் - திருமாலுக்கும் திருத் தண்டலையாராகிய சிவபரம்பொருளே அறிவூட்டினார், ஆதலால்- ஆகையால், துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார் என்றே சொல்லுவார் - தீய நெறியிலே செல்லும் பிள்ளைக்கு ஊரார் அறிவு புகட்டுவார் என்று அறிவுடையோர் கூறுவார்கள்.
விளக்க்ம ---
இந்திரன் ஒருமுறை துர்வாசர் கொடுத்த சிவ நிர்மாலியமான மாலையை யானை மீது இருந்தவாறு அங்குசத்தால் ஏற்று யானையின் தலைமீது வைத்தான். அது அம் மாலையை உடனே தன் துதிக்கையால் எடுத்துக் காலில் இட்டு மிதித்தது. அதனைக் கண்ட துர்வாசர் சினந்து இந்திரன் தன் பதவியிழக்கவும், வெள்ளானை காட்டானையாகவும் சபித்தார். அவரே மதுரையிற் சொக்கநாதரை வழிபட்டால் சாபம் நீங்குமென அவனுக்கு வகையும் கூறினார். இது வச்சிரப் பிள்ளைக்கு மாதவன் (பெருந்தவசி) புத்தி கூறியது. திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் மீன், வராகம், ஆமை, நரசிங்கம், வாமனம் எனும் ஐந்தினும் அவர் கொண்ட செருக்கைச் சிவபிரான் அடக்கினார் என்பது அச்சுதப் பிள்ளைக்கு ஆண்டவன் புத்தி சொன்னது ஆகும். ‘வீட்டில் அடங்காத பிள்ளை ஊரில் அடங்கிவிடும்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment