உலகநீதி - 5

"வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்,

    மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்,

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்,

    வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்,

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்,

    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,

வாழ்வுஆரும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---

பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே.

மனையாளை - மனைவியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே.

வீழாத - விழத் தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே.

வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பி வாராதே.

தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன் - குலத்தினருடன், சேர வேண்டாம் - சேரக் கூடாது.

தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை ---

மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல் - வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.

மனைவியைப் பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்கு உள்ளது தனக்கும் உள்ளது. மனைவிக்குப் பழி என்றாலும், புகழ் என்றாலும் அது தனக்கும் உரியதே. எனவே, மனைவியைக் குற்றம் சொல்லக்  கேட்ட அயலார் ஒருவேளை பழிக்கக்கூடும் என்பதால், சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம்.

விழத் தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீய செய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை உண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது.

போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர் புரிய வேண்டும். புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம்.

தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியில் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தம் செய்துகொள்ளுதலும்.

உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வு அடைந்தவர்களைத் தீமையாகப் பேசுதல் கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். "கீழோர் ஆயினும் தாழ உரை" என்பது கொன்றைவேந்தன். கேட்பவர் உனக்குக் கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், உன் சொல் வணக்கம் உடையதாய் இருக்கும்படி அவருடன் பேசு என்பது இதன் பொருள்.


No comments:

Post a Comment

14. அற்பருக்கு நல்ல புத்தி வராது

  "சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்      பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும் அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி      நடந்துகதி அடைய மாட்டார்!...