இதனைக் கண்டு இது மகிழும்




25. இதனைக் கண்டு இது மகிழும்

தந்தைதாய் மலர்முகம் கண்டுநின்று ஆலிப்பது
     அவர்தந்த சந்ததி அதுஆம்!
  சந்த்ரோ தயம்கண்டு பூரிப்பது உயர்வாவி
     தங்குபைங் குமுத மலர் ஆம்!

புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண்டு அகமகிழ்வ
     பொங்குதா மரைமலர்கள் ஆம்!
  போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்
     புரிவது மயூர இனம் ஆம்!

சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு
     சீர்பெறுவது இரவலர் குழாம்,
  திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதுஇச்
     செகம்எலாம் என்பர் கண்டாய்!

அந்திஅம் வான் அனைய செஞ்சடா அடவியனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அம் அந்தி வான் அனைய செம் சடா அடவியனே --- அழகிய அந்தி வானம்போலச் சிவந்த சடைக் கற்றையை உடையவனே!,

     அமலனே --- குற்றமற்றவனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     தந்தை தாய் மலர்முகம் கண்டு நின்று ஆலிப்பது அவர் தந்த சந்ததி அது ஆம் --- பெற்ற தாய் தந்தையரின் மலர்ந்த முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்றெடுத்த மக்கள் ஆகும்,

     சந்திர உதயம் கண்டு பூரிப்பது உயர் வாவி தங்கு பைங்குமுத மலர் ஆம் --- திங்களின் வருகையைக் கண்டு மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய அல்லி மலர் ஆகும்,

     புந்தி மகிழ்வாய் இரவி வருதல் கண்டு அகம் மகிழ்வ பொங்கு தாமரை மலர்கள் ஆம் --- மனம் மகிழும்படியாக சூரியன் உதித்து எழுவதைக் கண்டு, உள்ளம் மகிழ்வது, அந்தக் குளத்திலே மிகுதியாக உள்ள தாமரைப்பூக்கள் ஆகும்,

     போதவும் புயல் கண்டு கண்களித்தே நடம் புரிவது மயூர இனம் ஆம் --- கருத்து வருகின்ற மேகத்தை நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம் புரிவது மயில் கூட்டம் ஆகும்,

     சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு சீர் பெறுவது இரவலர் குழாம் --- மனக் களிப்புடன் உதவுகின்ற கொடையாளியைக் கண்டு, சிறப்புப் பெறுவது இரவலர் கூட்டம் ஆகும்,

     திகழ் நீதி மன்னரைக் கண்டு களி கூர்வது இச் செகம் எலாம் என்பர் --- புகழ் விளங்கும் நீதி நெறிமுறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந்த நிலவுலகத்திலே உள்ள மக்கள் யாவும் என்று அறிஞர் கூறுவர்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...