திருவண்ணாமலை - 0519. அருவம் இடையென





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருவம் இடையென (திருவருணை)

திருவருணை முருகா!
அடியாருடன் அடியேனைச் சேர்த்து,
பேசா அனுபூதி நிலையைத் தந்து,  
உனது திருவடியில் சேர அருள்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


அருவ மிடையென வருபவர் துவரிதழ்
     அமுது பருகியு முருகியு ம்ருகமத
          அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார

அசல முலைபுள கிதமெழ அமளியில்
     அமளி படஅந வரதமு மவசமொ
          டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத்

தருவை நிகரிடு புலமையு மலமல
     முருவு மிளமையு மலமலம் விபரித
          சமய கலைகளு மலமல மலமரும் .....வினைவாழ்வுஞ்

சலில லிபியன சனனமு மலமல
     மினியு னடியரொ டொருவழி படஇரு
          தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     யிருகு தையுமுடி தமனிய தநுவுட
          னுருளை யிருசுடர் வலவனு மயனென ....மறைபூணும்

உறுதி படுசுர ரதமிசை யடியிட
     நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
          உடைய வொருவரு மிருவரு மருள்பெற ....ஒருகோடி

தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன புகைவன
          திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ...முனிவார்தஞ்

சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
     பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
          சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருவம் இடை என வருபவர், துவர் இதழ்
     அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
          அளகம் அலையவும், அணி துகில் அகலவும், ......அதிபார

அசல முலை புளகிதம் எழ, அமளியில்
     அமளி பட, அநவரதமும் அவசமொடு,
          அணையும் அழகிய கலவியும் அலம்அலம், .....உலகோரைத்

தருவை நிகர்இடு புலமையும் அலம்அலம்,
     உருவும் இளமையும் அலம்அலம், விபரித
          சமய கலைகளும் அலம்அலம், அலமரும் ..... வினைவாழ்வும்,

சலில லிபியன சனனமும் அலம்அலம்,
     இனி உன் அடியரொடு ஒருவழி பட, இரு
          தமர பரிபுர சரணமும் மவுனமும் ...... அருள்வாயே.

உருவு கரியது ஒர் கணை கொடு, பணிபதி
     இரு குதையும் முடி தமனிய தநுவுடன்,
          உருளை இருசுடர், வலவனும் அயன்என, .....மறைபூணும்

உறுதி படு சுர ரத மிசை அடியிட,
     நெறு நெறு என முறிதலும், நிலை பெறுதவம்
          உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற, ......ஒரு கோடி

தெருவும், நகரியும், நிசிசரர் முடியொடு
     சட சட என வெடி படுவன, புகைவன,
          திகுதிகு என எரிவன, அனல் நகைகொடு ......முனிவார் தம்

சிறுவ! வனசரர் சிறுமியொடு உருகிய
     பெரும! அருணையில் எழுநிலை திகழ்வன
          சிகரி மிசை, ஒரு கலபியில் உலவிய ...... பெருமாளே.


பதவுரை


      உருவு கரியதொர்  கணை கொடு --- கரிய வடிவுடைய ஒப்பற்ற கணையைக் கொண்டும்,

     பணி பதி இரு குதையும் முடி --- நாகராஜனாகிய வாசுகி வில்லின் இருமுனைகளில் முடியப்படும் கயிராகவும்,

     தமனிய தநுவுடன் --- பொன்மயமாகிய மேருமலை வில்லாகவும்,

     உருளை இரு சுடர் --- சூரியனும் சிந்திரனும் இரு சக்கரங்களாகவும்,

     வலவனும் அயன் என --– தேர்ப்பாகன் பிரம தேவனாகவும்,

     மறை பூணும் உறுதி படு சுர ரதமிசை அடியிட --- வேதங்கள் குதிராகளாகப் பூட்டப்பட்ட உறுதியுடைய தேவர்களே தேரான அந்தத் தேர் மீது சிவபெருமான் அடி வைத்தவுடன்

     நெறு நெறென முறிதலும் --- அத் தேர் நெறு நெறு என்று முறிபடவும்,

     நிலை பெறுதவம் உடைய --- நிலைத்த தவநெறியைக் கொண்டிருந்த

     ஒருவரும் இருவரும் அருள் பெற --– திரிபுரத் தலைவர்களான மூவரும் அருள்பெற்று உய்யுமாறும்,

     ஒரு கோடி தெருவும் நகரியும் --- ஒரு கோடி தெருக்களும், அந்த ஊர்களும்,

     நிசிசரர் முடியொடு --- அசுரர்களின் தலைகளும்

     சடசட என வெடி படுவன புகைவன --- சட சட என்று வெடிபட்டும், புகைபட்டும்,

     திகுதிகு என எரிவன --- திகு திகு என எரிந்து அழியுமாறும்

     அனல் நகை கொடு முனிவார் தம் சிறுவ --– நெருப்புடன் கூடிய சிரிப்பைக் கொண்டு கோபித்த சிவபெருமானுடைய திருக்குமாரரே

     வனசரர் சிறுமியொடு உருகிய பெரும --– வேடர் மகளாகிய வள்ளியைக் கண்டு உள்ளம் உருகிய பெருமை வாய்ந்தவரே

     அருணையில் எழுநிலை திகழ்வன சிகரி மிசை --- திருவண்ணாமலையில் எழு நிலைகளுடன் விளங்கும் கோபுர வாயிலில்

     ஒரு கலபியில் உலவிய பெருமாளே --- ஒப்பற்ற மயிலின் மீது உலாவிய பெருமையில் சிறந்தவரே

      அருவம் இடையென வருபவர் --- உருவமே இல்லாதது இந்த இடை என்று கூறும்படி வந்த பொது மாதர்களின்

     துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் --- பவளம் போன்ற வாயிதழின் ஊறலாம் அமுதத்தை உண்டும், உள்ளம் உருகியும்,

     ம்ருகமத அளகம் அலையவும் --- கத்தூரி மணம் கமழ்கின்ற கூந்தல் அலையவும்,

     அணிதுகில் அகலவும் --- உடுத்துள்ள ஆடை விலகவும்,

      அதிபார அசல முலை புளகிதம் எழ --- அதிக பாரமுள்ள மலை போன்ற முலைகள் பூரிக்கவும்,

     அமளியில் அமளி பட --- படுக்கையில் கோலாகலமாகவும்

     அநவரதமும் அவசமொடு அணையும் அழகிய கலவியும் அலம் அலம் --- எந்நாளும் காம மயக்கத்தோடு சேர்கின்ற புணர்ச்சியும் போதும் போதும்,

      உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம் --- உலகில் உள்ளவர்களை கற்பகத் தருவுக்கு நிகர் என்று பாடும் கவித்திறமும் போதும் போதும்,

      உருவும் இளமையும் அலம் அலம் --- அழகும் இளமையும் போதும் போதும்,

      விபரித சமய கலைகளும் அலம் அலம் --- ஒன்றுக்கொன்று ஒவ்வாத சமய நூல்களும் போதும் போதும்,

       அலமரும் வினைவாழ்வும் --- வேதனைப்படுத்தும் வினைக்கு ஈடான வாழ்வும்,

     சலில லிபியன சனனமும் அலம் அலம் --- நீர் மேல் எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும்,

      இனி உன் அடியரொடு ஒருவழி பட --- இனியேனும் தேவரீருடைய அடியாரோடு அடியேனும் ஒரு வழிப்பட்டு ஈடேறுமாறு,

     இரு தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே --- ஒலிக்கின்ற சிலம்பணிந்த இரு திருவடிகளையும், மௌன நிலையையும் தந்து அருளுவீராக.


பொழிப்புரை


         கரிய வடிவுடைய ஒப்பற்ற கணையைக் கொண்டும், நாகராஜனாகிய வாசுகி வில்லின் இருமுனைகளில் முடியப்படும் கயிராகவும், பொன் மயமாகிய மேருமலை வில்லாகவும், சூரியனும் சிந்திரனும் இரு சக்கரங்களாகவும், தேர்ப்பாகன் பிரம தேவனாகவும், வேதங்கள் குதிராகளாகப் பூட்டப்பட்ட உறுதியுடைய தேவர்களே தேரான அந்தத் தேர் மீது சிவபெருமான் அடி வைத்தவுடன், அத் தேர் நெறு நெறு என்று முறிபடவும், நிலைத்த தவநெறியைக் கொண்டிருந்த  திரிபுரத் தலைவர்களான மூவரும் அருள்பெற்று உய்யுமாறும், ஒரு கோடி தெருக்களும், அந்த ஊர்களும், அசுரர்களின் தலைகளும் சட சட என்று வெடிபட்டும், புகைபட்டும், திகு திகு என எரிந்து அழியுமாறும் நெருப்புடன் கூடிய சிரிப்பைக் கொண்டு கோபித்த சிவபெருமானுடைய திருக்குமாரரே

         வேடர் மகளாகிய வள்ளியைக் கண்டு உள்ளம் உருகிய பெருமை வாய்ந்தவரே

     திருவண்ணாமலையில் எழு நிலைகளுடன் விளங்கும் கோபுர வாயிலில், ஒப்பற்ற மயிலின் மீது உலாவிய பெருமையில் சிறந்தவரே

         உருவமே இல்லாதது இந்த இடை என்று கூறும்படி வந்த பொது மாதர்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாம் அமுதத்தை உண்டும், உள்ளம் உருகியும், கத்தூரி மணம் கமழ்கின்ற கூந்தல் அலையவும், உடுத்துள்ள ஆடை விலகவும்,
அதிக பாரமுள்ள மலை போன்ற முலைகள் பூரிக்கவும், படுக்கையில் கோலாகலமாகவும், எந்நாளும் காம மயக்கத்தோடு சேர்கின்ற புணர்ச்சியும் போதும் போதும். உலகில் உள்ளவர்களை கற்பகத் தருவுக்கு நிகர் என்று பாடும் கவித்திறமும் போதும் போதும். அழகும் இளமையும் போதும் போதும். ஒன்றுக்கொன்று ஒவ்வாத சமய நூல்களும் போதும் போதும். வேதனைப்படுத்தும் வினைக்கு ஈடான வாழ்வும், நீர் மேல் எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும்.

         இனியேனும் தேவரீருடைய அடியாரோடு அடியேனும் ஒரு வழிப்பட்டு ஈடேறுமாறு, ஒலிக்கின்ற சிலம்பணிந்த இரு திருவடிகளையும், மௌன நிலையையும் தந்து அருளுவீராக.

விரிவுரை
  
அருவம் இடை என வருபவர் ---

மாதர்களின் இடை கண்ணுக்குத் தெரியாத அளவு சுருங்கி இருப்பது அழகு.

துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ---

காமவிடாய் கொண்டோர் தாம் விரும்பும் மாதர்களின் பவள வாயிதழ் ஊறலைச் சுவைப்பார்கள்.

"குமுத அமுத இதழ் பருகி உருகி" --- (கொலைமத)  திருப்புகழ்.

கலவியும் அலம் அலம் ---

மனிதன் கடைத்தேற வேண்டுமானால் அலம் புத்தி வரவேண்டும். அலம் - போதும்.

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பது பழமொழி.

எத்துணைக் காலம் சேர்ந்து வாழ்ந்தாலும் மாதராசை எளிதில் விலகாது. அறிவு என்ற கூரிய வாளால் திருவருள் துணைக் கொண்டு அதனை அகற்ற வேண்டும்.

உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம் ---

உலகில் உள்ள தனவந்தர்களை - ஒரு காசும் ஈயாத உலோபிகளை, "நீ கற்பக மரத்துக்குச் சமானம்" என்று புகழ்ந்து சமத்காரமாகப் பாடுகின்ற புலமையும் போதும் போதும்.

உருவும் இளமையும் அலம் அலம் ---

ஒன்றுக்கும் உதவாத இந்த உடம்பை அழகு செய்து கொள்வதும், இளமையோடு வாழவேண்டும் என்ற முயற்சியும் போதும் போதும்.

விபரித சமய கலைகளும் அலம் அலம் ---

ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டுக் கூறுகின்ற சமய நூல் கலைகளும் அவைகளின் ஆராய்ச்சியும் போதும் போதும்.

"கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்கவாதிகள்.....
கலைகளும் ஒழிய" …...          --- (அலகிலவுணரை) திருப்புகழ்.

"உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ”..... திருவாசகம்.

அலமரும் வினைவாழ்வும் சலில லிபியன சனனமும் அலம் அலம் ---

சுவர்க்க நரக பூதலம் என்ற இடங்களின் சதா மாறி மாறிப் பிறப்பதற்கும், துயரம் அடைவதற்கும் ஏதுவான வினைகளால் எய்தும் வாழ்வும், மீர் மீது எழுதிய எழுத்துக்கு நிகராக விரைவில் அழியும் இப்புறவியும் போதும் போதும்.

"நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை"      ---  கந்தர் அலங்காரம்.

இனி உன் அடியரொடு ஒருவழி பட ---

சென்றது செல்லட்டும்.  இனியாவது அடியேன், முருகா, உன் அடியாருடன் ஒன்றுபட்டு, பலவழிகளை மறந்து ஒரு வழிபட்டு உய்ய அருள் செய்.

மவுனமும் அருள்வாயே ---

வாய் பேசாதது மௌனம் ஆகாது. மனத்தின் தொடர்பு இன்றி நிற்கும் நிலை மௌனமாகும்.

வாய்க்கும் கைக்கும் மௌனம் மௌனம்என்று
ஏய்க்கும் சொல்கொண்டு, ராப்பகல் அற்றிடா
நாய்க்கும் இன்பம்உண் டோ,நல் அடியரைத்
தோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே.       ---  தாயுமானார்.

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை
நோக்கும் மவுனம் இந்த நூலறிவில் உண்டாமோ.     ---  தாயுமானார்.

எல்லா வகையான சித்திகளிலும் தலையாயது மோன நிலை கைவரப் பெறுவதே ஆகும்.

"மோனம் என்பது ஞான வரம்பு" ---  கொன்றைவேந்தன்.

உருவு கரியதொர் கணை கொடு ---

இத் திருப்புகழின் பிற்பகுதியாகிய மூன்று அடிகளில் திரிபுர தகனம் மிக அழகாகக் கூறப்படுகின்றது.

கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள்.  இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள்.  இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார்.  திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள்.  திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள்.  கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என, வானோர்
எல்லாம்ஒரு தேராய், அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப,
வல்லாய்எரி, காற்று ஈர்க்கு,அரி கோல்,வாசுகி நாண், கல்
வில்லால் எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.    ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்,
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்ததுஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.     ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே? விடைஏறும் வேதியனே!
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.     ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.     ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே.       ---  சுந்தரர்.


அடியிட நெறுநெறென முறிதலும் ---

சிவமூர்த்தி அத்தேரில் அடி வைத்த மாத்திரத்தில் உறுதியான அத்தேர் நெறு நெறு என்று முறிந்து அழிந்தது.

"தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முரிந்தது என்று உந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற”.             ---  திருவாசகம்.

நிலைபெறுதவம் உடைய ஒருவருமிருவரும் அருள் பெற ---

நிலைபெற்ற திரிபுரத் தலைவர் மூவரும் தீயால் வேவாது அருள் பெற்று உய்ந்தார்கள்.  ஒருவர் கயிலையில் குடமுழா வாசிப்பவராகவும், மற்ற இருவர் வாயில் காவலர்களாகவும் ஆனார்கள்.

இந்தக் குறிப்பை உணர்த்தும் பொருட்டு ஒருவர் இருவர் எனப் பிரித்துக் கூறிய கவித்திறம் மிகவும் சிறந்தது.
  
ஒரு கோடி தெருவு நகரியும் ---

திரிபுர நகரங்கள் ஒருகோடி தெருக்களை உடையன என்றதனால் அதன் பரப்பும் விரிவும் புலனாகின்றது.

திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார் ---

சிவபெருமான் எவர் மீதும் போர் புரிந்தார் என்று வரலாறு கூறவில்லை.

சிரித்தார் - புரம் எரித்தார்.
காமனைக் கண்ணால் பொடி செய்தார்.
சோமனைக் காலால் தேய்த்தார்
இராவணனைத் திருவடி நகத்தால் அடர்த்தார்.
சலந்தரனைக் காலால் கீறிக் கொன்றார்.
முயலகனைத் திருவடியில் மிதித்தார்.

"குதியால் நமனை உதைத்து, உள்ளங் காலில் கூன்நிமிர
மதிஆகம் தேய்த்து, அவ் இலங்கேசன் மாமுடி பத்தும் நக
நுதியால் மிதிக்கு முயலகன் மேனிநொறுங்க இன்னும்
மிதியா நின்றால் அருள் எங்கே சொக்கேசர்தம் மெல்லடிக்கே”.
                                             ---  பலபட்டடை சொக்கநாதப் புலவர்.

"அனகன் பெயர் நின்று உருளும் திரி
புரமும்திரி வென்றிட இன்புடன்
அழல்உந்த நகும்திறல் கொண்டவர்”...     --- (கனகம்) திருப்புகழ்.


கருத்துரை


         திருவருணையில் எழுந்தருளிய திருமுருகா, அடியவர் உறவும் மவுனமும் தந்தருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...