துர்ச்சனப் பிள்ளைக்கு புத்தி






16. துர்ச்சனப் பிள்ளைக்கு...

கொச்சையில்பிள் ளைக்குதவும் தண்டலையார்
     வளநாட்டில் கொடிதாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுனம் மாதவனே
     புத்திசொன்னான்! வகையும் சொன்னான்!
அச்சுதப்பிள் ளைக்கும் அந்த ஆண்டவரே
     புத்திசொன்னார்! ஆத லாலே,
துர்ச்சனப்பிள் ளைக்கு ஊரார் புத்திசொல்லு
     வார் என்றே சொல்லு வாரே!

               இதன் பொருள் ---

     கொச்சையில் பிள்ளைக்கு உதவும் தண்டலையார் வள நாட்டில் --- கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதியில் திரு அவதாரம் புரிந்தருளிய திருஞானசம்பந்தருக்கு அருள்புரிந்த திருத்தண்டலை நீள்நெறி இறைவரின் வளம் மிகுந்த நாட்டிலே,

     முனம் கொடிதாய் வந்த வச்சிரப் பிள்ளைக்கு மாதவனே  புத்தி  சொன்னான் --- முற்காலத்தில் கொடும் செயல் புரிந்தவனும், வச்சிராயுதத்தை உடையவனும் ஆகிய இந்திரனுக்குப் பெருந்தவம் உடைய துர்வாச முனிவரே அறிவு புகட்டினார்,

     வகையும் சொன்னான் ---  நடந்துகொள்ளும்  முறையையும்  கூறினார்,

     அச்சுதப் பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே புத்தி சொன்னார் --- திருமாலுக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே  அறிவு புகட்டினார்,

     ஆதலால் --- ஆகையால்,

     துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார் என்றே சொல்லுவார் --- தீய நெறியிலே செல்லும்  பிள்ளைக்கு ஊரில் உள்ளோரு அறிவு புகட்டுவார் 

     என்றே சொல்லுவாரே --- என்று அறிவுடையோர் கூறுவார்கள்.

          விளக்கம் --- இந்திரன் ஒருமுறை துர்வாசர் கொடுத்த  சிவ நிர்மாலியமான மாலையை யானை மீதிருந்தவாறு அங்குசத்தால் ஏற்று யானையின் தலைமீது வைத்தான். யானையானது அந்த மாலையை உடனே தன் துதிக்கையால் எடுத்துக் காலில் இட்டு மிதித்தது. அதனைக் கண்ட துர்வாசர் சினந்து இந்திரன் தன் பதவி இழக்கவும், வெள்ளானை காட்டானை ஆகவும் சபித்தார். அவரே மதுரையில் எழுந்தருளி உள்ள சொக்கநாதரை வழிபட்டால் சாபம் நீங்கும் என அவனுக்கு வகையும் கூறினார். இது வச்சிரப் பிள்ளைக்கு மாதவர் ஆகிய துருவாசர் புத்தி கூறியது.

     திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் மீன், வராகம், ஆமை, நரசிங்கம், எனும் அவதாரங்களில் அவர் கொண்ட செருக்கைச் சிவபெருமான் அடக்கினார் என்பது அச்சுதப் பிள்ளைக்கு ஆண்டவன் புத்தி சொன்னது ஆகும்.

     ‘வீட்டில் அடங்காத பிள்ளை ஊரில் அடங்கிவிடும்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...