தினை அளவும் பனை அளவு ஆகும்.




12. தினை அளவு பனை அளவு ஆகும்!

துப்பி இட்ட ஆலம்விதை சிறிது எனினும்,
     பெரிது ஆகும் தோற்றம் போல,
செப்பிட்ட தினையளவு செய்த நன்றி
     பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்;
கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார்
     வளநாட்டில் கொஞ்சம் ஏனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
     நினைக்கும் இந்த உலகம் தானே!

          இதன் பொருள் ---

     கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில் --- கொப்பு எனும் காதணியை அணிந்த  உமையம்மையை  இடப்பாகத்தில் கொண்ட திருத்தண்டலை நீள்நெறி நாதரின் வளம் பொருந்திய நாட்டில்,

     துப்பி இட்ட ஆலம் விதை சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல --- துப்பி விட்ட ஆலமரத்தின் விதையானது  சிறியதாக இருந்தாலும், பின்னர் அது முளைத்துப்  பெரிய  மரம்  ஆகும்  காட்சியைப்  போல,

     செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும் --- கூறப்பட்ட தினையின் அளவாக ஒருவர் செய்த நன்மையானது, ஏற்கும் இடத்தால், பின்னர் பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும்,

     இந்த உலகம் கொஞ்சமேனும் உப்பிட்ட  பேர்கள் தமை  உளவரையும்  நினைக்கும் --- இந்த  உலகத்தில் உள்ளோர்கள் சிறிதளவு  உப்பு  இட்டவரையும்,  உயிருள்ள  வரையும்  நினைத்துப் பார்ப்பர்.

     "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
   கொள்வர் பயன் தெரி வார்.'

என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது
பழமொழி.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதால், உள்ளத்தால் உயர்ந்தோர், தமக்கு ஒருவர் செய்த நன்றி சிறியது ஆயினும், அதனால் அப்போது விளைந்த பயனை எண்ணி, அதனைப் பனை அளவாக மதித்துப் போற்றுவர் என்றார்.  கீழோருக்கு அது இராது.


1 comment:

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...