009. விருந்தோம்பல் - 08. பரிந்து ஓம்பி





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "வருந்திப் பொருளைப் பாதுகாத்தும், விருந்தோம்பல் என்னும் வேள்வியினைச் செய்வதில் மேம்படாதவர், பொருளை வருந்திப் பாதுகாத்தும் பயனை அடையமாட்டாது வருந்துவர்" என்றது.

திருக்குறளைக் காண்போம்...

பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர், விருந்து ஓம்பி
வேள்வி தலைப் படாதார்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் --- நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்;

     விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் --- அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.

         ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)

         பொருளை ஒருவன் தேடுதலும், தேடிய பொருளைக் காத்தலும், காத்த பொருள் குறைபடுதலும், குறைந்த பொருள் முற்றும் பொய்விடுதலும், தேடிய அவனுக்குத் தன்பம் தரும் என்பதைப் பின்வரும் நாலடியார்ச் செய்யுள் காட்டும்....

ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம், - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம், துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.

இதன் பதவுரை ---

     ஈட்டலும் துன்பம் --- பொருள் திரட்டுதலுந் துன்பம்; ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் --- திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்; காத்தல் குறை படின் துன்பம் --- அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள் தன் அளவில் குறைந்து போகுமாயின் துன்பமே, கெடின் துன்பம் --- இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம்; துன்பக்கு உறைபதி பொருள் --- ஆதலால், பொருள் துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடம் என்க.

         துன்பங்களுக்கு உறைவிடமாயுள்ள பொருளைப் பயன்படுத்தும் முறையினை அறிந்து வழங்குதலே அறிவுடைமையாகும்.

     இதனையே நீதிவெண்பா என்னும் நூலும் வலியுறுத்துதல் காண்க..

இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே
பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால்
இழத்தலே துன்பமேயாம்.            ----  நீதிவண்பா.

இதன் பொருள் ---

     துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம். அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே. அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.

     இன்றியும் பொருளை நல்வழியில் செலவழியாதார், இதனை இழப்பது திண்ணம் என்பதை நாலடியாரில் காணலாம்....

உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்,
துன்னுஅருங் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான் பொருள்காத்து இருப்பானேல், அ ஆ
இழந்தான்என்று எண்ணப் படும்.    ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     உண்ணான் --- இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் --- மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் --- பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்து கொள்ளாமலும், துன் அரும் கேளிர் துயர் களையான் --- நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் --- இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் --- ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக் கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று --- ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனே என்று, எண்ணப்படும் --- கருதப்படுவான்.

         ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளில் செலவு செய்யாதிருந்தால், அவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான்.

     செல்வம், தான் இறக்குமளவும் அழியாமல் இருந்தாலும் அதனால் கொண்ட பயன் யாதொன்றும் இல்லாமையின், அவன் உடையவனாயினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.


உடாஅதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார், - கொடாஅது
வைத்தீட்டி னார் இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.              ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     வான் தோய் --- வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட --- மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் --- நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் --- உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் --- தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் --- அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது --- வறியவர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் --- பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் --- அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ --- பல பூக்களிலிருந்து கொண்டு போய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி --- அதற்குச் சான்று.

         அறவழியில் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப் போல அப்பொருளை இழந்துவிடுவர்.

         கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து. அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடும் தேனீ உவமையாயிற்று. துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர் போல் அறச் செயலேனும் செய்கின்றனரோ எனின் அதுவுமின்று என்றற்கு, ‘கெடாதநல் அறமுஞ் செய்யார்' என்று அதன்பின் கூறினார்.  ஈட்டிய பொருளை இறுக்கி வைக்கவேண்டும் என்னும் நினைவினால், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.


விருந்தின்றி உண்ட பகலும், திருந்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும், - இல்லார்க்குஒன்று
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும், இம்மூன்றும்
நோயே உரன் உடையார்க்கு.    ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     விருந்து இன்றி உண்ட பகலும் --- விருந்தினரை இல்லாமல் - தனித்து உண்ணக் கழிந்த பகல் பொழுதும், திருந்து இழையார் புல்ல புடை பெயராக் கங்குலும் --- திருந்திய அணிகளை அணிந்த மனைவியரைப் பொருந்துவதால்,  கழிதல் இல்லாத இரவும்; இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் --- வறியவர்க்கு ஒன்றைக் கொடாமையினால் கழிந்த நாளும்; இ மூன்றும் --- ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு --- அறிவுடையார்க்கு, நோயே --- (நினைக்குந்தோறும்) நோய்களாம்.

         விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க்கு ஈயாக் காலைவேளையும் அறிவுடையோர்க்கு நோய் செய்வன.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...