005. இல்வாழ்க்கை - 03. தென்புலத்தார்





திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை.

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாவது திருக்குறள்,  மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினர் இடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே சிறப்பு உடையது என்கின்றது.

     பிதிரர் ஆவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் தேவ சாதியர். அவர்க்கு இருக்கும் இடம் தென்திசை. ஆதலால், தென்புலத்தார் எனப்பட்டார். இறந்து போனவரது புத்திரர் முதலியோர் செய்யும் கருமங்களினால் மகிழ்ச்சி உற்று, இறந்தவர்க்கும் அவரது இனத்தவர்க்கும் நேர்ந்த துர்க் கதியை நீக்கவும், நற்கதியை அளிக்கவும் வல்ல ஒரு வகை தேவசாதியார் பிதிர்க்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைத் தேவர்களில் ஒரு வகையினராய் இருத்தல் பற்றி, பிதிரராவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி என்று கூறப்பட்டது. இயற்கைத் தேவர்கள் அல்லாதார், கருமத் தேவர்கள் எனப்படுவர்.அவர்கள், புண்ணியத்திற்கு ஏற்ப, சுவர்க்காதி போகங்களை அனுபவித்து, புண்ணியம் கழிந்த உடனே, அவ்விடத்தினின்றும் நீங்கி விடுபவர்கள்.

     விருந்து என்பது சுற்றத்தாரையும், நண்பர்களையும் குறிக்காது. விருந்து என்ற சொல்லுக்கு, புதிதாய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் என்று பொருள். விருந்தினர் என்றால், புதியவர், அதிதி என்ற பொருள்.

     பின்வரும் அறநெறிச்சாரப் பாடலைக் காண்க---

அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டு உண்ணா மாட்சி உடையவர், --- அட்டு உண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்,
வீழ்வார்க்கு வீழ்வார் துணை.

இப் பாடலின் பொருள் ---

     சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் என்போர், எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, அவ்வாறு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல், மலை உச்சியில் இருந்து நிலத்தின் மீது விழுகின்றவர்க்கு, அவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று எண்ணுதல் போன்றது ஆகும்.

     ஓர் இராத்திரி பரியந்தம் புதிதாக வந்தவன் அதிதி எனத் தக்கவன். நாள்தோறும் வாராது, ஒரு காலத்து வருபவனுக்கு அதிதி என்று பெயர் என்ற மனுநூல் சொல்லுகின்றது.

     "அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், தொன்று தொட்டே விருந்தினரை எதிர் கொள்ளுதல் இல்லறத்தானுடைய கடமை ஆயிற்று என்பது பெறப்படும்.

திருக்குறளைக் காண்போம் ....

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்றுஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

         தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று --- பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட;

     ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை --- ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
        
         (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவு உண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

இத் திருக்குறளானது, எப்படி கடைப்பிடித்து வாழ்ந்து காட்டப்பட்டது நமது முன்னோர்களால் என்பதை அறிவோம்.

அரசுகொள் கடன்கள் ஆற்றி
     மிகுதிகொண்டு அறங்கள் பேணி
பரவு அரும் கடவுள் போற்றி
     குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி
     விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்து
     உள பதிகள் எங்கும்.

பெரியபுராணத்தில், திருநாட்டுச் சிறப்பு என்னும் பகுதியில் வரும் பாடல் மேலே தரப்பட்டது. சோழ நாட்டிலே அன்று நமது முன்னோர்கள் வாழ்ந்த வகையைத் தெரிவிக்கும் அருமையானதொரு பாடல் இது.

     இதன் பொருள் --- (உழவர்கள் தாங்கள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல்லில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின், எஞ்சிய விளைவைக் கொண்டு ஆங்கு முதலில் செய்யத் தக்கன ஆகிய அறங்களை விரும்பிச் செய்து, வழிபாட்டிற்கு உரிய கடவுள் பூசையைப் பாராட்டிச் செய்து, தென்புலத்தார்களையும் விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால் விளக்கம் பெறும் குடிகளால் செழுமையாக அமைக்கப்பட்ட மலைபோன்ற மாடங்களை உடைய ஊர்கள் எங்கும் நிறைந்திருப்பது சோழ நாடு.

     அரசுகொள் கடன்கள் ஆற்றுதல் அரசுக்குச் சேரவேண்டிய பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துவது ஆகும்.. இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாகும். அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும், வேறு வரி வகைகளும் கூட்டி, மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிக்கக்கூடும் என்பதால் "கடன்கள்" என்றும் சொல்லப்பட்டது. இது குடிகளின் கடமைகளில் முதல் கடமையாகும். எனவே தான், தெய்வத்தின் முன்னர் வைத்து முதலில் கூறப்பட்டது.

     வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள் அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடு அல்ல என்பது இதனால் விளங்கும்.

     வருவாயில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியாகச் செலுத்தி, எஞ்சியதைக் கொண்டு, தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்து ஆறினை ஓம்பினார்கள் மக்கள் என்று அறியப்படுகின்றது. ஆக, வருவாயை ஆறு பங்காகப் பிரித்து, ஒரு பங்கினை அரசுக்குச் செலுத்தி, எஞ்சியதைக் கொண்டு அறநெறியில் வாழ்ந்தார்கள்.

     இன்று, அது கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டியதை எப்படி எல்லாம் தவிர்க்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்று வழியைத் தேடுவது இப்போதைய வாடிக்கையாக உள்ளது. அரசுக்கு வருவாய் இல்லை என்றாலும், தமது வருவாயை எப்படிப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் போக்கு பெருகி வருவதைக் காணலாம்.

     அப்பர் பெருமானுடைய தந்தையார் புகழனார் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பின்வரும் பெரியபுராணப் பாடலால் அறியலாம். மனை அறம் புரிந்து வாழ்ந்தார். விருந்து அளித்தலிலே மேம்பட்டு இருந்தார். சுற்றத்தாரையும் பேணினார் என்று அறிகின்றோம்.

அக்குடியின் மேல் தோன்றல்
     ஆயபெரும் தன்மையினார்
மிக்க மனைஅறம் புரிந்து
     விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெரும் சிறப்பின்
     உளர்ஆனார், உளர் ஆனார்,
திக்கு நிலவும் பெருமை
     திகழ வரும் புகழனார். 

இதன் பொருள் ---

எல்லாத் திசைகளிலும், நிலைபெற்று விளங்கும் பெருமை பொருந்திய `புகழனார்` என்ற சான்றோர், அக்குடியின் பெருந்தலைவராவர், மேன்மை மிக்க இல்லறத்தை நடத்தி, விருந்து அளிக்கும் மேன்மை உடையவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகும் பெருஞ்சிறப்பில் உள்ளவரானார். ஆதலால் அவரே இல்லறநெறிக் கண் கூறப்பெறும் அறங்கள் பலவும் உள்ளவர் (உடையவர்) ஆனார்.

     திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பாடல்களாலும், நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு உணரலாம்.

கற்றை வை களைந்து தூற்றி,
         கூப்பி, ஊர்க் காணித் தெய்வம்,
அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து,
         அளவை கண்டு, றில் ஒன்று
கொற்றவர் கடமை கொள்ள,
         பண்டியில் கொடுபோய்த் தென்னாடு
உற்றவர், சுற்றம், தெய்வம்
         விருந்தினர்க்கு ஊட்டி உண்பார்.

பாண்டி நாட்டிலே வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறுகின்ற பாடல்கள் இவை.
  
இதன் பொருள் ---

     கற்றை வை களைந்து தூற்றி --- அறுவடை செய்து கற்றையாக வைக்கப்பட்டுள்ள வைக்கோலை கட்டு நீக்கி அடித்து, பதர் போகத் தூற்றி, கூப்பி --- நெல்லைப் பொலிகளாகக் குவித்து வைத்து, (அவ்விடத்திலேயே)  ஊர்க் காணித் தெய்வம் --- கிராம தேவதைகளுக்கும்அற்றவர்க்கு --- வறியவர்களுக்கும்அற்றவாறு ஈந்து --- வரையறுத்தபடி கொடுத்து, அளவை கண்டு --- அளந்து பார்த்து,  கொற்றவர் கடமை ஆறில் ஒன்று கொள்ள --- மன்னருக்கு இறைப்பொருளாக ஆறில் ஒரு கூறு கொள்ளக் கொடுத்து பண்டியில் கொடுபோய் --- மிகுதியை வண்டிகளில் கொண்டு போய் தமது இருப்பிடத்திலே சேர்த்து தென்னாடு உற்றவர் --- தென்புலத்தைச் சேர்ந்தவர்களையும் சுற்றம் --- ஒக்கலையும் தெய்வம் ---- தேவரையும்,
விருந்தினர்க்கு --- விருந்தினரையும்ஊட்டி --- உண்பித்து உண்பார் --- (அந்நாட்டினர்) தாமும் உண்பார்.  


பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த
நன்மலை மானக் கூப்பி நல்கிப் பல் குடியும் ஓம்பித்
தென்மலைக் கிழவன் தெய்வம் தென்புல வாணர் ஒக்கல்
தன்மனை விருந்து காத்துத் தருக்கினால் இருக்கும் நாளில்.
                        --- தி.வி.புராணம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.

 இதன் பொருள் ---

     பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை --- (பின்பு) மேருமலைத் தெய்வம்கொடுத்த அத்தூய்மையாகிய பொருளை, அந்த நல்மலை மானப் கூப்பி --- அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்து, பல் குடியும் நல்கி ஓம்பி --- பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து, தென்மலைக் கிழவன் --- பொதியின் மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி, தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து --- தெய்வத்தையும் தென்புலத்தாரையும் சுற்றத்தாரையும் தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் --- களிப்புடன் இருக்கும் காலத்தில் எ - று.
        

மின்னார் சடையான் தமரம் ஆய்ந்தவர் வேதச் செல்வர்
தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் செறிந்து நட்டோர்
முன்னாம் எவர்க்கும் முகில்போல் வரையாமல் நல்கி
எந்நாளுநம் நோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான்.
                           --- தி.வி.புராணம், உலவாக்கோட்டை அருளிய படலம்.
  
இதன் பொருள் ---

மின் ஆர் சடையான் தமர் --- மின் போன்ற சடையையுடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர் --- வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் --- பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து நட்டோர் --- நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் --- முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி --- மேகம் போல் வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய்ய இன்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான் --- எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான்.
                       
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு
இன்புறத்தான் உண்டல் இனிதாமே --- அன்புறவே
தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர்மீன்
கொக்கு அறுத்தல் என்றே குறி. ---  நீதிவெண்பா

இதன் பொருள் ---

பிதிரர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார் என்று சொல்லப்பட்ட இந்த நான்கு பேர்களுடன் இன்பம் மிகும்படி ஒருவன் தான் உண்பது நல்லதாகும்.  அன்பு பொருந்தச் சேர்ந்து உண்பதற்குத் தகுந்தவர்களான அந் நான்கு பேரும் இல்லாமல் தான் மட்டும் தனியாக உண்ணுதல், கொக்கு தான் பிடித்த மீனைத் தனியே இருந்து தின்பதனோடு ஒக்கும் என்றே எண்ணுக.

(தென்புலத்தார் - பிதிரர், மாண்ட மூதாதையர். விருந்து - புதியவராக வந்தவர்.  ஒக்கல் - உறவினர். தக்கவரை - தக்க அவரை, தகுதி வாய்ந்தவர்களை.)

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...