011. செய்ந்நன்றி அறிதல் - 05. உதவி வரைத்து






திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், " ஒருவருக்குச் செய்யும் உதவியானது, அதற்கான காரணமும், பொருளும், காலமும் ஆகிய மூன்று வகையாலும் செய்த உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவரின் தகுதியைப் பொறுத்து, அதன் சிறப்பு அமையும்" என்கின்றது.

     மூன்று வகையாலும் அல்லாத உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்ததும், தக்க காலத்தில் செய்ததும், பயனை எதிர்நோக்காது செய்த உதவியும் ஆகும். அதாவது, பிறர் செய்த உதவியை ஏற்றுக் கொண்டவர், அவருக்கு அவர் செய்த உதவியின் காரணம், உதவி செய்த பொருளின் அளவு, ஆகியவற்றிற்கு ஏற்ப பிரதி உதவி செய்யாது, தமது தகுதிக்கு ஏற்பச் செய்தல் ஆகும்.

     இதனால், உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும், பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும்.

     ஏனவே, பாரணம் பருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பநனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.

திருக்குறளைக் காண்போம்....

உதவி வரைத்து அன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---   

     உதவி உதவி வரைத்து அன்று --- கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று;

     உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து --- அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '

       (சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார்.)

     பின் வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்து இருத்தலைக் காணலாம்...

உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்
தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.           --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து --- சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி --- தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு --- மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் --- அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் சிறிதாயினும் --- தான் அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப்பட்டால் --- தகுதியுடைய பெரியோர் கையிற் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்துவிடும் --- வானமும் சிறிதென்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

         சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச் சிறியதாயினும், அது பெரும்பயன் தரும்.


கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலம் தர,
அடித்தாமரைச் சுடர்ப்பரிதி அளித்தருளினை, அதனால்
புதுமலர்ப் பொழில் தில்லை வாண!
உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே.  --- சிதம்பர செய்யுட் கோவை.

இதன் பொருள் ---

     தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு, அப் பெருமான் சூரியன் போல் போரொளி விளங்கும் சக்கரத்தை அவன் கையில் தந்தான். அதனால், மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே-அல்லாத
ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.            ---  மூதுரை.

இதன் பதவுரை ---

     நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் --- நற்குணமுடைய ஒருவர்க்குச் செய்த உதவியானது, கல்மேல் எழுத்துப் போல் காணும் --- கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல, அழியாது விளங்கும்; அல்லாத --- நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் --- அன்பில்லாத மனம் உடையார்க்குச் செய்த உதவியானது, நீர் மேல் எழுத்திற்கு நேர் --- நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும். (அழிந்துவிடும்).

         நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும்.


மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது - நீத்தமே. ---  கம்பராமாயணம், ஆற்றுப் படலம்.

இதன் பதவுரை ---

     மானம் நேர்ந்து --- மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி --- தரும நெறி கருதி;  மனுநெறி போன --- மனுநீதிப்படி நடக்கும் தண்குடை வேந்தன் புகழ் என --- குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்;  ஞானம் முன்னிய --- ஞான
வழியை நாடுகின்ற;  நான்மறையாளர் கைத் தானம் என்ன --- நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு  வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது --- சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

     தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தான் தாழ்வு வந்து உயிர் வாழாமையும் ஆம் என மானத்திற்கு விளக்கம் தந்தார் பரிமேலழகர்.

     மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும்;  வீயாது - ஓயாது. இவை போலச் சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது ஓங்கும். வீயாது. 

     விளக்கம் --- ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று.   துன்புறும் உயிர்க் குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம்.  ஆதலின், ‘தண் குடைஎன்றார்;  தண்மை ஈண்டு அருளாள்தல்.

கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே,
வருந்திய குடி மறைப்பதுவே  

என்ற வெள்ளைக்குடி நாகனாரின் புறநானூற்றுப் பாடல் வாக்கு கருதுக.

     நான்மறையாளர்,   வெறுமே வேதமுழக்கம் செய்வதால்   மட்டுமே தக்காராகிவிட மாட்டார் என்பதை ஞானம் முன்னிய  என்ற முன் ஒட்டு விளக்கி நின்றது. அத்தகு தகுதிப்பாடு உடையாரின் கைப்பட்ட அறத்தின் பயன் நந்தாது நாளும் ஓங்கும்; இதனை,  அறப்பயனுன் தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்துவிடும் என விளக்குவர். (நாலடி 38).


கயங்தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே.    ---  கம்பராமாயணம், வேள்விப் படலம்.

இதன் பொழிப்புரை ---

     கயம் தரு நறும் புனல் --- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில் தீண்டலும் --- தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் --- பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் --- எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள --- அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப --- அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல;  விசும்பின்  ஓங்கினான்  --- வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான். 

     கயம்: குளம். நறும்புனல்: தெளிந்து குளிர்ந்துள்ள நீராம்.

     உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற திருக்குறட்கருத்துத் தோன்ற,. உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல. வாமனமூர்த்தி வானுற ஓங்கி. வளர்ந்து நின்றான் என்பது கருத்து.

சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்
          திலம்அளவே செய்திடினும், நிலமலைபோல் திகழ்ந்து,
பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,
          பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்
தவம்ஆரும் பிறப்புஒன்றிற் சாரப் பண்ணி,
          சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,
நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,
          நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.   ---  சிவஞானசித்தியார்.

இதன் பதவுரை ---

     சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் --- (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்றோர்) சிவஞானிகள் கையின்கண்ணே தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து --- நிலமும் மலையும் போல மிக்கு ஓங்குதலான் (அத் தானம் அப் பத்தருக்கு), பரபோகம் துய்ப்பித்து --- மேலாகிய (சிவசாலோகாதி பதங்களை ஒருதலையாக நண்ணி ஆண்டு உளவாகிய) இன்பங்களை அனுபவிக்கச் செய்து, பவமாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து --- சனன மரண வஞ்சக் கடலின்கண் அமிழ்ந்தா வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க --– பாசத்தினை நீக்க, தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி --- தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே --- சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெற்ச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் --- (முடிவின்கண்ணே) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தியே முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும் என்க.

     பத்திநெறியில் நின்றோர்க்குப் பக்குவம் மிகுந்து இருத்தலால், சரியை கிரியா யோகம் எளிதில் கைகூடி முற்றுப்பெறுவன. அல்லாமல், ஏனோர்க்குப் போலக் காலநீட்டிப்பும் அருமையும் உடையனவல்ல என்பார், சரியை கிரியா யோகம் தன்னினுஞ் சாராமே என்றார்.


திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,
பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;
நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,
பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே.       ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே. ஆயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.

         குறிப்புரை : சிவஞானியர்க்குச் செய்யப்படுவதைச் சிவன் தனக்குச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுதலால், அது பெரும்பயன் தரவல்லதாகின்றது. யாதும் அறியாதார்க்கு ஈவது வஞ்சரை வளர்க்கும் செய்கையாய் முடிவதால், அது, கருதிய பயன் தாராமையே யன்றிக் கெடுதற்கும் ஏதுவாம் என்க.

இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.      --- திருக்குறள், 87

எனவும்,

``தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்``            --- நாலடியார், 38

எனவும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலின் சிறப்பு இவ்வாறே யாண்டும் எடுத்தோதப்படுதல் அறிக.

         குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக் கொடுத்தல் கொடையாகும்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...