015. பிறனில் விழையாமை - 04. எனைத்துணையர்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "காம மயக்கத்தினால் சிறிது அளவும் தனது குற்றத்தைக் கருதாது, பிறனுடைய மனையாள் இடத்துச் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராய் இருப்பினும் என்ன பயனைத் தரும்?" என்கின்றது.

     கௌதம முனிவரது மனைவியாகிய அகலிகையை விரும்பிப் புணர்ந்த இந்திரன், அந்தத் தீய செய்கையால், தனது பெருமை இழந்து, இழிவு அடைந்ததைப் போன்று, எவ்வுளவு பெருமையை உடையவரும், இது போன்ற தீய செயலால் தமது பெருமையில் குன்றுவர் என்றது.

திருக்குறளைக் காண்போம்....

எனைத் துணையர் ஆயினும் என்ஆம், தினைத் துணையும்
தேரான் பிறன் இல் புகல். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எனைத்துணையர் ஆயினும் என்னாம் --- எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்,

     தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் --- காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.

         (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வரமிழந்தான் சீதையினால் வாழ்விழந்தான் பத்துச்
சிரமுமிழந் தான், சிவசிவா! - உரமாம்
எனைத்துணைய ராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

         சீதாதேவியை இச்சித்து, அவரைக் கவர்ந்து சென்று துன்பத்திற்கு உள்ளாக்கியதால் இராவணன் தனது போக வாழ்வை இழந்ததோடல்லாமல், இராமபிரானின் கணைக்கு ஆளாகித் தன்னுடைய பத்துத் தலைகளையும் இழந்தான். பிறனில் விழைந்ததால் அவனுக்கு இந்நிலை ஏற்பட்டது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

அறமும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பிறன்இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப் படுமேல்
இழுக்குஆம் ஒருங்கே இவை.       --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறன் இல் பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல் ---அயலான் மனைவியை விரும்பினான் என்று மற்றவர்களால் ஒருவன் பழித்துப் பேசப்படுவனாயின்,  அறனும் அறன் அறிந்த செய்கையும் --- அவன் மேற்கொண்ட அறமும், -அவ்வறத்தினுக்கு ஏற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே இழுக்கு ஆம் --- இவை முழுவதும் பழியாம்.

தன்னைப்போல் பிறரை எண்ணல்
     தகுதியாம், தான் மணந்த
மின்னைப்போல் இடையி னாளை
         விழியினால் நோக்கு வோரைத்
தின்னல்போல் முனிவு கொள்வோர்,
         அயலவன் தேவி தன்னை
அன்னை சோதரி போல் எண்ணாது
         அணைந்திட விரும்பல் என்னே.     ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

     ஒருவன் தன்னைப்போல் பிறரை நினைப்பது நடுவு நிலையாம். தான் திருமணம் செய்துகொண்ட மின்போலும் இடையினை உடைய மனைவியை வேறொருவன் கண்ணால் பார்த்தாலும் குற்றமென்று அவனைக் கொல்லத்தக்க சினத்தைக் கொள்வோன், அயலவன் மனைவியைத் தாயைப் போலவும் உடன்பிறப்புப் போலவும் கருதாமல் முறைகடந்து கூட ஆசைப்படுவது என்ன கொடுமை?



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...