009. விருந்தோம்பல் - 01. இருந்தோம்பி




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்து ஓம்பல்

     இந்த அதிகாரத்தின் முதல் திருக்குறள், "வீட்டில் தங்கி, பொருள்களைக் காத்து, வாழ்க்கை நடத்துவது எல்லாமும் விருந்தினரைப் போற்றி, உதவி செய்வதற்கே ஆம்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம், விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் --- மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்;

     விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு --- விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
        
      (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும், பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)

     இதற்குப் பின்வரும் பிரமாணங்களைக் காண்க....

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணன்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
 ஈண்டோ இன்சாயலனே, வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில்
கள்உடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை
 ஏமம் ஆகத் தாம் முந்து உறுமே.   ---  புறநானூறு.


இதன் பொருள் ---
   
    தன்னைக் கட்டி உள்ள கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு போக முயற்சித்துப் பெருமூச்சு விடும் யானை, லாயத்தில் இருந்து வெளியேறத் துடித்துக் கனைக்கும், காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரை நிறைந்த, மணல் இட்டு நிரப்பிய முற்றத்தில், விட்டுக்குள் வந்து இருக்கும் கற்றறிந்த பெருமக்கள், அப்போது உண்ணவில்லை என்றாலும், தான் உண்ணும்போது தன்னோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று, அவர்களைக் கெஞ்சிக் கேட்கும் கீரன் சாத்தன், கற்றவர்களிடம் அன்பு காட்டும் இனிய பண்புகளை உடையவன். ஆனாலும், வேலும் வாளும் வீசி விளையாடும் போர்க்களத்தில், ஊருக்குள் இருந்தபடி, மது உண்ட மயக்கத்தில் வீரம் பேசித் திரிந்தவர்கள், போர் வந்துவிட்ட போது, பகைவரை எதிர்கொள்ள முடியாது பயந்து ஓட நினைக்கும் நிலையில், அவர்களுக்குக் காவலாக நின்று, அவர்களைக் காப்பதுடன், பகையையும் வெல்ல முன் வந்து நிற்கும் வல்லமையையும் உடையவன் அவன்.

    தனது வீட்டிற்கு வந்த சான்றோர், வந்தவுடன் உண்ணாராயினும், தான் உண்ணும்போது தன்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்று நினைப்பது பண்பு எனப்பட்டது.


வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று,
         நயன் உரை வழங்கும் ஓசை;
அருகு இருந்து அடிசில் ஊட்டி
         முகமன் நன்கு அறையும் ஓசை;
உரைபெறு தமிழ் பாராட்டும்
         ஓசை கேட்டு உவகை துள்ள
அருநிதி அளிக்கும் ஓசை;
         எழுகடல் அடைக்கும் ஓசை.  --- தி.வி.புராணம். திருநகரச் சிறப்பு.

இதன் பதவுரை ---

     வருவிருந்து --- வருகின்ற விருந்தினரை, எதிர்கொண்டு ஏற்று --- (இன்முகத்தோடு) எதிர்சென்று அழைத்து வந்து, நயன் உரை வழங்கும் ஓசை --- இன்னுரை கூறும் ஒலியும், அருகு இருந்து --- பக்கத்திலிருந்து, அடிசில் ஊட்டி --- அறுசுவை உணவுகளையும் உண்பித்து, நன்கு முகமன் அறையும் ஓசை --- குறைவற உபசாரங் கூறும் ஒலியும், உரைபெறு தமிழ்-- - புகழ் அமைந்த தமிழ்ப்பாக்களை (அவற்றின் சொற்சுவை பொருட்சுவை உணர்ந்து), பாராட்டும் ஓசை --- பாராட்டுவதனால் உண்டாகும் ஒலியும், கேட்டு --- (அவ்வாறு உணர்ந்து பாராட்டும் புலவர்கள் கூறுவதைக்) கேட்டு, உவகை துள்ள --- மகிழ்ச்சி மீதூர, இரு நிதி அளிக்கும் ஓசை --- (அவருக்குப்) பெரும் பொருளைக் கொடுத்தலால் உண்டாகும் ஒலியும் (ஆகிய இசை), எழுகடல் அடைக்கும் ஓசை --- ஏழுகடல்களின் ஒலிகளையும் கீழ்ப்படுத்தும் ஒலிகளாம்.

"இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"

என்பவாகலின் ஈண்டு விருந்தோம்பலை முதற்கண் எடுத்து இயம்பினார். 'சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன் சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றாலும என விருந்தோம்பு வார்க்கு இன்றியமையாத மூன்று' எனப் பரிமேலழகர் கூறிய உரை இங்கே சிந்திக்கற்பாலது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...