008. அன்புடைமை - 01. அன்பிற்கும் உண்டோ




திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை


         தாவது,  இல்வாழ்க்கைத் துணை ஆகிய மனைவியும், இல்வாழ்க்கையின் நல் கலமான புதல்வரும் முதலாகிய சம்பந்தம் உடையவர் இடத்திலே அன்பு உடையவனாய் இருத்தல்.

     இல்லற இயலில், முதல் அதிகாரமான இல்வாழ்க்கையைச் சொன்ன நாயனார், அடுத்து இரண்டாவது அதிகாரமாக, அந்த இல்வாழ்க்கை இனிது நடத்தற்கு இன்றியமையாத துணை ஆகிய மனையாளின் சிறப்பை அடுத்த அதிகாரத்திலே வாழ்க்கைத் துணைநலம் எனறு சொன்ன நாயனார், மூன்றாவது அதிகாரத்திலே, இல் வாழ்க்கையின் பயனாக நன்மக்களைப் பெறுதல் பற்றி, மக்கள் பேறு என்னும் அதிகாரத்தைச் சொன்ன நாயனார், மனைவியிடத்தும், மக்களிடத்தும், இல்வாழ்வான் செலுத்த வேண்டிய அன்பின் சிறப்பை இந்த ஆதிகாரத்தில் எடுத்துக் கூறுகின்றார்.

     இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆதலால், இது வேண்டப்பட்டது.

     வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் மேல் அன்பு இல்லாத வழி, இல்லறம் இனிது நடக்காது. அன்பினால் அருள் உண்டாகும்.

     மாதவியின்பால் காமம் கொண்டு, தன்னைப் பிரிந்து சென்ற தனது கணவனாகிய கோவலன் மீண்டு தன்னிடம் வந்த போது, கண்ணகி கோவலனைப் பார்த்துக் கூறி வருந்தியது இல்லற இன்பத்தைக் கணவன் இல்லாமையால் இழந்தது குறித்து அல்ல. இல்லறத்தின் இனிய பண்புகள் ஆன, அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்புதல், துறவோரை எதிர்தல், தொன்மை மிகுந்த சிறப்பினை உடையதாகிய விருந்து ஓம்பல் ஆகியவற்றைக் கணவனுடன் இருந்து செய்ய முடியாமல், அவற்றை எல்லாம் இழந்ததாகக் கூறுவாள்.

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப்பு உண்டு பொருள் உரையாளர்
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி உண்டோ?
இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்,
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்,
வழு எனும் பாரேன், மாநகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய், என்செய்தனை என...

இது கோவலன் கூற்று......
        
இதன் பதவுரை ---

     வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு --- பயனில்லாத சொற்களைச் சொல்வாரோடும் புதிய பரத்தமையை உடையாரோடுங் கூடி, குறுமொழிக் கோட்டி நெடு நகை புக்கு --- சிறு சொல் சொல்லும் இழிந்தோர் கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, பொச்சாப்பு உண்டு --- மறவியில் பொருந்தி, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு --- பொருள் பொதிந்த உரையினை உடைய பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, நன்னெறி உண்டோ --- இனித் தீக் கதியன்றி நற்கதியுண்டாமோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் --- தாய்தந்தையர்க்கு ஏவல் செய்தலினும் வழுவினேன், சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் --- சிறு பருவத்தில் பெரிய அறிவினையுடையளாய நினக்கும் தீமை செய்தேன், வழு எனும் பாரேன் --- இங்ஙனம் நம் நகர் விட்டு இங்கு வருதல் குற்றமுடைத்தாம் என்பதனைச் சிறிதும் நோக்கேனாய், மா நகர் மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் --- நமது பெரிய நகரத்திடத்தினின்றும் இவ்விடத்து எழுக என்று யான் கூற, உடனே ஒருப்பட்டு எழுந்தனை, என் செய்தனை என --- என்ன அரிய காரியம் செய்தனையென்று கோவலன் இரங்கிக் கூற;

"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர் கோடலும் இழந்த என்னை, நும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்

மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ,
எற்பா ராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்

வாய்அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த,
போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன், தலின்
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற.....
        
இது கண்ணகி கூற்று....

இதன் பதவுரை ---

     அறவோர்க்கு அளித்தலும் --- அறநெறியில் ஒழுகுபவர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் --- பார்ப்பனரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் --- துறவிகளை எதிர்க்கொள்ளுதலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை --- மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினையுடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலுமாய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள் தன்னொடும் --- உமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் --- பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும் உடைய மாசாத்துவான் கண்டு, முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ --- நீர் என் முன்பு நில்லாமையால் தோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக, அற்பு உளம் சிறந்து அருள்மொழி அளைஇ என் பாராட்ட --- அதனை உணர்ந்த அவர்கள் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட, யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் --- நான் என் உளத்து மறைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த --- எனது உண்மையல்லாப் புன்சிரிப்பிற்கு அவர்கள் உள்ளம் வருந்தும் வண்ணம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் --- நீர் பெரியோர் வெறுக்கும் தீய ஒழுக்கத்தினை விரும்பினீர் ஆகவும், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் --- உம்முடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாத உள்ளத்து வாழ்க்கையை உடையேனாகலான், ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற --- நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற ;


குடிமுதல் சுற்றமும், குற்று இளையோரும்,
அடியோர் பாங்கும், ஆயமும் நீங்கி,
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக,
என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!

நாணின் பாவாய்! நீணில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு, யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிக என.....
        
இது கோவலன் கூற்று....

இதன் பதவுரை ---
      
     குடிமுதல் சுற்றமும் --- குடிக்கண் முதல் சுற்றமாய் தாய் தந்தை முதலியோரையும், குற்றிளையோரும் --- குற்றேவல் புரியும் மகளிரையும், அடியோர் பாங்கும் --- அடியார் பகுதியையும், ஆயமும் நீங்கி --- சேவிக்கும் தோழிமாரையும் விட்டு விலகி, நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக --- நாணினையும் மடனையும் நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பினையும் பெருமை மிக்க துணையாகக் கொண்டு, என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த --- இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த, பொன்னே கொடியே புனை பூங் கோதாய் --- பொன்னை ஒப்பாய்! கொடிபோல்வாய்! அழகிய மலர்மாலையை அனையாய்! நாணின் பாவாய் நீள் நில விளக்கே --- நாணினையுடைய பாவையை நிகர்ப்பாய்! பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தாய்! கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி --- கற்புக்குக் கொழுந்து போல்வாய்! அழகின் செல்வியே!  சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன் மயங்காது ஒழிகென --- நின் சிறிய அடிக்கு அணியாகிய சிலம்புகளுள் ஒன்றனை யான் கொண்டு சென்று விற்று வருவேன் ;

     இவை எல்லாம் இல்லறத்தின் சிறப்பை இனிதே எடுத்து விளக்குவனவாக அமைந்தவை.

     உயிர்கள் பால் அருள் பிறப்பது அன்பின் பயன் என்பதை நாயனார், அருள் என்னும் அன்பு ஈன் குழவி என்றும் தெளிவு படுத்தினது காண்க.

     இனி, இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "அன்பினுக்குப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பத்தைக் கண்ட போதே, அன்புடையார் கண்ணில் இருந்து வெளிவரும் கண்ணீர்த் துளியே அவர் உள்ளத்தில் இருக்கின்ற அன்பினை எல்லாரும் அறிய வெளிப்படுத்தும்" என்கின்றது.

     அன்பு உள்ளது என்பதைப் பிரத்தியட்சமாக உணர முடியாது. அனுமானப் பிரமாணத்தால் உணர முடியும் எனப்பட்டது.

     அனுமானமாவது, இராமன் இலக்குவனிடத்தில் அன்பு உடையான் என்னும்போது, இலக்குவனது துன்பம் வந்த இடத்து, இராமனது கண்களில் நீர் வரும் என்றது.

     அன்பின் ஐந்திணை என்னும் சூத்திர உரையில், "அன்பு என்பது அருளுக்கு உருவாகி மனத்தில் நிகழும் நேயம். அஃது உடையார்க்குப் பிறன்கண் துன்பம் கண்டவழி, கண்ணீர் விழும் ஆகலின், அவ்வருளாலே அன்புடைமை என்பது விளங்கும்.  இவை எல்லாம் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு" என்று நச்சினார்க்கு இனியர் கூறி இருப்பதும் காண்க.

இனி, திருக்குறளைக் காண்போம்....

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ --- அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?

     ஆர்வலர் புன் கணீர் பூசல் தரும் --- தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.
        
         (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)

     திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த நால்களுள், கமலை வெள்ளியம்பலவாண முனிவர் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்பதும் ஒன்று. அதில், ஒப்பில்லாத அன்பு உடைய திருக் கண்ணப்ப நாயனாரை வைத்துப் பாடிய பாடல் ஒன்று இதோ.....

கண்ணுதலோன் கண்நோவு கண்டஅளவில், கண்ணப்பன்
கண்ணில் நீர் சோரக் கதறுமால், ---  உள்நெகிழும்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.                         

      கண்ணுதலோன் என்றது காளத்தி நாதரான சிவபெருமானை.  கண்ணப்ப நாயானாரது மெய்யன்பு இத் திருக்குறளுக்கு ஏற்ற உதாரணமாகும்.

     செயற்கு அரும் செயலைச் செய்து இறைவன் அருளை ஆறு நாட்களிலேயே பெற்றவர் கண்ணப்ப நாயனார் என்பதால், "தொண்டு செய்து நாள் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்" என்றார் பட்டினத்து அடிகள். "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்" என்று நாயனாரைச் சிறப்பித்தார் மணிவாசகனார்.

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களில் மற்றொன்று, மாதவச் சிவஞான யோகிகள் அருளிய "சோமேசர் முதுமோழி வெண்பா" ஆகும். இத் திருக்குறளுக்கு விளக்கமாக இந்நூலில் அமைந்த பாடல் ஒன்று....
                                                              

தோன்றா வகைகரந்தும் தோன்றலைக் கண்டு உள்நெகிழ்ந்து
தோன்ற நின்றான் முன்புநளன், சோமேசா! ---தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

இதன்பொருள் ---

         சோமேசா! தோன்றுகின்ற --- மனத்தில் உண்டாகின்ற, அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ --- அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கின்ற தாழக்கோல் உளதாமோ,  ஆர்வலர் --- தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பம் கண்டவிடத்து அன்புடையார்,  புன்கணீர் பூசல் தரும் --- கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்ளத்தில் நிலைபெற்று இருக்கும் அன்பினை எல்லோரும் அறியத் தூற்றும் ஆதலான்,
முன்பு --- முற்காலத்தில், நளன் --- நளச்சக்கரவர்த்தி, தோன்றா வகை கரந்தும் --- தான் இன்னான் என்று பிறர்க்குத் தெரியாது இருக்கும்படி மறைந்து இருந்தும், தோன்றலைக் கண்டு --- தன் மகனைக் கண்ட அளவில்,  உள் நெகிழ்ந்து --- உள்ளம் நெக்கு உருகி,  தோன்ற நின்றான் --- தான் இன்னான் என்று பிறருக்கு விளங்கும்படி கண்ணீர் பெருக்கி நின்றான்.

         நிடத தேசத்தில் மாவிந்த நகரத்தில் அரசாண்ட நளச்சக்கரவர்த்தி, விதர்ப்ப தேசத்துக் குண்டினபுரத்தில் அரசு புரிந்த வீமராசனது மகளாகிய தமயந்தியை மணந்து இந்திரசேனன், இந்திரசேனை என்னும் இரண்டு மக்களைப் பெற்று இனிது வாழ்ந்திருந்த காலையில், கலிபுருஷன் பற்றப் புஷ்கரனொடு சூதாடி, யாவும் இழந்து, வனம் புகுந்து, தன் மக்களை ஓர் அந்தணனைக் கொண்டு வீமனிடம் சேர்ப்பித்து, ஒரு கடுங்காடு சென்று நள்ளிரவில் உறங்கும்போது மனைவியைத் தனிக்க விட்டு அகன்றான். வழியில் கார்க்கோடகன் என்னும் மாநாகத்தால் கடிக்கப்பட்டு உருக் குலைந்து வாகுகன் என்னும் பெயரோடு அயோத்தி புகுந்து, இருதுபர்ண ராசனுக்குத் தேர்ப்பாகனாய் அமர்ந்தான். அது நிற்க, தன்னந் தனியாய் வருந்தித் தந்தையை அடைந்த தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விட, அவன் எங்கெங்கும் தேடி அயோத்தி சேர்ந்து தேர்ப் பாகனைக் கண்டு அவன் மொழிகளால் அவன் நளன்தான் என்று அறிந்து, மீண்டு தமயந்தியினிடம் அச்செய்தி கூற, அந்தப் பாகனை வரவழைத்தற்கு ஓர் உபாயமாகத் "தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம்" என்று இருதுபர்ணனுக்குத் தெரிவிக்க, ஆசையோடு சுயம்வரத்திற்கு வந்த இருதுபர்ணனுக்குத் தேர் செலுத்திக் கொண்டு வாகுகன் குண்டினபுரம் சேர்ந்தான். அவ்வாறு சேர்ந்த பாகன் நளன்தானோ என்று துணிதற்குத் தமயந்தி தன் தோழி ஒருத்தியொடு கூட்டித் தன் மக்களை அவன் எதிரில் விளையாட விட, அம் மக்களைப் பார்த்த அளவில் வாகுகன் அன்பால் மனமுடைந்து உருகி, அடக்கமாட்டாது கண்ணீர் பெருக்க அதனால் அவனே நளன் என்று துணிந்தாள். 

"மக்களைமுன் காணா, மனநடுங்கா, வெய்துயிராப்,
புக்கெடுத்து வீரப் புயத்து அணையா, - மகக்காணீர்,
என்மக்கள் போல்கின்றீர், யார்மக்கள்? என்றுஉரைத்தான்
வன்மக் களியானை மன்", 

"ஆங்கவர் சொன்ன உரைகேட்டு அழிவு எய்தி,
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவில்,
வள்ளம்போல் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம்போல் கண்ணீர் உகுத்து".

என்னும் நளவெண்பாப் பாக்களும்,

"அடைந்த மக்களைக் காண்டலும் அனல்இடு மெழுகின்
உடைந்தது, உள்ளம் நீர் ஊற்றிருந்து ஒழுகின கண்,
தொடர்ந்த மும்மல முருக்கிவெம் பவக்கடல் தொலையக்
கடந்துளோர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்".

என்னும் நைடதப் பாட்டும் ஈண்டு அறியத்தக்கன.

     அன்பின் மிகுதியால், முலைப்பால் வெளிப்படும் என்பது பின்வரும் பிரமாணங்களால் தெளியப்படும்.....

"இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
நல்லாய், உளவாமால்; நீர் நிழல்போல் - இல்லா
அருவாகி நின்றானை யார் அறிவார் தானே
உருவாகித் தோன்றானேல் உற்று".

என்பது சிவஞானபோத எடுத்துக்காட்டு வெண்பா.

     ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடு இணை சொல்ல முடியாது. அவ்வன்பு வெளிப்படாது அருவமாய் நிற்கின்றது. ஆகவே அவ்வன்பின் நிலையைப் பிறர் அறிதல் இயலாது. அவ்வன்பு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்ற காலம் உண்டு. அக் குழந்தை பசியால் வருந்தி அழும் காலத்தில் அத் தாய் பால் சுரந்து ஊட்டி அதன் பசியைத் தீர்க்கின்றாள்.  அந்தக் குழந்தை நோயுற்று நலிந்த காலத்தில் அவள் துன்பக் கண்ணீர் வடிக்கின்றாள்; பாலும் கண்ணீரும் குழந்தையின் மீது அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடே எனலாம். அவ்வன்பு முன்பு புலப்படாததாய் நின்று, பின்பு பால், கண்ணீர் என்னும் இவற்றின் வடிவில் வெளிப்படுவதாயிற்று. அதுபோல, இறைவன் உயிரின்கண் சிறிதும் புலப்படாமல் மறைந்திருந்து பின் குரு வடிவில் வெளிப்படுகின்றான்.


"கடல்கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்துவேறு ஆகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி,
 வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே".

என்பது புறநானூற்றுப் பாடல்.

     கடல் போலப் பறந்து கிடந்த பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவே, சுடும் நெருப்பில் வைத்து, உலைக்களத்தில் கொல்லும் வாய் கூர்மை செய்யப்பட்ட வேலைப் பகைவர் மேல் எய்து, பகைக்கூட்டத்தைத் தடுத்து முன்னேறிச் சென்ற வீரன் ஒருவன், பகைவரால் தாக்கப்பட்டு, உடல் சிதைந்து தரையில் வீழ்ந்தான். களத்திலை மாண்டு கிடக்கும் தனது மகனைக் கண்ட வீரத்தாயின் வற்றிய முலையில் பால் சுரந்தது. போரில் புறமுதுகு இட்டு ஓடாத வீரமகனின் பெருமை, பெற்ற தாயைப் பெருமிதம் அடையச் செய்து, அன்பு மீதூர, கண்ணில் நீரும், முலையில் பாலும் பெருகச் செய்தது.

"செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்,
அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக,
விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்:
                     --- கம்பராமாயணம், பள்ளிபடைப் படலம்.
இதன் பதவுரை ---

     செம்மை --- நேர்மையான; நல் மனத்து --- நல்ல மனத்தை உடைய; அண்ணல் --- பரதனது; செய்கையும் --- செயலையும்; அம்மை --- அவன் தாயாகிய கைகேயியின்; தீமையும் --- தீக்குணத்தையும் (அதனால் விளைந்த தீய செயல்களையும்); அறிதல் தேற்றினாள் --- (பரதன் சொல்லிய சூளுரையால்) அறிந்து தெளிந்த கோசலை; கொம்மை வெம்முலை --- பருத்த சூடுடைய தனங்களில் இருந்து; குமுறு பால் உக --- உள்ளே பொங்கும்பால் சிந்த; விம்மி விம்மி நின்று --- அழுது அழுது; இவை விளம்புவாள் --- இவற்றைக் கூறுலானாள்.

     தாய்ப் பாசம் மிக்க வழி முலைப்பால் பீறிட்டுச் சிந்துவது தாய்மைக்கு இயல்பு.

    உன்னு பேர் அன்பு மிக்கு
   ஒழுகி ஒத்து, ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர.
   தொழுது எழும் பரதனை.
பொன்னின் மார்பு உற அணைத்து.
   உயிர் உறப் புல்லினான்-
தன்னை அத் தாதை முன்
   தழுவினான் என்னவே.
                  --- கம்பராமாயணம், எதிர்கொள் படலம்.

தன்னைத் தொழுத பரதனை இராமன் தழுவுதல்

இதன் பதவுரை ---

     உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ---  (எப்போதும் இராமனையே) நினைக்கும் தன்மையுள்ள சிறந்த அன்பு (மனத்திலே) மிகுந்து, (அங்கு அடங்காமல் கண்  வழியாகச்)  சிந்தியது போன்று; ஒண் கண் நீர் பன்னு தாரைகள் தர --- ஒளிபொருந்தும் கண்களில் நீர். அடர்ந்து  தாரை  தாரையாகப்  பெருக;  தொழுது எழும் பரதனை --- (தன்னை) வணங்கி எழுகின்ற (தம்பி) பரதனை; தன்னை அத் தாதை முன் தழுவினான் என --- இராமன் தன்னைத் தந்தை தசரதன் முன் தழுவியது போலவே; பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உறப் புல்லினான் ---     பொன் போன்ற தன் மார்பிலே அழுந்த அணைத்துக் கொண்டு  உயிரும் உயிரும் பொருந்துமாறு தழுவினான் இராமன்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...