011. செய்ந்நன்றி அறிதல் - 02. காலத்தினால்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "ஒருவனுக்கு ஆபத்து வந்த காலத்தில், ஒருவன் செய்த உதவியானது சிறிதாய் இருந்தாலும், ஆபத்து வந்த அக் காலத்தை நோக்க, அந்த உதவியானது இந்த உலகத்தை விடவும் மிகப் பெரிது ஆகும்" என்கின்றது. ஆபத்து வந்த காலத்தை எண்ணவேண்டுமே அல்லாமல், வந்த பொருளை நோக்கக் கூடாது என்பது கருத்து.

திருக்குறளைக் காண்போம்....

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     காலத்தினால் செய்த நன்றி --- ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்;

     சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது --- தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.

      (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)

     ஆபத்துக் காலத்தில், சற்றும் எதிர்பாராமல் வந்து ஒருவன் செய்த உதவியானது அளவிடற்கு அரிய மதிப்பு மிக்கது. அதனை மதித்து ஒழுகுபவர், நன்றி அறிவு உடையவராய் பல நலங்களையும் பெறுவார்.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.

முன் ஒருவன் செய்த உபகாரம் மூவுலகம்
தன்னைக் கொடுத்தாலும் சாலுமே --- என்னே
உயிர்க்கு உறுதியாக ஒருவர் சோறு உண்டால்
பிறர்க்கு உரியர் ஆவரோ பேசு.          ---  பாரதவெண்பா.

     பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடல்களில் ஒன்று மேலை குறித்தது. தனது மாளிகையில் சோறு உண்ட சல்லியன் தனக்கு உதவியாக இருக்கவேண்டும் என்னும் கருத்தால், அவனைப் பார்த்து துரியோதனன், "ஒருவருடைய இல்லத்தில் விருந்து உண்டால், அவருக்கே நன்றி உடையவராகத் துணையாக இருக்கவேண்டுமே அல்லால், பிறருக்குத் துணை போவது கூடாது என்பதைச் சொன்னான். பசித்தபோது அருந்திய உணவு சிறிது தான். என்றாலும், அந்த நேரத்தில் அது உயிரைக் காத்தது. அதற்கு இந்த மூவுலகமும் ஈடாகாது.


"பயன் காரணத்தைக் குறியாமல்

     பரிந்து காலத்தால் செய்த

நயம்சேர் நன்றி சிறிதேனும்

     நாடின் அதற்கு ஓர் அளவு இல்லை,

பயன் காரணத்தைக் குறித்து இனையும்

     பதத்தில் புரிந்த நன்றியையும்

வியன் பூதலத்தில் பெரிதாக

     விரும்பி மதித்தல் வேண்டுமால்" --- விநாயக புராணம்.

     செய்யப் போகும் உதவியால் பின்னர் பயன் விளையும் என்பதைக் காரணமாகக் கொள்ளாது,  உள்ளத்தில் உண்டான பரிவு காரணமாக, தக்க சமயத்தில் ஒருவன் செய்த உபகாரம் சிறிதளவே ஆனாலும், பின்னர் அதனை எண்ணிப் பார்த்தால், அந்த உதவிக்கு ஈடு ஏதும் இல்லை என்பது தெரியும். இந்த வேளையில் இந்த உதவியைச் செய்யவேண்டும் என்று தெரிந்து தக்க சமயத்தில் செய்த உதவியை, இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்கவேண்டும்.

     உலகத்தை விடப் பெரிதாக மதிக்கவேண்டும் என்றது, இந்த உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் தமது வசமாக இருந்தாலும் என்று கொள்ளவேண்டும் என்னும் கருத்தில்.

     ஒருவர் பசியோடு இருக்கின்றார். அந்த வேளையில் வேறு ஒருவரிடத்தில் தண்ணீர் மட்டும் தான் இருந்தது. அந்தத் தண்ணீரைப் பருகியதால் உயிர் பிழைத்தது. பின்னர், ஒருவேளை அதனை எண்ணும்போது, தண்ணீர் தானே கொடுத்தார் என்று அதன் தன்மையை எண்ணக் கூடாது. அந்த வேளையில் தண்ணீரும் இல்லை என்றால், என்ன ஆகியிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால், தண்ணீர் தந்தது பேருதவியாகத் தோன்றும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...