தீயோர் நட்பை விடுதலே பெரும் பாக்கியம்

 

தீயோர் நட்பை விடுதலே பெரும் பாக்கியம்

---

 

     "நட்பு ஆராய்தல்" என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரிடம் கொண்ட நட்பை விட்டுவிடுதலே ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     மூங்கில் காடு பற்றி எரியும்போது, அந்தக் காட்டில் உள்ள சநத்ன மரமும், வேங்கை மரமும் முதலானவைகள் வெந்து அழிவது போல, தீயவனுடன் கொண்ட நட்பால் தானும் அழியவேண்டி வரும். எனவே, அந்த நட்பை விட்டொழிக்கவேண்டும். அதுவே ஒருவன் பெறுகின்ற பாக்கியம் ஆக அமையும்.

 

"ஊதியம் என்பது ஒருவற்கு, பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்".  

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.             

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல். சென்னையின் ஒரு பகுதியா, "கொளத்தூர்" என்று இப்போது வழங்கப்பட்டு வரும், "குளத்தூர்" என்னும் பகுதியில் திருக்கோயில் கொண்டு இருக்கும், அமுதாம்பிகை உடனாய சோமேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடப்பட்ட நூல் இது ஆகும்.

 

"போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்துஅகன்றான்

தோற்றுஇறைவி தும்மிடவும், சோமேசா! - ஏற்றதே

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்".

 

         துன்மார்க்கத்தில் செல்வதைத் தடுத்தும், நன்மார்க்கத்தில் செலுத்தியும், விதிவலியால் கேடு சம்பவித்தால் அதனைப் பகிர்ந்து அனுபவித்தும், உடம்புகளுக்கு ஒழிவு வந்தாலன்றி உயிர்களுக்குள் வேறுபாடு தோன்றாமல், அகமுகத்தால் ஒற்றுமைப்பட்டு, அரிய நூல்களை ஆராயும்தோறும் விளையும் இன்பம் போல மிக்க இன்பம் நாளாவண்ணம் பழகுந்தோறும் வளரும்படி சிநேகிப்பதே சிநேகத்துக்கு இலக்கணம் ஆகும்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! ஒருவற்கு ஊதியம் என்பது --- ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் --- அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.

 

         போற்றும் சிசீலன் --- யாவரானும் போற்றித் துதிக்கப்பெறும் சுசீலன் என்னும் அந்தணன், தோற்று இறைவி தும்மிடவும் --- அவனைத் தடுத்தற்கேற்ற புத்தி தோன்றிய அரசி தும்மலைச் செய்யவும், புய பெலன் நீத்து அகன்றான் --- வங்கதேசத்து அரசனாகிய புயபலன் என்பவனை நீங்கிச் சென்றான் ஆகலான், ஏற்றதே --- அது அவனுக்குத் தக்கதே என்றவாறு.

 

         ஊதியம் --- இலாபம், பேறு. ஒன்றைப் பெறுவதால் உண்டாவது பேறு. அது ஊதியம். இங்கே பொல்லாதார் நட்பை விடுதலே ஊதியம் என்றார்.

 

         வங்கதேயத்து அரசனாகிய புயபலன் என்பான் முறை கோடாது அரசு செலுத்தும் நாளில், ஓராண்டு உத்தராயண புண்ணிய காலம் வர, அற்றை நாள் அந்தணர்க்குத் தானம் செய்ய எண்ணி அறிவித்தான். அதனைக் கேள்வியுற்ற சுசீலன் என்னும் பிராமணோத்தமன் விதர்ப்ப நாட்டினின்றும் அங்கு வர,  மற்றைப் பிராமணர்கள் யாவரும் அவனைக் கண்டு போற்றி அழைத்துச் சென்று அரசற்கு அவன் பெருமை கூறி, "முன்னர் அவற்கே தானம் செய்க" என்றார்கள். அரசன் மகிழ்ந்து தானம் வழங்கும்போது, சுசீலன் அவன் முகம் நோக்கி விபூதியில்லாமை கண்டு, "விபூதி அணியாயாயின் தானம் கொள்ள மாட்டேன்" என மறுத்தும்,

 

"செய்யதிரு நீறுதொட்டுத் தரியாதார்

         பெரும்செல்வம் சிதையும், மன்னர்

கொய்யுளைய பரித்திரளும் கரித்திரளும்

         மறுமன்னர் கொள்வர், வேட்ட,

தையல் ஒழிந்து, அருமகவு தணந்து

         பெரும் பிணியுடனாய்ச் சரிப்பர், அன்றி,

மெய்யின் உறுப்புக் குறைந்து

         புலையரினும் கடைப்பிறவி மேவுவாரால்"

 

என அவ்வாறு கொள்வதால் உண்டாகும் விளைவும் கூறியும், அரசன் ஓரே பிடிவாதமாய் விபூதி தரித்தற்கு இசையவில்லை. சுசீலன் உடன் எழ, அதுகண்ட அரசன் தேவி தனது நாசித் தொளையில் ஒரு துரும்பு திருகித் தும்மி, "இது தடை, நிற்க" என்று கூறினாள். மறையவன் அவ்வுரை செவி ஏலாது தன் நாடு சென்றான். பின்னர் அவன் கூறியவாறே அரசன் செல்வம் சிதைந்து நாடிழந்து, காடு புகுந்து, மனைவி ஒழிந்து, மகவு தணந்து, குட்டநோய் பெற்று உறுப்பு அரியுண்டு கிடக்கும் நிலையில் அவனைச் சந்தித்து வணங்கி, விபூதி பெற்றுப் பழைய நிலைமை அடைந்தான்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின் வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காண்க...

                 

மனத்தான் மறுவு இலரேனும், தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனம் தீப்பட்டக் கால்.            --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

         தம்முடைய மனத்தளவில் குற்றம் அற்றவர் என்றாலும், தாம் சேர்ந்த தீயோர் சேர்க்கையால், பெரியோரும் கூடப் பழிக்கு ஆளாவர். எப்படி என்றால், காட்டிலே தீப்பற்றிக் கொண்டால், வாசம் மிகுந்த சந்தன மரமும் வெறும் வேங்கை ம,த்தோடு வெந்து கரியாகிப் போகும் என்பது போல.

 

    

         சான்றோர் மனநலம் நன்கு உடையராயினும், தீயவர் இனத்தின் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

 

        

சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்,

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனம்

தானும்அச் சந்தனமும் தன்இனமும் மாள்வதுஅன்றித்

தானும் கெடச்சுடுமோ தான்.         --- நீதிவெண்பா.

 

         சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்துள்ள மரங்களும் அந்தச் சந்தன மரத்தைப் போல் அதன் சார்பினால் நல்ல மணத்தைப் பரப்பும். ஆனால், அந்தச் சந்தன மரத்தைச் சார்ந்துள்ள மூங்கில்கள் தீப்பற்றிக் கொள்ள, அந்தக் காடு முழுவதும் உள்ள இருவகை மரங்களும் அழிந்துவிடும். அல்லாமலும், நன்மை தரக்கூடிய பலவகை மரங்களைக் கொண்ட அந்த வனமும் பற்றி எரிந்து சாம்பல் ஆகிவிடும்.

 

         நல்லவர்களைச் சார்ந்து இருப்பவர்களில் சிலர், எல்லாருக்கும் நன்மை உண்டாக்கித் தாமும் நல்லவர் ஆவர். ஆனால், அப்படிச் சார்கின்றவர்களில் வேறு சில தீயோர், மற்றவர்களுக்கும் தமக்கும் கேடு தேடிக் கொள்வர். அத்துடன், பல பேருக்கும் நன்மையாய் இருக்கக்கூடிய தம்மைச் சார்ந்த நல்லவர்களையும் கெடுத்து விடுவர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...