பொது --- 1040. தோடுற்ற காதொக்க



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தோடுற்ற காதொக்க (பொது)

 

அடியவர்களை வாழ்விக்கும் முருகா! 

அடியேனும் உனது திருநாமத்தை ஓதி உய்ய அருள் புரிவாய்.

 

 

தானத்த தானத்த தானத்த தானத்த

     தானத்த தானத்த ...... தனதான

 

 

தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற

     தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே

 

தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்

     சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்

 

ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க

     ஓசைக்கு நேசித்து ...... உழலாதே

 

ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி

     யோதற்கு நீசற்று ...... முணர்வாயே

 

வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்

     மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா

 

வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க

     வேதத்தி லேநிற்கு ...... மயனாருந்

 

தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த

     சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே

 

தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்

     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

தோடு உற்ற காது ஒக்க, நீடு உற்ற,போர் உற்ற,

     தோய் மைக்கணால்மிக்க ...... நுதலாலே,

 

தோள் வெற்பினால்வில் கை வேளுக்கு,மேன்மக்கள்

     சோர்கைக்கு,மால் விற்கும் ...... மடவார்தம்,

 

ஊடற்கு உளே புக்கு வாடிகலாம் மிக்க

     ஓசைக்கு நேசித்து ...... உழலாதே,

 

ஊர்பெற்ற தாய்சுற்றமாய் உற்ற தாள் பற்றி,

     ஓதற்கு நீ சற்றும் ...... உணர்வாயே.

 

வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின்

     மீது உற்ற பேதைக்கு ஒர் ...... மணவாளா!

 

வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால்,ஒக்க

     வேதத்திலே நிற்கும் ...... அயனாரும்

 

தேடற்கு ஒணா நிற்கும் வேடத்தர்,தாம்வைத்த

     சேமத்தின் நாமத்தை ...... மொழிவோனே!

 

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்

     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

     வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க--- வேடர்கள் மேலான சுவர்க்க இன்பத்தினை அனுபவித்து இருக்க அருள் புரிவதற்காக, 

 

     ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஒர் மணவாளா---ஒப்பற்ற வள்ளிமலையின் மேல் இருந்த வள்ளிநாயகிக்கு வாய்த்த ஒப்பற்ற மணவாளரே!

 

     வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால்--- யானைக்கு உண்டான ஆபத்தில் இருந்து அதனைக் காத்து அருளிய திருமாலும்,

 

     ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும்--- அவருக்கு ஒத்த நிலையில்வேதத்தை ஓதி நிற்கும் பிரமதேவனும்,

 

     தேடற்கு ஒணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே--- (திருமுடியையும் திருவடியையும்) தேடுதற்கு அரிதான வகையில் நின்ற திருவுருவை உடைய சிவபரம்பொருள் உயிர்கள் இன்பம் பெறும்பொருட்டு வைத்தருளிய திருநாமத்தின் பெருமைகளை (திருஞானசம்பந்தராக வந்து அவதரித்து) எடுத்து மொழிந்தவரே!

 

     தீது அற்ற நீதிக்கு(ள்) ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க--- குற்றம் அற்ற திருநெறியில் பொருந்தி இருக்கும் அறிவுள்ள அடியார்கள் போற்றி வழிபட,

 

     வாழ்வித்த பெருமாளே--- அவர்களை வாழ்வித்த பெருமையில் மிக்கவரே!

 

     தோடு உற்ற காது ஒக்க--- தோடுகளை அணிந்துள்ள காதுகளின் வரை 

 

     நீடு உற்ற போர் உற்ற--- நீண்டிருந்துஅவற்றோடு போர் புரிவதும் ஆகிய,

 

     தோய் மைக் க(ண்)ணால்--- மை தோய்ந்த கண்களின் பார்வையாலும்,

 

     மிக்க நுதலாலே--- நெற்றியாலும்,

 

      தோள் வெற்பினால்--- மலைபோலத் திரண்டு விளங்கும் தோள்களாலும்,

 

     வில் கை வேளுக்கு --- கரும்பு வில்லைக் கையில் உடைய மதவேள் விடுக்கும் மலர்க்கணைகளாலும்,

 

     மேன்மக்கள் சோர்கைக்கு மால் விற்கும் மடவார் தம்--- மேலான குணங்களை உடையவர்கள் மனமும் சோரும்படியாகத் தமது காம இன்பத்தை விலைபேசுகின்ற மாதர்கள் உண்டாக்குகின்,

 

      ஊடற்குள்ளே புக்கு வாடி--- ஊடல் பிணக்கில் மனம் வாடி,

 

     கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே --- கலக்கம் அடைந்துபின் கூடுகின்றதால் உண்டகும் சொல்லுக்கு ஆசைப்பட்டு அலையாமல்,

 

      ஊர்,பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி--- எனது பிறந்த ஊர்,  என்னை ஈன்றெடுத்த தாய்எனது சுற்றம் ஆகிய இவை எல்லாமாய் விளங்கும் தேவரீருடைய திருவடிகளைப் பற்றி இருந்து,

 

      ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே---போற்றித் துதிப்பதற்கு அடியேனுக்குச் சிறிது உணர்த்தி அருள்புரிய வேண்டும்.

 

                        

பொழிப்புரை

 

     வள்ளிமலையில் இருந்த வேடர்கள் மேலான சுவர்க்க இன்பத்தினை அனுபவித்து இருக்க அருள் புரிவதற்காக, அந்த ஒப்பற்ற மலையின் மேல் தினைப்புனத்தில் காவல் புரிந்து கொண்டு இருந்த வள்ளிநாயகிக்கு வாய்த்த ஒப்பற்ற மணவாளரே!

 

            யானைக்கு உண்டான ஆபத்தில் இருந்து அதனைக் காத்து அருளிய திருமாலும்அவருக்கு ஒத்த நிலையில் வேதத்தை ஓதி நிற்கும் பிரமதேவனும்திருமுடியையும் திருவடியையும) தேடுதற்கு அரிதான வகையில் நின்ற திருவுருவை உடைய சிவபரம்பொருள் உயிர்கள் இன்பம் பெறும்பொருட்டு வைத்தருளிய திருநாமத்தின் பெருமைகளைத் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்து எடுத்து மொழிந்தவரே!

 

            குற்றம் அற்ற திருநெறியில் பொருந்தி இருக்கும் அறிவுள்ள அடியார்கள் போற்றி வழிபட, அவர்களை வாழ்வித்த பெருமையில் மிக்கவரே!

 

            தோடுகளை அணிந்துள்ள காதுகளின் வரை நீண்டிருந்துஅவற்றோடு போர் புரிகின்ற மை தோய்ந்த கண்களின் பார்வையாலும்,நெற்றியாலும்,மலைபோலத் திரண்டு விளங்கும் தோள்களாலும்,கரும்பு வில்லைக் கையில் உடைய மதவேள் விடுக்கும் மலர்க்கணைகளாலும்மேலான குணங்களை உடையவர்கள் மனமும் சோரும்படியாகத் தமது காம இன்பத்தை விலைபேசுகின்ற மாதர்கள் உண்டாக்குகின்,ஊடல் பிணக்கில் மனம் வாடிக் கலக்கம் அடைந்துபின்னர் கூடுகின்றதால் உண்டகும் சொல்லுக்கு ஆசைப்பட்டு அலையாமல் எனது பிறந்த ஊர்,  என்னை ஈன்றெடுத்த தாய்எனது சுற்றம் ஆகிய இவை எல்லாமாய் விளங்கும் தேவரீருடைய திருவடிகளைப் பற்றி இருந்து,போற்றித் துதிப்பதற்கு அடியேனுக்குச் சிறிது உணர்த்தி அருள்புரிய வேண்டும்.

 

 

விரிவுரை

 

தோள் வெற்பினால்--- 

 

வெற்பு --- மலை. மலைபோலத் திரண்டு உள்ள தோள்கள் பொருந்திய விலைமாதர் என்கிறார். பெண்களுக்குப் பருத்து இருக்கவேண்டியவை முலைகள். திரண்டு இருக்கவேண்டிய தோள்கள். கறுத்து இருக்க வேண்டியது கூந்தல்.

 

 

வில் கை வேளுக்கு ---

 

வேள் -- விருப்பம், மன்மதன், முருகன், சிறந்த ஆண்மகன், சிற்றரசன்.

 

இங்கே மன்மதனைக் குறித்தது. மன்மதனும் வேள். முருகனும் வேள். கருநிற மேனியன் ஆன திருமாலின் மகனாக வந்த மன்மதன் கருவேள் ஆவான். முருகப் பெருமான் செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளினிடத்தில் அவதரித்தவர். அவர் செவ்வேள் என்ப்படுவார்.

 

மன்மதன் விடுகின்ற மலர்க்கணைகளால் காம வயப்பட்டவர் இளைத்துப் போவர். 

 

முருகவேளின் அருட்பார்வையால் உயிர்கள் பேரின்பத்தில் திளைத்து இருப்பர்.

 

மேன்மக்கள் சோர்கைக்கு மால் விற்கும் மடவார் தம்--- 

 

காமவிடாயினால் மேன்மக்களின் உள்ளமும் சோர்ந்து போகும் என்னும் உண்மையை அடிகளார் இங்கே புலப்படுத்துகின்றார். விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

 

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

 

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால்அதற்கு ஒரே வழிஇறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

 

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனேதுறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துபதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணார்க்கு

இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே?      ---  கந்தர் அலங்காரம்.

 

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச் செவ்வாய்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே.  ---  திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.          --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

     வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?           --- திருப்புகழ்.

 

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!        --- பட்டினத்தார்.

 

பால்என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலைவெட்சித்தண்டைக்

கால் என்கிலைநெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?.  ---  கந்தர் அலங்காரம்.

 

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.--- பட்டினத்தார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம்- ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                         ---திருப்போரூர்ச் சந்நிதி முறை.  

                                          

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கே உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய அடியவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

 

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.---  பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார்.

 

 

ஊர்,பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி--- 

 

எல்லாவற்றையுமே சிவமாகப் பார்க்கின்ற பெருநிலையை அடிகளார் உணர்த்தி அருளுகிறார். 

 

"ஊரே, பேரே, பிறவே" --- எனது சொந்த ஊரரைப் போல் இனியவரேஎனது பேர் போல இனியவரே,  எனக்கு இனிய எல்லாப் பொருள்களும் ஆனவரே என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார்போற்றி உள்ளமை காண்க.

 

திருஞானசம்பந்தப் பெருமானும் அவ்வறே சிவபரம்பொருளைப் போற்றி உள்ளார் என்பதையும் அறிக.

 

"தாயும் நீயே,தந்தை நீயே,சங்கரனே! அடியேன்

ஆயும் நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்,

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்,

மாயமே என்று அஞ்சுகின்றேன்,வலிவலம் மேயவனே".

 

"குற்றம் நீ,குணங்கள் நீ,கூடல்ஆல வாயிலாய்!

சுற்றம் நீ,பிரானும் நீ,தொடர்ந்துஇலங்கு சோதி நீ,

கற்றநூல் கருத்தும் நீ,அருத்தம் இன்பம் என்று இவை

முற்றும் நீ,புகழ்ந்துமுன் உரைப்பது என் முகம்மனே".

 

ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே---

 

உணர்வாய் --- உணர்த்தி அருள்வாய்.

 

வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்கஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஒர் மணவாளா--- 

 

முருகப் பெருமான் அகிலாண்ட நாயகியான வள்ளிப் பிராட்டியைத் திருமணம் புணர்ந்தார். நாயகியாரைத் தங்கள் குலத்தில் வளர்த்த தவப்பேறு காரணமாக அவர்களுக்குச் சவர்க்க உன்பம் வாய்த்தது. அந்த அருள் வரலாறு வருமாறு....

 

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், "திருவல்லம்" என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தேமேல்பாடி என்னும் ஊரின் அருகில்காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும்பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன்,தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்திஅடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டுகுறி கேட்டும்வெறி ஆட்டு அயர்ந்தும்பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

 

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும்திருமகள் மானாகவும்உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர்சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்துஅம்மலையிடத்தே மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான்சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்றுதெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்றுஉறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

 

ஆங்கு ஒரு சார்,கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லிமுன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறுஅந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்துஇங்கும் அங்கும் உலாவிஉடல் நொந்துபுன்செய் நிலத்தில் புகுந்துவேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும்மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது,குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

 

அதே சமயத்தில்,ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால்வேட்டுவ மன்னனாகிய நம்பிதன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்றுஅக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டுஉள்ளமும் ஊனும் உருகிஓசை வந்த வழியே போய்திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்துதன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்துகுழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய்,சிறு குடிலில் புகுந்துகுழந்தையைத் தொட்டிலில் இட்டுமுருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடிவள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால்குழந்தைக்கு "வள்ளி" என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால்அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டிவேட்டுவர் குடிலில் தவழ்ந்தும்தளர்நடை இட்டும்முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,சிற்றில் இழைத்தும்,சிறு சோறு அட்டும்,வண்டல் ஆட்டு அயர்ந்தும்முச்சிலில் மணல் கொழித்தும்அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து,கன்னிப் பருவத்தை அடைந்தார்.

 

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டுதமது சாதிக்கு உரிய ஆசாரப்படி,அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும்மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை,வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்ததுஉயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவிதன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

 

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டுமுருகப் பெருமான்கந்தமாதன மலையை நீங்கிதிருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டுகை தொழுதுஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்துவள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டுதிருத்தணிகை மலைக்குச் சென்றுதிருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டுகரிய திருமேனியும்காலில் வீரக்கழலும்,கையில் வில்லம்பும் தாங்கி,மானிட உருவம் கொண்டுதணியா அதிமோக தயாவுடன்திருத்தணிகை மலையினின்றும் நீங்கிவள்ளிமலையில் வந்து எய்திவள்ளிநாயகியார் சுனையில் நீராடப் போய் இருக்கலாம் என்று சுனைகள் இருக்கும் இடங்களில் தேடினார். அருவிகளில் தேடினார். இறுதியில் தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்றுதினைப்புனத்தில் பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

 

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியேஉலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல்இந்தக் காட்டில்பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதேநின் பெயர் யாதுநின் ஊர் எதுநின் ஊருக்குப் போகும் வழி எது?என்று வினவினார்.

 

"நாந்தகம் அனைய உண்கண் 

     நங்கை கேள்,ஞாலம் தன்னில்                      

ஏந்திழையார்கட்கு எல்லாம் 

     இறைவியாய் இருக்கும்நின்னைப்                                

பூந்தினை காக்க வைத்துப் 

     போயினார்,புளினர் ஆனோர்க்கு                        

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

     அயன் படைத்திலன்கொல் என்றான்".   

 

"வார் இரும் கூந்தல் நல்லாய்,

     மதி தளர்வேனுக்கு உன்தன்                  

பேரினை உரைத்தி,மற்று உன் 

     பேரினை உரையாய் என்னின்,                                    

ஊரினை உரைத்தி,ஊரும் 

     உரைத்திட முடியாது என்னில்

சீரிய நின் சீறுர்க்குச் 

     செல்வழி உரைத்தி என்றான்". 

 

"மொழிஒன்று புகலாய் ஆயின்,

     முறுவலும் புரியாய் ஆயின்,                               

விழிஒன்று நோக்காய் ஆயின் 

     விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                                

வழி ஒன்று காட்டாய் ஆயின்,

     மனமும் சற்று உருகாய் ஆயின்                              

பழி ஒன்று நின்பால் சூழும்,

     பராமுகம் தவிர்தி என்றான்". 

     

"உலைப்படு மெழுகு அது என்ன 

     உருகியே,ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல 

     வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள் 

     கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ 

     அறுமுகன் ஆடல் எல்லாம்". 

 

இவ்வாறு எந்தை கந்தவேள்உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில்வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ அங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார்.நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால்இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணிஅதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பிவேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

 

நம்பி சென்றதும்,முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன். தாமதிக்காமல் வா" என்றார். 

 

என் அம்மை வள்ளிநாயகி  நாணத்துடன் நின்று, "ஐயாநீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதேநம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர்.விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனேமுருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

 

நம்பிஅக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக.உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்திதிருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பிஅவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாதுஉமக்கு வேண்டியது யாது?"என்று கேட்டான்.பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கிஇளமை அடையவும்உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும்தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லிதனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

 

பிறகுஅக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ!ஆறு மலை தாண்டிச் சென்றால்ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன்நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்றுசுனையில் நீர் பருகினார் பெருமான். 

 

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடிபக்குவ அனுபவம் பெற,பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர்ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்துசகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார்,பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்கமுருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

 

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது.ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமாபுனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோஎமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும்,நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறிதினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

 

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய்,முதல்வா!" என்றார்.அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடிகிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்துவிநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

 

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகிஅது கண்டு ஆனந்தமுற்று,ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால்அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார்.பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்துபிரணவ உபதேசம் புரிந்து,"நீ தினைப்புனம் செல். நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

 

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தைபறவைகள் பாழ்படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார்நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார்.  

 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளதுசொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.  

 

"மை விழி சிவப்பவும்,வாய் வெளுப்பவும்,

மெய் வியர்வு அடையவும்,நகிலம் விம்மவும்,

கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை

எவ்விடை இருந்து உளது?இயம்புவாய் என்றாள்".   

 

இவ்வாறு பாங்கி கேட்அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில்ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கிவேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோஎன்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறிவந்தவர் கண்களும்இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி,புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

 

"தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   

கூட்டிடாய் எனில்,கிழிதனில் ஆங்கு அவள் கோலம்

தீட்டி,மா மடல் ஏறி,நும் ஊர்த் தெரு அதனில்

ஓட்டுவேன்,இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்".                                  

 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன்மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கிஅவருடைய காதலை உரைத்து,உடன்பாடு செய்து,அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும்,பரமன் வெளிப்பட்டு,பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன்உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

 

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து,வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

 

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

 

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்துஎடுத்து அணைத்துமேனி மெலிந்தும்வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கிதெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி,முருகனை வழிபட்டு,வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி,"நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால்நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார்.அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

 

முருகவேள் தினைப்புனம் சென்றுதிருவிளையாடல் செய்வார் போல்,வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்துகுடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி,வெளி வந்து,பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால்இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்துபேய் துயில் அறிந்துகதவைத்திறந்துபாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள். 

 

"தாய்துயில் அறிந்து,தங்கள்

     தமர்துயில் அறிந்துதுஞ்சா

நாய்துயில் அறிந்து,மற்றுஅந்

     நகர்துயில் அறிந்துவெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப் 

     பெரும்பொழுது அதனில்பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி 

     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்".

 

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும்புலன்களாகிய தமரும்ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும்தேக புத்தியாகிய நகரமும்சதா அலைகின்ற பற்று என்ற பேயும்இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் "திருக்கோவையார்" என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

 

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவஎன் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்துஇவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

 

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டுநும் பதி போய்இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்துஉன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறிஅவ்விருவரையும் வழி விடுத்து,குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்றுஒரு பூங்காவில் தங்கினார்.

 

விடியல் காலம்,நம்பியின் மனைவி எழுந்து,தனது மகளைக் காணாது வருந்திஎங்கும் தேடிக் காணாளாய்பாங்கியை வினவஅவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டுபோர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகிஎம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

 

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார்.நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்யசேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்கஅம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

 

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்துஎம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமாஅது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார்.முருகப் பெருமான் பணிக்கவள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன்அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கிஉச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்துஎமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்?தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா?எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்துஅக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

 

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்யவள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கிபழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்டநம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து,நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து,திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறுபெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால்அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

 

வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால்---

 

திருமால்கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

 

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாக பதினாயிரம் யோசனை உயரம் திரிகூடம் என்ற உயர்ந்ஒளி பொருந்தியபெரிய மலை இருந்தது. அம் மலையில் சந்தனம்மந்தாரம்சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும்இந்திரர் முதலிய தேவரும்வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி,மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக் கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில்வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ,அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானதுஅநேக பெண் யானைகளாலே சூழப்பட்டுதாகத்தால் மெலிந்துஅந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து,தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் ஆற்றல் இன்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு,அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்ய முடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்திபக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலைபாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,உடனே கருடாழ்வான் மீது தோன்றிசக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்துகஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால்உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

 

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவி ஒரு விசை ஆதிமூலம் என

 வரு கருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

 

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம்நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோதுஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவாதலைவனைத்தானே அழைத்தான்நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால்தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவாஆதலால்சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

 

தேடற்கு ஒணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே--- 

 

திருமால் பிரமன் ஆகிய இருவரும் சிவபரம்பொருளின் அடிமுடி தேடிய வரலாறு கூறப்படுகிறத். இந்த வரலாற்றின் உட்பொருள் வருமாறு----

 

(1)       கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

 

(2)       அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும்தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடிஇயற்கைக்கு மாறாக முயன்றதால்அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

 

(3)       திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும்படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

 

(4)       "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும்,"எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

 

(5)       "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

 

(6)       புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

 

(7)       பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

 

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

 

அத்தகைய சிவபரம்பொருள் உயிர்களுக்கு என்று வைத்தது சேமம் (சேமம் - நலம்) அது இம்மை மறுமை அம்மை என்னும் மூன்று வகையான நலங்கள் ஆகும். சிவபரம்பொருளின் திருநாமத்தை இடையறாது ஓதி வருபவர்க்கு அந்த நலங்கள் விளையும் என்பதை இந்த உலகில் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்து விளக்கி அருளியவர் முருகப் பெருமான் என்கிறார் அருணகிரிநாதர். திருவைந்தெழுத்தின் பெருமைகளை, "துஞ்சலும்துஞ்சல் இல்லா போழ்தினும்" எனவும், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" எனவும் தொடங்கும் திருப்பதிகங்களின் வழி உலகுக்கு விளங்கச் செய்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

தீது அற்ற நீதிக்கு(ள்) ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே--- 

 

தீது அற்ற நீதி --- குற்றம் அற்ற நெறி. அது சிவநெறி என்வும்செந்நெறி எனவும்முத்திநெறிசன்மார்க்கநெறி எனவும் வழங்கப்படும். அத்தகைய நெறியில் நின்று வழிபாடு இயற்றுகின்ற அடியவர்களை வாழ்வாங்கு வாழவைப்பது இறைவன் திருவருள்.

 

கருத்துரை

 

அடியவர்களை வாழ்விக்கும் முருகா! 

அடியேனும் உனது திருநாமத்தை ஓதி உய்ய அருள் புரிவாய்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...