ஆமையும் மனிதனும்

 



ஆமையும் மனிதனும்

-----

உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. நோய் துன்பத்தையே விளைவிப்பது. ஆனால், பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கிறதே! அப்படியிருக்க, அதனை நோய் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். பிறவியில் இடையிடையே இன்பம் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் விளைவது பெருந்துன்பமே ஆகும். "பிறவியால் வருவன கேடு" என்றார் திருஞானசம்பந்தர்.

இவ்வுண்மையை ஓர் அரிய உவமையால் ஒரு தேவாரப் பாடலின் மூலம் விளக்கி அருளினார் அப்பர் பெருமான். ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலை நீரை ஏற்றி அதில் ஆமையை இடுவர். நீர் சிறிது சிறிதாகச் சூடேறுகிறது. அந்த ஆமை தனக்கு வரப்போகும் அழிவை அறியாது தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறது. அந்த இன்பம் அதற்குத் துன்பமாய் முடியப் போகிறது. உலகில் ஐம்புல நுகர்ச்சியால் வரும் இன்பம் இத்தகையதே ஆகும். எனவே, உலகில் சிறிது இன்பம் உளதாயினும் அது துன்பமாகவே முடிதல் கண்கூடு. இதனால் பிறவி துன்பத்தையே விளைவிக்கும் என்பதும், அது பற்றியே அது நோய் எனப்பட்டது என்பதும் தெளிவாகும். பின்வரும் திருநாவுக்கரசர் தேவாரத்தைக் காண்க...

"வளைத்து நின்று ஐவர் கள்வர் 

வந்து எனை நடுக்கம் செய்யத்

தளைத்து வைத்து உலையை ஏற்றித் 

தழல் எரி மடுத்த நீரில்

திளைத்து நின்று ஆடுகின்ற 

ஆமைபோல் தெளிவு இலாதேன்,

இளைத்து நின்று ஆடுகின்றேன், 

என்செய்வான் தோன்றி னேனே."

இதன் பொருள் ---

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

நாலடியாரில் 'பேதைமை' என்ற அதிகாரத்தில் ஒரு பாடல் வரும். 


"கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை

நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே-

கொலைவல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை

வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு." --- நாலடியார்.


இதன் பொருள் ---

கொல்லுந் தொழிலில் வல்லமை ஊடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன், தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்க, இவ் வுலகப் பற்றாகிய வலையில் கிடந்து அதன்கண் களித்து இருப்பாரது பேதைமை இயல்பு,  தன்னைக் கொல்லும் கொலைஞர் தன்னை உலையில் இட்டு அடுப்பில் ஏற்றித் தீக்கொளுவ, ஆமை நிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடி மகிழ்ந்தாற் போன்றது.

பேதைமை என்பது தனக்கு வரும் இடுக்கணை அறியாது களித்திருக்கும் இயல்பு உடையது என்பது கருத்து. 'மாண்பு' என்னும்  உயர் மொழியால் கூறியது, மிக்க இழிவை உணர்த்திற்று.

பிறவற்றைக் கொன்று, அவற்றின் ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கும் கொலைஞரே அவற்றைக் கொல்லும் முறைமையை நன்கு அறிவர். ஆமையைக் கொல்வது அரிது. அதைக் கொல்லும் வகையை உணர்ந்தோர் நெருப்பு மூட்டி உலை நீரை அடுப்பில் ஏற்றி அதில் ஆமையை இடுவர். தீயும் சுடர்விட்டு எரியும். நீரும் சூடு ஏறிக் கொதிக்கும். ஆமையும் வெதுவெதுப்பான நீரில் இன்புற்றுத் திளைக்கும். நீர் காயக்காய, சூடு பொறுக்கமாட்டாமல், ஆமை மாய்ந்துகொண்டே வரும். தான் அழிந்து வரும் நிலையை அறியாது அது. ஆமைக்கும் மாக்களுக்கும் வாழ்க்கை இன்பமும், அழியும் நிலையினை அறியாமையும் பொது. 

அப்பர் பெருமான் சமண மதத்தில் சேர்ந்து ஒழுகி, மீண்டு உய்ந்தவர். ஆதலின், சமணர்கள் குறித்தது ஓர் உவமையைத் தமது திறத்திற்கு ஏற்றி, நமது திறத்தை நாடச் செய்தருளினார். தொலைவில் இராமல், சூழ்ந்து (வளைத்துக்) கொண்ட கள்வர்க்கு நடுங்காதார் எவர்? ஒருவர் அல்லர் ஐவர். "ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள் சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்?" என்று ஐம்புலன்களின் சேட்டை குறித்து அருணகிரிநாதர் இரங்கிப் பாடி உள்ளார்.  ஐவரும் சூழ்ந்து நடுக்கம் விளைக்கினும், அவர் சூழ்ச்சிக்கு ஆளாகி, அவர் ஆட்டுகின்ற வகையிலே ஆடியும் ஓட்டுகின்ற வகையிலே ஓடியும், காட்டுகின்ற வகையிலே கண்டும், ஊட்டுவதை எல்லாம் உண்டும், துன்பத்தில் இருந்தாலும், அவர் திறத்தில் ஓர் இன்பம் உண்டுபோலத் தோன்றும். அவ்வின்பத்தையே நாடி, அவர் வலையிலே சிக்கி வருந்துவதற்கே மீண்டும் அவாவுறுதல் பேதைமை அன்றி வேறு இல்லை. ஆமைக்குத் தெளிவு இருந்தால், வெந்நீரில் திளைத்து ஆடாது. நீரின் வெப்பம் அதன் உடலுக்கு இனிதாய் இருந்தது. அதைத் தெளியாமையே ஆமைக்கு அழிவாகியது. 

மெய் வாய் கண் மூக்குச் செவி ஆகிய ஐந்தனாலும் முறையே ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஐந்தும் பிறப்பு இறப்பாகிய துன்பத்தை விளைக்கும் என்று தெளியாமையே பேரின்ப வாழ்வு பெறவொட்டாது தடையாய் இருப்பது. பிறந்து இறந்து உழலும் பெருந்துன்பத்தைச் செய்கின்றது. தெளிந்து திருவருள் பெற்று உய்வதற்கே இந்தப் பிறவி வாய்த்தது. தெளியாமல் ஐம்புலத்து ஆசை வலையுட்பட்டுப் பிறவிப்பெருங் கடலில் விழுந்து துன்புறுதற்கு உண்டானது அல்ல இந்த மானிடப் பிறவி.

பானுகோபன் வீரவாகுதேவர் முன் நின்று போர் செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து, தான் தன் குலத்தொடு வேரறச் சாய்ந்தொழிய இருக்கும் பின் விளைவைச் சிறிதும் தெளிந்திடவில்லை. அதனால், அவனை `உலைபடும் இளவெந்நீரின் உளம் மகிழ் கமடம் ஒத்தான்` எனத் தணிகைப் புராணத்தில் குறித்தருளினார் கச்சியப்ப முனிவர். கமடம் - ஆமை.

பிறவி என்பது தீராத நோய் என்பது அறிவில்லார்க்குச் சிறிதும் புலனாகாது. ஆனால், அறிவுடையார்க்கு அது நன்கு விளங்கித் தோன்றும். ஆதலால் அவர் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர். பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்றருளினார் அப்பர் பெருமான். உலகத்து மருந்துகள் வேறு வேறு இடங்களில் கிடைப்பன. ஆகவே அவற்றைப் பெறுதற்கு அலைதல் வேண்டும். சில சமயங்களில் அவை கிடைக்காமலும் போகலாம். ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையது அல்ல. வேண்டிய போது கிடைக்கும் தன்மை வாய்ந்தது திருவருள் மருந்து. அதுவே நல்ல மருந்து. "நல்ல மருந்து இம் மருந்து - சுகம் நல்கும் வயித்தியநாத மருந்து" என்று பாடினார் வள்ளல்பெருமான். மேலும், உலகத்து மருந்துகள் உடலுக்கு உரியவை. ஆதலால் அவை உண்ணுதற்கு உரியவாகின்றன. இறைவனாகிய மருந்தோ உயிருக்கு உரியது. ஆதலால், அது எண்ணுதற்கு உரியதாகின்றது. அதுபற்றியே இறைவனை நினையுங்கள் என்று அறிவுறுத்தினர் தமது அருளாளர்கள். 

உய்யும் நெறியாகிய முத்திநெறி அறியாமல் மூர்க்கரோடு இணங்கி இருந்தால், வாழ்நாள் வீணே கழியும். மூப்பும் உண்டு. அதன் பின்னர் மரணம் நிச்சயம் உண்டு. அதன் முன்னரே, நல்வினைகளைச் செய்து நற்கதியைத் தேடவேண்டும் என முயல்வதுதான் அறிவுடைமை. அல்லாதது பேதைமை. "பேதைமை என்பது ஒன்று யாது எனின். ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறியாமை என்பதன் இலக்கணம் என்னவெனில், கேடு தருவனவற்றை எல்லாம் விரும்பி ஏற்றுக் கொண்டு, ஆக்கம் தருவனவற்றைக் கைவிடுதல் ஆகும். ஆக்கம் என்பது வீடுபேறு. கேடு என்பது பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற தன்மை.

பேதைமையால், அறியாமையால் வரும் கேடு என்ன என்பதை, திருவள்ளுவ நாயனார் மேலும் தெரிவிப்பது, "ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு.” ஐயோ! பேதைமையால் வரும் கேடு இவ்வளவு கொடியதா? ஆமாம். ஆமாம். பேதை என்பவன் ஒருவன், இனிவரும் பிறவிகளில் எல்லாம் தான் படவேண்டிய நரகத் துன்பத்தை, இப்போது கிடைத்த இந்த ஒரு பிறவிலேயே தேடிக் கொள்ளும் வல்லமை படைத்தவன் என்கிறார் நாயனார்.

இந்தக் கேட்டை மனிதகுலம் அடையாமல், புனிதகுலம் பெறவேண்டுமென்றுதான் வள்ளற்பெருமானார், பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவிக்கிறார்.


"ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,

அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,

கூற்று வருங்கால் அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ,

கூற்றுஉதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,

வேற்றுஉரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,

வீண்உலக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,

சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற

தருணம் இது, சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே."


இதன் பொருள் ---

ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் முன்பே அணை செய்து காத்துக்கொள்ள நினையாத உலக மக்களே! அகங்காரமாகிய பேய் பிடித்து அலைந்து வருந்துகிறீர்கள்.  நாளை எமன் வருவானாயின் என்ன செய்வீர்கள். அந்தோ! அந்த எமனை உதைத்து நீக்கிய சிவனுடைய சிவந்த திருவடியைப் போற்றி வழிபட விரும்புகின்றீர்கள் இல்லை. பிறவற்றைப் பேசித் தீவினைகளை மிகுவித்து மெலிகின்றீர்கள்ற. வீணான உலகியலில் கொடுமை நிறைந்த பொய் வழக்கங்களைக் கைவிட்டு எம்பால் வந்து அடைவீர்களாக. நான் உரைக்கின்ற சொற்களை ஏற்றருளுதற்கு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் இதுவாதலால், நீவிர் அவனது ஞானசத்தியைப் பெறுதற்கு உடனே வருவீர்களாக; நான் சொல்லும் இது சத்திய வாக்காகும்.

     வள்ளலார் சொல்லுகின்றவற்றைக் கேளாது அசட்டை செய்து ஒழுகுகின்றமை புலப்பட, “அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்” என்று கூறுகின்றார். கூற்று - உயிர் கவரும் எமன். மார்க்கண்டனது உயிரைக் கவர வந்த எமனைக் காலால் உதைத்து விலக்கிய சிவனுடைய அருட்செயலை விதந்து, “கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீர்” என்று புகல்கின்றார். வேற்று உரைத்தல் - அருள் நெறிக்கு வேறாகியவற்றை விளம்புதல். உலகியலில் காணப்படுகின்ற தீய வழக்கங்கள் துன்பம் விளைவிப்பனவாதலால் அவற்றைக் கைவிடுதல் வேண்டி, “வீண் உலக கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்” என மொழிகின்றார். சாற்று - சொல்வது. சிற்சத்தி - திருவருள் ஞானத்தால் விளையும் மெய்ம்மையான ஆற்றல். இதனால் சன்மார்க்க நன்னெறிக்கு வேறாகியவற்றைப் பேசி உலகக் கொடுவழக்கங்களைக் கைவிடுமாறு வேண்டுகின்றார்.

இறைவனது இருப்பில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டாம். அவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள் பேதைமையைத் தவிர்த்துப் பேரருளைப் பெற்று, பிறவாத நிலையிலே, இறவாத இன்ப அன்பில் திளைத்து இருக்க, இறைவன் திருவடியை மறவாது போற்றுவோம்.




No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...