பேரான கவிராச ருடன்சிறிய
கவிகளும்ஒர் ப்ரபந்தம் செய்வார்!
வீராதி வீரருடன் கோழைகளும்
வாள்பிடித்து விருது சொல்வார்;
பாராளும் தண்டலைநீள் நெறியாரே!
இருவரையும் பகுத்துக் காணில்,
ஆராயும் மகாதேவர் ஆடிடத்துப்
பேய்களும் நின் றாடுமாறே.
இதன் பொருள் ---
பார் ஆளும் தண்டலைநீள் நெறியாரே - உலகைக் காத்து அருளும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!
பேரான கவிராசருடன் சிறிய கவிகளும் ஓர் பிரபந்தம் செய்வார் - புகழ்பெற்ற கவியரசருடன் சிறு கவிஞரும் ஒரு நூல் எழுதுவர்; வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார் - பெருவீரர்களுடன் வீரமற்றவர்களும் வாளேந்தி வெற்றி வெற்றி என்று கூறுவார்கள். இருவரையும் பகுத்துக் காணில் - இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப் பேய்களும் நின்று ஆடும் ஆறே - (பெரியோர்) ஆராய்ச்சி செய்யும் சிவபெருமான் ஆடும் இடத்திலே பேய்களும் நின்று ஆடுவது போலாம்.
எல்லோரும் பெருவீரராக இருப்பது இல்லை. எல்லோரும் பெருங்கவிஞராகவும் இருப்பதும் இல்லை. பெருவீரர் இருப்பதனாலேயே மற்றவரும் போர்செய்யப் போகாமல் இருக்க முடியாது. பெரும் புலவரைக் கண்டு சிறுபுலவர் கவிசெய்யாமல் இருத்தலும் இயலாது. இருதிறத்தாரும் கலந்திருப்பதே உலகியல். சிவபரம்பொருள் திருநடனம் புரியும் இடத்தில்தான் பேய்களும் கூத்தாடுகின்றன.
No comments:
Post a Comment