"நூற்றுஅனைத்து ஓர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றுஇருந்த செல்வம் விழையாதே, கூற்றுதைத்தான்
ஆடுஅரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான்தன்
பாடுஅரவம் கேட்ட பகல்."
இதன் பொருள் ---
கூற்று உதைத்தான் – மார்க்கண்டேயருக்காகு இயமனைத் தனது திருவடியால் உதைத்து அருள் புரிந்தவரும், ஆடு அரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான் - ஆடுகின்ற பாம்பினைக் கச்சாக இடையிலே கட்டிய அம்மானாரும் ஆகிய, தன் பாடு அரவம் கேட்ட பகல் - சிவபெருமானது அருட்புகழைப் போற்றும் படலாகிய வேத கீதத்தினைக் கேட்ட ஒரு பகலின் விளைவுக்கு ஈடாகிய பயனாக, நூற்றனைத்து ஓர் பல் ஊழி - நூற்றுக் கணக்காகிய பல ஊழிக் காலம், நுண் வயிர வெண்குடைக் கீழ் வீற்று இருந்த செல்வம் விழையாதே -- நுண்ணிய வயிரமணிகள் வரிசை பெறக் வெண்கொற்றக் குடையின் நிழலின் கீழே வீற்றிருந்து அரசாண்ட அரசச் செல்வம் பெற்றபயனை ஏற்றுக் கொள்ளாது.
விளக்கம் ---
அனைத்து - அளவு; ஊழி - நீண்ட கால அளவு – யுகம். காலத்தின் பேரெல்லை. பகல் – காலத்தின் ஒரு சிற்றெல்லை. பாடு அரவம் – பாட்டின் ஒலி. வயிரமணிகள் பதிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் பல ஊழிக் காலம் வீற்றிருந்த அரச போகமானது, காலத்தின் ஒரு சிறு கூறாகிய பகல் பொழுதில் சிவபரம்ப்பொருளின் அருட்புகழைக் கூறும் பாடலைக் கேட்டதால் உண்டான இன்பத்துக்கு ஈடாகாது என்றார்.
No comments:
Post a Comment