தேவர் பயம் கெட்டது

 


தேவர் பயம் கெட்டது

-----

 

     அருணகிரிநாதர்முருகப் பெருமான் மீது "பிள்ளைத் தமிழ்" என்னும் பிரபந்தத்தைப் பாடவில்லை. ஆனாலும் பிள்ளைப் பருவ வருணனைகளை அவர் அருளிய பாடல்களில் காணலாம். உமாதேவியாரின் பாலை அருந்திச் சரவணப் பொய்கையில் உள்ள தாமரையாகிய தொட்டிலில் ஏறித் துயின்றதையும்அழுததையும் "திருந்தப் புனவங்கள்" என்ற பாட்டில் வருணித்தார். தாலப் பருவத்துச் செயல்கள் அவை. துயிலுகின்ற முருகக் குழந்தை விழித்துக் கொண்டு காலை உதைத்து விளையாடுகிறது. அதன் உடம்பு அசைகிறது. அப்போது அதன் இடையிலுள்ள சலங்கை குலுங்குகிறது. அந்த ஒசையினால்ஏற்பட்ட விளைவுகளை இந்தப் பாட்டில் அருணகிரிநாதர் சொல்கிறார்.

 

     மகேசுவர மூர்த்தங்கள் என்று சிவபிரானுக்குரிய திருக் கோலங்கள் இருபத்தைந்து என்று நூல்கள் கூறும். அந்த இருபத்தைந்தில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. அம்மைஅப்பன்சேய் என்ற மூவரும் ஒருவரான மூர்த்தம் அது. உமாதேவியாரோடும் கந்தனோடும் இணைந்தவராகச் சிவபெருமான் இருக்கும் கோலம் சிறந்தது. ஒவ்வொரு கோயிலிலும் சோமாஸ்கந்த மூர்த்தத்தைக் காணலாம். திருவாரூரில் தலைமை பெற்று எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் சோமாஸ்கந்தரே.

 

     ஆலயங்களில் நித்திய பூசை நடக்கின்றது. அதில் நேரும் குறைபாடுகளுக்குப் பரிகாரமாக நைமித்திகமாகிய விழாக்கள் நடைபெறுகின்றன. "நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம்" என்பது பரிமேலழகர் தரும் குறிப்பு. ஆலயத்தின் பெருமை விழாக்களால் மிகுதியாகிறது, பயனும் மிகுதியாகிறது. விழாவைச் சிறப்பு என்று சொல்வார்கள். "சிறப்பொடு பூசனை செல்லாதுவானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டுஎன்று திருவள்ளுவர் நைமித்திகமாகிய விழாவைச் சிறப்பென்று குறிக்கிறார்.

 

     விழாக்களுக்குள் சிறந்தது பிரம்மோற்சவம் என்னும் பெருவிழா. அதில் திருத்தேர் விழா பெரும் சிறப்புப் பெற்றது. திருத்தேரில் எழுந்தருளும் மூர்த்திசோமாஸ்கந்த மூர்த்தி தான். உலகத்தாருடைய பாவத்தைப் போக்கி அருளை வழங்க இறைவன் குடும்பத்தோடே எழுந்தருளி வருகிறான்.

 

     அப்பர் பெருமான் இந்தக் குடும்பத்தை ஒரு வரியில்,"நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்" என்று பாராட்டுகின்றார். நன்கடம்பன் ஆகிய முருகன் குழந்தைஅவனைப் பெற்றவள் உமாதேவிஅவளைப் பங்கில் உடையவன் சிவபெருமான். குழந்தைமனைவி இருவரையும் சொல்லிக் குடும்பத் தலைவனையும் சொல்கிறார். குடும்பத் தலைவனைப் பாடும் பணியை உடையவர் அப்பர்.

 

     அருணிகிரிநாதர் முருகனைப் புகழ்கிறவர். சிவன்அவன் தலைவி,அவள் குமாரன் என்ற வரிசையில் மூவரையும் வைத்துக் கடைசியில் குமாரனிடம் வந்து, "ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்" என்கிறார். ஒருவன் என்றால் ஒப்பு அற்றவன்தனிப்பெருந்தலைவன் என்று பொருள். தமக்குச் சமானமே இல்லாதவர் சிவபெருமான். அவரைத் தம் பங்கில் வைத்துக் கொண்டிருப்பவள் உமாதேவி. அவள் குமாரன் முருகன். 

 

     குழந்தைக்கு தாய்தந்தை இருவரிடமும் அன்பு உண்டு. அம்மாவிடம் சற்று அதிகமாகவே இருக்கும். குழந்தை முதலில் தாயை உணர்ந்துபிறகே தந்தையை உணர்கிறது. தாயினிடம் ஒட்டிக் கொண்டுள்ள குழந்தைக்கு அம்மாஅப்பாவின் மனைவி அல்லஅப்பாதான் அம்மாவின் கணவர். உலகத்தாருக்கு அவருடைய மனைவி அவள். ஆனால் குழந்தைக்கு அவளுடைய கணவர் அவர். அவளுக்குத்தான் தலைமை. அவள் உடையவள் அவன் உடைமைப் பொருள். அம்மாவுக்கு பெருமை தரும் வகையில் அருணகிரிநாதரும்,   "த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி" என்கிறார்.

 

     முருகன் திருவவதாரம் செய்தபோது பாலை விரும்பி அழுதான் என்றும்அந்த அழுகையைக் கேட்ட அசுரரும் பிறரும் தமது வாழ்வைக் குலைப்பவன் பிறந்துவிட்டான் என்று அழுதார்கள் என்றும் முன்பு ஒரு பாட்டில் அவர் சொன்னார். இப்போது அந்தக் குழந்தை ஆடி அசைகையில் அவன் இடுப்பில் கட்டிய கிங்கிணி ஓசையைக் கேட்டு நடுங்கினார்கள் என்று சொல்ல வருகிறார். குழந்தை இடையில் அணியும் ஆபரணங்களில் "உடைமணி" என்பது ஒன்று. முருகன் திருவரையிலும் அது இருக்கிறது. காலில் சலங்கையும் அணிந்திருக்கிறான். குழந்தை தொட்டிலில் புரளும்போதும் உட்காரும்போதும் ஆடும்போதும் நடக்க முயலும்போதும் அந்தச் சலங்கை 'ஜல்ஜல்'என்று ஒலி செய்கிறது. அது எங்கும் கேட்கிறது.

 

     முன்பு குழந்தைவேலனின் அழுகையைக் கேட்டு நெஞ்சம் துணுக்குற்றார்கள் அசுரர்கள்ப்போது குழந்தைவேலனுடைய இடுப்பில் கட்டி இருக்கும் கிண்கிணி ஓசையை அரக்கர்கள் கேட்டார்கள்.பசியுடையவனுக்கு இனிப்புப் பண்டத்தைக் கண்டால் நாவில் நீர் ஊறுகிறது. நீரிழிவு நோய் உள்ளவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. முருகக் குழந்தையின் சலங்கை ஒலி நல்லவர்களுக்கு இனிதாகவும் பொல்லாதவர்களுக்குக் கடுமையாகவும் கேட்கிறது. இயற்கையில் அது இனிய ஒலிதான். ஓசையினால் உண்டாகும் நினைவுதான் அவர்களுக்கு அவ்வொலியினிடம் வெறுப்பை உண்டாக்குகிறது. தம்மை அழிக்கப் போகிறவன் வளர்கிறான்இனிமேல் நம்மிடம் வந்து நம் இன்ப வாழ்வைக் குலைப்பான் என்ற எண்ணம் அந்த ஒலியால் தோன்றுகிறது.  தமது வாழ்வுக்கு இறுதி வரும் என்று எண்ணி அஞ்சுகிறார்கள்.

 

     கிண்கிணி ஒசையினால் உண்டான விளைவு அரக்கர்களுக்கு அச்சத்தை விளைவித்ததோடு நிற்கவில்லை. அந்த ஓசை திக்கு முழுவதும் சென்று பரவுகிறது. நல்லவர்கள் ஆட்சியில் நல்லவர்கள் முக்கியமான பதவிகளில் இருப்பார்கள். அல்லாதவர்கள் ஆட்சியில் அவர்களுக்கு ஏற்றவர்களே இருப்பார்கள். சூரபதுமன் தனது அரசாட்சியில் முக்கியமான பதவிகளில் எல்லாம் தனது துணைவர்களையே வைத்திருக்கிறான். திக்குகளில் அவனுடைய படைவீரர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் சென்று மோதுகிறது கிங்கிணி ஓசை. திக்குச் செவிடுபட்டுப் போகும்படி அந்த ஒலி பரவுகிறது.

 

     மேருமலை நடுவில் நிற்க எட்டுப் பெருமலைகள் சுற்றிலும் நிற்கின்றன. இந்த ஒலி அவற்றையும் அதிரச் செய்கிறது. ஒலியின் சிறப்பையும் வேகத்தின் கடுமையையும் அளவுகாட்டமேருவையும் எட்டு மலைகளையும் அவை நடுங்க வைத்தன என்று சொல்வது அருணகிரிநாதருக்கு வழக்கமாகிவிட்டது. மயில் நடக்கும்போது அதன் பீலிக் காற்றுப் பட்டதும், "அசைந்தது மேருஅடியிட எண்திசை வரை தூள்பட்ட"என்று பாடினார். சேவல் சிறகை அடித்துக் கொண்ட போது "இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும்இடிபட்டவே"

என்று பாடுகிறார். 

 

     கிண்கிணி ஓசை பகைவரை நடுங்கச் செய்தது.திக்குச் செவிடு படும்படி செய்தது.எட்டு மலைகளையும்பொன் குன்றாகிய மேருமலையையும் அதிரச் செய்தது.அந்த மலை ஒவ்வொன்றிலும் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் நீக்கப்பட்டார்கள். சூரபன்மனுடைய ஆட்கள் இருத்தப்பட்டார்கள். சுரர்கள் (தேவர்கள்) வாழும் ஆலயமாகசுராலயமாகஇருந்த பொன்மலை ஆகிய மேருமலை இப்போது அசுராலயம் ஆயிற்று. ஆட்சியை மேற்கொள்கிறவன் அங்கங்கே தனக்கு விசுவாசமாக உள்ள அதிகாரிகளை வைப்பது வழக்கம். சூரபதுமனும் அப்படியே செய்தான். எங்கே பார்த்தாலும் தன்னுடைய தளபதிகளையே வைத்தான்.

 

     முருகனது இடுப்பில் கட்டியிருந்த கிண்கிணியின் ஒலியானது அவர்களை எல்லாம் நடுங்கச் செய்தது. அவர்கள் வாழும் இடங்களை அதிரச் செய்தது. அவர்கள் அதைக் கேட்டுத் திருந்தவில்லை. சில நேரம் அந்த அச்சம் இருந்தது. பிறகு பழையபடி தம்முடைய காரியங்களை மேற்கொண்டார்கள்.

 

     நாமும் இந்த நிலையில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த உலகம் நிலையற்றது.  இதில் வாழும் வாழ்க்கையும் நிலையற்றது. நாமும் நிலைபெறாமல் ஒருநாள் இறந்து படுவோம். காலன் வந்து நம்மைக் கட்டி இழுத்துப் போவான் என்ற நினைவு நமக்கு உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நமது கண் முன்னர் யாரேனும் இறந்தால் நிலையாமை என்னும் நினைவு உள்ளத்தில் உண்டாகிறது. தொடர்ந்து அச்சம் நம்மை ஆட்கொள்ளுகிறது. 

யாரேனும் இந்த உண்மையை எடுத்துச் சொல்லிச் சொற்பொழிவு ஆற்றும்போது நமக்கு நினைவு உண்டாகிறதுஅப்போது அச்சம் நம்மைத் தழுவிக் கொள்கிறது. இனி இவ்வாறு இருக்கக் கூடாது. நல்ல வழியில் வாழ்ந்துபோகின்ற வழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். ஆனால்அந்த நினைவு சில நொடிகளிலேயே மறைந்து போகிறது. 

 

     இந்த இரண்டு விதமான நிகழ்ச்சிகளிலும் உண்டாகிற வெறுப்பு உணர்ச்சி என்னும் வைராக்கியத்தை,மயான வைராக்கியம்புராண வைராக்கியம் என்று சொல்லுவார்கள். பிரசவ வைராக்கியம் என்றும் ஒன்று உண்டு.குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வேதனையைப் பொறுக்க முடியாத தாய்இனி தன் கணவனோடு கலந்து இன்புறக் கூடாது என்று தீர்மானம் செய்து  கொள்கிறாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அந்த வேதனை மறந்து போய்விடுகிறது.

     இன்னும் ஒரு வைராக்கியம் உண்டு. அது நாயின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையது. நாய், "இனிமேல் நாம் எச்சில் இலையைத் தொடவே கூடாது" என்று முடிவுசெய்து கொண்டு குப்பை மேட்டில் படுத்திருக்குமாம். எங்கேனும் எச்சில் இலை விழுகிற ஒலி காதில் பட்டால்அல்லது கண்ணால் கண்டால்இந்த எண்ணத்தை மறந்து  உடம்பை உதறிக் கொண்டு புறப்பட்டு விடுமாம். இதைச் "சுவான வைராக்கியம்" என்று சொல்வார்கள். இந்த வைராக்கியங்கள் எல்லாம் ஒரு கணத்தில் தோன்றிஅடுத்த கணத்தில் இல்லாது போய்விடுபவை.

     மனிதனிடம் இருக்கும் இந்த இயல்பு அசுரர்களிடமும் இருக்கிறது. அசுரர்களிடம் உள்ள குணம் மனிதனிடம் இருக்கிறது என்றும் சொல்லலாம். ஒவ்வொரு மனிதனிடமும் அசுர இயல்பும் தேவ இயல்பும் கலந்தே இருக்கின்றன. அசுர இயல்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டு வந்தால்நன்மை உண்டாகும்.

     முருகன் கிண்கிணி ஓசையைக் கேட்டு அஞ்சினவர்களும் நடுங்கினவர்களும் அரக்கர்களே. அவர்களது அச்சத்திலும் நடுக்கத்திலும் மகிழ்ச்சியும்தைரியமும் அடைந்தவர்கள் தேவர்கள். சூரியன் வானத்தில் தோன்றும்போது மக்கள் துயில் உணர்ந்து எழுந்து  சுறுசுறுப்போடு வேலை செய்யப் புகுகிறார்கள். பறவைகள் சிறகை அடித்துக்கொண்டு பறக்கின்றன. தாமரை மலர்கள் மலர்கின்றன. ஆனால் எலும்பில்லாத புழுக்கள் இறக்கின்றன. குவளை மலர் கூம்புகிறது. ஆந்தை அஞ்சுகிறது. அவை தம் இயல்புக்கு ஏற்றபயனை அடைகின்றன. அவ்வண்ணமேஇங்கே முருகன் திருவரைக் கிண்கிணி ஓசையைக் கேட்டுத் தேவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் முகமலர்ச்சி பெறுகிறார்கள். அதுகாறும் தாம் பெற்றிருந்த அச்சத்தை உதறுகிறார்கள். ஆனால் அரக்கர்களோ வாட்டம் அடைகிறார்கள். அதுகாறும் அவர்கள் அறியாத அச்சமும் நடுக்கமும் அவர்களைக் கவ்விக் கொள்கிறது.

     முருகன் கிண்கிணி ஒசையின் இனிமையை அருணகிரிநாதர் இந்தப் பாடலில் சொல்லவில்லை. எல்லாக் குழந்தைகளின் கிண்கிணி ஓசையும் இனிமையானதுதான். அது கிண்கிணியின்  இயல்பு.  குழந்தையின் பெருமைக்கு அது அடையாளம் இல்லை. முருகன் திருவரைக் கிண்கிணி ஒசையினால் விளையும் விளைவுகள் அந்தக் கிண்கிணியால் விளைந்தவை அல்ல. முருகனால் விளைந்தவை. கிண்கிணியை அணிந்தவன் குழந்தைவேலனாக இருப்பதால் அரக்கர்களுக்கு அச்சம் உண்டானது. தேவர்களுக்கு உண்டாகி இருந்த அச்சம் கெட்டது.எனவேகிண்கிணியைப் புகழும் விதத்தில் முருகனுடைய ஆற்றலையே அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகிறார்.  

"ஒருவரைப் பங்கில் உடையாள்குமாரன் உடைமணிசேர்

திருவரைக் கிங்கிணி ஓசைபடத் திடுக்கிட்டுரக்கர்

வெருவரதிக்குச் செவிடுபட்டுஎட்டு வெற்பும் கனகப்

பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம்கெட்டதே."

இதன் பொருள் ---

 

     தனிப்பெருந்தலைவர் ஆகிய சிவபெருமானைத் தமது வலப்பாகத்திலே உடையவர் ஆகிய உமையம்மையாரது திருப்புதல்வர் ஆகிய முருகப் பெருமானுடைய உடைக்கு மேல் கட்டும் மணிகள் பொருந்திய அழகிய இடையில் விளங்குகின்ற கிண்கிணியினது ஒலி பட்ட மாத்திரத்தில் அரக்கர்கள் துணுக்குற்றுஅஞ்சி நடுங்கஎட்டுத் திசைகளில் உள்ளவர்களும் செவிடுபட்டுப் போயினர். குலமலைகள் எட்டும்பெரியமலை என்றும் பொன்மலை என்றும் சொல்லப்படும் மேரு மலையும் அடி பெயர்ந்து போயிற்று. தேவர்களுக்கு அரக்ககரகளிடம் இருந்து வந்த பயம் அழிந்துவிட்டது.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...