முருகன் திருவடி பட்ட இடம்

 


முருகன் திருவடி பட்ட இடம்

-----

 

     அருணகிரிநாதப் பெருமான் முருகன் என்னும் குழந்தையை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டிக் கொண்டு வருகிறார். குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்சொன்னாலும்குருத்தைப் போலப் பச்சிளம் குழந்தையாகத் தொட்டிலில் படுத்து விளையாடிப் பாலுக்காக அழுவதைச் சொன்னார். பின்பு அவனது இடையில் கட்டிய  கிண்கிணியில் ஒலி எப்படி எதிரொலியை எழுப்பியது என்று சொன்னார். அதற்குப் பிறகு முருகன் தவழ்ந்து உட்கார்ந்து சப்பாணி கொட்டிய பன்னிரண்டு கைகளை உடையவன் என்று கூறினார். முருகக் குழந்தை இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறான். அக்குழந்தை அடி எடுத்து வைக்கும்போது நடந்தவை பற்றிக் கூறுகிறார்.

 

     அருணகிரிநாதர்ஒரு கருத்தைச் சொல்ல வரும்போது அதை மாத்திரம்  நேர்முகமாகச் சொல்லாமல்சுற்றிச் சூழ இருக்கிற விடயங்களையும் சொல்லி அழகுபட விளக்குவார். ஒன்றைச் சொல்லுகையில் அதற்குத் தொடர்பு உடைய வேறு பலவற்றைச் சொன்னால் அழகாக இருக்கும். தங்கத்தால் செய்த மாலையில் வைரத்தை வைத்துக் கட்டினால் அழகு கூடும். அந்த வகையில் முருகப் பெருமான் அடிஎடுத்து வைத்தான் என்று சொல்ல வரும்போது அவனுக்கு முன்னாலே அடி எடுத்து  வைத்தவர் என்னும் பெருமையை உடைய முருகனுடைய மாமனாகிய திருமாலை நினைக்கிறார். திருமால் தமது  பெரிய திருவடியால் மண்ணையும் விண்ணையும் அளந்தவர்.

 

     அவருடைய திருமருகராகிய முருகப் பெருமானும் தன்னுடைய சிறிய அடிகளால் மூன்றடி வைத்தான். அருணகிரிநாதர் இந்த இரண்டையும்சேர்த்துச் சொல்லுகிறார். "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும்பெருமான்" என்று திருமாலைக் குறித்துப் பாடுகிறார். வாமனாவதாரத்து நிகழ்ச்சி இது. 'மூன்று அடி மண் தந்தேன்என்று மகாபலி சொன்னவுடனே பெருவடிவை எடுத்துக்கொண்டுபூவுலகத்தைத் தம்முடைய பேரடியினால் ஓர் அடியாகவும்வானுலகத்தை ஓர் அடியாகவும் அளந்துவிட்டுமூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார் திரிவிக்கிரமர். மாபலிச் சக்ரவர்த்தியிடம் அவர் வரும் போது வாமனராககுறிய வடிவினராக வந்தார். தம்முடைய உடம்பை மிகவும் குறுக்கிக் கொண்டுபார்ப்போர் அருவருத்து வெறுத்து ஒதுக்கும்படியாகக் கூனிக் குறுகி வந்தார். 

 

     பல் எல்லாம் தெரியக் காட்டிப்  பிறரிடத்தில் கையை நீட்டி இரத்தல் இழிவான செயல். அப்படி இரக்கிறவன் எத்தகைய தைரியமும்பராக்கிரமும் உடையவனாக இருந்தாலும் கேட்கும்போது கூனிக் குறுகிப் போவான். தானம் வாங்கப் போன  திருமால் தம்முடைய நெடிய உருவத்தோடு போகவில்லை. சாதாரண மனிதனது உருவத்திரும் போகவில்லை. மிகக் குட்டையானபெற்றவரும் வெருக் கொள்ளுகின்ற வாமன உருவத்தோடு சென்றார். கடவுள் எந்த விளையாட்டைச் செய்தாலும் அதில் ஒரு நீதி இருக்கும். 

 

     வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எதுஎன்று கேட்டால்அந்த வறுமையைப் போல்வறுமை என்பதே துன்பத்தினைத் தருவது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதைப் போல இழிவு தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவேயாசகத்திற்கு என்று போகும்போது திருமாலின் நெடிய உருவமே குறுகிப் போனது. பிறரிடம் கையை நீட்டி யாசகம் பண்ணுகிறவர்கள் கூனிக்  குறுகிப் பல்லை இளிக்கும் அவலநிலையை அடைவார்கள் என்ற தத்துவத்தை இது உணர்த்தும். உலகத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளித்து வந்த மகாபலியை அடக்கவே அவர் போனார். அவனிடத்தில்,  'மூன்றடி மண்ணைத் தாஎன்று கேட்டார். உலகத்தோருக்கு எல்லாப் பொருளையும்கொடுக்கும் வள்ளலாகிய திருமால்எல்லாப் பொருள்களையும் தம்மிடத்திலேயே  வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும்மாபலியிடம் அவர் கேட்டது யாசகம்தான்.  இல்லாதவன் கேட்பது  இயற்கை. அவன்கூட இல்லை என்று சொல்லிப் பிறரிடம் சென்று கேட்கக் கூடாது என்று திருவள்ளுவர் கூறுவார். இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது வழங்குதலே மாண்பு. அப்படிக் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்தலே மிக உயர்ந்தது. 

 

"'என இரத்தல் இழிந்தன்றுஅதன் எதிர்,

'ஈயேன்என்றல் அதனினும் இழிந்தன்று;

'கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதன் எதிர்,

'கொள்ளேன்என்றல் அதனினும் உயர்ந்தன்று.."

 

என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. 

 

     "ஈ என இரத்தல் இழிந்தோன் கூற்று" எனச் சொல்லப்பட்டு உள்ளதால்ஒருவனிடம் சென்று எனக்குத் தருவாயாக என்று இரப்பது இனிவானது.அப்படி ஒருவன் தனிடம் வந்து கேட்டபோதுஇல்லை என்று சொல்லுதல் அதனினும் இழிவானது. தம்மிடத்து வந்தவர் இல்லை என்ற சொல்லைச் சொல்லும் முன்பாகவே அவருடைய முகக் குறிப்பை உணர்ந்துஇதனைக் கொள்வாயாக என்று கொடுப்பது உயர்ந்தது. தம்மிடத்து  ஒன்று இல்லாத நிலையிலும்தமக்கு ஒருவர் ஒன்றைக் கொடுத்தாலும்,கொள்ளேன் என்று சொல்லி மறுத்தல்அந்தக் கொடையினும் உயர்வானது.

 

     பொல்லாதவர்களிடத்தும் சில நல்ல குணங்கள் இருக்கும். ஒருவன் ஒழுக்கம் தவறியவனாக இருப்பான். ஆனால் யார் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பு  அவனிடம் இருக்கும். இந்த வகையைச் சேர்ந்தவன்தான் மாபலி. வாமன உருவத்தில்  திருமால்  வந்திருக்கிறார் என்பதை அவன் அறியவில்லை. அவர் கேட்ட  'மூன்றடி மண் தருகிறேன்என்று சொன்னான். ஆனால்,அவனுடைய குரு சுக்கிராசாரியாருக்கு வாமனராக வந்தவர் யார் என்று தெரியும். அவர் ஞானம் உடையவர். "மாபலியேவாமனராக வந்திருப்பவர் யார்  என்று தெரியாமல்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாயே. முடியாது என்றுசொல்லி விடுஎன அவனைத் தடுத்தார். "நான் சொன்ன வாக்கை மீறமாட்டேன்என்று சொல்லி விட்டான் மகாபலி. அப்பொழுதும் சுக்கிராசாரியாருக்கு மனம் வரவில்லை. அவன் தண்ணிர்  வார்க்க எடுத்த கிண்டியின் வாயில் ஒரு சிறு வண்டைப் போல நுழைந்து கொண்டுதண்ணீர் கீழே விழாமல் தடுத்தார். வாமனர் தம் கையில் வைத்திருந்த தர்ப்பையை எடுத்து அதன் துவாரத்தின் வழியே குத்தினார். அதனால் சுக்கிராசாரியார் ஒருகண்ணை இழந்தார். நல்ல ஞானம் படைத்த சுக்கிராசாரியாருக்கு அசுரனாகிய மாபலியைத் திருத்துகிற ஆற்றல் இல்லை. மாபலியின் அசுரத் தன்மை அவருக்கு வந்துவிட்டது. நல்லவர்களிலும் சிலர்,சேர்க்கையினால் இப்படித் தான் கெட்டுப்போவார்கள் என்பதை இது காட்டும்.சில நல்லவர்கள் எங்கே இருந்தாலும்அந்த இடத்தில் தாம் கெட்டுப் போகாமல் இருப்பார்கள். இது அவர்களின் மனத் தின்மையைப் பொறுத்தது. ஒருவன் மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அதைக் கொடுக்காதே என்று  தடுக்கக் கூடாது என்பது சுக்கிராசாரியாருக்குத் தெரியவில்லை. 

 

        கொடுப்பதைத் தடுப்பவன் என்ன கதியை அடைவான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்."கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.” என்பது திருக்குறள். கம்பரும் இராமாயணத்தில் இந்த்த் திருக்குறள் வலியுறுத்திப் பாடுகிறார்.

 

"எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி!

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்"

 

என்பது கம்பராமாயணம்.

 

     சுக்கிராசாரியார்மாபலி கொடுப்பதைத் தடுக்கின்ற பெரியபாவத்தைச் செய்தார். இரண்டு கண்ணும் இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவுஅந்த அசுரகுருவுக்கு இல்லை.ஆகையால்வாமனர்ஒரு கண்ணைக் குத்தி விட்டார்.

 

     மாபலி நீர் வார்த்துமூன்றடி மண் தந்தேன்என்று சொன்னான். உடனே வாமனருடைய திருவுருவம் பெரிதாகி விட்டது. பெருவடிவத்தை ஏற்றுக் கொண்டவுடன்  தம்முடைய ஒர் அடியாலே பூவுலகத்தை அளந்தார். மற்றோர் அடியாலே வானுலகத்தைஅளந்தார். மூன்றாவது அடியால் அளக்க ஒன்றும் இல்லை. 'நீ வாக்களித்தபடி மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?' என்று கேட்டார். அப்போது மாபலி தன்தலையைக் காட்டினான். திருமால் அவன் தலையின் மேலே தம்முடைய திருவடியை எடுத்து வைத்தார். இறைவனது திருவடி சம்பந்தம் கிடைத்த மாத்திரத்திலே அவனுக்குப் புகழ்உண்டாகி விட்டது. 'எம்பெருமானே!  இன்றைக்குத்தான் என் அகத்தில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தீர்கள். இன்றைத் தினத்தில் உலகிலுள்ள மக்கள் என் நினைவாக தங்கள் அகங்களில் விளக்கு ஏற்றி வைத்துக் கும்பிடட்டும்என்று வேண்டிக் கொண்டான். மாபலியின் அகத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நாள் எல்லா மக்களின் அகத்திலும் விளக்கு ஏற்றி வைக்கப்படும் கார்த்திகை நாளாக விளங்குகிறது.  முருகன் பெருமையைக் கூற வந்த அருணகிரிநாதர்பாடலின் இடையே இந்த அற்புதமான நிகழ்வைக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துகிறார். 

 

     "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்". படி என்பது நிலம்.  அப்படிச் சேவடியை நீட்டிய பெருமானுக்கு மருமகன்தங்கை பிள்ளைஆகிய முருகன். மாமாவின் பேரடிபூவுலகம்வானுலகம்மாவலியின் தலை ஆகிய மூன்றையும் அளந்தது. மருகன் ஆகிய முருகனின் சிற்றடியும் மூன்று பொருளை அளந்தது."தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ?என்கிறார் அருணகிரிநாதர்.

 

     முருகனுடைய சிற்றடி மயில் மேலே பட்டது.  மயில் வாகனம் வைத்துக் கொண்டிருக்கிற பெருமான் அதைப் பெருமைக்காக  வைத்துக் கொள்ளவில்லை. தன்னை வழிபடும் அடியார்கள் அழைப்பதற்கு முன்னே ஒடிச் சென்று அருள் செய்வதற்காக வைத்திருக்கிறான். 'நீலம்கொள் மேகத்தின் மயில் மீதே,நீ வந்த வாழ்வைக் கண்டு அதனாலே மால்கொண்ட பேதை'  என்று ஒரு திருப்புகழ் கூறும்.  'இறைவனேநான் எவ்வாறு உனது அருள்பெறப் போகிறேன்என ஏங்கினாள் ஒரு பெண். முருகன் மயில் வாகனத்தில் வந்து அன்பர்களின் வீட்டு வாசலில் இறங்கினான். தேவலோகத்தில் இருப்பவன்  பூலோகத்திலுள்ள சிற்றுயிர்களுக்கு அருள் செய்வதற்காகவே மிக வேகமாக ஓடிவரும் மயிலை வாகனமாக வைத்திருக்கிறான். ஆகவேஅவன் மேல் காதல் கொண்டால் அது நிறைவேறும் என்று அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வந்தது. இங்கே பெண் என்று குறிப்பிட்டது பக்குவம் அடைந்த ஆன்மாவை. பக்குவப்பட்ட ஆன்மா ஆகிய அருணகிரிநாதர் இவ்வாறு பாடினார்.

 

      தன்னை நினைந்து உருகுகின்ற பக்குவத்தை அடைந்து இருக்கும் அடியார்களை அந்தக் கணமே ஆட்கொள்வதற்காகப் பாய்ந்து ஒடும்போது மயிலை அணைத்துக் கொண்டு ஏறுவான். அவனதுகால் மயிலின்மீது படுவதே அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத்தான். அதன் மீது அவன் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மற்றொரு காலைத் தூக்குகிறான். அவன் அமர்ந்த மாத்திரத்திலே குதிரை செல்வது போல அந்த மயில் தாவி ஓடுகிறது. அவன் விரைவாகவே ஏறுகிறான் தாவடி ஒட்டும் மயிலில். தாவுகின்ற அடியை உடையது மயில். தாவித் தாவி ஒடுகின்ற அந்த மயிலின் மேல்முருகன் தன் சிற்றடியை வைத்தான்எதற்காகஅடியார்களுக்கு அருள் செய்வதற்காக. 

 

     எம்பெருமான் திருவடி சிற்றடியானாலும் அதன் பெருமை சொல்லி முடியாது. சூரபதுமன் தன்னுடைய அசுரத் தன்மையைக்  காட்டித் தேவர்களை அல்லல் பட வைத்தான். இந்திரனது வீரமும் அவனது வச்சிராயுதமும் சூரபதுமனை அடக்கப் பயன்படவில்லை. அவன் தேவலோகத்தையே இழந்தான். இந்திரன் முதலிய தேவர்களுக்கு இறைவன் நினைவு வந்தது. சிவபெருமானிடத்தில் ஒடிப் போய் முறையிட்டார்கள். தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டுஆறு திருமுகங்களை உடையவராய்செந்தழல் வடிவாகிய ஆறுநெற்றிக் கண்களின் நின்றும்ஒரே சமயத்தில் வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். திருமுருகன் அவதாரம் நிகழ்ந்தது. தேவர்கள் தலையைக் தாழ்த்தி முருகன் திருவடியை வணங்கினார்கள். தேவர்களின் தலை மீது முருகன் திருவடி பட்டது.

 

     இதைத்தான் அருணகிரிநாதப் பெருமான்மாபலியிடத்தில் மூன்றடி நிலம் கேட்டுபிரபஞ்சமாகிய அண்டத்தின் முகடு முட்டும்படியாகப் பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு  தம்முடைய பெரிய அடி ஒன்றினாலே பூமியையும்மற்றோர் அடியாலே வானத்தையும்மூன்றாவது அடியாலே மாபலியின் தலையையும் அளந்த திருமாலின் திருமருகனாகிய முருகன்மயிலின் மேலே ஏறும் போது தன்னுடைய சிற்றடி அதன் மேல் படும்படி செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தலைமீது தன் சிற்றடிபடும்படியாகச் செய்தான். முருகன் திருவடி தேவர்களுடைய சிரத்தில் பட்டது என்கிறார்.

 

     அடுத்து தனது அனுபவம் ஆக"என் பா அடி ஏட்டிலும் பட்டது" என்று சொல்கிறார். முருகன் திருவடி சம்பந்தம் உண்டானதால் ஆயிரக் கணக்கான சந்தப் பாடல்களை அழகிய தமிழில் பாடினார்அருணகிரிநாதர். தமிழின் சிறப்பு அப்படி. முத்தமிழால் தன்னை வைதாரையும் கூட வாழவைக்கின்ற வள்ளல் முருகப் பெருமான்."என் பா அடி ஏட்டிலே முருகப் பெருமானுடைய சிறிய திருவடிகள் பட்டிருக்கின்றன.  அந்த அருட்பாடல்களை எல்லாம் நான் எழுதவில்லை" என்றும், "முருகன் திருவடிதான் அந்தப் பாடல்களை உருவாக்கின. அதனால் இந்தப் பாடல்கள் உயர்வு பெற்றன" என்கிறார் அருணகிரிநாதர்.

 

     அருளாளர்கள் சந்தம்எதுகை மோனை முதலியவை பார்த்துவார்த்தைகளைக் கோர்த்துப் பாடல் புனைபவர்கள் அல்ல. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து வைத்துக்கொண்டு பாடல்கள் எழுதுபவர்கள் அல்ல. அவர்களுக்கு நாக்குதான் ஏடுஎழுத்தாணி எல்லாம். நாவிலிருந்து அருட்பாடல்கள் வெள்ளமாகப் பெருகும். உள்ளத்திலே ஊறிய திருவருள் அனுபவம் வாக்கிலே வருகிறது. உள்ளத்தில் இறைவன் குடிகொண்டு உள்ளதால்அவர்கள் சொல்லும் வார்த்தை எல்லாம் இறைவன் சொலும் வார்த்தைகள் ஆகின்றன. "எனது உரைதனது உரை" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான் ."உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்கருகாவூர் எந்தை தானே" என்பது அப்பர் அருள் வாக்கு. "நான் சொல்லும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை" என்பார் வள்ளல்பெருமான்.

 

     நாக்குப் பேசுகிறது. இந்த நாக்குப் பேசுவதற்கு முன்னாலே உள்ளே இருக்கிற நாக்கு ஒன்று பேசுகிறது. வெளியே இருக்கிற நாக்காகிய ஏட்டுக்கு அடிஏட்டுக்குஉள்ளே உள்ள நாக்கு. புறத்தில் இருக்கிற கண்ணைப் புறக்கண் என்கிறோம். அதே போல அகத்தில் கண் இருக்கிறது. அது அகக்கண். கண் மாத்திரம் அல்ல. காதும் இருக்கிறது. உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதைத்தான் நினைப்பு என்று சொல்கிறோம். உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதை வெளியே இருக்கிற நாக்கானது ஒலியை அதிகப்படுத்திக் கூட்டியும்குறைத்தும் வெளியிடுகிறது. ஊமைக்கும் நாக்கு இருக்கிறது.அவனால் பேச முடியவில்லை. உள்ளே உள்ள நாக்குப் பேசவில்லை என்றால் வெளியே உள்ளம் ஆகிய நாக்கும்பேசுவது இல்லை.உள்ளே இருக்கிற நாக்கும் தானாகப் பேசாது. அதற்கு உரை சொல்லிக் கொடுக்கிறவன்  ஒருவன் இருக்கிறான். அவன்தான் இறைவன். முதலிலே பேசுகிறவன் இறைவன்.அதற்கு அப்புறம் உள்ளேயுள்ள மனமாகிய நாக்குபேசுகிறது.அதற்கு அப்புறந்தான் வெளி நாக்குப் பேசுகிறது. இறைவனே ஒவ்வொருவருடைய நாக்கும் இயங்க மூலமாக இருக்கிறான். இதையே அப்பர் பெருமான், "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்று பாடினார்."உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்"எனப் பாரதியார் பாடுகின்றார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாவதற்குக் காரணம் இறைவன் அங்கே வீற்றிருப்பதுதான். இறைவனது திருவடியானது,அந்த அடி ஏட்டில்பட்டால்தான் ஒளி உண்டாகும். 

 

     பாரதப் போர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்தது என்பது புராணகதை. ஒவ்வொரு நாளும் நம் உள்ளங்களில் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் போர். ஆறு கோடி மாயா சக்திகள் வேறுவேறு தம் மாயைகள் தொடங்குகின்றன. நமது உள்ளம் போர்க்களம் ஆகின்றது.  போர்க்களத்திலே அருச்சுனனுக்கு உபதேசம் செய்த கண்ணபிரான்,நித்தம் நமது உள்ளங்களிலேயும் உபதேசம் புரிகிறான். நம் உள்ளங்களிலேயே இருக்கிறான். ஓர்ந்து பார்ப்பவர்க்கு உண்மை விளங்கும். ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியாக இறைவன் இருக்கின்றான். 

 

     நமது உள்ளமானது  அன்பு என்னும் நீர் ஊறிய நிலமாக இருந்தால் இறைவன் திருவடிச் சுவடு தெரியும். கட்டாந் தரையாக இருந்தால் தெரியாது. இரும்பாக இருந்தாலும் உருகினால்தான் பயன் உண்டு. பொன்னாக இருந்தாலும் உருகினால்தான் அணிகலன் ஆகும். அன்பே வடிவான முருகப் பெருமான் நடமாடுகிற உள்ளம் உடையவர் அருணகிரிநாதர். அங்கே  முருகப் பெருமானின் சிற்றடி பதிந்திருக்கிறது. காமம்,  குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் முதலிய அழுக்குகளை வேரோடு களைந்து எடுத்தவர் ஆதலால் எம்பெருமான் அவரது உள்ளத்திலே எப்போதும் ஒடி ஆடிக் கொண்டிருக்கிறான். நமது உள்ளங்களிலே கோபத்தின் அடி படுகிறது. அதன்  பயனாக நமது நாவில் கடுஞ்சொல் கொப்புளிக்கிறது. காமத்தின் அடி பதிகிறது. அதனால் பொருளற்ற சொற்கள் வருகின்றன. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். அரசியல் மேடைகளில்  நடக்கும் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டு,  'நாம் முன்னோர்கள் இயல் தமிழ்இசைத் தமிழ்நாடகத் தமிழ் என்று மூன்று வகைத் தமிழ் இருப்பதாக வரையறை செய்தார்கள். அந்த மூன்றுக்கும் மேல் நான்காவதாக "வசைத்தமிழ்என்ற ஒன்று இப்பொழுது வளர்ந்து வருகிறதே'  என்று சொல்வார்கள். இனிமையான தூய சொற்கள் நம் வாக்கிலிருந்து வர வேண்டுமானால் நம் உள்ளங்கள் தூயனவாக இருக்க வேண்டும். 

 

     "ஈர நெஞ்சினர் யாதும் குறைவு இலர்" அடியார்களைப் பற்றி தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுவார். அன்பு நீரினால் நனைந்து ஈரமாகிய உள்ளங்களில் இறைவனது சிற்றடிகள் பதிகின்றன. "என்னுடைய உள்ளத்தில் இறைவனுடைய சிற்றடிகள் பதிந்தன" என்கிறார் அருணகிரிநாதர். மயில்மேல் பட்ட திருவடிதேவர்தலையில் பட்ட மலரடி இந்த ஏழையின் ஏட்டிலும் பட்டது என்று  சொல்கிறார். அந்த அனுபவத்தில் மலர்ந்த பாடல் கந்தர் அலங்காரத்தில் வருகிறது.

 

"தாவடி ஒட்டும் மயிலிலும்தேவர் தலையிலும்என் 

பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோபடி மாவலிபால் 

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்

சேவடிநீட்டும் பெருமான்மருகன்தன் சிற்றடியே!" 

 

இதன் பொருள் ---

 

            அந்நாளில்மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண்ணை யாசித்துபெரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும்படியாகத் தனது சேவடியை நீட்டி அளந்த பெருமையை உடைய திருமாலின் திருமருகர் ஆன முருகப் பெருமானுடைய சிறிய திருவடியானதுஅவர் செலுத்துகின்ற மயிலை வாகனத்தின் மீதும்,தேவர்களுடைய தலையின் மீதும்அடியேன் திருவருள் துணைக் கொண்டு பாடிய பாடல்களின் அடிகளை உடைய ஏட்டின் மீதும் பட்டது அல்லவா? (இது என்ன ஆச்சரியம்!)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...