சேவலின் ஆற்றல்

 

சேவலின் ஆற்றல்

-----

 

     ஒரு கரிக்கடைக்காரன் கடை இல்லாத நாளில் தன்னுடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மெல்ல மெல்லச் சிந்தனை ஒடியது. "மழைக்காலம் வரப் போகிறது. அப்போது கரிமூட்டைக்குக் கிராக்கி அதிகமாகிநம்மிடம் உள்ளமூட்டைகள் நல்ல விலைக்குப் போகும். மேலும் அதிகமான மூட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டால் அப்போது நல்ல விலைக்கு அவற்றை விற்கலாம்." மேலும் சிந்தனை சிறகடித்தது. "கரி மூட்டைகளை வாங்குவதற்குப் பதிலாக ஒரு சவுக்குத் தோப்பினையே ஏலம் எடுத்துக் கரி சுட்டால் இரண்டு வகையான இலாபமும் நமக்கு வராதா?" எனச் சிந்தித்தான். ஒருவனுடைய தொழில் எதுவோஅவனுக்கு நாட்டம் எதில் அதிகமாக இருக்கிறதோஅதுவே அவனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஆதாரம்,வேறு வகையான கற்பனை சும்மா இருக்கும்போது எழாது. இது மனித இயல்பு.

 

     ஆனால்குழந்தை இருக்கிறது. அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொழிலும் இல்லைவியாபாரம்பொருள் ஈட்டுதல் ஆகியவற்றில் நாட்டம் இல்லை. குழந்தைக்கு எதன் மேலும் நாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது.  குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோன்றுபவள் தாய்தான். பிறகு தாய் காட்டதந்தையை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகில் உள்ளவற்றை அளக்கும். 

 

     இறைவன் சந்நிதானத்தில் அருணகிரிநாதர் குழந்தையாகி விட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல்தன் செயல் அற்றுஎல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்ப துன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. அம்மா எந்தப் பக்கம் சென்றாலும் குழந்தையும் தாயுடனே அந்தப் பக்கம் ஒடுகிறது. உள்ளே வந்தால் உள்ளே வருகிறது படுத்துக் கொண்டால் படுத்துக் கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரிநாதர் ஆகிவிட்டார். அவருக்கு உலகம் எங்கும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் நினைவு எல்லாம் இறைவனைப் பற்றியும் அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன.

 

     உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும்அருணகிரிநாதக் குழந்தைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இந்தக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. அருணகிரிநாதர் என்னும் குழந்தை நன்றாக வளர்ந்து,தன் அறிவினால் அறிந்து கொண்டவை அனைத்தையும் மறந்து விட்ட உள்ளத்தை உடையது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்.முன்பு மாசு ஏறியிருந்தாலும் அவற்றை எல்லாம் துடைத்துவிட்ட உள்ளம் அருணகிரிநாதக் குழந்தையுடைய உள்ளம். 

 

     நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தம் தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத்தாலும் தம் தாய் தந்தையர்களின் அளவைக் கொண்டு நினைக்கின்ற தன்மை உடையது அவர்களின் உள்ளம். அருணகிரிநாதக் குழந்தை ஒரு தந்தையினிடத்தில் அன்பு வைக்கிறது. உயிருக்குத் தந்தையாகிய முருகனை நினைத்துதன் இன்ப துன்பம்உயர்வுதாழ்வு ஆகிய எல்லாவற்றையும் அந்த இறைவனைச் சார்ந்தே நினைக்கிறது. 

 

     ஒருவருடைய சிறப்பைப் புலப்படுத்த வேண்டுமானால்  நேரே அவர் பெருமையைத்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. அவரைச் சார்ந்தவர்களுடைய பெருமையைச் சொல்வதும் மறைமுகமாக அவருடைய பெருமையைப் புலப்படுத்துவதே ஆகும். ஒரு பணக்காரர் புகழைச் சொல்லும்போதுஅவர் வீட்டுக் கணக்கர் பெருமையைச் சொன்னால் செல்வந்தரின் பெருமை பின்னும் அதிகமானது என்று புலனாகும். கணக்கரின் பெருமையை நேர்முகமாகச் சொல்வதன் மூலம்மறைமுகமாக அவருடைய தலைவரின் பெருமை புலப்படும்.

 

     மதுரை நகரில் பாணபத்திரர் என்ற இசைப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதியில் இசைத் தொண்டு புரிவதிலேயே நாட்டம் உடையவராக இருந்தார். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற இசைவாணன் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடுதன்னை இசையில் வெற்றி கொள்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். பாண்டியன் தனது அரசவையில் உள்ள பாணபத்திரருக்கு அவனோடு இசைவாது புரியக் கட்டளையிட்டான். பாணபத்திரருக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. அரசக் கட்டளையை மறுக்கவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதிக்குச் சென்று, "இறைவாஏமநாதனை நான் இசையில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் நான் மரண தண்டனைக்கு ஆளாக நேரிடுமே. உனது அடியவனுக்கு அப்பபடி ஒரு நிலை உண்டாகலாமாஅப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்உனக்குத் திருத்தொண்டு எப்படிச் செய்ய முடியும்?" என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.

 

     அன்று மாலைசோமசுந்தரக் கடவுள் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக்கொண்டு, தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தார். மழைக்கு ஒதுங்குகிறவரைப் போலஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டுபாட ஆரம்பித்தார். அந்த இனிய இசை ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. பாடுகின்றவர் ஒரு கிழ விறகுவெட்டி. விறகுக் கட்டும் அவர் அருகில் இருக்கிறது. இந்த விறகுவெட்டியா இத்தகைய இனிமையான இசையை எழுப்புகின்றான்ஆச்சரியம் தாங்காமல் எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பாநீ யார்?இந்த இனிய இசையை யாரிடம் கற்றுக் கொண்டாய்?"எனக் கேட்டான்.

 

     அதை ஏன் கேட்கிறீர்என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்னஅவ்வளவு உயர்ந்ததாஎன் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் பாடுவதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது.  நானும் இசை கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவரும் மிகவும் அக்கறையோடுதான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நானும் என் தலை நரைத்து கிழவன் ஆகிவிட்டேன். 'போஇனி உனக்கு இசை வரவே வராதுஎன்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல் விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்என்றான்.

 

      'இசை வரவே வராது எனச் சொல்லி குருநாதரால் கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாகப் பாடுவான் என்றால்இவன் குருநாதர் எப்படிப் பாடுவாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான். "அவரை உமக்குத் தெரியாதாஅவர்தான் பாணபத்திரர். பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான்அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாகப் பாடுகின்றேன் என்று நீர் சொன்னீரானால்என் குருநாதர் எப்படிப் பாடுவார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்எனச் சொல்வதுபோலச் சொன்னார்.

 

     இதைப்போலவேதனது உயிர்த் தந்தை ஆகிய முருகப் பெருமானின் பெருமையை அருணகிரிநாதர் என்னும் குழந்தை நேரே சொல்லவில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வதன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது.பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனையிலும்,கோட்டைகளிலும் கொடி பறக்கும். இன்றைய காலத்தில் பெரிய பதவிகளில் உள்ளவர்களின் வண்டியிலும் கொடி பறக்கிறது. 

 

     திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத் திருமாளிகையின் பெருமையையும்அதில் இருக்கிற தெய்வத்தின் வெற்றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயிலில் பறப்பது சேவற்கொடி. அவன் திருக்கரத்தில் இருப்பதும் அதுவே. சேவலின் பெருமையை இப்போது நினைக்கிறார்.

 

     கோழி பெருமை உடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது. தேவமகளிர் வாழ்த்தும் கோழி. அருணகிரிநாதக் குழந்தை இந்தக் கோழியைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அல்ல. இது நடக்கும்இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வதற்கு அங்கே வேலை இல்லை. இந்தக் கற்பனையான நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன்.

 

     கடவுளர்களுக்கு பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்கொடியும் இடபம் தான். திருமாலுக்கு வாகனம் கருடன்கொடியும் கருடன் தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்கொடி கோழி. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சூரபதுமனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும்மற்றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன.

 

     கோழிக் கொடியில் இரண்டு வகை உண்டு. முதற்கோழி நாதம் என்ற தத்துவம். இயங்காமல் இருக்கும் பரமசிவத்தின் உள்ளத்தில் அருள் என்ற இயக்கம் உண்டாகிறது. இயக்கத்தை ஆற்றல் (Force) என்றும்,அதற்குரிய ஆற்றலை சக்தி (Energy) என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். பொருளை Matter என்பர். பொருள் என்பதும்சக்தி என்பதும் ஒன்றுதான். இயங்காமல் இருந்தால் பொருள் (Potential energy).  இயங்கினால் சக்தி (kinetic energy). பொருள் சிவம். இயக்கம் சக்தி. சிவத்திலிருந்து சக்தி தோன்றியது. சக்திக்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தத்துவங்கள் தோன்றின. அப்படித் தோன்றியவைகளில் முதல் தத்துவம் நாதம். இந்த நாத தத்துவத்தைக் குறிக்கிறது கோழி.

 

     அடுத்த கோழி சூரபதுமனது சங்கார காலத்தில் எழுந்தது. சூரபதுமனது உடலில் முருகப்பெருமான் விடுத்த வேல் பாய்வதற்கு முன் அவன் மாமரமாக நின்றான். வேல் அவன் உடலில் பாய்ந்த போது அவனது அகங்காரம்மமகாரம் இரண்டும் பிளக்கப்பட்டு இரு பகுதியாயின. ஒரு பகுதி மயிலாகவும்மற்றொரு பகுதி சேவலாகவும் மாறின. அந்தச் சேவலைத் தன் கொடியாகக் கொண்டான் ஆண்டவன். அது மேலிருந்து கூவுகிறது.

 

     உலகிலுள்ள எந்தக் கோழி கூவினாலும் வாழ்வு விடிவது இல்லை. ஆனால்முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவினால் விடிந்துவிடும்.  "கொக்கு அறு கோ" என்று கூவுகிறது. எந்த நாட்டுக் கோழியானாலும் இப்படித்தான் கூவுகிறது. இந்தக் குரலுக்குத் தமிழில் ஒரு பொருள் உண்டு. கொக்கு என்பதற்கு மாமரம் என்பது ஒரு பொருள். அறு-அறுத்தகோ-தலைவன் அல்லது கடவுள். ஆகவே கொக்கறு கோ" என்பது மாமரத்தை அறுத்த தலைவன் எனப் பொருள்படும். 

 

     சூரபதுமன் ஆகிய மாமரத்தைப் பிளந்த தலைவன் முருகன். இயற்கையாகவே கோழி கூவுகிறது என்றாலும்தமிழர் அந்தக் குரலுக்குப் பொருள் காண்பதன் மூலம் முருகனை நினைக்கிறார்கள். இப்படி நினைத்துக் கோழி கூவுகிறது எனச் சொல்லவில்லை. அக்குரலைக் கேட்கிற அடியவர்களின் உள்ளம் அப்படி நினைக்கிறது. காலையில் நாம் துங்கிக் கொண்டிருக்கும்போது கோழியைப் பார்ப்பதில்லைஅதன் குரலையே கேட்கிறோம். அந்தக் குரல் நமக்கு மாமரத்தை அறுத்த தலைவன் ஆகிய முருகனை நினைக்கச் செய்கிறது.

 

     முருகப்பெருமானை நினைக்காதவர்களுக்குக் கோழி கூவுவதில் பொருள் ஒன்றும் இல்லை என்றே தோன்றும். ஆனால்,அவன்மீது அன்பு சுரக்க ஆரம்பித்தவுடன் கோழி "கொக்கறு கோ" என்று கூவினால் முருகன் திருநாமத்தையே சொல்வதாகத் தோன்றும். ஒவ்வொருவரும் தத்தம் மன இயல்புக்கு ஏற்ற வகையிலே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து கொள்கிறார்கள். 

 

     உலகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு எழுந்துவிடுகிறார்கள். எழுந்தவுடன் இருள் நீங்குவதில்லை என்றாலும்நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்து விடும் என எண்ணி ஒளியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டு விடுகிறார்கள். சூரியன் எழப் போகிறான்.அவனை எதிர்நோக்கி இப்பொழுதே எழுந்துவிடுங்கள் என்று எச்சரிக்கை செய்வது போலக் கூவுகிறது கோழி. இது உலகத்துக் கோழியின் செயல்.

 

     புறத்தே கப்பியிருக்கும் இருளைப் போல மக்களுடைய அகத்திலும் இருள் உண்டு. அந்த இருளுக்கு அறியாமை என்று பெயர். புறத்தே இருளில் எந்தப் பொருளின் உண்மை உருவமும் தோன்றாததுபோலஅகத்தே உள்ள அறியாமை என்னும் இருளினால் பொருள்களின் உண்மையான இயல்பு தோன்றுவதில்லை. எது நிலைக்கும் தன்மையை உடையதுஎது நிலையாதது என்று பகுத்துப் பார்க்கும் திறமை இருப்பதில்லை. அறியாமையாகிய மருளால் பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணி மயங்கிமேலும் மேலும் பிறவிக்கு வழிதேடிக் கொள்கிறோம்.

 

     முருகன் ஞானமே வடிவானவன்ஞானபண்டித சாமி. அவன் அருளால் அறியாமை இருள் ஒழிய வேண்டும். அது ஒழிவதற்கு முன்னால் நம்முடைய தூக்க மயக்கம் போக வேண்டும்தாமத குணம் தொலைய வேண்டும். அதைப் போகச் செய்வது எதுஅதுவும் இறைவன் திருவருள்தான். திருவருளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதன அருள்.அவனுடைய பேரருளைப் பெறுவதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்யும் ஆற்றலை அளிப்பது. "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி"

என்று மணிவாசகர் குறிப்பிடும் அருள் அது. அவன் தாளை வணங்கிப் பக்குவம் அடைந்தபோது கிடைக்கும் அருள் சாத்திய அருள். ஒன்று கருவிமற்றொன்று அதனால் பெறும் பேறு. ஒன்று வழிமற்றொன்று திருமாளிகை.

 

     மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. அதைத் தெரிந்து கொண்ட பிறகும் நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் சாவு வருவது உறுதியென உணர்ந்துபிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர்களுக்குஉலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக்கோழியைக் கொடியாக உடைய எம்பெருமானை வணங்கத் தலைப்படவேண்டும்.

 

     அந்தச் சேவலின் ஆற்றலை அருணகிரிநாதர் பாடுகிறார். "படைப்பட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும் சேவல்" என்கிறார்.  படைபட்ட வேலவன் - படையாக அமைந்த வேலை உடைய முருகன். அவனிடம் வந்த கொடி சேவல். பதாகை என்பது கொடி. வாகை என்பது ஒரு மலர். போரில் வெற்றி பெற்றவர்கள் வாகை மலர் சூடுவது வழக்கம். வாகை சூடினான் என்றாலேவெற்றி பெற்றான் என்று பொருள். கோழிக் கொடியானது முருகன் வெற்றியை உடையவன் என்பதற்கு அடையாளமாக இருப்பது மாத்திரம் அல்ல. முருகன் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியை உண்டாக்கும் இயல்பையும் உடையது.

 

     வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் ஆதலால் எல்லோரும் அவனை வேலவன்வேலாயுதன்வெற்றிவேலன் என்று பலவகையாக அழைக்கிறார்கள். உலகில் போர் நிகழும் காலத்தில் தான் அவன் கையில் வேல் பிடிக்கிறான் என்பது அல்ல. மக்கள் உள்ளத்தில் நாள்தோறும் போர் நடந்து கொண்டிருக்கிறது. சத்துவ குணத்துக்கும்தாமச குணத்துக்கும் நடக்கும் போரில் சத்துவ குணம் வெற்றிபெற வேண்டி ஞானசக்தியாகிய வேலை அவன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். அதைப் போலவே வாகைப் பதாகையும் அவன் திருக்கரத்தில் உள்ளது. ஆன்மாக்கள் தூங்கித் தூங்கி விழிப்பது போலஇறந்து பிறந்து அல்லலுற்று அறியாமையில் சிக்கி இருப்பதைக் கண்டுஅவர்களுக்கு ஞான ஒளிபரப்ப முருகன் வருவான் என்ற நம்பிக்கையை ஊட்ட அது கூவுகிறது. அறியாமை இருளில் தூங்கிக் கிடக்கிற உயிர்களை எழுப்புவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு கூவுகிறது.

 

     சேவல் எழுந்து சிறகை அடித்துக் கொண்டு எழும்புவது பறப்பதற்காக அல்ல. மற்றப் பறவைகள் சிறகை அடிக்கும்போது எழுந்து பறக்கும். ஆனால் சேவலோ,சிறகை அடித்துக் கொண்டு கூவும். பொழுது புலர்வதற்கு முன்னாலே கோழி கூவும். சாதாரணமான கோழி சிறகை அடித்தாலேயே கீழே உள்ள தூசிகள் பறக்கும். எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொள்கிறபோது உலகமே அதிர்கிறது.

 

     வெற்றிக் கொடியிலே நின்று சேவல் சிறகை அடித்துக் கொள்ளமுதலில் கடல் கிழிந்து உடைபட்டுப் போயிற்று. அதற்குப் பிறகுஅண்ட கடாகம் உதிர்ந்தது. பூலோகமானது  கோழி முட்டையைப் போல ஒரு கோளவடிவமாக இருக்கிறது. இது அண்டம் என்று சொல்லப்படுகிறது. அண்டம் என்பதற்கு முட்டை என்று பொருள். பெரிய முட்டை இந்த பூலோகம். அதற்குப் பிறகு நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாற்றத்தை அடைந்தன. ஏனைய மலைகளும்மகாமேரு மலையும் இடிந்து விட்டன.

 

     பிறவியைப் பெருங்கடல் என்று சொல்வது வழக்கம். கடலுக்குக் கரை இல்லாதது போபிறவி என்னும் பெருங்கடலுக்கும் கரை இல்லை. முருகப் பெருமானது திருக்கையில் உள்ள கோழி சிறகை அடித்த மாத்திரத்தில் பிறவிப் பெருங்கடல் கிழிந்துவிட்டதுஉயிர்களுக்குப் பிறவித் துன்பம் இல்லையாகி விட்டது.இந்தப் பிறவியில் இருந்த பற்றுக்கள் யாவும் உடைபட்டுவிட்டன.

 

     இறைவன் திருவருள் கருணையால் இந்த உலகம் தோன்றியது. எங்கும் இறைவன் மயமாகவே இருந்தும் அவனை நம்மால் காண முடியவில்லைஅதல்குக் காரணம் மாயை இருள். "பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்"என்பது திருமூல நாயனார் அருள்வாக்கு. இறைவனிடம் நாட்டம் இல்லாதவர்களுக்கு உலகம் பெரிய முட்டையாக வட்டமாக இருக்கும். ஆனால் ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு இறைவன் மயமாக இருக்கும். அப்பொழுது பிரபஞ்சம் என்பதன் எல்லை உடைபட்டுப் போகும் "அண்ட கடாகம் உடைபட்டது" என்பது இதையே குறிக்கும்.

 

     இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்டால் போதும் பிறவிக் கடல் கிழிந்து போய்விடும்.இனி வருகின்ற பிறவிகள் இல்லை என்று ஆகிவிடும். அதற்குப் பிறகு தேவலோக இன்பம் உண்டாகும்.

 

     உடு என்பது நட்சத்திரம். படலம் - பரப்பு. "உடுபடலம்" என்றால் நட்சத்திரப் பரப்பு என்று பொருள். உடுபடலம் உதிர்ந்ததாம். வரப்போகின்ற பிறவிகள் எல்லாம் கிழிந்துவிட்டன.இந்தப் பிறவியிலும் பிரபஞ்ச வாசனை உடைபட்டுப் போய்விட்டது மேலே இருக்கிற நட்சத்திரப் படலங்கள் உதிர்ந்தன என்பதன் மூலம்தேவலோக வாழ்க்கையாகிய சொர்க்க இன்பம் இந்தப் பிறவியில் நான் செய்கின்ற புண்ணியங்களின் விளைவாக ஏற்படும் என்ற ஆசையும் உதிர்ந்தது என்கிறார் அருணைவள்ளல். புண்ணியம் செய்வதனாலே தேவலோகம் வாழ்வு கிடைக்கும் எனச் சாதாரண மக்கள் அதனை விரும்பலாம். ஞானிகளுக்கு அதனால் ஒன்றும் பயன் இல்லை. அந்த நிலையையும் விட மேலான ஒரு நிலை இருக்கிறது. அதுவே வீடு.  "வானோர்க்கு உயர்ந்த உலகம்"என்று இதனைத் திருவள்ளுவர் சொல்கிறார். உண்மையான அருள் இன்பம் பெற்ற சீவன்முத்தர்களுக்குக் கிடைக்கின்ற நிலை இது. ஆகவே ஞானிகளுக்குத் தேவலோகத்தினால் பயன் இல்லை. உதிர்ந்தது உடுபடலம். தேவலோக இன்பங்களும் பயனின்றிப் போயின என்பதை உணர்த்துகிறது.

 

     இனி அடுத்தது என்ன?"இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே" என்கிறார் அருணகிரிநாதர். ஒரு பெரிய மலைஅந்த மலையைச் சுற்றிப் பல குன்றுகள் இருக்கின்றன. இவ்வளவு மலைகள் இருப்பதனாலே இவற்றுக்கு நடுவில் தம்பமாக இருக்கிற மலை மிக வலிவு உள்ளதாகவே இருக்கும்.மிக வலியைப் படைத்த ஒன்றுதான் கடைசியில் அழிந்து போகும். மகாமேரு மலை கிடுகிடுப்பதற்கு முன்னால் இடையிலுள்ள குன்றங்கள் எல்லாம் இடிபட்டன. கடைசியில் மாமேரு வெற்பும் இடிபட்டது. 

 

     நான் என்றும்அகப்பற்று என்றும் சொல்லப்படுவது அகங்காரம்.  எனது என்னும், புறப்பற்று என்று சொல்லபடுவது மமகாரம். இந்த இரண்டும் மலையைப் போலப் பெருத்து மிக்க வலிவு உடையதாக நிற்கிறது. அகங்காரம் நான்நான் என்று உளர வைத்துஇந்த உலகத்தில் பிறவிப் பிணியில் சிக்க வைக்கிறது. "நான்" என்ற அகங்காரத்தைச் சுற்றி "எனது" என்ற மமகாரம் விரிந்து கொண்டே போகிறது. நான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. நான் என்பது மனிதன். எனது என்பது மனிதனோடு சம்பந்தப்பட்டு உள்ளபிணைக்கப்பட்டு உள்ளமற்ற எல்லாம். "நான்" என்ற புள்ளியை மையமாகக் கொண்டு,"எனது" என்ற வட்டம் விரிந்து கொண்டே போகிறது. இவை எல்லாம் நம்மை முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல வைக்கின்றன. 

 

     ஒரு பெரிய காற்று அடிக்கும்போது முதலில் பழுத்த இலைகள் உதிர்கின்றன. அப்புறம் வீட்டின் கூரைகள் பறக்கின்றன. கடைசியில் வீடே இடிந்து விழுகிறது. அதுபோலஇறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிகிறதுபிரபஞ்ச வாசனை அற்றுப் போகிறதுதேவலோக இன்பப் பற்று உதிர்ந்து போகிறது. "எனது" என்ற மமகாரங்களாகிய குன்றுகள் இடிபடுகின்றன. பிறகுஎனது என்ற மமகாரக் குன்றுகளுக்கு எல்லாம் மையமாக இருக்கிற "நான்" என்ற அகங்கார மேருவும் இடிபடுகிறது. 

 

     உயிர்களை நல்வழியில் கொண்டு உய்க்கவேண்டும் என்ற பெருங்கருணை காரணமாகவே சேவற்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான் முருகப் பெருமான். அது நமக்குச் சாதன அருளாக நிற்கின்றது. அறியாமை இருளில் தூங்கிக் கொண்டிருக்கிற ஆன்மாக்களுக்குஞானசூரியனது உதயத்தை அறிவிப்பதற்காக அந்தக் கொடியிலுள்ள கோழிக் கூவுகிறது. அது கூவுவதற்கு முன்னே சிறகை அடித்துக் கொள்கிறது. சிறகை அடித்துக் கொள்ளும்போதே ஆன்மாக்களுக்கு மனப் பக்குவம் ஏற்பட்டுவிடுகிறது. கூவினால் இன்பம் பொங்கும். அது சிறகை அடித்துக்கொள்ளும் போது ஆன்மாக்களுடைய பிறவி ஒழியபிரபஞ்ச வாசனை போகதேவலோக இன்பம் என்ற பற்று நீங்கமமகாரம்,அகங்காரம் எல்லாம் அழிந்து போகின்றன. அவை போகும் போது ஞானம் தோன்றுகிறதுஇன்பம் உண்டாகிறது.

 

     இறைவன் திருவருளைப் பெற்று இன்பநலங்களைத் துய்க்க வேண்டுமானால்,அதற்கு எற்ற மனப்பக்குவம் முதலில் நமக்கு வர வேண்டும். அந்தப் பக்குவம் சாதன அருளால் வரும்அதனை ஏற்படுத்துவதற்காக அவன் திருக்கரத்தில் சேவல் கொடி இருக்கிறது. அந்தக் கொடியில் உள்ள சேவலின் ஆற்றலை அருணகிரிநாதப் பெருமான் பாடுகிறார்.

 

"படைபட்ட வேலவன் பால்வந்தவாகைப் பதாகைஎன்னும்

தடைபட்ட சேவல் சிறகு அடிக்கொள்ள,சலதி கிழிந்து

உடைபட்டது;அண்ட கடாகம்உதிர்ந்தது;உடுபடலம்,

இடைபட்ட குன்றமும் மாமேருவெற்பும் இடிபட்டவே."

 

இதன் பொருள் ---

 

     போரில் படைகளை அழிக்கும் திறல் உடைய முருகப் பெருமானிடத்திலே அடங்கி அருள்வயப்பட்டு வந்து சேர்ந்த வெற்றி எனத் தெரிவிக்கும் கொடி என்று சொல்லப்படுவதும்முருகன் அருளால் தனது வலிமை தடைப்பட்டு நின்றதும் ஆன சேவலானது தனது சிறகை அடித்துக் கொள்ளகடலானது கிழிபட்டு உடைந்து போனது. அண்ட முகடுகள் இடிந்து உதிர்ந்தன. நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாற்றத்தை அடைந்தன. ஏனைய மலைகளும்மகாமேரு மலையும் இடிந்துவிட்டன.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...