சும்மா இருக்கும் எல்லை

 


 

சும்மா இருக்கும் எல்லை

-----

 

     எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும்தான் பெற்ற அனுபவத்தைச் சொல்லமுடியாமல் திணறுவான். சில அனுபவங்கள் சொல்ல முடியும்கேட்டவர்களும் அனுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது .பழத்தைத் தின்றால்தான் அதன் சுவை விளங்கும். ஆன்ம அனுபவத்தை எல்லோராலும் சொல்லவும் முடியாதுஎல்லோரும் அனுபவிக்கவும் முடியாது.

 

     ஒர் எல்லைக்குள் இருந்த தன்னைவேறொரு எல்லைக்குள் முருகப் பெருமான் புக விடுத்தான் என்று அருணகிரிநாதர் சொல்லுகிறார். அவர் முன்பு இருந்த எல்லை நாம் இப்போது இருக்கும் துன்பமான எல்லை.எதையும் வாக்கினாலே சொல்ல முடிகிற எல்லை.ஒரு கணம் கூடச் சும்மா இருக்க முடியாத எல்லை. எப்பொழுதும் வேகத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த எல்லைக்குள்,செயலற்று இருக்கும் நிலை என்பதே இல்லை. எங்கே திரும்பினாலும் ஒரே பேச்சுத்தான். சமய இயலானாலும்அரசியல் துறையானாலும்வியாபார விளம்பரமானாலும் ஒரே பேச்சும் பரபரப்பும்தான். சும்மா இருக்கவே முடிவது இல்லை.

 

     ஆனால்சும்மா இருப்பதுவே சுகம் என்பதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இடம் அருணகிரியார் புகுந்த எல்லைஅது  எல்லாம் அடங்கிச் சும்மா இருக்கும் மோன நிலை."அதைப்பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை" என்கிறார்.காரணம்அது, "எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை" என்கிறார். தன்னிடம் உள்ள ஒன்றை இழப்பது நட்டம் அல்லவாஆனால்தான் இழந்த ஒன்றைப் பற்றிக் கவலை இல்லாமல் பேசுகிறார். அனுபூதியில், "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்றும் சொல்கிறார். இழந்தது அவர். அந்த நலத்தை அவர் தானே சொல்லவேண்டும். ஆனால்முருகப் பெருமானைப் பார்த்து, "எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்" என்று வேண்டுகிறார். எல்லாவற்றையும் இழந்தது நலம் ஆகுமாஎல்லாம் இழந்தது அருணகிரிநாதர். இழ்ந்தவர்தானே அதைப்பறிச் சொல்லவேண்டும். அவர் சொல்வதை விடுத்துமுருகப் பெருமானைச் சொல்லச் சொல்லலாமா?

 

     பாயசம் சாப்பிட்ட குழந்தை, "அம்மா பாயசம் சாப்பிட்டேனே,அது எப்படி இருந்தது சொல்" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. பாயசத்தைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடியவில்லை. அதனால்அதை அனுபவித்த தாயைப் பார்த்துக் கேட்கிறது. ருணகிரிநாதர்"உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல்லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்து விட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும்சொல்லவும் நான் இல்லை. நீயே இருக்கிறாய். ஆகையால்,நீதான் சொல்ல வேண்டும்முருகா!" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும்.

 

"வான்கெட்டு,மாருதம்மாய்ந்துழல் நீர் மண்கெடினும்

தான்கெட்டல் இன்றிச்சலிப்பு அறியாத் தன்மையனுக்கு

ஊன்கெட்டுயிர்கெட்டுணர்வுகெட்டுன் உள்ளமும்போய்

நான் கெட்டவா பாடித்தெள்ளேணம் கொட்டாமோ!"

 

என்று பாடுகிறார் மணிவாசகப் பெருமான். அதுபோலத்தான் இதுவும்.

 

     மணிவாசகரைப் போலவேஅருணகிரியாரும் எல்லாவற்றையும் இழந்து "நான்" என்பதையும் இழந்துவிட்டார் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிற "நான்" என்பதை இழந்த நிலையிலே ஜீவசாட்சியாக இருக்கிற ஒருவன் இறைவன்தான். "ஜீவசாட்சியாய் விளங்கும் கருணைத் தேவே" என்பார் வள்ளல்பெருமான்.

 

     உடலைப் பற்றிய நோய் நீங்கினால்உடலுக்கு இன்பம். நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய். அதுதான் பிறவி என்னும் நோய். உலகில் பிறந்து புண்ணியம்பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவி நோய் உண்டாகிறது. மனம்வாக்குகாயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தான்உயிரைப் பிடிக்கும் இந்தத் தீராத நோய்க்குக் காரணம். 

 

     புண்ணியம் செய்தல் எப்படி பிறவி நோய்க்குக் காரணமாகும் என ஐயம் எழலாம். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும்மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவேபிறப்பு என்னும் பிணியானது புண்ணியம்பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வாருக்கு உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும்இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பு ஆகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம்பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும்.

 

     "இருள்சேர் இருவினையும் சேரா,இறைவன்  பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். புண்ணிய பாவம் ஆகிய இரண்டு வினைகளையுமே "இருள்சேர் வினை" என்று சொல்கிறார். இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமானவை உடம்பினால் நாம் செய்கின்ற செயல்வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சுநெஞ்சினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை. பிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால்தான் இன்பம். ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் நழுவ வேண்டும்மனம் வாக்கு காயம் என்னும்  மூன்று கரணங்களும் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்,செயலிழந்து போனால் புண்ணியம் இல்லை-பாவமும் இல்லை. புண்ணிய பாவம்இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் உடம்பு சும்மா இருக்க வேண்டும்.  எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருக்க வேண்டும்.எதைப் பற்றியும் பேசாமல் வாக்கு சும்மா இருக்க வேண்டும். இந்த மூன்றும் மூவகை மோனம்.

 

     அருணகிரிநாதர் "சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவா" என்று அதிசயப்படுகிறார். "சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதாசும்மா இருப்பவன் சோம்பேறி தானே" என்ற கேள்வி எழலாம்.

 

     ஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மெளனமாகவே ஒரு கோயில் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறுஇனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக் கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தார். அந்தச் சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. "அப்படிச் சொல்வது சரியல்ல" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, "நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். "சும்மா இருப்பது என்ன அருமை நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன்பாரும்" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள்.

 

     அதிகாரியும்இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை என்ற முடிவோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, "இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவதுகாய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சரிதான்பேசாவிட்டால் போங்கள். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்நானும் பேசாமல் இருந்து விடுகிறேன்" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். "சாமி" எனக் கோயில் பூக்காரன் வந்தான். "இன்றைக்கு மாலை கட்ட வேண்டுமா?சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா?" என்று கேட்டான். "என் உறுதியைக் ஏனடா குலைக்க வந்தீர்கள்"  என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிரகையையும் முகத்தையும் காட்டி ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்து கொண்டே நின்றான். "சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. 

 

     அவருக்குத் தம்முடைய ஒரே குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு பையன் வந்தான். "மாமாஉங்கள் பையன் பள்ளிக்கூடம் வரவில்லையாம் ஆசிரியர் அழைத்து வரச் சொன்னார்" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. "ஐயையோ பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் காலை எட்டு மணிக்கே போய்விட்டானே! எங்கே போனான்கொஞ்சம் தேடிப் பாருங்களேன்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். "அப்படியா! எங்கே போயிருப்பான்? தனியாகவா போனான்?" என்று அதிகாரி வாய் திறந்து பேசிவிட்டார்."என்னைக் கேட்டால்?கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்" என்று துடித்தாள் அவர் மனைவி. "டேய் வேலப்பாடேய் சாமிநாதாபோய்க் குளம்குட்டையைப் பாருங்கடாநான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டுவர அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது எவ்வளவு சிரமமானது என்பது அப்பொழுதான் அவருக்கு விளங்கியது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், "சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு" என்று உத்தரவு போட்டுவிட்டார்.

 

      சும்மா இருப்பதை "மோன நிலை" என்று சொல்வார்கள். உரை அற்றுஉணர்வு அற்றுப் போய்மனமானது சலனம் இல்லாமல் தெளிந்த நீர் போல்காற்று அறியாத் தீபம் போல் இருக்கும் பக்குவத்தைப் பெறவேண்டும். "இறைவன் மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான். "உரை உணர்வு இறந்து நின்று உணர்வது ஓர் உணர்வே! யான் உன்னை உணருமாறு உணர்த்தே" என்றும் வேண்டி அருளினார். "உ(ன்)னும் உணர்வு உணர்வாய்உணர்வு எ(ல்)லாம் கடந்த அனுபவ அதீத அருட்பெருஞ்சோதி"என்றும் "உரை மனம் கடந்தாங்கு ஓங்கு பொன் மலையே" என்றும் சொன்னார் வள்ளல் பெருமான்.

 

     அறிவு வடிவாக விளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில் எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்றார் ஔவையார். இறைவன் திருவருளால் ஆசை என்னும் விலங்கு அறுபட்ட நிலையில்பேசா அனுபூதி பிறக்கும் என்பதை, " முருகா! நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகள் ஆயினபின்பேசா அனுபூதி பிறந்ததுவே" என்றார் அடிகளார். மன சம்பந்தம் அற்ற இடத்திற்கு "மௌனம்" அல்லது "மோனம்" என்று பேர்.  வாய் பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது "வாய்மௌனம்" எனப்படும்.  கைகால் அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு "காஷ்ட மௌனம்" என்று பேர். மனமே அற்ற நிலைக்குத் தான் "பூரண மௌனம்" என்று பேர். அங்கே தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.  

 

     ஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. இருவர் பட்டினி கிடக்கிறார்கள். ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும்ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். உண்பதற்குப் பொருள் இருந்தும் எதையும் உண்ணாமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுதுதூண்டுதல் பல இருந்தாலும் விழிப்பு நிலையில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல்எதுவும் சிந்திக்காமல் உடம்புவாக்குமனம்யோகம்ஆசனம் முதலியவற்றால் உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் உடம்பும் வாக்கும் செயல் அற்று இருக்கும். அதற்காகத்தான் தியானத்தை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஓர் உருவத்தை  மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி "மனோலயம்" ஏற்படும்.முதலில் ஒன்றை மனத்தில் வைத்து,மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால்,இறுதியில் அந்த ஒன்றையும் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும்.

 

     முருகப் பெருமான் சும்மா இருக்கும் எல்லைக்குள் தன்னைச் செலுத்தினான் என்கிறார் அருணகிரிநாதர். இந்த நிலை எப்படி வந்தது என்பது  சொல்லுகைக்கு இல்லை. கை இருந்தும் எதையும் செய்யவில்லை. கண் இருந்தும் எதையும் பார்க்கவில்லை. உடம்பு இருந்தும் இயங்கவில்லை. வாக்கு இருந்தும் பேசவில்லை. மனம் இருந்தாலும் எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது.

 

     "அடியேனுடைய ஆற்றலால் எதுவும் செய்யவில்லை. நான் என்னையே இழந்துவிட்டதால்என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அறஎன்னை இழந்த நலத்தை விளைவித்தவனாகிய முருகப் பெருமானே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை என்னை அப்படி ஆக்கிவிட்டது" என்கிறார்.

 

     இறைவன் திருவருளினால் தாம் பெற்ற இன்ப அனுபவத்தை எடுத்துச் சொல்லும்போது எல்லாம் வள்ளிநாயகிக்கு கிடைத்த இன்பத்தையும் நினைப்பூட்டுவார் அருணை வள்ளல். முன் பாட்டிலே உள்ளத்தில் அரும்பும் தனிப் பரமானந்தத்தைச் சொல்ல வந்தவர், "பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன்” என்று சொன்னார். இந்தப் பாட்டிலும் வள்ளிநாயகியைப் பற்றிப் பேசுகிறார்.

 

     "கொல்லி" என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஆளைக் கொல்கின்ற நஞ்சுக்குக் கொல்லி என்று பெயர். மற்றொன்று ஒருவித இராகம்பண். கொல்லி என்பதற்கு நஞ்சு என்ற பொருள் வரக்கூடாது என்பதற்காகவே, "நல்ல கொல்லிஎன்கிறார். நல்ல கொல்லிப் பண் எனப் பொருள் கொள்ள வேண்டும். காதுக்கு நல்லதாகஇனிமை தருவதாக இருக்கிற கொல்லிப்பண்ணைச் சேர்த்துப் பேசுகின்ற சொல்லை உடையவள் வள்ளிநாயகி. 

 

     அவள் கல் நிரம்பிய மலையிலே பிறந்தாள். அவளது சொல் கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருந்தது. கோவைப் பழம்போலச் சிவந்த வாயை உடையவள் அவள். கற்கள் நிரம்பிய மலை நாட்டிலே பிறந்தாலும்வள்ளிநாயகியின் மொழி கல்லையும் கரைக்கின்ற கொல்லிப் பண்ணைப் போன்றது. அவள் பேச்சிலே முருகன் மயங்கினான். 

 

     அவள் மொழியைக் கேட்க வேண்டுமென்று திருவிளையாடல் புரிந்தான். அவளுக்குக் கோபத்தை ஊட்டிப் பேச வைத்தான். மகிழ்ச்சியை உண்டாக்கிப் பேச வைத்தான். அவள் வாயைத் திறந்து ஏதேனும் சொல்ல மாட்டாளா என ஏங்கினான். அவள் வாக்கிலிருந்து எந்தப் பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது.கொல்லிப் பண்ணைப்போல இருந்தது.

 

"மொழிஒன்று புகலாய் ஆயின்,முறுவலும் புரியாய் ஆயின்,                               

விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                                

வழிஒன்று காட்டாய் ஆயின்,மனமும் சற்று உருகாய் ஆயின்                              

பழிஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்." 

     

"உலைப்படு மெழுகது என்ன உருகியே,ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல்எல்லாம்." 

 

என்று கந்தபுராணம் அறுமுகன் ஆடலைக் கூறுகின்றது.

 

     மேலே கூறிய மோன நிலை திடீரென்று வந்துவிடாது. இறைவன் திருப்புகழை மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும். வாய் படைத்த பயன் இறைவனை வாழ்த்துவது. மற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஒடுங்கஇறைவனைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டுஅவன் புகழைப் பற்றியே பேசி வர வேண்டும். அவன் திருநாமத்தை உள்ளத்தோடு கலந்துஉணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மெளன நிலை தானே சித்திக்கும். பேசப் பேச இனிக்கிற பொருள் இறைவன். இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால்அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும்.

 

     ஒரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். ஒரு கணம் அவளுக்கு ஒரு யுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து திரும்பி வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம் கூடப் போடுவதில்லை. வரட்டும்என்ன பண்ணுகிறேன் பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும்பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசவில்லை. 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது தோழிக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியைப் பார்த்து, 'நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயேஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே?' என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். அந்த விடை ஒரு திருக்குறளாக வருகிறது. "எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல்,கொண்கன்பழி காணேன் கண்ட இடத்து."

     

     பெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோதங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமாதங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, "எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.

 

     இறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். "கடவுளுக்குக் கண் இல்லை. என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறான்" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு,அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால்தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால்பேச்சு வராது. எல்லாம் இழந்த நலம் பிறக்கும்.

 

     "கொல்லிப் பண்ணைப் போன்ற இனிமையான சொல்லை உடையவளும்சிவந்த வாயை உடையவளும் மலையில் பிறந்தவளுமாகிய வள்ளியைதன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவனது அருள் வல்லமைஅடியேனைப்பேச்சு அற்று சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டதுஎல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது" என்கிறார் அருணகிரிநாதர்.

 

"சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம்

     இழந்துசும்மா இருக்கும்

எல்லையுள் செல்ல எனை விட்டவா! 

     இகல் வேலன்,நல்ல

கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை,

     கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்

வல்லியைப் புல்கின்ற மால்வரைத்

     தோள் அண்ணல் வல்லபமே!" 

 

கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல் இது.

 

இதன் பொருள் ---

 

     போர் புரிதற்கு உரிய வேற்படையை உடைய குமாரக் கடவுள்கொல்லிப் பண்ணைப் பொருந்தச் செய்கின்ற இனிய மொழியை உடைவரும்கொவ்வைப் பழத்தை ஒத்த சிவந்த இதழை உடையவரும் ஆகிய வள்ளிநாயகியை விரும்புகின்ற பெருமை தங்கிய மலைபோன்ற திருப்புயங்களை உடையவர். அப் பெருமானுடைய ஆற்றலின் தன்மையை இன்ன தன்மைத்து என்று அளவிட்டுக் கூறுதற்கு இயலாத ஒன்று என்றுமனம் வாக்கு முதலிய கருவி கரணங்களை எல்லாம் இழந்துபேசா அனுபூதியில் அசைவற்று இருக்கும் எல்லக்கு உள்ளே புகுமாறு அடியேனைச் செலுத்திய கருணையின் தன்மையானது நினைக்க நினைக்க ஆச்சரியம் தருகின்றது.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...