"சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும்நல் நெல்லை எள்ளைத்
தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழுதொ ழும்பை
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்
நற்றமிழ்க் கவிவா ணரை
நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க
நயமுள்ள நாரியர் தமைப்
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர்வீர ரைத்தூ யரைப்
போதவும் பரிவோடு இதஞ்செய்ய மிகுபயன்
புகழ்பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே - தீய அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே! அண்ணலே - தலைவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
சுவை சேர் கரும்பை - சுவை பொருந்திய கரும்பையும், வெண் பாலை - வெண்மையான பாலையும், பருத்தியை - பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை - சொல்லப்படுகின்ற நல்ல நெல்லையும், எள்ளை - எள்ளையும், தூய தெங்கின் கனியை - தூய்மை பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை - மதிக்காத தீயவர்களையும், தொண்டரை - அடிமையாளரையும், தொழு தொழும்பை - குற்றேவேல் செய்வோரையும், நவை தீருமாறு - குற்றம் நீங்கும்படி, கண்டித்தே பயன் கொள்வர் - கண்டனம் செய்தே அவர்களால் ஆன பயனைப் பெறுவார்கள்,
நல் தமிழ்வாணரை - நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த புலவரையும், நலம் மிக்க செழுமலரை - நன்மை மிகுந்த செழித்த பூவையும், ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை - ஓவியத்தில் எழுதிய பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில் உபகார நெஞ்சரை - பூமியின் மீதில் உதவி செய்யவேண்டுமென்று மனம் படைத்தோரையும், சிறுவரை - சிறுவரையும், போர் வீரரை - போர் வீரர்களையும், தூயரை - தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும் பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் - மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.
(தொழும்பர் - , அடிமைத்தொழில் செய்வோர், அடிமையாள், குற்றேவல் செய்வோர். நவை - குற்றம், இழிவு.)
No comments:
Post a Comment