78. தீயவர்கள் சேர்க்கை

 


"ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்

     றங்கே கலக்கிஉலவும்

ஆயிரம் பேர்கூடி வீடுகட் டிடில்ஏதம்

     அறைகுறளும் உடனேவரும்


ஏனைநற் பெரியோர்கள் போசனம் செயுமளவில்

     ஈக்கிடந் திசைகேடதாம்

இன்பமிகு பசுவிலே கன்றுசென் றூட்டுதற்

     கினியகோன் அது தடுக்கும்


சேனைமன் னவர்என்ன கருமநிய மிக்கினும்

     சிறியோர்க ளாற்குறைபடும்

சிங்கத்தை யும்பெரிய இடபத்தை யும்பகைமை

     செய்ததொரு நரியல்லவோ


மானையும் திகழ்தெய்வ யானையும் தழுவுமணி

     மார்பனே! அருளாளனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!"


இதன் பொருள் ---

மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணிமார்பனே! - மான்மகளாகிய வள்ளிநாயகியையும், தேவமகளாக விளங்குகின்ற தெய்வயானையையும் தழுவுகின்ற அழகிய திருமார்பனே!, அருளாளனே! - அருளுடையவனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஆனை தண்ணீரில் நிழல்பார்த்திடத் தவளை சென்று அங்கே கலக்கி உலவும் - யானை தண்ணீரில் தன் நிழலைப் பார்க்கும் போது தவளை அங்கே போய்க் கலக்கி (நிழலைப் பார்க்கமுடியாமல்) திரியும். 

ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் - பலர்கூடி வீடு கட்டினால், அதற்குக் குறை சொல்கின்ற கோளனும் அங்கு விரைந்து வருவான்; 

ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இடை கேடது ஆம் - மற்றும், நற்குணம் உடைய பெரியோர்கள் அமர்ந்து உணவு கொள்ளும்போது (அவ்வுணவில்) ஈயானது இறந்து கிடந்து (உணவின்) தூய்மையை ஒழித்துவிடும்; 

இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் - இன்பந்தரும் பசுவினிடத்திலே கன்று சென்று ஊட்டமுடியாமல் (அக்கன்றுக்கு) இனியவனான இடையனே அதனைத் தடுப்பான்; 

சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் - படையை உடைய அரசர்கள் எத்தொழிலைச் செய்ய ஆணையிட்டாலும் அற்பர்களான வேலைக்காரர்களால் அது இழிவடையும்; 

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ? - சிங்கத்திற்கும், பெரிய எருது ஒன்றிற்கும் பகையை உண்டாக்கியது ஒருசிறு நரிதானே?

ஆயிரம் பேர் என்பது ஓர் எண்ணிக்கை ஆகாது. பலர் என்று பொருள்படும். பலரும் கூடிக் கட்டின வீடு. "கட்டின வீட்டிற்குக் குற்றஞ் சொல்வோரும், ஆக்கின சோற்றுக்குப் பதம் சொல்வோரும் பலர்" என்பது உலக வழக்கு. தீயவர்களால் காரியம் கெடும் என்பது கூறப்பட்டது.

      ‘சிங்கமும் எருதும் நட்பாக இருந்தன. ஒரு நரி சிங்கத்தினிடம் வீண்பழி சொல்லி நட்பைக் கெடுத்து எருதைக் கொன்று விடச் செய்தது' - எனப் பஞ்சதந்திரக் கதை கூறும்.


No comments:

Post a Comment

48. குளிர் காய நேரம் இல்லை

"உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால் மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திரு இருக்க...