94. முப்பத்திரண்டு அறங்கள்

 


"பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,


மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,


சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;


அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

பெறும் இல் - மகவு பெறுதற்கு வீடு விடுதல், பெறுவித்தலொடு - மகவு பெறுதற்கு வேண்டியவற்றை உதவுதல், காது ஓலை - காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள் அருந்திடும் பால் - அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல், பேச அரிய சத்திரம் - சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் - (துறவிகள் இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் - பசுக்களின் தினவு நீக்கும் கல்நடுதல், பெண்போகம் - பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் - அம்பட்டனுக்கு உதவுதல், வணான் - வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி கண்ஆடி - மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் - நீர் வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் - தலைக்கு எண்ணெய் கொடுத்தல், பசுவின் வாய் உறை - பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் - (ஆதரவு அற்ற) பிணத்தை அடக்கம் செய்தல், வாவி - குளம் வெட்டுதல், இறும் உயிர் மீட்டம் - இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் - தின்பண்டம் அளித்தல், அடைக்காய் வழங்கல் - வெற்றிலை பாக்குக் கொடுத்தல், சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது - சிறையில் அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் - பிறர் துயரைப் போக்குதல், பொழில் செய்தல் - சோலை வைத்தல், முன் நூலின் மணம் - பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு ஊண் - விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை - இரப்போர்க்கு ஈதல், அறு சமயருக்கு உண்டி - அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு அளித்தல், தேவராலயம் - திருக்கோயில் கட்டுதல், அவுடதம் - மருந்து கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் - பாடம் படிப்போர்க்கு உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் - (ஆகிய) முப்பத்திரண்டு அறங்களும், முன் அன்னை செயல் - முற்காலத்தில் உமையம்மையார் திருக் காஞ்சியில் செய்தவை ஆகும்.


No comments:

Post a Comment

48. குளிர் காய நேரம் இல்லை

"உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால் மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திரு இருக்க...