"ஓடமிடும் இடமது மணல்சுடும், சுடும்இடமும்
ஓடம்மிக வேநடக்கும்;
உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும், மேடெலாம்
உறுபுனல்கொள் மடுவாயிடும்;
நாடுகா டாகும்,உயர் காடுநா டாகிவிடும்;
நவில்சகடு மேல்கீழதாய்
நடையுறும், சந்தைபல கூடும்,உட னேகலையும்;
நல்நிலவும் இருளாய்விடும்;
நீடுபகல் போயபின் இரவாகும், இரவுபோய்
நிறைபகற் போதாய்விடும்;
நிதியோர் மிடித்திடுவர், மிடியோர் செழித்திடுவர்;
நிசமல்ல வாழ்வுகண்டாய்!
மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
மருவுகன வாகும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே."
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
ஓடம் இடும் இடமது மணல் சுடும் - ஓடத்தை நிறுத்தி வைத்திருக்கும் (நீர் நிறைந்த பள்ளமான) இடம் (நீர் வற்றி) மணல் சுடும்படி (மேடாக) மாறும்; சுடும் இடமும் ஓடம் மிக நடக்கும் - (மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம் மிகுதியாக ஓடும்;
உற்றது ஓர் ஆற்றின் மடு மேடாகும் - நீருள்ள ஓர் ஆற்றின் பள்ளம் மேடாக மாறும்; மேடு எலாம் உறுபுனல்கொள் மடு ஆயிடும் - மேடுகள் யாவும் மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்;
நாடு காடாகும் - (மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; உயர்காடு நாடு ஆகிவிடும் - (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்;
நவில் சகடு மேல்கீழதாய் நடையுறும் - சொல்லப்படும் (வண்டியின்) சக்கரம் மேலும் கீழுமாக மாறிமாறிச் சுற்றிக்கொண்டு செல்லும்;
பல சந்தை கூடும் உடனே கலையும் - பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே இருக்கும்;
நல்நிலவும் இருளாய் விடும் - நல்ல நிலவின் ஒளியும் (மாறி) இருளாகி விடும்;
நீடு பகல் போய பின் இரவாகும் - பெரிய பகல் கழிந்து இரவு வரும்; இரவு போய் நிறை பகற்போதாய் விடும் - இரவு நீங்கி ஒளி நிறைந்த பகற்காலம் வந்துவிடும்;
(உலக நிகழ்வுகள் இவை யாவும் போலவே)
நிதியோர் மிடித்திடுவர் - செல்வர் வறியராவர்; மிடியோர் செழித்திடுவர் - வறியோர் செல்வராவர்; வாழ்வு நிசம் அல்ல - (ஆகையால்) வாழ்க்கை நிலையானது அல்ல.
மாடு, மனை, பாரிசனம், மக்கள், நிதி, பூடணமும் மருவு கனவு ஆகும் அன்றோ? - ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் அன்றோ?
நிலையற்ற செல்வத்தைக் கொண்டு, அறம் பல புரிந்து, நிலையான வீடுபேற்றைப் பெற முயலவேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment