73. செல்வம் நிலையற்றது


"ஓடமிடும் இடமது மணல்சுடும், சுடும்இடமும்

     ஓடம்மிக வேநடக்கும்;

உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும், மேடெலாம்

     உறுபுனல்கொள் மடுவாயிடும்;


நாடுகா டாகும்,உயர் காடுநா டாகிவிடும்;

     நவில்சகடு மேல்கீழதாய்

நடையுறும், சந்தைபல கூடும்,உட னேகலையும்;

     நல்நிலவும் இருளாய்விடும்;


நீடுபகல் போயபின் இரவாகும், இரவுபோய்

     நிறைபகற் போதாய்விடும்;

நிதியோர் மிடித்திடுவர், மிடியோர் செழித்திடுவர்;

     நிசமல்ல வாழ்வுகண்டாய்!


மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்

     மருவுகன வாகும் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஓடம் இடும் இடமது மணல் சுடும் - ஓடத்தை நிறுத்தி வைத்திருக்கும் (நீர் நிறைந்த பள்ளமான) இடம் (நீர் வற்றி) மணல் சுடும்படி (மேடாக) மாறும்; சுடும் இடமும் ஓடம் மிக நடக்கும் - (மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம் மிகுதியாக ஓடும்; 

உற்றது ஓர் ஆற்றின் மடு மேடாகும் - நீருள்ள ஓர் ஆற்றின் பள்ளம் மேடாக மாறும்; மேடு எலாம் உறுபுனல்கொள் மடு ஆயிடும் - மேடுகள் யாவும் மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்; 

நாடு காடாகும் - (மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; உயர்காடு நாடு ஆகிவிடும் - (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்; 

நவில் சகடு மேல்கீழதாய் நடையுறும் - சொல்லப்படும் (வண்டியின்) சக்கரம் மேலும் கீழுமாக மாறிமாறிச் சுற்றிக்கொண்டு செல்லும்; 

பல சந்தை கூடும் உடனே கலையும் - பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே இருக்கும்; 

நல்நிலவும் இருளாய் விடும் - நல்ல நிலவின் ஒளியும் (மாறி) இருளாகி விடும்; 

நீடு பகல் போய பின் இரவாகும் - பெரிய பகல் கழிந்து இரவு வரும்; இரவு போய் நிறை பகற்போதாய் விடும் - இரவு நீங்கி ஒளி நிறைந்த பகற்காலம் வந்துவிடும்; 

 (உலக நிகழ்வுகள் இவை யாவும் போலவே)

நிதியோர் மிடித்திடுவர் - செல்வர் வறியராவர்; மிடியோர் செழித்திடுவர் - வறியோர் செல்வராவர்; வாழ்வு நிசம் அல்ல - (ஆகையால்) வாழ்க்கை நிலையானது அல்ல.

மாடு, மனை, பாரிசனம், மக்கள்,  நிதி, பூடணமும் மருவு கனவு ஆகும் அன்றோ? - ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் அன்றோ?

நிலையற்ற செல்வத்தைக் கொண்டு,  அறம் பல புரிந்து, நிலையான வீடுபேற்றைப் பெற முயலவேண்டும் என்பது கருத்து.


No comments:

Post a Comment

35. துறவிக்கு வேந்தன் துரும்பு

“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்      பொன்னிவளம் செழித்த நாட்டில், குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்      களும்பொருளாக் குறித்தி டாமல்...