வைத்தீசுரன் கோயில் - 0793. மாலினால் எடுத்த






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாலினால் எடுத்த (வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்)

முருகா!
எனது வினைகளைத் தூளாக்கி,  
உனது திருவடிப் பேற்றினை அருள்வாய்


தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
     தான தான தத்த தந்த ...... தனதான


மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
     காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
     சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
     சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மாலினால் எடுத்த கந்தல், சோறினால் வளர்த்த பொந்தி,
     மாறி ஆடு எடுத்த சிந்தை, ...... அநியாய

மாயையால் எடுத்து மங்கினேன் ஐயா, எனக்கு இரங்கி
     வாரையா, இனிப் பிறந்து ...... இறவாமல்,

வேலினால் வினைக் கணங்கள் தூள் அதா எரித்து, உன்தன்
     வீடு தா, பரித்த அன்பர் ...... கணம் ஊடே

மேவி, யான் உனைப்பொல் சிந்தை ஆகவே களித்து, கந்த
     வேளெ ஆம் எனப் பரிந்து ...... அருள்வாயே.

காலினால் எனப் பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட,
     கால பாநு சத்தி அம்கை ...... முருகோனே!

காம பாணம் அட்டு, அநந்த கோடி மாதரைப் புணர்ந்த
     காளை ஏறு கர்த்தன், எந்தை ...... அருள்பாலா!

சேலை நேர் விழிக் குறம்பெண் ஆசை தோள் உறப் புணர்ந்து,
     சீரை ஓது பத்தர் அன்பில் ...... உறைவோனே!

தேவர், மாதர், சித்தர், தொண்டர், ஏக வேளுருக்கு உகந்த
     சேவல் கேது சுற்று உகந்த ...... பெருமாளே.


பதவுரை


      காலினால் எனப் பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட --- காற்றைப் போலப் பரவியிருந்த சூரர்கள் மாளும்படி வெற்றி கொண்,

      கால பாநு சத்தி --- காலனைப் போன்ற வலிமையும்,  கதிரவன் போன்ற பேரொளியும் அமைந்த ஆற்றல் மிகுந்த வேலாயுதத்தை

     அம் கை முருகோனே --- அழகிய திருக்கரத்தில் தரித்த முருகப் பெருமானே!

      காம பாணம் அட்டு --- மதவேளின் மலர்க் கணைகளால் வருந்திய

     அநந்த கோடி மாதரைப் புணர்ந்த காளை --- எண்ணற்ற மாதர்களைக் கலந்த திருமால் ஆகிய இடபத்தின் மீது

      ஏறு கர்த்தன் --- ஏறி அருளிய தலைவனும்,

     எந்தை அருள் பாலா --- எமது தந்தையும் ஆகிய சிவபெருமான் அருளிய பாலகரே!

      சேலை நேர்விழிக் குறம்பெண் ஆசை தோள் உறப் புணர்ந்து --- மீன் போன்ற விழியினை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகி மீது ஆசை கொண்டு, அவளது தோள்களைத் தழுவிக் கலந்தவரே!

      சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே --- உமது அருட்புகழை ஓதும் அடியார்களின் அன்பில் இருப்பவரே!

      தேவர் --- தேவர்களும்,

     மாதர் --- அழகிய பெண்களும்,

     சித்தர் --- சித்தர்களும்,

     தொண்டர் ஏக --- தொண்டர்களும் சென்று வணங்க,

     வேளுருக்கு உகந்த --- திருப் புள்ளிருக்குவேளூர் என்னும் திருத்தலத்தை விரும்பி எழுந்தருளி இருப்பவரே!

     சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே --- சேவற்கொடி பொருந்தி இருக்க மகிழும் பெருமையில் மிக்கவரே!

     ஐயா - எனது ஐயனே!

      மாலினால் எடுத்த கந்தல் --- ஆசை காரணமாக எடுத்து வந்த கிழிந்த துணியைப் போன்று ஒன்பது துளைகளை உள்ள இந்த உடம்பு,

      சோறினால் வளர்த்த பொந்தி --- சோறு உட்கொண்டதால் பருத்து வளர்ந்தது,

      மாறி ஆடு எடுத்த சிந்தை --- மாறி மாறி வரும் எண்ணங்களைக் கொண்ட மனம் ஆகிய இவைகளை,

      அநியாய மாயையால் எடுத்து மங்கினேன் --- முறையற்ற பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்து நான் பெருமை குன்றிப் போனேன்,

     இனிப் பிறந்து இறவாமல் --- இனிப் பிறப்பும் இறப்பும் இல்லாமல்,

     எனக்கு இரங்கி வாரையா --- அடியேன் மீது கருணை கொண்டு வந்தருள்வாய். ஐயா!
          
      வேலினால் வினைக் கணங்கள் தூளதா எரித்து --- ஞானசத்தியாகிய வேலினால் எனது வினைத் தொகுதி தூளாகும்படி எரித்து,

      உன்தன் வீடு தா --- உனது திருவடியாகிய வீடுபேற்றினைத் தந்து அருள்வாயாக.
        
     பரித்த அன்பர் கணம் ஊடே யான் மேவி --- அன்பு நிறைந்த அடியார் திருக்கூட்டத்தில் நான் கலந்து இருந்து,

      உனைப்பொல் சிந்தையாகவே களித்து --- யானும்  உம்மைப் போல, உள்ளத் தூய்மை அடைந்து மகிழ, ("போல்" என்பது "பொல்" எனக் குறைந்து வந்தது)

       கந்த வேளெ ஆம் என --- கந்தவேளே உற்ற துணை என்று நான் இருக்க, ("வேளே" என்பது "வேளெ" எனக் குறைந்து நின்றது)

     பரிந்து அருள்வாயே --- அன்பு வைத்து அருள்வாயாக.


பொழிப்புரை


     காற்றைப் போலப் பரவியிருந்த சூரர்கள் மாளும்படி வெற்றி கொண், காலனைப் போன்ற வலிமையும்,  கதிரவன் போன்ற பேரொளியும் அமைந்த ஆற்றல் மிகுந்த வேலாயுதத்தை அழகிய திருக்கரத்தில் தரித்த முருகப் பெருமானே!

         மதவேளின் மலர்க் கணைகளால் வருந்திய எண்ணற்ற மாதர்களைக் கலந்த திருமால் ஆகிய இடபத்தின் மீது ஏறி அருளிய தலைவனும், எமது தந்தையும் ஆகிய சிவபெருமான் அருளிய பாலகரே!

     மீன் போன்ற விழியினை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகி மீது ஆசை கொண்டு, அவளது தோள்களைத் தழுவிக் கலந்தவரே!

      உமது அருட்புகழை ஓதும் அடியார்களின் அன்பில் இருப்பவரே!

      தேவர்களும், அழகிய பெண்களும்,  சித்தர்களும், தொண்டர்களும் சென்று வணங்க, திருப் புள்ளிருக்குவேளூர் என்னும் திருத்தலத்தை விரும்பி எழுந்தருளி இருப்பவரே!

     சேவற்கொடி பொருந்தி இருக்க மகிழும் பெருமையில் மிக்கவரே!

     எனது ஐயனே!

      ஆசை காரணமாக எடுத்து வந்த கிழிந்த துணியைப் போன்று ஒன்பது துளைகள் உள்ளதும்,  சோறு உட்கொண்டதால் பருத்து வளர்ந்ததும் ஆகிய இந்த உடம்பு, மாறி மாறி வரும் எண்ணங்களைக் கொண்ட மனம் ஆகிய இவைகளை, முறையற்ற பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்து நான் பெருமை குன்றிப் போனேன். இனிப் பிறப்பும் இறப்பும் இல்லாமல், அடியேன் மீது கருணை கொண்டு வந்தருள்வாய். ஐயா! ஞானசத்தியாகிய வேலினால் எனது வினைத் தொகுதி தூளாகும்படி எரித்து, உனது திருவடியாகிய வீடுபேற்றினைத் தந்து அருள்வாயாக.
        
     அன்பு நிறைந்த அடியார் திருக்கூட்டத்தில் நான் கலந்து இருந்து, யானும்  உம்மைப் போல, உள்ளத் தூய்மை அடைந்து மகிழ, கந்தவேளே உற்ற துணை என்று நான் இருக்க, அன்பு வைத்து அருள்வாயாக.


விரிவுரை

ஐயா -

ஐ என்னும் சொல் தலைவனைக் குறிக்கும். தலைவனை ஐயா என்று விளித்தல்.

மாலினால் எடுத்த கந்தல் ---

மால் - ஆசை, அறிவு மயக்கம்.

ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் தோன்றும்.

இந்த மூன்று பசையற அற்றால் பிறவி அறும். எனவே,

"காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்"               

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

"பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்,
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின்.
சொற்றவாம் அளவதோ. மற்று இதன் தூய்மையே?"    ---  கம்பராமாயணம்.

உலகப் பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால்,அந்தப் பற்றுக் காரணமாக வரும் பிறவி தீரும். பிறவி நீங்க ஆன்மஞானம் உண்டாகும். அந்த ஞானத்தால் இறைக்காட்சி பெறலாம்.

கந்தல் - கிழிந்து நைந்து போன துணியைக் குறிக்கும். 

கிழிந்த துணியில் ஓட்டைகள் இருக்கும். மனித உடம்பிலும் ஒன்பது துளைகள் முதலான ஓட்டைகள் பல உள்ளன என்பதால், அதனைக் "கந்தல்" என்றார் அடிகளார்.


சோறினால் வளர்த்த பொந்தி ---

சோறு உட்கொண்டதால் பருத்து வளர்ந்தது இந்த உடல்.

"சோற்றுத் துருத்தி" இந்த உடல் என்பார் பட்டினத்தடிகள். அவர் மேலும் அருளுவது காண்க.

"பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார்," துறந்தோர் தமக்கு
இருத்தி அமுது இடமாட்டார், அவரை இம்மாநிலத்தில்
வருத்திக்கொண்டு ஏன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே.

நாறும்உடலை, நரிப்பொதி சோற்றினை, "நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தை", தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழியில் விழாது
ஏறும்படி அருள்வாய், இறைவா கச்சி யேகம்பனே.

ஊற்றைச் சரீரத்தை, ஆபாசக் கொட்டிலை, ஊன் பொதிந்த
பீற்றல் துருத்தியை, "சோறிடும் தோற்பையை", பேசரிய
காற்றல் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன், இறைவா கச்சி யேகம்பனே. --- பட்டினத்தார்.

சோறு என்னும் சொல்லுக்கு ஞானம் என்னும் பொருள் உண்டு. "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்பதில், அன்னம் என்ற சொல்லுக்கு ஞானம், அதனால் அடையப் பெறும் வீடுபேறு என்று பொருள் கொள்வர் பெரியோர்.

"பாதகமே சோறு பற்றியவா" என்பது மணிவாசகம். இதிலும், சோறு என்பது வீடுபேற்றிற்கு ஆக்கமாகிய ஞானத்தையே குறிக்கும்.

ஞானமாகிய சோற்றை உண்டால், உடல் பருக்காது. அதைக் கருதாது, உடம்பையே பொருளாகக் கொண்டு, அதனை வளர்ப்பதிலேயே கருத்தாக இருந்ததால், உடம்பு பருத்தது. ஆன்மா இளைத்தது.

ஊன் உரு, உள்ளொளி பெருகும் என்பதால், "ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே" என்றார் மணிவாசகப் பெருமான்.

"மாலினால் எடுத்த கந்தல், சோறினால் வளர்த்த பொந்தி" என்பதால், உடம்பையும் அதனில் பொருந்தி இருக்கும் கருவிகளைகு குறித்தார் அடிகளார்.

மாறி ஆடு எடுத்த சிந்தை ---

மாறி மாறி வரும் எண்ணங்களைக் கொண்ட மனம் என்றார்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை அந்தக் கரணங்கள் என்னும் உட்கருவிகள் ஆகும்.

அநியாய மாயையால் எடுத்து மங்கினேன் ---

புறக்கருவியும் உட்கருவியும் தூய்மை அற்றது,  அது பிரபஞ்ச மயக்கத்தால் வருவது. இதனால் உயிரானது ஆக்கம் குன்றிப் போகும். எனவே, "அநியாய மாயை" என்றார் அடிகளார்.

ஆக்கம் என்பது வீடுபேற்றை அருளும் ஆண்டவன் அருளையே குறிக்கும்.


இனிப் பிறந்து இறவாமல் எனக்கு இரங்கி வாரையா ---

எல்லாப் பிறப்பும் பிறந்து இறந்து இளைத்தது போதும். இனியாவது, அடியேன் மீது அருட்கருணை வைத்து வந்து அருள் புரியவேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டுகின்றார் அடிகளார்.

வேலினால் வினைக் கணங்கள் தூளதா எரித்து உன்தன் வீடு தா ---

"அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்பகழில்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எல்லாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பிறிதொரு திருப்புகழிலும் சுவாமிகள் கூறியருளியதால், வினையைப் பொடியாக்கியது வேல். மாயையிலே வல்ல கிரவுஞ்ச மலையையும் பொடியாக்கியது வேல்.

வினையாகிய மலையைத் துகளாக்கும் வண்மை வேற்படை ஒன்றுக்கே உள்ளது.

பிறவிகள் தோறும் நாம் புரிந்த வினைகள் நம்மைத் தாக்குகின்றன. ஓரறிவுப் பிறவிகளை வி, மேல் பிறவிகளில் மிகுந்த வினைகளை வேகமாகத் துய்க்கின்றோம். மனிதப் பிறவியில், அதிலும் சான்றாண்மை மிகுந்து வர வர, வினைகள் நுட்ப உருக் கொண்டு வேகமாக வந்து தாக்குகின்றன. சானறோர்கள் செய்யும் செயல்களும் வேகமாக நடைபெறும். வினைகளைத் தாங்கிக் கொள்ளும் திறனும், செயல் செய்யும் திறனும் அவர்களுக்கு மனத்தால் வருகின்றன.

மனம் சிறப்பாய் வேலை செய்வதே மனிதப் பிறவியில் பெறவேண்டிய மாட்சிமையாகும். மனத்தினால் செய்யப்படும் வேலைகளை வி, கையினால் செய்யப்படுபவை சிறியவையே.  அதனாலேயே சிறுமை என்னும் பொருளைத் தருகின்ற "கை" என்னும் பெயர் அதற்கு வைக்கப்பட்டு உள்ளது.

கை, கால்களால் செய்யப்படுனம் வேலைகள் வரம்புக்கு உட்பட்டவை. எவ்வளவு வேகமாக ஓடினாலும், மனிதக் கால்களால் குதிரையின் வேகத்தை எட்ட முடியாது. ஆனால், குதிரையை விட வேகமாக மனத்தால் ஓட முடியும்.

மனத்தை ஒரு செயலில் பதி வைப்பதற்குப் "பாவித்தல்" என்று பெயர். நிலத்தின் மேல் பதியும்படி வைக்கப்படுவது "பாதம்". பதியும்படி எட்டுவது "பாவனை". "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்" என்னும்போது, எண்ணத்தின் அழுத்தத்தால் எய்துவர் என்பது தெளியப்படும். எனவே, சான்றோர்களின் ஆழ்ந்த எண்ணத்தால், வினைகளைச் செய்வதும் துய்ப்பதும் வேகமாக நடைபெறுகின்றன.

நுட்பமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வேகம் தானாகவே மிகுந்து வரும். விஞ்ஞானத்தில் புதிய நுட்பமான கண்டுபிடிப்புக்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதை நாம் அறிவோம்.

எண்ணங்கள் தவறாகவும், தீமை பயப்பதாயும் இருந்தாலும் அவற்றின் வேகமும் மிகுந்தே இருக்கும். பெரியவர்கள் தவறு செய்து விட்டால், அது வேகமாகப் பரவும்.

வினை வேகம் கொள்வதன் நோக்கம் என்னவென்றால், அது விரைவில் துய்க்கப்பட்டு, ஓய்ந்து போய் முடிந்து விடவேண்டும் என்பதே ஆகும். நினைந்து உருகும் அடியார்களுக்கு வினைகளை வேகமாக ஓடவிட்டு, அவர்களை நைய வைக்கின்றான் இறைவன். பிறகு அவ்வினைகள் துய்க்கப்பட்டு, நில்லாமல் நீங்கும்படியாகவும் செய்கின்றான்.  எனவே தான், அடிகளார், "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்றார்.

வேலாகிய ஞானம் வந்துவிட்டால், தீவினைகள் எல்லாம் ஓடிவிடும். ஒரு கல்லைக் கொண்டு பல காகங்களையும் விரட்டுவதைப் போல், வேல் ஆகிய ஞானசத்தியால் வினைகள் எல்லாம் நீங்கி விடுகின்றன. "கூறும் அடியார்கள் வினை நீறு படவே, அரிய கோலமயில் ஆன பதம் அருள்வோனே" என்றார் திருவருணைத் திருப்புகழில்.
  
வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல், செவ்வேள் திருக்கைவேல், வாரி
குளித்தவேல், கொற்றவேல், சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.             

இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுரு உவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
         
பரித்த அன்பர் கணம் ஊடே யான் மேவி உனைப்பொல் சிந்தையாகவே களித்து கந்த வேளெ ஆம் என, பரிந்து அருள்வாயே ---

பரிவு - அன்பு. பரித்த - அன்பு மிகுந்.

வாலறிவன் ஆகிய இறைவனை வழிபட்டு வந்தால், சிற்றறிவு உடைய உயிரும் வாலறிவு பெற்றுத் திகழும்.

உள்ளன்போடு இறைவனுடைய திருப்புகழைக் கூறும் அருள் நூல்களை ஓதித் தெளிந்து, மனதாரத் துதித்து வழிபாடு புரிதல் வேண்டும். அதுவே பிறப்பு எடுத்ததன் பயன்.

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுதற்கு அரியது பிறவி இந்த மானிடப் பிறவி வாய்த்ததன் பயனாக இறைவனை மனதார எண்ணி நாளும் வழிபட வேண்டும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள்களே ஆகும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாக்கு, நாக்கு அல்ல. நாக்குப் போலவே பிற உறுப்புக்களும் இறைவன் திருவடியில் பொருந்த வேண்டும்.

இதனைச் சுருக்கமா, திருவள்ளுவ நாயனார் பின்வரும் திருக்குறளில் காட்டினார்.

கோள்இல் பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எண்ணத்தக்க குணநலங்கள் உடையவனாகிய இறைவனின் திருவடிகளைத் தொழாத தலைகள் தமக்கு உரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத ஐம்பொறிகளைப் போலப் பயன் அற்றவை என்பது இத் திருக்குறளின் பொருள்.

"காணாத கண் முதலியன போ, வணங்காத தலைகள் பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார்.  இனம் பற்றி, வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதும் கொள்க" என்றார் பரிமேலழகர்.

அறநூல்களைக் கேட்பதே அழகிய காது ஆகும் என்கின்றது அறநெறிச்சாரம்...

கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல, --கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று சுவைப்ப செவி.

கண்டவர் விரும்பும் சிறந்த அழகனை உடைய காதில் குண்டலங்கள் அணியப்படுவன  அழகான செவி அல்ல. உலகில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றினை உணர்த்தும் நூல்களைக் கேட்டு அறிந்து, அவற்றுள் முதன்மையான அறநூலைத் தவறுதல் இல்லாமல், இடைவிடாது கேட்டு, ஆராய்ந்து இன்பம் அடைவதற்கு அமைந்தவையே காதுகள் ஆகும்.

நல்ல கடவுள் காட்சியைக் காண்பதே கண்கள் என்கின்றது அறநெறிச்சாரம்..

பொருள்எனப் போழ்ந்து அகன்று பொன்மணிபோன்று எங்கும்
இருள் அறக் காண்பன கண் அல்ல, --மருள் அறப்
பொய்க்காட்சி நீக்கி, பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்.

பொருள் என்று சொன்ன உடனே, மிகுதியாக விழித்து, அழகிய நீலமணி போல எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்கள் ஆகமாட்டா. காமம், வெகுளி, மயக்கங்கள் நீங்கும்படி, பொய்யான காட்சிகளை முழுமையாக ஒழித்து, இறைவனது திருவுருவைக் காண்பனவே கண்கள் ஆகும்.

றைவன் திருவடி மலர்களை முகர்வதே மூக்கு ஆகும் என்கிறது அறநெறிச்சாரம்...

சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து இன்புறுவன மூக்கு அல்ல, --வேந்தின்
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடிக்கீழ்
இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு.

சந்தனம், அகில் புகை, கஸ்தூரி, குங்கும்பபூ முதலிய மணப் பொருள்களை மோந்து மகிழ்ச்சி அடைவது மூக்கு அல்ல. உழர்ந்து இனிது விளங்குகின்ற அரியணையில் எழுந்தருளி இருக்கும் கடவுளின் திருவடியில் இட்டு விளங்குகின்ற பூக்களை முகர்ந்து இன்பம் அடைவதே மூக்கு ஆகும்.

இறைவனைத் துதித்துப் பேசுவதே நாக்கு என்கிறது அறநெறிச்சாரம் என்னும் நூல்...

கைப்பன, கார்ப்பு, துவர்ப்பு, புளி, மதுரம்,
உப்பு இரதம் கொள்வன நாவல்ல, - தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.

கசப்பு, உறைப்பு, முவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு என்னும் ஆறு சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தப்பாமல் புலனைந்தும் வென்றவனாகிய இறைவனது திருவடிகளை எப்போதும் விரும்பித் துதிப்பதே நாக்கு ஆகும்.

நல்ல ஞான முயற்சியில் நடப்பனவே கால்கள் என்கின்றது அபநெறிச்சாரம்....

கொல்வதூஉம், கள்வதூஉம் அன்றி, பிறர்மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல, - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பால் சென்று
அறவுரை கேட்பிப்ப கால்.

பிற உயிரைக் கொல்லவும், பிறர் உடைமையைத் திருடவும், பிறன் மனைவியிடத்தே விரும்பிக் கூடவும் செல்வதற்கு உதவுவன கால்கள் அல்ல. துன்பத்தை உண்டாக்கும் பிறவிப் பிணியைப் போக்கி அருளும் தவத்தினை உடைய அருளாளர் பால் சென்று, அவர் கூறும் அறிவுரையைக் கேட்க நடப்பவையே கால்கள் ஆகும்.

இறைவன் திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைய தலை ஆகும் என்கின்றது அறநெறிச்சாரம்...

குற்றம் குறைத்து, குறைவு இன்றி, மூவுலகின்
அற்றம் மறைத்து, ங்கு அருள் பரப்பி - முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாஅல்ல, அல்ல
சிறந்தான் தாள் சேராத் தலை.

மனத்தில் உண்டாகும் குற்றங்களைக் கெடுத்து, மூவுலகில் உள்ளவர்களின் அச்சம் எல்லாவற்றையும் துடைத்து, அவர்களுக்கு அருள் புரிந்து, இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனைப் பாடாத நாக்கு நாக்கு அல்ல. அவன் திருவடிகளை வணங்காதவை தலை அல்ல.

திருஞானசம்பந்தப் பெருமான் பாடியுள்ள பாடல்களில் பின்வருவனவற்றைச் சிந்திப்போமாக...

கோள் நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள்
பூண்ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண்ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே.

வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.
  
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத் தண்தாரே
சூடல் நெறி நின்றான், சூலம்சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான் தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே.

பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.

மாறாத வெம்கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீயாடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே.

யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாக்கு இருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர்.
  
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே.

தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரை ஆகும் எனக் கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச் செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.

புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம்இருவர்
உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே,
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

கருடப் பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாகுமோ?

பிச்சை பிறர் பெய்ய, பின்சார, கோசாரக்
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்துஉகந்தான்,
அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.

மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத் தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.

உடம்பைப் படைத்து இறைவனை உடம்பால் வணங்கி, அவன் திருவடி இன்பத்தைப் பெறவேண்டும் என்ற கருத்தில் திரு அங்கமாலை என்னும் அற்புதமான திருப்பதிகத்தை அப்பர் பெருமான் பாடி அருளினார். அப்பர் பெருமானார் காட்டியபடி வழிபாடு இயற்றி வந்தால், திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒண்ணாத பரம்பொருளை நம்முள்ளேயே காணாலாம்.
  
வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை,
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே,
வீழ்த்தவா! வினையேன் நெடும் காலமே.      ---  அப்பர்.

வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து,
இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து, ம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூரப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ. --- மணிவாசகம்.

இறைவனை நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோ, எப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது. இந்த நாள் நம்முடைய நாள். எனவே, விடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.

காலையில் எழுந்து, உன் நாமமெ மொழிந்து,
     காதல் உமை மைந்த ...... என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞானவெளி கண்கள்
     காண அருள் என்று ...... பெறுவேனோ?

என்று, "மாலைதனில் வந்து" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

மனக் கவலையை மாற்ற வேண்டுமானால், தனக்கு உவமை இல்லாத இறைவனின் திருவடியை வணங்கவேண்டும்.

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.           --- திருக்குறள்.

"மனக்கவலை ஏதும் இன்றி நினக்கு அடிமையே புரிந்து" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். மனக்கவலை இல்லாமல் வாழவேண்டுமானால், இறைவனுக்கு அடிமையாக வேண்டும்.

"காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா" என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

நீ நாளும், நன்னெஞ்சே! நினை கண்டாய், ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,
நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.

என்று பாடி அருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

நல்ல நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. இறக்கின்ற நாளும், உலகினிலே வாழ்கின்ற நாளையும் யாராரும் கணக்கிட்டுக் கூற முடியாது. திருச் சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும் பூக்களைச் சுமந்து சென்றும், அப்பெருமானது திரு நாமங்களைக் காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை சொல்லி ஏத்தி வழிபட்டால், நல் வினையைப் பெறலாம்.

இப்படி நாள்தோறும் இறைவனை மனதாரத் துதித்து வழிபட்டு வந்தால், வாயானது அவன் திருநாமத்தையே எப்போதும் மறவாது உச்சரிக்கும்.

முருகப் பெருமானை எப்போதும், சிவகுமரா, மும்மூர்த்திகள் தலைவா, உமை மைந்தனே, குகனே என்று வாயார எப்போதும் கூறிக் கொண்டே இருக்கும் பக்குவம் வாய்க்கும்.

இறை அடியார்கள் வேற்றுமை பாராட்டாதவர்கள். விருப்பு வெறுப்பு என்னும் இருமையும் கடந்தவர்கள். வேடத்தால் அடியவனாக ஒருவன் அவர்களிடத்தில் சென்றாலுமே, அந்த வேடத்தைக் கண்ட உடனே மெய்யுருகி நிற்பார்கள்.

மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைச் சிந்திக்க வேண்டும்...

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் குலத்தில் அவதரித்தார். அக் குறுநில மன்னர் குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலைமான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடு விளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்.
  
இவ்வாறு ஒழுகி வந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையில் ஏந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான்.

மெய்எலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்.

வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்ச மனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்ச நெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.

மங்கலம் பெருக மற்று என்
         வாழ்வு வந்து அணைந்தது என்ன,
இங்கு எழுந்தருளப் பெற்றது
         என்கொலோ என்று கூற,
உங்கள்நா யகனார் முன்னம்
         உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இல்லாதது ஒன்று
         கொடுவந்தேன் இயம்ப என்றான்.

மெய்பொருளார் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவி விட்டு, அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப் பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத் தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான்.

கைத்தலத்து இருந்த வஞ்சக்
         கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
         புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
         நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
         பொருள் எனத் தொழுது வென்றார்.

வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்து விழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா, நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்ய வேண்டியது யாது?’ என இரந்தான். “இச் சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித் தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்?” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சி அளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

அடியவர் பெருமை இதனால் விளங்கும்.

அடியவர் கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என்? எனக் கிளப்பில்,
கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்
பூண்ட அவ் வேடம் காண்தொறும் காண்தொறும்
நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்
பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று
அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்
பரமானந்தக் கூத்த! கருணையொடு
நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்
உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொணீஇ,
எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்
செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல் தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".       

அடியேன் புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு பழகி வந்த்தால், அவர்கள் என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது என்கின்றார் இந்த அகவல் பாடலில்.

வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி.

திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான், தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் இறைவன் கொண்டு சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
     மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள்
     திறத்து இடை நைவேனை
ஒப்பு இலாதன உவமனில் இறந்தன
     ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
     நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை
     என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன்
     நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

முன்னை என்னுடை வல்வினை போயிட
     முக்கண் அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்
     எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றது ஓர் புரிசடை முடிதனில்
     இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர்
     காரணம் இது கேளீர்
ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும்
      உபாயம் அது அறியாமே
செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு
     ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே.

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்
     பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று
     குடி கெடுகின்றேனை
இரவு நின்று எர் ஆடிய எம் இறை
     எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என்
     ஏழைமை அதனாலே,
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு
     நல்வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு
     ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பொத்தை ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
     ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
     சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
     பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை
     குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து,
     நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
     எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
     எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
     அப்பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன்அது நுகர்த்திடும்
     பித்தர்சொல் தெளியாமே
அந்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்  
     சிறுகுடில் இது, இத்தைப்
பொருள் எனக் களித்து அருநரகத்து இடை
     விழப் புகுகின்றேனை,
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
     சினப் பதத்தொடு செந் தீ
அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
     அதிசயம் கண்டாமே. 

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்”          ---  தாயுமானார்.

தரையின் ஆழ்த் திரை ஏழே போல்,எழு
     பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
     சவலை தீர்த்து, ன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்
சபையின் ஏற்றி, இன் ஞானா போதமும்
     அருளி, ஆட்கொளுமாறே தான், அது
     தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே?
                                                 ---  (நிருதரார்க்கொரு) திருப்புகழ்

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

என்று கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.

மிக உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.

இப்படி அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் “ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

வேண்டுவார் வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார். அங்ஙனம் நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதரே கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.

"இடுதலைச் சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால் 
கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாத்தித்த வேலோன். பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே".

இறைவனுடைய திருத்தொண்டர்கட்கு மிகுந்த நேசத்துடன் தொண்டு புரிவதே முத்தி பெறுவதற்கு எளிய வழியாகும். தொண்டர்க்குத் தொண்டு புரிவோர் எல்லா நலன்களையும் எளிதிற் பெறுவர்.

இறைவனுக்குத் தொண்டு புரிவது ஒரு மடங்கு பயனும் தொண்டர்க்குத் தொண்டு செய்வது இருமடங்கு பயனும் விளைவிக்கும். ஏனெனில், தொண்டர் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான். ஆதலின் இருமடங்காகின்றது. மானக்கஞ்சாற நாயனாரைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார் பெருமான், அவருடைய அடியாரின் அடித்தொண்டினைக் கூறும் திறம் காண்க.

பணிவுடைய வடிவு உடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவு உடைய சடைமுடியார்க்க் ஆளாகும் பதம்பெற்ற
தணிவுஇல் பெரும் பேறு உடையார் தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில் பூண்டார்.
                                                                                                     --- பெரியபுராணம்.

கண்டுமொழி, கொம்பு கொங்கை, வஞ்சிஇடை, அம்பு நஞ்சு
     கண்கள், குழல் கொண்டல், என்று, ...... பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து, மங்கையர் வசம் புரிந்து,
     கங்குல்பகல் என்று நின்று, ...... விதியாலே

பண்டைவினை கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல் கண்டு,
     பங்கய பதங்கள் தந்து, ...... புழ் ஓதும்
பண்பு உடைய சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து
     பண்புபெற, அஞ்சல் அஞ்சல் ...... என வாராய்.   --- திருப்புகழ்.

கரைஅற உருகுதல் தருகயல் விழியினர்,
     கண்டுஆன செஞ்சொல் ...... மடமாதர்,
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு
     கலங்கா மயங்கும் ...... வினையேனும்,

உரையையும் அறிவையும் உயிரையும் அணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே,
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு
     ஒன்றாக என்று ...... பெறுவேனோ?       ---  திருப்புகழ்.

சீறல் அசடன், வினை காரன், முறைமை இலி,
     தீமை புரி கபடி, ......        பவநோயே
தேடு பரிசி, கன நீதி நெறிமுறைமை
     சீர்மை சிறிதும் இலி, ......   எவரோடும்

கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள
     கோளன், றிவிலி,  ......     உன்அடிபேணாக்
கூளன், னினும் எனை நீ உன் அடியரொடு
     கூடும் வகைமை அருள் ...... புரிவாயே.   ---  திருப்புகழ்.
  
வாதம், பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
     சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
     மாசு அம் கண், பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,
மாறும் கக்கலொடே, சில நோய், பிணி-
     யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
     வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,

சூழ் துன் சித்ர கபாயை, மு ஆசைகொடு
     ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
     சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்
தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
     ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
     தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய்.
                                                              ---  திருப்புகழ்.

கறுத்த தலை வெளிறு மிகுந்து,
     மதர்த்த இணை விழிகள் குழிந்து,
     கதுப்பில் உறு தசைகள் வறண்டு, ......செவிதோலாய்,
கழுத்து அடியும் அடைய வளைந்து,
     கனத்த நெடு முதுகு குனிந்து,
     கதுப்பு உறு பல் அடைய விழுந்து, ...... உதடுநீர்சோர்,

உறக்கம் வரும் அளவில், எலும்பு
     குலுக்கி விடும் இருமல் தொடங்கி,
     உரத்த கன குரலும் நெரிந்து, ......     தடி கால் ஆய்,
உரத்த நடை தளரும் உடம்பு
     பழுத்திடும் முன், மிகவும் விரும்பி
     உனக்கு அடிமை படும்அவர் தொண்டு ...... புரிவேனோ?
                                                            --- திருப்புகழ்.

திரைவார் கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு
     திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,
தினம் நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ
     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என
     அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்
வழிபாடு உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்
     மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே. --- திருப்புகழ்.


காலினால் எனப் பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே ---

கால் - காற்று.

காற்றில் ஊக்கம் உண்டு. காற்று எங்கும் பரந்து இருக்கும்.

அதுபோல எங்கும் பரந்து எழுந்து வந்த அரக்கர் கூட்டத்தினைத் தனது வேற்படையால் அழித்தவர் முருகப் பெருமான்.

அந்த வேற்படையானது, காலனைப் போன்ற வலிமையும்,  கதிரவன் போன்ற பேரொளியும் அமைந்த ஆற்றல் மிகுந்தது.

காம பாணம் அட்டு, அநந்த கோடி மாதரைப் புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா ---

காளை - திருமால்.

திரிபுர சம்மார காலத்தில் காளையாக வந்து சிவபெருமானைத் தாங்கியவர் திருமால். இதனை,

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு, டீ!
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ!

என்னும் மணிவாசகத்தால் அறியலாம்.

கண்ணபிரான் பல மாதரைப் புணர்ந்த வரலாறு. கண்ணபிரான் நரகாசுர வதம் செய்து அவனால் கொண்டு போகப்பட்ட மந்தர மலையினுடைய சிகரமான இரத்னகிரியில் பல திசைகளில் இருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப் பட்டிருந்த தேவர்கள், சித்தர்கள், கந்தர்வாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் தான் மணந்து கொண்டு, அவர்களும் தானுமாக ஒரு சிங்காதனத்தில் வீற்றிருந்தார் என்று புராணம் கூறுகின்றது.
  
பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப்
     புணர்முலை வாய் மடுக்க
வல்லானை, மாமணி வண்ணனை
     மருவும் இடம் நாடுதிரேல்,
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு
     பெளவம் எறிதுவரை
எல்லாரும் குழச் சிங்காசனத்தே
     இருந்தானைக் கண்டார் உளர்"

என்னும் பெரியாழ்வார் திருமொழியையும் காண்க.

சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே ---

இறைவனது பொருள்சேர் திருப்புகழை நாளும் ஓதி வழிபடுகின்ற அடியார்களின் உள்ளத்தையே திருக்கோயிலாகக் கொண்டு அவன் எழுந்தருளி இருப்பான்.

இதனைப் பின்வரும் பிரமாணங்களால் தெளியலாம்.

நாகம்வைத்த முடியான், "அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம்வைத்த பெருமான்", பிரமன்னொடு மாலும்தொழுது ஏத்த
ஏகம்வைத்த எரியாய் மிகஓங்கிய எம்மான் இடம்போலும்
போகம்வைத்த பொழிலின் நிழலால் மதுஆரும் புகலூரே.--- திருஞானசம்பந்தர்.

சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்,
"பாடி ஆடிப் பரவு வார்உள்ளத்து
ஆடி" சோற்றுத் துறைசென்று அடைவோமே.              --- திருஞானசம்பந்தர்.

"எண்ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன்" ஊர்ஆம்
கள்நின்று எழுசோ லையில்வண்டு
பண் நின்று ஒலிசெய் பனையூரே.                             --- திருஞானசம்பந்தர்.

பிறைபெற்ற சடைஅண்ணல் பெடைவண்டு ஆலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்று அண்ணல் கள்ளில்  மேயான்
"நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு உளானே".            --- திருஞானசம்பந்தர்.

"அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று,
         ஐம்புலனும் அடக்கி, ஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்" கோயில்,
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலையாமே.                         --- திருஞானசம்பந்தர்.

தூவிய நீர்மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த,
காவியின் நேர்விழி மாதர் என்றும் கவின்ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை "எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன்" ஆதிமூர்த்தி அமரர் பெருமானே. --- திருஞானசம்பந்தர்.

தேடிக் கண்டுகொண்டேன், திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை என் உள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.                    ---  அப்பர்.

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி,
         வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,
         செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்,
துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,
         சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்,
கடிமலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
         திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
         உகந்து, அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
         இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

இலம், காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து
         இடையாதே, யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
         மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
         உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

விருத்தனே! வேலைவிடம் உண்ட கண்டா!
         விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமைகணவா! உலக மூர்த்தீ!
         நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்றென்று புலம்பி, நாளும்
         புலன்ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
         பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,
         பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
         வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
         ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி
மையினால் கண்எழுதி, மாலை சூட்டி,
         மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு,
         அகம்குழைந்து, மெய்அரும்பி, அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்
         திகையாதே, சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்
         கடல்நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவ நாசா!
         பரஞ்சுடரே! என்றென்று பரவி, நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குனிந்த சிலையால் புரமூன்று எரித்தாய் என்றும்,
         கூற்று உதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,
         தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி
முனிந்து, அவன் தன் சிரம் பத்தும் தாளுந் தோளும்
         முரண் அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ! என்றும்
கனிந்து, மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.     --- அப்பர்.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்",
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனை
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? --- அப்பர்.

பாட்டகத்து இசை ஆகி நின்றானைப்
    "பத்தர் சித்தம் பரிவு இனியானை"
நாட்டகத் தேவர் செய்கை உளானை,
    நட்டம் ஆடியை நம்பெருமானை,
காட்டகத்து உறு புலி உரியானை,
    கண்ணொர் மூன்று உடை அண்ணலை, அடியேன்
கோட்டகப் புனல் ஆர் செழுங்கழனிக்
    கோலக் காவினில் கண்டுகொண் டேனே. --- சுந்தரர்.

பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்,
    "பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்"
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக்
    கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர்,
    வான நாடர் மருவி ஏத்த
விண் உளீராய் நிற்பது என்னே
    வேலை சூழ் வெண்காடனீரே.             --- சுந்தரர்.

தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,
     சங்கரா! ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்,
     யாது நீ பெற்றது ஒன்று என்பால்?
"சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்",
     திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே, ஈசா! உடல் இடம் கொண்டாய்,
     யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!    --- மணிவாசகர்.

உள்ளம் பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிலிங்கம்,
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.     ---  திருமந்திரம்.
      
வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய் ஒளி சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்.       --- அற்புதத் திருவந்தாதி.

பிரான்அவனை நோக்கும் பெருநெறியே பேணி,
பிரான்அவன்தன் பேரருளே வேண்டி, - பிரான்அவனை
எங்கு உற்றான் என்பீர்கள், என் போல்வார் சிந்தையினும்
இங்கு உற்றான், காண்பார்க்கு எளிது. --- அற்புதத் திருவந்தாதி.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.     --- பேய் ஆழ்வார்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.    --- பொய்கை ஆழ்வார்.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
                                                                        ---  திருவருணைத் திருப்புகழ்.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. --- தாயுமானார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் சோதி.---  திருவருட்பா.

தேவர், மாதர், சித்தர், தொண்டர் ஏக, வேளுருக்கு உகந்த, சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே ---

கேது - அடையாளம், சுடர், ஒளி.

தேவர்களும், அழகிய பெண்களும், சித்தர்களும், தொண்டர்களும் சென்று வணங்கி உய்ய, திருப் புள்ளிருக்குவேளூர் என்னும் திருத்தலத்தை விரும்பி, சேவல் கொடியோடும், மயில் வாகனத்தோடும், வள்ளிதேவயானை சமேதராக எழுந்தருளி இருப்பவர் முருகப் பெருமான். இத் திருத்தலத்தில் அவருடையு திருநாமம், "செல்வமுத்துக்குமாரசாமி" அருட்செல்வம் பொருட்செல்வம் ஆகிய இகபர நலன்களை அடியார்க்கு அருள் புரிபவர்.

திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்திருத்தலம் தற்போது வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப்படுகிறது. இத்திருத்தலம் சென்னையில் இருந்து இரயில் பாதையில் 270 கி.மி. தூரத்தில் இருக்கிறது.  சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தூரத்தில் உள்ளது.

மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன்கோயிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியது.

இறைவர்               : வைத்தியநாதர்
இறைவியார்           : தையல்நாயகி
முருகன்                 : செல்வமுத்துக்குமாரர்
தல மரம்                : வேம்பு
தீர்த்தம்                  : சித்தாமிர்த குளம்

திருஞானசம்பந்தராலும், அப்பர் பெருமானாலும் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.

திருமுறைகளில் "திருப்புள்ளிருக்குவேளூர்" என்ற பெயருடனும், இன்று "வைத்தீசுவரன்கோயில்" என்றும் விளங்கும் இத்திருத்தலம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு வேண்டுகோள் தலமாகும்.

சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம் (இருக்கு), முருகவேள் (வேள்), சூரியனாம் (ஊர்) ஆகிய நால்வரும் இறைவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

அசுரன் ஆகிய சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற திருத்தலம் இது என்பர். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் இலட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

இத்தலம் நவக்கிரகங்ளில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் அன்பர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.

இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு வலிமை இல்லை. நவக்கிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர்.

கருத்துரை

முருகா! எனது வினைகளைத் தூளாக்கி,  உனது திருவடிப் பேற்றினை அருள்வாய்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...