திரு ஏகம்ப மாலை - 27


"பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவைஅன்னாள்

தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர், தாரணியில்

உன்னை நினைந்துஇங்கு உனைப் பூசியாத உலுத்தர்எல்லாம்

என்னை இருந்து கண்டாய், இறைவா, கச்சி ஏகம்பனே,"


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பொன் பொருளைச் சேர்க்க எண்ணி, அதனையே மிகுதியாகத் தேடுவார்கள். பூவை போல்பவளாகிய மாதைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்கள். பூமியில் பிறந்து உன்னைப் பூசிக்காத உலோபிகள் எல்லோரும், உயிரோடு இருந்து என்ன பயன்?

விளக்கம் --  பூமியில் பிறப்பதன் நோக்கமே பிறப்பை அறுத்துக் கொண்டு, நிலையான பேரின்ப வீட்டை அடைவதாகும். மறுபிறப்பு என்று ஒன்று இருப்பதானாலும் கூட, அந்தப் பிறவியிலே இன்பமாக வாழவேண்டி, இப் பிறப்பிலே நல்வினைகள் ஏதும் புரியாமல், இந்த உடம்பையே பெரிதாக மதித்து, பொருளால் தான் எல்லாம் ஆகும் என்று மதிமயங்கி, பொன்னையும், அதற்கான பொருளையும் தேடுவதிலேயே வாழ்நாளில் மிகுதியாக முயலுவார்கள்.  இதனால், மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு வருகின்றது. பிறந்தாலும் விரும்புகின்ற முழு இன்பமானது கிடைப்பதில்லை. காரணம், இம்மை இன்பம் கருதிக் கூட நல்வினைகளைச் செய்வதில்லை.  


"பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றார் திருவள்ளுவ நாயனார்.  நிலையில்லாத பொருள்களை நிலைத்த பொருளாகக் கருதும் மயக்க உணர்வுகளைத் தருகின்ற வினைகளால் சிறப்பு இல்லாத பிறப்பு உண்டாகும்.  

தோன்றிய அனைத்துமே நிலையில்லாதவை. சிறிது காலம் நின்று அழிபவை. உடம்பு நிலையில்லாதது. இளமை நிலையில்லாதது. செல்வம் நிலையில்லாதது.  உலகப் பொருள்கள் அனைத்தும் நிலையில்லாதவை.  நிலையில்லாத உடம்பை ஓம்ப, நிலையில்லாத பொருளைத் தேடி, தானே துய்ப்போம் என்று வைத்து இருந்து, தானும் முழுதாகத் துய்க்காமல், பிறருக்கும் பயன்படாமல், வாழ்ந்து, உடம்பையும், வாழ்நாளையும், செல்வத்தையும் வறிதாக்கி வாழும் நிலை கூடாது.


"பொருளான் ஆம்எல்லாம் என்று, ஈயாது இவறும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றும் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.  கைப்பொருள் ஒன்றால்தான் எல்லாம் ஆகும் என்று, வறியவர்க்குப் பொருளை ஈயாமல், கை இறுக்கம் செய்யும் மயக்கத்தால், இழிந்த பிறப்பே உண்டாகும்.

ஆக, பொன் பொருளைத் தேடுவதிலேயே கருத்து கூடாது. உடல் இன்பத்தையே நிக விரும்பி, அதிலே மனம் மயங்குவதும் கூடாது.

நம்மை இந்த உலகத்தில் படைத்து, நமக்காக உலகப் பொருள்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அருளுகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி, தேடிய பொருளைக் கொண்டு புண்ணியச் செயல்களைச் செய்து வாழாதவர்கள் நரகமே அடைவர். பொருளைத் தேடி எண்ணி மிகுதியாய்த் தேடுவார்களும், பெண்களைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்களும் ஆகி, பூமியில் இறைவனை எண்ணி வணங்காதவர்கள்,  உலுத்தர்கள், யாருக்கும் உதவாதவர்கள்.  இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன் என்றார்.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...