திரு ஏகம்ப மாலை - 28

"கடும்சொலின் வம்பரை, ஈனரை, குண்டரை, காமுகரை,

கொடும்பவமே செயும் நிர்மூடர் தம்மை, குவலயத்துள்

நெடும்பனை போல வளர்ந்து, நல்லோர் தம் நெறி அறியா

இடும்பரை ஏன் வகுத்தாய், இறைவா, கச்சி ஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! எந்த நேரமும் கடுமையான சொற்களைப் பேசும் வீணர்களையும், ஒழுக்கம் இல்லாத இழிகுணம் உடையவர்களையும், புறணி பேசுகின்றவர்களையும், காமுகரையும், கொடிய பாவத்தையே செய்கின்ற முழுமூடர்களையும்,   பூமியிலே நீண்ட பனைமரம் போல உருவத்தால் மாத்திரம் வளர்ந்து இருந்து, நல்லவர்கள் சொல்லும் நெறியினை அறியாத ஆணவம் பிடித்தவர்களை, யாது காரணம் பற்றிப் படைத்தாய்?

விளக்கம் --- குண்டர் - சோர புத்திரர். இனிமையும் நன்மையும் பயவாத, பாவத்தையே பயக்கும் கடும் சொற்களை எந்நாளும் பேசுபவர்களை, "கடும்சொல் வம்பர்" என்றார். புகழ் தரும் செயல்களை ஒழித்துப், பழிக்கு ஏதுவான செயல்களையே செய்து, ஏதும் கவலை இல்லாமல் வாழ்வோரை "ஈனர்" என்றார். பிறருக்குச் செய் தீவினைகள் தமக்குத் துன்பம் தருவதைச் சற்றும் எண்ணாது, மேன்மேலும் அச் செயல்களையே செய்வதால், "கொடும் பாவமே செய்யும் நிர்மூடர்" என்றார்.


 

No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...