திருத் தில்லை - 14

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல், ஏக்கற்று இருப்பர்களே."


கங்கை நதியோடு, தும்பை மலரையும் தரித்து ஆடுகின்ற அம்பலவாணப் பெருமானை வழிபடாதவர்களுக்கு இந்த உலகத்தில் அடையாளம் உள்ளது. அது என்னவென்றால், சோற்று வாசனை இல்லாமல், சுகம் ஏதும் இல்லாமல், உடுத்திக் கொள்ள ஆடை ஏதும் இல்லாமல், பிச்சை எடுத்தாலும் கிடைக்காமல் ஏங்கி இருப்பவர்கள்.


"இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையை சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே"


என்னும் சுந்தரர் தேவாரத்தினை எண்ணுக.


53. ஈடு ஆகுமோ?

 


                       53. ஈடாகுமோ?

                                   ---


தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்

     சந்திரற் கீடாகுமோ?

தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு

     தம்பட்ட ஓசையாமோ?


கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு

     குஞ்சரக் கன்றாகுமோ?

கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு

     கோகனக மலராகுமோ?


பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு

     பைம் பொன்மக மேருவாமோ?

பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்

     பனன்ஒருவ னுக்குநிகரோ?


வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரணக்கொடி ஒரு கரத்தில் பிடித்து, ஒன்றில் வடிவேல் பிடித்த முருகா - ஒரு திருக்கையிற் சேவற்கொடியையும், ஒரு திருக்கையில் வடிவேலையும் பிடித்த முருகப் பெருமானே! 


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும் சந்திரர்க்கு ஈடாகுமோ - ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளி வீசினும் திங்களுக்கு ஒப்பாகுமோ? 


தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ - மரத்தில் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல கூடினாலும், ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?


கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சரக்கன்று ஆகுமோ - அழகற்ற பன்றிக் குட்டிகள் பல சேர்ந்தாலும் ஒரு யானைக் கன்றுக்குச் சமம் ஆகுமோ?


வாவியில் பல கொட்டிமலர் கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ - பொய்கையிலே பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல் அழகு பெறுமோ?


பாரம் மிகு மாமலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மகமேரு ஆமோ - பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும் ஒப்பற்ற பொன் மலையான மகாமேருவுக்குச் சமமாகுமோ? 


பலன் இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ - பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு மகனுக்கு ஒப்பாவரோ?


     அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே மேல் என்பது கருத்து.


68. விருந்துக்கு உரிய கிழமை

 


               68. விருந்துக்கு உரிய கிழமை

                                 ----- 


செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;


பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;


மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;


அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அம்கையில் விளங்கி வளர் துங்க மழுவாளனே - உள்ளங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுப்படையை உடையவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


செங்கதிர்க்கு விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை வரும் - ஞாயிற்றுக் கிழமையில் ஒருவர் விருந்து செய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும்;


திங்களுக்கு உறவு உண்டு; நன்மை ஆம் - திங்கட் கிழமையில் (விருந்து உண்டால்) உறவு வரும்; வேறு நன்மையும் உண்டாகும்;


செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும் - செவ்வாய்க் கிழமையில் விருந்து உண்ணமாட்டார், (உண்டால்) பகை உண்டாகும்;


பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் - நலம் மிகு புதன்கிழமையில் நலம் உண்டாகும், உறவும் உண்டாகும்; 


பொன்னவற்கு விருந்து உண அதிக பகை ஆம் - வியாழனில் விருந்து உண்டால் மிகு பகைவரும்;


புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் - வெள்ளிக் கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர்;


மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் - முகில் அனைய சனிக்கிழமை நலம் உண்டாகும்;


இதனினும் மனம் ஒத்து இருந்த இடம் வாலாயமாய்ப்போய் விருந்து உண விருந்து உதவ வாய்த்த நாள் என்று அறியலாம் - மேலும் இந்த நாளே உள்ளம் ஒத்து உள்ள இடத்தில் வழக்கமாகச் சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என உணரலாம்.


சனியின் நிறம் கருமை. ஆகையால், ‘மங்குல் நிகர் சனி' என்றார். அகம் + கை - அங்கை. உள்ளங்கை. விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்ற நாள்கள் நலமானவை என்பது கருத்து.


திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...