இனநலம் எல்லாப் புகழும் தரும்

 


இனநலம் எல்லாப் புகழும் தரும்

-----

 

     பனைமரத்தில் இருந்து அது தருகின்ற நீரை இறக்குன்றார்கள். அதில் சிறிது சுண்ணாம்பு கலந்தால்பருகுவதற்கு இனிய சுவையினை உடையதுமாய்உடலுக்கு நலம் தருவதாய் உள்ள "பதநீர்" ஆகின்றது. நலம் விரும்புவோர் யாவரும் அதனைப் பருகலாம். 

 

     சுண்ணாம்பு  தோயாத  நீரானதுபுளித்துப் போய்கள் ஆக மாறுகின்றது. அதனைக் குடித்தால் அறிவு மயக்கம் கொள்ளுகின்றது. உடல் நலத்தை நாளடைவில் குலைக்கின்றது. கள்ளைப் பருகுபவனுக்கு மட்டுமல்லாமல்அவனது குடிக்கும் கேடு தருகின்றதுஅவனைச் சார்ந்தோர்க்கும் துன்பத்தை விளைக்கின்றது.

 

     பதநீர் எல்லோராலும் விரும்பப்படுகின்றது. கள் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது.

 

     பதநீர்பின்பு பனைவெல்லமாகவும்பனங்கற்கண்டாகவும் மாறி எல்லோர்க்கும் நலம் தந்து உதவுகின்றது. கள்ளானது இழிந்து கழிந்து பின்னர் ஒரு தொடர்பும் இன்றி அடியோடு அழிந்து போகின்றது.

 

     அதுபோலவேஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களானாலும்சத்துவ குணம் உடைய உத்தமரைச் சார்ந்து இருக்கின்ற பிள்ளைநல்லவனாகின்றான்நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்துஇப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றெடுக்கஇவன் தந்தை என்ன தவம் செய்தானோ? (என் நோற்றான் கொல்?) என்று எல்லோரும் புகழும்படியாக (தனது பருவுடலை நீத்த பின்னும்) நல்லோர் மனதில் எக்காலத்தும் வாழுகின்றான்.

 

     நல்லோரைச் சாராதவன்அப்பொழுதில் இருந்தே பொல்லாதவனாக மாறிதானும் பயனுற வாழாமல் போகின்றான்தன்னைச் சார்ந்தோரையும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றான்அவனுடைய சந்ததியும் சீராக இல்லாமல் போகின்றது. "தக்கார் தகவு இலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிதல் வேண்டும்.

 

     "தருமதீபிகை" என்னும் நூலில்இக் கருத்தைத் தாங்கி வரும் பாடல் ஒன்றைக் காண்போம்...

 

"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தார் ஏனும்,

பெரியார் நட்பு உற்றார் பெரியார் --- பெரியார்நட்பு

இல்லரேல் புல்லரேஇன்பனை நீர் சுண்ணம் உறின்

நல்லதுஇன்றேல் பொல்லதாம் நாடு".

 

     பனைமரம் தாய்க்கு ஒப்பு. அதன் நீர் பிள்ளைக்கு ஒப்பு. வெண்ணிறச் சுண்ணம்தூய உள்ளம் படைத்த சான்றோர்க்கு ஒப்பு. பதநீர் நல்ல பிள்ளைக்கு ஒப்பு. கள் இழிந்த பிள்ளைக்கு ஒப்பு.

 

"கள்ளும்பொய்யும்காமமும்கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை".     --- மணிமேகலை.

 

     கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத்தில் தோன்றுங் களவும் (திருட்டுப் புத்தி) தீயன என்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவை என்று பணிமேகலை கூறுகிறது. இந்த அரிய சொல்லைக் கைக்கொள்வதுதான் விவேகம் ஆகும்.

 

      'விவேகம்'என்னும் சொல்லுக்குப்பகுத்தறியும் வல்லமைபுத்திகூர்மைஅறிவுநுட்பம் என்று பொருள் உண்டு. நன்மை தீமையைப் பகுத்து அறிவது விவேகம். வேகம் நீங்கினால் விவேகம் பிறக்கும். வேகத்தில் செய்யும் செயல்கள் முழுமையாக வெற்றியைத் தருவது இல்லை. விவேகத்தோடு செய்யும் செயல்கள் முழு வெற்றியைத் தருவன. "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க" என்று மணிவாசகப் பெருமான் காட்டியது இந்தக் கருத்தில்தான். இதை "நித்தியாநித்திய வஸ்து விவேகம்" "நித்திய அநித்திய நிர்ணயம் தெரி விவேகம்" என்று கைவல்யம் கூறும்.

 

     சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஓர் அரிய மணி. அது நினைத்ததை எல்லாம் அளிக்கும் என்று கூறுவர்.  விவேகத்தை சிந்தாமணி போல அருள்கின்ற "விவேக சிந்தாமணி" என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதை அருளியவர் யார்அவருடைய காலம் என்னஎன்பன போன்ற ஆராய்ச்சிக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை. ஆனாலும்சான்றோர்களால் போற்றப்படுகின்ற நூல் "விவேக சிந்தாமணி" என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. பல வாழ்வியல் உண்மைகளைத் தெரிவிக்கின்ற நூல் இது.

 

     இந்த விவேக சிந்தாமணியில்வினா விடையாக ஒரு செய்தி சொல்லப்பட்டு உள்ளது. வினாவைத் தொடுப்பது ஒரு பரத்தை. அதற்கு விடை இறுப்பவள் அவளது தோழி. பரத்தையின் தோழி பரத்தையாகத் தானே இருப்பாள்ஆனால்பரத்தையர்கள் சிந்தையிலும் அற உணர்வு உள்ளது என்பது இந்த நூலைப் படித்தால் தெரியும். 

 

      தலைவிதனது தோழியைப் பார்த்து, "எனக்குத் தாயைப் போன்ற தோழியே! அற உணர்வை உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணே! உன்னிடத்தில் ஒர் உண்மையைக் கேட்பேன். அதனைத் தெளிந்து எனக்கு நீ சொல்லுதல் வேண்டும். தமக்கு இன்பம் வேண்டிஎன்னைக் கூடி மகிழ வருபவர்கள்எனக்கும் இன்பத்தைத் தருகின்றார்கள். அது அல்லாமல் பொன்னையும் பொருளையும் வேறு தருகின்றார்கள். அதுவும் அல்லாமல் எனது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றார்கள். இது ஏனோ?" என்று கேட்கின்றாள். பாடலைப் பார்ப்போம்....

 

"அன்னையே அனைய தோழி!

            அறந்தனை வளர்க்கும் மாதே!

உன்னை ஓர் உண்மை கேட்பேன்,

            உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்;

என்னையே புணருவோர்கள் 

            எனக்கும் ஓர் இன்பம் நல்கிப்

பொன்னையும் கொடுத்துப் பாதப் 

            போதினில் வீழ்வதேனோ? "

 

     இந்த வினாவிற்கு விடையைத் தோழியானவள் திறம்படத் தெளிந்து சொல்லுகின்றாள். நமக்கு அறிவில் தெளிவு இல்லாமல் குழம்பி இருக்கும் காலத்தில்தெளிவுபடுத்துவது தோழன் ஆகும். எனவேதான்நட்பைப் பெரிதும் போற்றுகின்றோம். அப்படிப்பட்ட அருமையான தோழிதனது தலைவியின் ஐயம் தெளிதல் பொருட்டுப் பின்வருமாறு விடை பகருகின்றாள்.

 

     "காதல் உணர்விற்குத் தலைவனான மன்மதன்,காதல் உணர்வை உயிர்களுக்கு ஊட்டிகாதல் போரை உண்டாக்குவான். (மலர்க் கணைகளைச் சொரிவான்) அந்த மன்மதனே மயங்கி விழும்படியான பெருத்துக் குவிந்த மார்பகங்களை உடையவளே! (எனது தலைவியே!)  நான் ஒன்று கூறுவேன்கேட்பாயாக. நல்ல அறச் செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமானது பாழாகவேண்டும் என்றுதான்பிரமதேவன் நம்மைப் போன்ற கணிகைகளையும்குடித்து மயங்குவதற்கான கள்ளையும்பொருளைத் தோற்று அழிவதற்கான சூதாட்டத்தையும் படைத்து வைத்தான்" பாடலைப் பார்ப்போம்.... 

 

"பொம் எனப் பணைத்து விம்மிப்

            போர்மதன் மயங்கி வீழும்

கொம்மைசேர் முலையினாளே!

            கூறுவேன் ஒன்று கேண்மோ;

செம்மையில் அறம் செய்யாதார் 

            திரவியம் சிதற வேண்டி

நம்மையும் கள்ளும் சூதும்

            நான்முகன் படைத்தவாறே!"

 

     திரு நீக்கப்பட்டார் என்பதுதிருவால் நீக்கப்பட்டவர் என்று  பொருள்படும். விலைமாதர் ஆசை கொண்டோர்கள் குடிப்போர் மற்றும் சூதாடுவோர் ஆகிய இவர்களே திருவால் நீக்கப்பட்டவர்கள் என்பது மேற்குறித்த வினாவிடைப் பாடல்களால் தெளிவாகும். இந்த உரையாடல் பாடல்களுக்கு,  கரு எங்கிருந்து வந்தது என்று பார்ப்போமானால்அதுவான்புகழ் கொண்ட திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளே ஆகும். கள்திருநீக்கப்பட்டார் தொடர்புகள் மூன்றில் ஒன்று என்று திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

 

"இருமனப் பெண்டிரும்கள்ளும்,கவறும்,

திருநீக்கப் பட்டார் தொடர்பு"

 

என்பது திருக்குறள்.

 

     இருமனப் பெண்டிரும் - இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் - கள்ளும்சூதும் - சூதாட்டம் ஆகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

 

     நல்லோர் சேர்க்கை நலத்தை விளைக்கும். தீயோர் சேர்க்கை தீமையை விளைக்கும். சான்றோர் இனத்துள் தானும் ஒருவனாக வாழ வல்லவனைப் பகைவர் எவரும் அவனைச் செய்வதற்கு எதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

 

"தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுகவல்லானை,

செற்றார் செயக் கிடந்தது இல்"             --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

யோகமுனி ராகவனை உற்றுஅரக்கர் போர்களைந்தே

யாகம் முடித்தான்,இரங்கேசா! --- ஆகையால்

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்.    

 

இதன் பொருள் ---        

 

       இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! யோகமுனி - இராஜயோக சாதக மாமுவனிவராகிய விசுவாமித்திரர்ராகவனை உற்று - இராம பிரானைத் துணையாகப் பெற்றுஅரக்கர் போர் களைந்து - மாரீசன் சுவாகு என்னும் அசுரர் சண்டையை நீக்கியாகம் முடித்தான் - தாம் தொடங்கின யாகத்தை நிறைவேற்றிக் கொண்டார்,  (ஆகையால்இது) தக்கார் இனத்தனாய் - மேலாரோடு சேர்ந்து கொண்டவன் ஆகிதான் ஒழுக வல்லானை - (ஒருவன்) தான் தக்கபடி நடந்துகொள்ள வல்லவனானால் (அவனை)செற்றார் - பகைவர்செயக் கிடந்தது இல் - செய்யக் கூடியதாகிய தீங்கு ஒன்றும் இல்லை (என்பதை விளக்குகின்றது).

 

      கருத்துரை--- பெரியாரைச் சேர்ந்தாரைப் பகைவர் அஞ்சுவார்கள்.

 

      விளக்கவுரை--- விசுவாமித்திரர் இராமபிரானைத் துணையாகக் கொண்டுபோய்த் தமக்கு முதற்பகையாகிய தாடகையைக் கொல்வித்துபிறகு யாகபங்கம் செய்த தாடகையின் மக்களாகிய மாரீசன்சுவாகு என்பவரில் முன்னவனை வெருட்டித் துரத்திக் கடலில் இடுவித்துபின்னவனை ஓரே அம்பால் எமனுலகு சேர்ப்பித்தார். பிறகு அவர் தமது யாகத்தை இடையூறு இன்றி முடித்து, "உதவி வரைத்து அன்று உதவிஉதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்றபடி, இராமபிரான் தமக்குச் செய்த உதவிக்கு மாறுதவியாகஅவர்க்குத் தெய்வ வாளிகள் வழங்கிஅவரை அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குப் போய்சிவ வில்லை வளைப்பித்துச் சீதையைத் திருமணம் செய்வித்தார்.     

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...                  

 

"சிறியர் ஆயினார் சார்பினை விழையன்மின்,

     திறல்கெழு பெரியோராம்

அறிஞர் ஆயினார் சார்பினை விழைமினோ,

     அலர் இதழ் விரிகொன்றை

வெறி நறுந்தொடை எம்பிரான் சார்பினை 

     விழைதலால்,உரகங்கள்

மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின 

     வாழ்ந்தனையோ என்ன."     --- காஞ்சிப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     சிறியராவார் சார்பினை விரும்பாது இருங்கள் வலிமை பொருந்திய பெரியோர் ஆகிய அறிஞர் தொடர்பினை விரும்பி இருங்கள். இதழ் அலர்ந்து விரிகின்ற கொன்றையின் நறுமணங்கமழும் மாலையை அணிந்த எமது சிவபெருமான் சார்பினை விரும்பி இருந்த பாம்புகள்குற்றமற்ற வலிமை நிரம்பிய கருடனை நன்றாக உள்ளாயா?என்ன வினாவின.

 

"ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்;

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்

ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ?என்று

      உரைத்தவிதம் என்னல் ஆமே!"  --- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் ---

 

     பிள்ளாய்! ஆம் எனக் கொடுக்கும் பெரியோரை அடுத்தவர்கள் - இளைஞனே! முடியும் என்று அளிக்கும் சான்றோரைச் சார்ந்தவர்கள் அவனிக்கு எல்லாம் நாம் அதிகம் என்பர் - உலகிலே நாமே சிறப்பு உடையவர்கள் என்று  நடந்து கொள்வர்!நண்ணாரும் ஏவல் செய நாளும் வாழ்வார் - பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர்வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் - வானமே என்னும் எங்கும் நிறைந்த திருமேனியை உடைய தண்டலை இறைவரின் அணிகலனாக வளர்க்கப் பெற்ற பாம்புஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோஎன்று உரைத்தவிதம் என்னலாமே - ‘என்ன பிள்ளாய்! கருடனேநீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

 

      கருடனைக் கண்டால் பாம்பு நடுங்குவதுஇயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால்,கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தால் சுகம்என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும். 

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...