பொது - 1047. நாராலே தோல்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


நாராலே தோல் (பொது)


தானா தானா தானா தானா

     தானா தானத் ...... தனதான


நாரா லேதோல் நீரா லேயாம்

     நானா வாசற் ...... குடிலூடே


ஞாதா வாயே வாழ்கா லேகாய்

     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்


தாரா ரார்தோ ளீரா றானே

     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே


தாழா தேநா யேனா வாலே

     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்


பாரே ழோர்தா ளாலே யாள்வோர்

     பாவார்வேதத் ...... தயனாரும்


பாழூ டேவா னூடே பாரூ

     டேயூர் பாதத் ...... தினைநாடாச்


சீரார் மாதோ டேவாழ் வார்நீள்

     சேவூர் வார்பொற் ...... சடையீசர்


சேயே வேளே பூவே கோவே

     தேவே தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நாராலே தோல் நீராலே ஆம்

     நானா வாசல் ...... குடில் ஊடே,


ஞாதா ஆயே வாழ்கால் ஏகாய்,

     நாய்பேய் சூழ்கைக்கு ...... இடம் ஆம் முன்


தார்ஆர் ஆர்தோள் ஈர் ஆறானே!

     சார்வு ஆனோர் நல் ...... பெருவாழ்வே!


தாழாதே நாயேன் நாவாலே

     தாள் பாடு ஆண்மைத் ...... திறல்தாராய்.


பார் ஏழோர் தாளாலே ஆள்வோர்,

     பாவார் வேதத்து ...... அயனாரும்,


பாழ் ஊடே, வான் ஊடே, பார்

     ஊடே ஊர் பாதத் ...... தினை நாடாச்


சீர் ஆர் மாதோடே வாழ்வார், நீள்

     சே ஊர்வார், பொன் ...... சடை ஈசர்,


சேயே! வேளே! பூவே! கோவே!

     தேவே! தேவப் ...... பெருமாளே.


பதவுரை


பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர் --- ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற காத்தல் தொழிலாகிய முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும்,

பாவார் வேதத்து அயனாரும் --- பாடல்கள் வடிவில் உள்ள வேதத்தை ஓதும் பிமதேவனும்,

        பாழ் ஊடே வான் ஊடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா --- வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் திருவடியினை நாடமுடியாதவரும்,

        சீரார் மாதோடே வாழ்வார் --- சிறப்புப் பொருந்திய  பார்வதி தேவியுடன் வாழ்பவரும்,

நீள் சே ஊர்வார் பொற்சடை ஈசர் சேயே --- பெரிய காளையை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான சிவபிரானுடைய திருக்குமாரரே!

வேளே --- செவ்வேள் பரமரே!

பூவே --- அழகரே!

கோவே --- தலைவரே!

தேவே --- தேவரே!

தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

நாராலே தோல் நீராலே ஆம் --- நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள

நானா வாசல் குடில் ஊடே --- பலவித வாயில்களை (ஒன்பது வாசல்களை) உடைய குடிசையாகிய இந்த உடலினுள்

ஞாதாவாயே வாழ்கால் ஏகாய் --- அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற நாட்களில், உயிர் இறந்து போகும் காலத்தில்,

நாய்பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் --- நாயும் பேயும் என் உடலைச் சூழ்வதற்கான காலம் வருமுன்பாக,

தார் ஆர் ஆர்தோள் ஈர் ஆறானே --- ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

சார்வானோர் நல் பெருவாழ்வே --- சார்ந்தவர்களுக்கு நல்ல பெருவாழ்வாக உள்ளவரே!

தாழாதே நாயேன் நாவாலே --- சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் எனது நாவைக்கொண்டு

தாள்பாடு ஆண்மைத் திறல் தாராய் --- தேவரீரது திருவடிகளைப் பாடி உய்யும் வல்லமையைத் தந்து அருள்வீராக.


பொழிப்புரை

ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற காத்தல் தொழிலாகிய முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும், பாடல்கள் வடிவில் உள்ள வேதத்தை ஓதும் பிமதேவனும், வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் திருவடியினை நாடமுடியாதவரும், சிறப்புப் பொருந்திய  பார்வதி தேவியுடன் வாழ்பவரும், பெரிய காளையை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான சிவபிரானுடைய திருக்குமாரரே! செவ்வேள் பரமரே! அழகரே! தலைவரே! தேவரே!தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (ஒன்பது வாசல்களை) உடைய குடிசையாகிய இந்த உடலினுள் அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற நாட்களில் உயிர் இறந்து போகும் காலத்தில், நாயும் பேயும் என் உடலைச் சூழ்வதற்கான காலம் வருமுன்பாக, ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரு திருத்தோள்களை உடையவரே! சார்ந்தவர்களுக்கு நல்ல பெருவாழ்வாக உள்ளவரே! சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் எனது நாவைக்கொண்டு தேவரீரது திருவடிகளைப் பாடி உய்யும் வல்லமையைத் தந்து அருள்வீராக.


விரிவுரை


பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர் --- 

பார் ஏழ் - ஏழுலகங்கள்.

தாள் - முயற்சி. காத்தல் தொழிலால் ஆன முயற்சி. 

ஆள்வோர் - ஆள்பவர் ஆகிய திருமால்.


பா ஆர் வேதத்து அயனாரும் --- 

பாடல் வடிவில் உள்ள வேதங்களை சதா ஓதிவருகின்ற பிரமதேவன்.


பாழ் ஊடே ---

யாதும் அற்ற வெளியிலே.


வான் ஊடே ---

ஆகாயத்தின் ஊடே.


பார் ஊடே ---

மண்ணிலே

ஆகாயம், மண் இரண்டையும் குறப்பிடவே, மற்ற பூங்கள் ஆகிய காற்று, நெருப்பு, தண்ணீர் ஆகியவைகளையும் குறிக்கும்


ஊர் பாதத்தினை நாடா ---

பஞ்ச பூதங்களிலும், வெட்ட வெளியிலும் பரவி இருப்பது சிவபரம்பொருளின் திருவடி. அத் திருவடியினை யாராலும் நாட முடியாது. "யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிய ஒண்ணா மலர்ச் சோதியான்" என்று மணிவாசகர் பாடி இருத்தல் காண்க. 


சீரார் மாதோடே வாழ்வார் --- 

சீர் - சிறப்பு. மாது - இங்கே உமீதேவியைக் குறிக்கும்.


நீள் சே ஊர்வார் பொற்சடை ஈசர் சேயே --- 

நீள் சே - பெரிய காளை.

நீண்டவன் என்பது திருமாலைக் குறிக்கும். திரிபுர தகன காலத்தில் திருமால் இடபமாக இருந்து சிவபரம்பொருளைத் தாங்கினார். ஏனவே, நீள் சே என்றார்.


வேளே --- 

வேள் - மன்மதன், முருகன் இருவரையும் குறிக்கும். திருமாலின் மகனாகிய மன்மதன் கருவேள் எனப்படுவான். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் செவ்வேள் எனப்படுவார்.


பூவே ---

பூ - அழகு. 


நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடில் --- 

நார் - கயிறு. இங்கே நரம்பைக் குறிக்கும். "நரம்பால் ஆர்க்கை இட்டு" என்று கந்தர் அலங்காரத்தில் வருவது காண்க.

நீர் - இங்கே குருதியைக் குறிக்கும். நிணத்தைக் குறிக்கும்.

நானா வாசல் குடில் - பலவிதமான வாயில்களை உடைய குடிசை. இந்த மனித உடம்பில் பலவிதமாக அமையப் பெற்றுள்ள ஒன்பது வாசல்கள் உண்டு. "ஏழு சாலேகம் பண்ணி" என்றும், "ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்" என்றும் அப்பர் பெருமான் பாடி உள்ளது காண்க.


ஞாதாவாயே வாழ்காலே, காய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் --- 

ஞாதா - அறிவு மிக்கவன்.

காய் நாய் - குரைக்கின்ற நாய். 


தார் ஆர் ஆர்தோள் ஈர் ஆறானே --- 

தார் - மாலை. ஆர் - ஆத்தி. ஆர் தோள் - நிறைந்த தோள்.


சார்வானோர் நல் பெருவாழ்வே --- 

தன்னைச் சார்ந்த அடியவர்களை வாழவைப்பவன் முருகன்.

"சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி இருத்தல் காண்க.


தாழாதே நாயேன் நாவாலே தாள்பாடு ஆண்மைத் திறல் தாராய் --- 

தாழாதே - தாமதியாமல், காலம் கடத்தாமல்.


கருத்துரை


முருகா! உயிர் போகும் முன்னர் 

உம்மைப் பாடி உய்யும் திறத்தை அருள்வாய்.





No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...