திருத் தில்லை - 2

 


"பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி

வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து

பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாதவரைச்

சேராமல், செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை ---  திருத்தில்லையின்கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே!  தமது பழைய நிலையைக் கருதாது வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இருக்கவும், இரப்பவர்கள் மீது குற்றங்களையே எடுத்துக் கூறி வராமல் இருக்கவும், பாவங்கள் என்னை வந்து அடையாமல் இருக்கவும், முன் நின்ற நிலையில் இருந்து மனம் சோர்வுபடாமல் இருக்கவும், உன்னுடைய திருவடிச் சேவையைப் பிரியாமல் இருக்கவும்,  உன்னிடத்து அன்பு வைக்காதவரை நான் அடையாமல் இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.


விளக்கம் --  இரப்பவர்கள் தமது இளிவரவைத் தமக்குச் சொல்லுவதற்கு, முன்பே அவர் குறிப்பு அறிந்து கொடுத்தலும், இன்னொருவரிடம் சென்று அவர் தமது இளிவரவைச் சொல்லாது இருக்கும்படி கொடுத்தலும், நான் இப்போது பொருள் உடையவன் இல்லை என்று சொல்லி, இரப்பவரக்குக் கொடுக்காமல், கரக்கின்ற இழிநிலை வராமல் இருத்தலும், ஈகைக் குணம் உடையவர்க்கு உரிய குணங்களாதலால், பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல் என்றார்.


பிறர்மேல் குற்றும் கூறுவதையே செய்பவருக்கு யாவரும் பகையாகவே ஆவர் என்பதால், பிறர் தீமை சொல்லா நலமாகிய சான்றாண்மை வேண்டும் என்பார், பழுது சொல்லி வாராமல் என்றார். "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றார் திருவள்ளுவ நாயனார்.  


பிறர் தீமையைச் சொல்வதாலும், புறம் கூறுவதாலும், எல்லாப் பிறவிகளிலும் பாவங்கள் வந்து அணுகும் ஆதலால், அதைத் தவிர்த்து ஒழுகுதல் பொருட்டு, "பாவங்கள் வந்து அணுகாமல்" என்றார்.


வீட்டின்பத்தை அடைய முயலுவோர் செவி முதலாகிய ஐம்பொறிகளுக்குரிய ஓசை முதலாகிய ஐம்புலன்களையும் அவித்தல் வேண்டும். இல்லாவிடில், ஐம்புலன்கள் மனத்தைத் துன்பத்தினாலும், பாவத்தினாலும், தேடப்படும் பொருள்களின் மேல் அல்லாமல், முத்திவழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் மார்க்கங்களில் செல்ல ஒட்டாமல் செய்யுமாதலால், "மனம் அயர்ந்து பேராமல்" என்றார்.


முத்திப் பேற்றை அடைய வேண்டுமானால், பெருமான் திருவடியில் அன்பு மிக்கு, அகம் குழைந்து, மெய் அரும்பி, கையினால் தொழுதல் வேண்டும். அந் நெறியில் சிறிதும் வழுவாமல் வழிபாடு இயற்றிட வேண்டும் என்பார், "சேவை பிரியாமல்" என்றார்.  


அதற்கு உபாயமாக உள்ளது அடியவர் திருக்கூட்டத்தினைச் சார்ந்து இருத்தலே ஆகும். அல்லாதாரோடு சேர்ந்து இருந்தால் அல்லாதவை எல்லாம் வந்து சேரும். அல்லாத கூட்டமானது, ஒருவனை இருளிலே உய்த்து விடும். எனவே, நல்லோர் கூட்டத்தை அடைதல் வேண்டும் என்பார், "அன்பு பெறாதவரைச் சேராமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார். செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.  


திருவடிச் செல்வமானது, இம்மை மறுமை நலன்களைத் தரும் செல்வம் போல் அல்லாமல்,  நிரதிசயானந்தத்தைத் தரும். ஆகையால், அதனையே தரவேண்டும் என்று வேண்டினார். நிரதிசயானந்த இன்பம் வாய்க்குமானால், இம்மை மறுமை இன்பங்கள் கசக்கும்.


திருத் தில்லை - 1

 


"ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால்

கூடாமல், நல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோபம் நெஞ்சில்

நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கும் என்று

தேடாமல் செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை --- திருத்தில்லையின் கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே, ஒவ்வொரு விடயமாக ஓடாது இருக்கவும், வீணுக்கு உழைக்காது இருக்கவும், பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று தரத்திலும் பட்ச பாதமாய்ப் போசுவோரிடத்துச் சேராது இருக்கவும், நல்லவர்களின் கூட்டத்தை விட்டு நீங்காமல் இருக்கவும், என் மனத்தில் கொடிய சினமானது எழாது இருக்கவும், நன்மை தருவன எவற்றையும் நீங்காது இருக்கவும், இன்றைக்கு வேண்டும், நாளைக்கு வேம்டும் என்று பொருள் முதலியவற்றைத் தேடாது இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.  


விளக்கம் --- மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை என்றும், மற்றும் இத் தன்மையான விஷயங்களைச் சொல்லும் மயக்கநூல் வழக்குகளையே மெய்ந்நூல் எனத் துணிந்து, அக் கொள்கைகளை உடையவரிடத்து செல்லாது இருக்க வேண்டும் என்பார், "ஓடாமல்" என்றார்.


காமம், வெகுளி, மயக்கும் என்னும் முக்குற்றங்களையும் கடிந்து, இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனவொழுக்கம், தாரணை, தியானம், சமாதி என்று சொல்லப்படும் எண் பகுதியாகிய யோக நெறிகளில் எப்போதும் உழைத்து உயிருக்குரிய ஊதியத்தைப் பெறவேண்டுமேயல்லாது, பிற விஷயங்களில் உழைக்கக் கூடாது என்பார்,  "பாழுக்கு உழையாமல்" என்றார். "பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழ மாட்டேன், மாயமும் தெளியகில்லேன்" என்பார் அப்பர் பெருமான்.


விருப்பு, வெறுப்பு காரணமாக ஒருதலையாகப் பேசுதல் விடுத்து, சொல்ல நினைப்பவைகளைத் தீமை பயக்காதவையாகச் சொல்லுவதால் தனக்கும் கேடு இல்லை, பிறருக்கும் கேடு இல்லை.  அவ்வாறு இல்லாதவரால் கேடு விளையும் என்பதால், "ஓரம் உரைப்பவர் பால் கூடாமல்" என்றார்.  ஓரம் பேசுதல் தீயது என்பதை, "வேதாளம் சேருமே, வெள்எருக்குப் பூக்குமே, பாதாள மூலி படருமே, மூதேவி சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்று ஓரம் சொன்னார் மனை" என்னும் ஔவைப் பிராட்டியாரின் அருள் வாக்கு தெளிவிக்கும்.


நல்லவர்களைச் சேர்ந்து இருந்தால் நல்ல குணங்களை உடையவராவர். தீய குணங்கள் உடையவரைச் சேர்ந்து இருந்தால், தீய குணங்களே மிகும் என்பதால், "நல்லவர் கூட்டம் விடாமல்" என்றார்.


நெருப்பானது தான் சேர்ந்து இடத்தை மட்டுமே சுடும். ஆனால், சினம் என்னும் நெருப்போ, தான் சேரந்தவரை மட்டுமன்றி, சுற்றத்தையும் சுடும் ஆதலால், "நெஞ்சில் வெம் கோபம் நாடாமல்" என்றார். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்" என்பது திருக்குறள்.  


இன்பத்தின் காரணமாகச் செய்யும் தீவினைகள், முடிவில் துன்பத்தையே தருபவை ஆதலால், அதனை ஒழித்து,  ஒருவருக்கு நன்மையைச் செய்தால், அந்த நன்மையை எழுபிறப்பும் நினைத்துப் பார்ப்பர். எனவே, "நன்மை வழுவாமல்" என்றார்.


அவரவர் ஈட்டிய இருவினைக்கு ஈடாக, எப்போது என்ன என்று எழுதி வைக்கப்பட்டு விட்டது.  அதைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. தேடவேண்டியது இறையருளையே. அதனால், "இன்றைக்கு நாளைக்கு என்று தேடாமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார்.  செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.


திரு ஏகம்ப மாலை - 29

 



"கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம், பின்பு கொன்று கொன்று

தின்றேன், அது அன்றியும் தீங்கு செய்தேன், அது தீர்க்க என்றே

நின்றேன் நின் சந்நிதிக்கே, அதனால் குற்றம் நீ பொறுப்பாய்

என்றே உனை நம்பினென், இறைவா, கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  அநேகமான உயிர்களை எல்லாம் நான் கொன்றேன்.  பிறகு, கொலைசெய்து, கொலைசெய்து உண்டேன். அது அல்லாமலும் மற்றும் பல தீமைகளையும் செய்தேன். அவைகள் தீரவேண்டும் என்று பெருமானின் சந்நிதியில் நின்றேன். ஆதலால், எனது குற்றங்களை எல்லாம் தேவரீர் பொறுத்து அருளுவீர் என்றே நம்பி இருக்கின்றேன்.


விளக்கம் --  உயிர்க்கு உறுதி பயக்கும் செயல்களைச் செய்யாமல் தீத் தொழில்களையே செய்தேன் என்பார், "கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம்" என்றார். "கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று" என்பதையும் அறவே மறந்தேன். "கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என்றார் அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமானார்.


"தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" என்றார் திருவள்ளுவ நாயனார். இத்தனை பெரியோர்கள் சொன்ன அருள்மொழிகள் அனைத்தையும் மறந்து,  கொன்றதோடு மட்டும் அல்லாமல், கொன்றவற்றை எல்லாம், எனது ஊன் உடம்பு கொழுப்பதற்குத் தின்றேன் என்பார், "பின்பு கொன்று கொன்று தின்றேன்" என்றார்.


பதினோராம் திருமுறையில் திருக்கழுமல மும்மணிக்கோவை என்னும் நூலில் பின்வருவாறு அடிகளார் பாடியுள்ளதை நோக்குக...


"அகில லோகமும், அனந்த யோனியும்,

நிகிலமும் தோன்ற, நீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து

யாரும், யாவையும், எனக்குத் தனித்தனித்

தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்

வந்து இலாதவர் இல்லை, யான் அவர்

தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்

வந்து இராததும் இல்லை, முந்து

பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்

இறவா நிலனும் இல்லை, பிறிதில்

என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,

யான் அவை தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,

அனைத்தே காலமும் சென்றது..."



கோயில் திருஅகவல் என்னும் பாடலில் பின்வருமாறு பாடியுள்ளார் அடிகளார்.....


"பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்,

கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,

தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,......"


திரு ஏகம்ப மாலை - 28

"கடும்சொலின் வம்பரை, ஈனரை, குண்டரை, காமுகரை,

கொடும்பவமே செயும் நிர்மூடர் தம்மை, குவலயத்துள்

நெடும்பனை போல வளர்ந்து, நல்லோர் தம் நெறி அறியா

இடும்பரை ஏன் வகுத்தாய், இறைவா, கச்சி ஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! எந்த நேரமும் கடுமையான சொற்களைப் பேசும் வீணர்களையும், ஒழுக்கம் இல்லாத இழிகுணம் உடையவர்களையும், புறணி பேசுகின்றவர்களையும், காமுகரையும், கொடிய பாவத்தையே செய்கின்ற முழுமூடர்களையும்,   பூமியிலே நீண்ட பனைமரம் போல உருவத்தால் மாத்திரம் வளர்ந்து இருந்து, நல்லவர்கள் சொல்லும் நெறியினை அறியாத ஆணவம் பிடித்தவர்களை, யாது காரணம் பற்றிப் படைத்தாய்?

விளக்கம் --- குண்டர் - சோர புத்திரர். இனிமையும் நன்மையும் பயவாத, பாவத்தையே பயக்கும் கடும் சொற்களை எந்நாளும் பேசுபவர்களை, "கடும்சொல் வம்பர்" என்றார். புகழ் தரும் செயல்களை ஒழித்துப், பழிக்கு ஏதுவான செயல்களையே செய்து, ஏதும் கவலை இல்லாமல் வாழ்வோரை "ஈனர்" என்றார். பிறருக்குச் செய் தீவினைகள் தமக்குத் துன்பம் தருவதைச் சற்றும் எண்ணாது, மேன்மேலும் அச் செயல்களையே செய்வதால், "கொடும் பாவமே செய்யும் நிர்மூடர்" என்றார்.


 

திரு ஏகம்ப மாலை - 27


"பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவைஅன்னாள்

தன்னை நினைந்து வெகுவாய் உருகுவர், தாரணியில்

உன்னை நினைந்துஇங்கு உனைப் பூசியாத உலுத்தர்எல்லாம்

என்னை இருந்து கண்டாய், இறைவா, கச்சி ஏகம்பனே,"


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பொன் பொருளைச் சேர்க்க எண்ணி, அதனையே மிகுதியாகத் தேடுவார்கள். பூவை போல்பவளாகிய மாதைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்கள். பூமியில் பிறந்து உன்னைப் பூசிக்காத உலோபிகள் எல்லோரும், உயிரோடு இருந்து என்ன பயன்?

விளக்கம் --  பூமியில் பிறப்பதன் நோக்கமே பிறப்பை அறுத்துக் கொண்டு, நிலையான பேரின்ப வீட்டை அடைவதாகும். மறுபிறப்பு என்று ஒன்று இருப்பதானாலும் கூட, அந்தப் பிறவியிலே இன்பமாக வாழவேண்டி, இப் பிறப்பிலே நல்வினைகள் ஏதும் புரியாமல், இந்த உடம்பையே பெரிதாக மதித்து, பொருளால் தான் எல்லாம் ஆகும் என்று மதிமயங்கி, பொன்னையும், அதற்கான பொருளையும் தேடுவதிலேயே வாழ்நாளில் மிகுதியாக முயலுவார்கள்.  இதனால், மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு வருகின்றது. பிறந்தாலும் விரும்புகின்ற முழு இன்பமானது கிடைப்பதில்லை. காரணம், இம்மை இன்பம் கருதிக் கூட நல்வினைகளைச் செய்வதில்லை.  


"பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றார் திருவள்ளுவ நாயனார்.  நிலையில்லாத பொருள்களை நிலைத்த பொருளாகக் கருதும் மயக்க உணர்வுகளைத் தருகின்ற வினைகளால் சிறப்பு இல்லாத பிறப்பு உண்டாகும்.  

தோன்றிய அனைத்துமே நிலையில்லாதவை. சிறிது காலம் நின்று அழிபவை. உடம்பு நிலையில்லாதது. இளமை நிலையில்லாதது. செல்வம் நிலையில்லாதது.  உலகப் பொருள்கள் அனைத்தும் நிலையில்லாதவை.  நிலையில்லாத உடம்பை ஓம்ப, நிலையில்லாத பொருளைத் தேடி, தானே துய்ப்போம் என்று வைத்து இருந்து, தானும் முழுதாகத் துய்க்காமல், பிறருக்கும் பயன்படாமல், வாழ்ந்து, உடம்பையும், வாழ்நாளையும், செல்வத்தையும் வறிதாக்கி வாழும் நிலை கூடாது.


"பொருளான் ஆம்எல்லாம் என்று, ஈயாது இவறும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு"


என்றும் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.  கைப்பொருள் ஒன்றால்தான் எல்லாம் ஆகும் என்று, வறியவர்க்குப் பொருளை ஈயாமல், கை இறுக்கம் செய்யும் மயக்கத்தால், இழிந்த பிறப்பே உண்டாகும்.

ஆக, பொன் பொருளைத் தேடுவதிலேயே கருத்து கூடாது. உடல் இன்பத்தையே நிக விரும்பி, அதிலே மனம் மயங்குவதும் கூடாது.

நம்மை இந்த உலகத்தில் படைத்து, நமக்காக உலகப் பொருள்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அருளுகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி, தேடிய பொருளைக் கொண்டு புண்ணியச் செயல்களைச் செய்து வாழாதவர்கள் நரகமே அடைவர். பொருளைத் தேடி எண்ணி மிகுதியாய்த் தேடுவார்களும், பெண்களைத் தழுவ எண்ணி மிகுதியாய் மனம் நைவார்களும் ஆகி, பூமியில் இறைவனை எண்ணி வணங்காதவர்கள்,  உலுத்தர்கள், யாருக்கும் உதவாதவர்கள்.  இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன் என்றார்.


பொது --- 1098. அளகநிலை குலைய

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அளகநிரை குலையவிழி  (பொது)


முருகா! 

திருவடி அருள்வாய்.


தனனதன தனனதன தனனதன தனனதன

     தனனதன தனனதன ...... தனதான


அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென

     அமுதமொழி பதறியெழ ...... அணியாரம்


அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக

     அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம்


உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு

     முறுகபட மதனில்மதி ...... யழியாதே


உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு

     னுபயநறு மலரடியை ...... அருள்வாயே


வளையுமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு

     மருதினொடு பொருதருளு ...... மபிராமன்


வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்

     மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர்


தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற

     தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா


தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ

     சகலகலை முழுதும்வல ...... பெருமாளே.


                       பதம் பிரித்தல்


அளக நிரை குலைய, விழி குவிய, வளை கலகல என,

     அமுதமொழி பதறி எழ, ...... அணிஆரம்


அழகு ஒழுகு புளகமுலை குழைய, இடை துவள, மிக

     அமுதநிலை அது பரவ, ...... அதிமோகம்


உளம் உருக, வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும்

     உறு கபடம் அதனில் மதி ...... அழியாதே,


உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும்

     உன் உபய நறு மலர் அடியை ...... அருள்வாயே.


வளையும் அலை கடல் சுவற, விடு பகழி வரதன், இரு

     மருதினொடு பொருது அருளும் ...... அபிராமன்,


வரி அரவின் மிசைதுயிலும் வரத, ஜயமகள் கொழுநன்,

     மருக! அமர் முடுகி வரு ...... நிருதேசர்


தளம் முறிய, வரைதகர, அசுரர்பதி தலைசிதற,

     தகனம் எழ முடுகவிடு ...... வடிவேலா!


தரள மணி வடம் இலகு குறவர் திருமகள் கணவ!

     சகலகலை முழுதும் வல ...... பெருமாளே.


பதவுரை

வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் --- சூழ்ந்து உள்ள கடல் வற்றிப் போகுமாறு கணையை விடுத்து அருளியவரும், அடியார்களுக்கு வரங்களை அருள்பவனும்,

இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் --- இரண்டு மருதமரங்களைத் தகர்த்து அருள்பாலித்த அழகனும், 

வரி அரவின் மிசை துயிலும் வரத --- கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதனும்

ஜயமகள் கொழுநன் மருக --- வெற்றித் திருமகள் கணவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய --- போர்க்களத்தில் முடுகி வந்த அரக்கர் தலைவனின் சேனைகள் சிதறி ஓடவும்,

வரை தகர --- கிரவுஞ்ச மலை பொடிபடவும்,

அசுரர் பதி தலை சிதற --- சூரர் தலைவன் தலை சிதற,

தகனம் எழ முடுகவிடு வடிவேலா --- அனைத்தும் எரிந்து அழியுமாறு நெருப்புப் பெருகி எழுமாறு வேலை விரைந்து விடுத்து அருளியவரே!

தரள மணிவடம் இலகு குறவர் திருமகள் கணவ --- முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்துத்  திருமகளான வள்ளியின் கணவரே!

சகல கலை முழுதும் வல பெருமாளே --- சகல கலைகளிலும் முற்றும் வல்ல பெருமையில் மிக்கவரே!

அளக நிரை குலைய --- கூந்தலின் ஒழுங்கு குலைந்து போக,

விழி குவிய --- கண்கள் குவிய.

வளை கலகல என --- வளையல்கள் கலகல என்று ஒலிக்க, 

அமுத மொழி பதறி எழ --- இனிய மொழி பதற்றத்துடன் வெளிவர,

அணி ஆரம் அழகு ஒழுகு புளக முலை குழைய --- அணிந்துள்ள முத்துமாலை அழகுடன் விளங்குகின்ற முலைகள் குழைய,

இடை துவள --- இடையானது துவண்டு போக,

மிக அமுத நிலை அது பரவ --- மிக இனிமையான காம உணர்வு பரவ,

அதிமோகம் உளம் உருக --- அதிமோகத்தால் உள்ளம் உருக,

வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே --- புணர்ச்சி இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியதான வஞ்சகத்தில் எனது அறிவு அழிந்து போகாமல்,

உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும் --- உலகம் முழுவதையும் மயிலின் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தருளிய, 

உன் உபய நறுமலர் அடியை அருள்வாயே --- இனிய ஞானமணம் கமழும் தேவரீருடைய திருவடி இணையை அருள் புரிய வேண்டும்.


பொழிப்புரை


உலகைச் சூழ்ந்து உள்ள கடல் வற்றிப் போகுமாறு கணையை விடுத்து அருளியவரும், அடியார்களுக்கு வரங்களை அருள்பவனும், இரண்டு மருதமரங்களைத் தகர்த்து அருள்பாலித்த அழகனும்,  கோடுகளை உடைய (ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதனும் வெற்றித் திருமகள் கணவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

போர்க்களத்தில் முடுகி வந்த அரக்கர் தலைவனின் சேனைகள் சிதறி ஓடவும், கிரவுஞ்ச மலை பொடிபடவும், சூரர் தலைவன் தலை சிதற, அனைத்தும் எரிந்து அழியுமாறு நெருப்புப் பெருகி எழுமாறு வேலை விரைந்து விடுத்து அருளியவரே!

முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்துத்  திருமகளான வள்ளியின் கணவரே!

சகல கலைகளிலும் முற்றும் வல்ல பெருமையில் மிக்கவரே!

கூந்தலின் ஒழுங்கு குலைந்து போக, கண்கள் குவிய., கைவளையல்கள் கலகல என்று ஒலிக்க,  இனிய மொழி பதற்றத்துடன் வெளிவர, அணிந்துள்ள முத்துமாலை அழகுடன் விளங்குகின்ற முலைகள் குழைய, இடையானது துவண்டு போக, மிக இனிமையான காம உணர்வு பரவ, அதிமோகத்தால் உள்ளம் உருக, புணர்ச்சி இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கொடிய வஞ்சகத்தில் எனது அறிவு அழிந்து போகாமல், உலகம் முழுவதையும் மயிலின் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தருளிய, இனிய ஞானமணம் கமழும் தேவரீருடைய திருவடி இணையை அருள் புரிய வேண்டும்.


விரிவுரை


இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில், தமது அழகை வெளிக்காட்டி, காமுகர் உள்ளத்தைக் கவர்ந்து பொருள் பறிக்கின்ற பொதுமகளிரின் கலவியின் போது உண்டாகும் நிலையை அடிகளார் அறிவித்து, காம உணர்வில் அறிவு அழிந்து போகாமல், முருகப் பெருமான் திருவடிக் காட்சி தந்து ஆட்கொண்டு அருள் புரிய வேண்டுகிறார்.


வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் --- 

இராமர் சேதுபந்தனம் புரியும் பொருட்டு தென்கடற்கரையில் திருப்புல்லணையில் படுத்து வருணனை ஏழு நாள் வழி வேண்டினார். வருணன் ஏழு கடல்களுக்கு அப்பால் இரு பெரிய திமிலங்களின் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபடியால் ஸ்ரீராமருடைய வேண்டுதலை அறியாதவனாகி நின்றான். இராமர் வெகுண்டு அக்கினிக் கணையை எடுத்துத் தொடுத்து விடுத்தார். அக்கணையின் வெம்மையால் கடல் வரண்டுவிட்டது.

இதனை இங்கு இந்த அடியில் கூறியுள்ளார்.

                    “.... …. …. இலங்காபுரிக்குப்

போகைக்கு நீ வழிகாட்டு என்று போய்க்கடல் தீக்கொளுந்த

வாசைச் சிலை வளைத்தோன் மருகா”.         ---  கந்தர் அலங்காரம்.


இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் --- 

அபிராமம் - அழகு. அபிராமன் - அழகன். இது கண்ணபிரானைக் குறித்தது.

ஆடை இன்றி நீரில் குளித்தல் அறிவுடைய செயல் அல்ல என்று "ஆசாரக் கோவை" என்னும் பதினெண்கீழக்கணக்கு நூல் கூறும்.

உடுத்து அ(ல்)லால் நீராடார், ஒன்று உடுத்து உண்ணார்,

உடுத்த ஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்

ஒன்று உடுத்து என்றும் அவைபுகார், என்பதே

முந்தையோர் கண்ட முறை. --- ஆசாரக் கோவை.

சிறப்புப் பொருந்தியவர், ஓர் ஆடையை உடுத்து அல்லது நீராடமாட்டார், இரண்டு உடுத்தன்றி ஒன்றை உடுத்து உண்ணமாட்டார், உடுத்த உடையை நீரில் பிழியமாட்டார். ஓராடை உடுத்து அவையின்கண் செல்லார். இவ்வாறு சொல்லப்படுவது, முந்தையோர் கண்ட முறைமை.

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகுபாரன் மணிக்ரீவன் என்ற இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை இன்றி, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரத முனிவர், "நீரில் ஆடை இன்றிக் குளித்தல் அறிவுடையோர்க்கு அடாத செயல் ஆகும். நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றி வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். உயிர்களின் பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார். உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகுபாரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.


அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய --- 

நிருதர்கள் கொடியவர்கள். நல்ல உள்ளம் அவர்களுக்கு இல்லை. அஞ்ஞானம் நிறைந்து இருந்தபடியால் அவர்கள் யாவரோடும் முடுகிப் போர் புரிந்து தமது தலைமையை நிலைநாட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் நல்லோரையும் விட்டுவைக்க மாட்டார்கள். பரம்பொருளாகிய முருகப் பெருமானோடும் பொரு புரியத் தொடங்கினர். ஞானமே வடிவாகிய இறைவன் திருமுன் அஞ்ஞான இருள் நில்லாது ஓடும். போர்க்களத்தில் அரக்கர் சேனை பொடிபட்டு அழிந்தது.


வரை தகர --- 

வரை - மலை. இங்கு கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், 

தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.


"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"


என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.


"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில்.


"மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.


"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"


என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.


கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.


"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."


என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.


"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, 

நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


பின்வரும் பிரமாணங்களால் கிரவுஞ்ச மலையானது பொன்மயமானது என்பதை அறியலாம்.


"சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்

மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தை உற்று,

நின்னை உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு

என்னை மறந்து இருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே"  --- கந்தர் அலங்காரம்.         

இதன் பொருள் ---


பொன்னிறமான கிரவுஞ்ச மலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே! நறுமணம் மிக்க கடப்பமலர் மாலையைச் சூடிக்கொண்டு உள்ள திருமார்பினை உடையவரே! ஞானத்திற்கெல்லாம் வரம்பாக விளங்கும் மௌன நிலையை அடைந்து, தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன். இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.


"பங்கேருகன் எனைப் பட்டுஓலையில் இட, பண்டு தளை

தம் காலில் இட்டது அறிந்திலனோ? தனிவேல் எடுத்துப்

பொங்குஓதம் வாய்விட, பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்

எம்கோன் அறியின்,  இனி நான்முகனுக்கு இருவிலங்கே." ---  கந்தர் அலங்காரம். 

 

இதன் பொருள் ---


தாமரை மலரில் வாழும் பிரமதேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன் உருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்!


உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும்  உன் உபய நறுமலர் அடியை அருள்வாயே ---

நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு மாதுளங் கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.

விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.

முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால், சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.

உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.

இந்த வரலாற்றின் உட்பொருள்

(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.

(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர் சிவபெருமான்.

(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.

(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.

ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை,  சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.

இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.

இதனையே தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.


“அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

    ஆனந்த பூர்த்தியாகி

  அருளோடு நிறைந்ததெது?”


இது எங்கும் நிறைந்த தன்மை.


     “தன்னருள் வெளிக்குளே

    அகிலாண்ட கோடி யெல்லாம்

  தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

    தழைத்ததெது?”


இது எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.


"விளங்கிய ...... மயில்ஏறி

அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்

     உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்

     அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே."  --- சுவாமிமலைத் திருப்புகழ்.


திடுக்கிடக் கடல், அசுரர்கள் முறிபட,

     கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்

     திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா!   --- திருத்தணிகைத் திருப்புகழ்.


சகல கலை முழுதும் வல பெருமாளே --- 

வல்ல என்னும் சொல் 'வல' எனக் குறுகி வந்தது.

ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் முதலியோர் குழுமினார்கள். அக்குழுவில் யார் முதன்மைப் புலவர்? அத்தகைய முதன்மைப் புலவர்க்கு வித்வா தாம்பூலம் தரவேண்டும் என்ற ஆராய்ச்சி நிகழ்ந்தது.

கலைமகளின் அம்சமான ஒளவையாரே சிறந்த புலவர் அவருக்குத்தான் தாம்பூலம் தரவேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் ஒளவையாரிடம் சென்று, “அம்மே! தாங்கள் புலவர் சிகாமணி. இந்த வித்வா தாம்பூலம் உமக்கே உரியது. பெற்றுக் கொள்ளும்” என்று நீட்டினார்கள்.

ஒளவையார், “புலவர்களே! இதைப் பெறுந் தகுதி எனக்கு இல்லை. புலவர்கள் என்றால் தேவரைக் குறிக்கும். அப்புலவர்களாகிய தேவர்க்கு அதிபதி இந்திரன். இந்திரன் ஐந்திரம் என்ற வியாகரனத்தைச் செய்தவன். அவன்பால் சென்று இதனைக் கொடுங்கள்” என்றார்.

எல்லோரும் இந்திரனிடம் போய் இதைக் கூறித் தாம்பூலத்தை நீட்டினார்கள். இந்திரன் அஞ்சினான். “ஒரு வியாகரண நூலைச் செய்ததனால் மட்டும் ஒருவன் சகல கலாவல்லவனாயாகி விடுவனோ? அகத்தியர் தான் பெரும்புலவர். அவரிடம் சென்று இதைக் கொடுப்பீராக” என்றான்.

அனைவரும் சென்று, “தலைமைப் புலவர் நீர். இவ் வித்வ தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள்.

அகத்திய முனிவர் புன்முறுவல் செய்து, “நன்று கூறினீர்கள். நான் தலைமைப் புலவன் ஆவேனோ? சகலகலாவல்லி கலைமகளே ஆகும். அப்பெருமாட்டியிடம் போய் இதைச் சமர்ப்பணம் செய்யுங்கள்” என்றார்.

எல்லோரும் வாணிதேவியிடம் போய், “இந்த வித்வ தாம்பூலம் உமக்கே உரியது; பெற்றுக் கொள்ளும்" என்றார்கள்.

கலைமகள் நிலை கலங்கி, “நான் இத் தாம்பூலத்துக்கு உரியவள் ஆகேன். என் கணவரே உரியவர். அவர் வேதத்தில் வல்லவர். அவருக்கு இதைத் தருவது முறைமை” என்றார்.

பிரமதேவனிடம் போய் “இது சிறந்த புலவர்க்கு உரிய தாம்பூலம்; நீர் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள்

பிரமதேவர், "அம்மம்ம! நான் புலவனோ? அல்ல அல்ல. வாகீசுவரி, ஞானேசுவரி, ஞானாம்பாள் உமாதேவியார்தான். அப் பரமேசுவரிக்குத் தான் இது உரியது. ஆதலால் அம்பிகையிடம் போய்க் கொடுங்கள்” என்றார்.

திருக்கயிலாய மலைசென்று எல்லோரும் வணங்கி, “தேவீ! பரமேசுவரி! ஞானாம்பிகையே! இது வித்வ தாம்பூலம். இது உமக்கே உரியது” என்றார்கள்.

உமாதேவியார், “நன்று நன்று; நான் இதற்கு உரியவள் அன்று. என் குமாரன் ஞானபண்டிதன், சிவகுருநாதன், அம்முத்துக்குமார சுவாமியே இதற்கு உரியவன்” என்று அருளிச் செய்தார்.

எல்லோரும் கந்தகிரிக்குச் சென்று, “முருகா! மூவர் முதல்வா! இது வித்வ தாம்பூலம். இதனைத் தேவரீர் ஏற்றருளும்” என்று வேண்டி நின்றார்கள்.

“நல்லது” என்று முருகப் பெருமான் அத் தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டருளினார். அதனால் அவர் சகல கலா வல்லவர்!

மலைமங்கை வரைக்கும் போய், அந்த அம்மையார் எம் புதல்வனே கல்வி கரைகண்டவன் என்று குறித்தபடியால்,

“கல்லசலமங்கை எல்லையில் விரிந்த 

கல்வி கரைகண்ட புலவோன்”

என்று அருணகிரியார் பாடுகின்றார்.


கருத்துரை


முருகா! திருவடி அருள்வாய்.



நாய்

 

நாய்


பல அரிய நூல்களோடு, பெரியபாரணத்துக்கு அருமையான ஓர் ஆய்வினைப் பெருநூலாகச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அருளிய பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்களை அறியாதவர் இருக்க முடியாது. அப் பேரறிஞருடைய தந்தையார், பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும் புலவர், அ. மு. சரவண முதலியார் அவர்களைப் பெரும்பாலும் இக் காலத்தினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. 1930 - களில் அப் பெரும்புலவர் பெருமானார் ஆற்றிய சொற்பொழிவுகள், நூல் வடிவில் வந்துள்ளன.

அப் பெரும்புலவருடைய சொற்பொழிவின் சில பகுதிகளை இங்கே நான் தருகின்றேன்.....

"நாயில் கடையான பாவியேனை" என்னும் தொடர் போலத் திருவாசகத்தில் "நாயனையேன்", "நாயில் கடையேன்" என வரும் தொடர்கள் ஆறுபத்தேழு இடங்களில் வருதலையும் காண்க.  இங்ஙனம் ஆளுடைய அடிகள் பல இடங்களில் நாயேன், நாயனையேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களை உடைய தொடர்களைக் கூறுமாறு என்னை? இன்னும் ஒரே அடியில் "நாயில் கடையாம் நாயேனை" (குழைத்தபத்து, 8) எனக் கூறியருளியதற்குப் பொருள் யாது என அறிந்துகொண்டு மேற்செல்லுவோம்.

பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனால், நாயினும் கடையேன் என்று கூறுங்கால், நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங்கள் மக்களிடத்தில் அங்ஙனம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவை எவை என ஆராய்வோம்.

1.  தன் தலைவனைப் போலவே பல்லாயிர மக்கள், உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும், சிறிதும் ஐயுறாது அவனை அறிந்து கொள்ளும் இயல்பு உடைமை.

2. ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின், அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவில் பதித்து வைத்து இருத்தலுடன், அவனை எங்கேனும் காணின், தான் எத்துணைத் துன்ப நிலையில் இருப்பினும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன் வாலைக் குழைத்து, இன்முகம் காட்டல் முதலியவற்றால் தனது நன்றி அறிவை அவனுக்குக் காட்டுதல்.

3.  தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினான் ஆயின், அப்பணி தன்னால் செய்தற்கு அரிதாயினும், அதில் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேரும் ஆயினும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியில் செல்லுதல்.

இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு.

இனி, இப்பண்புகள் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

மக்களில் சிலர் தலைவன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சியே இன்றித் திரிகின்றனர். சிலர் தாமே தலைவர் எனத் தருக்குவர். சிலர் பொருள் முதலியவற்றால் சிறிது சிறந்த ஒருசில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறுகின்றனர். சிலர் இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரைத் தலைவர் எனத் திரிபு உணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் 'தலைவன் ஒருவன் இருக்கலாம், ஆனால் அவன் இவன் தான் எனத் துணிந்து கூற இயலாது' என்பர். மற்றொரு சிலர் 'இன்ன இன்ன இலக்கணம் உடையவன் தலைவன் ஆவான்' என அறிந்து வைத்தும்,  "ஆர்ஆர் எனக்கு என்ன போதித்தும் என்ன? என் அறிவினை மயக்க வசமோ?" என்னும் திண்மை இலராய் மதிநுட்பம் நூலோடு அமைந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொல்வன்மை உடையவராய ஒருவர் வந்து, "நீவிர் கருதும் இலக்கணம் உடையவன் தலைவன் அல்லன்" என வேறு சில இலக்கணங்களைக் கூறினாராயின், மயங்கி விடுகின்றனர். இங்ஙனம், மக்கள் தம் தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலைதடுமாறுகின்றார்கள். ஆகலின், தன் தலைவனை நன்கு உணர்ந்து கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.

இனி, இருட்டு அறையில் குருட்டுச் சேய்போல் கிடந்து உழன்ற உயிர்களைத் தன் பெரும் கருணையால் எடுத்து, உடல், கரணம், உலகம் முதலியவற்றை உதவி, அவ் உயிர்கள் நிலைத்தல் பொருட்டு ஒன்றாயும், பொருள்களை அறியும்படி அறிவித்தல் பொருட்டு வேறாயும், அங்ஙனம் அறியினும் அறிந்தவாறே நுகரும் சுதந்தரம் அவைகட்கு இன்மையினால், அவற்றை நுகர்வித்தல் பொருட்டு உடனாயும் நின்று அருளி, ஒவ்வொரு மாத்திரையும் உண்டி முதலியவற்றால் ஓம்பி அருளும் தலைவனது கைம்மாறு இல்லாத நன்றியை, ஏனைய உயிர்களிலும் சிறந்து பாராட்டுதற்கு உரியவர் பகுத்தறிவு ஆகிய மன உணர்வைப் பெற்ற மக்களே அன்றோ. அவர்களில் பெரும்பகுதியினர் அங்ஙனம் நினைக்கின்றார்கள் இல்லை. ஆதலின், அவர்கள் ஒரு பொழுது உணவு கொடுத்தவனைத் தன் உயிர் உள்ள அளவும் நினைத்துப் பாராட்டும் நாயினும் கடையர் ஆயினர்.

இனி, அவ் இறைவன், தானே உயிர்கள் தன்னை அறிந்து அடைய ஒட்டாமல் மறைத்து நிற்கும் மலத்தின் இலக்கணங்கள் இவை எனவும், உயிர்களின் இயல்கள் இவை எனவும், தனது தன்மை இது எனவும், நமக்கு அறிவு நூல்கள் வாயிலாக விளக்கி அருளினான். இவ்வாற்றான், இன்ன செயல்களை மேற்கொள்ளக் கடவீர் எனத் தலைவன் பணித்தும், அச் செயல்கள் மக்களால் செய்யக் கூடியனவுமாய் இருந்தும், அவைகளை மேற்கொள்ளாமல், பிற துறைகளில் சென்று உழலும் மக்கள், தன்னால் இயலாதது ஒன்றைத் தன் தலைவன் பணித்தானாயினும், அதனை விரைந்து மேற்கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.

நான்காவதாக, நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணம் காணப்படுகின்றது. அதாவது, தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமும் இன்றி, தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்படுத்தாது, அத்துன்பம் தன் உடலின்கண்ணதாய் இருக்கும்போதும், தன் வாலைக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும். இவ் உண்மையை,

"யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்

கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் -- யானை

அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால் குழைக்கும் நாய்."

என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது.

இனி, இக்குணம் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை உடையராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களில் பெரும்பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்துழி, அது தாம் செய்த தீவினை காரணமாக வந்தது என்று அறிந்து வைத்தும், 'பாழும் கடவுளே! நீதியற்ற கடவுளே! எம்மை இங்ஙனம் துன்புறுத்தல் தகுமா? நின்கண் கருணை இல்லையா?' எனக் கதறிப் பதறுவதுடன், அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள் இல்லை என்னும் கொள்கையை உடையர் ஆதலைக் காண்கின்றோம்.  இதனாலும் மக்கள் நாயினும் கடையர் ஆகின்றனர்.

ஐந்தாவதாக, நாயினிடம், செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு. மக்களில் பெரும்பாலோரிடம் அது இல்லை. இல்லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின்றோம். எங்ஙனம் எனில், ஒரு நாயை ஓர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான். தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல். ஆனால், எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பது இல்லை. அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ்ந்து கடிக்கும். இன்றேல் வாளா போய்விடும்.

மக்களுள் யாருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அதற்கு மூல காரணம் தாம் முன்செய்த வினை என்று அறியாதது மட்டுமல்ல. அவ்வினையினால் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு, அவர்களைத் துன்புறுத்தக் காண்கின்றோம்.  

எனவே, நாயின் மேலே பட்ட கல்லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணமாய் உள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களை விட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக. மக்களின் அத் தவறான செயலைக் குறித்துத் தான், "எய்தவன் இருக்க அம்பை நோவது" என்ற பழமொழியும் எழுந்து வழங்குவது ஆயிற்று.

மேற்காட்டிய பல நற்குணங்களை உடைய நாயினிடத்து, ஒரு இழிகுணம் காணப்படுகின்றது. அதாவது, தன் வயிறு நிறைய உண்டு, தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அருவருப்பு இல்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல்.

மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்பும் இல்லாமல் நுகர்தல் கண்கூடாகக் காணப்படுவதாகும்.

நாய்க்கு உள்ள மற்றொரு இழிகுணம் குறிக்கோள் இல்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்கள் நாய்க்கு ஒப்பிடப்படுகின்றார்கள்.

இவ்வாறு பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும்புலவர் திரு. அ. மு. சரவண முதலியார் அவர்கள் அழுது அடி அடைந்த அன்பராகிய மாணிக்கவாசகப் பெருமான் பாடிய திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாய்க்கு உள்ள நல்ல குணங்களையும், தீய குணங்களையும் விளக்கிக் காட்டி உள்ளார்.

ஐம்பதுமூன்று ஆண்டுகளுக்கு முன்னர், எனது குருவுக்கு, குருவான பெரியவர், திருக்கோயில் ஆசிரியர், அமரர் ந. ரா. முருகவேள் அவர்கள், சைதைத் திருக் காரணீசுவரர் திருக்கோயிலில், வாரந்தோறும் வகுப்பு நடத்தி வந்தார். மாலை 6.30 முதல் இரண்டு மணிநேர சொற்பொழிவு. ஒரு நாள் மாலையில் வகுப்பினை முடித்துப் புறப்பட்டார். அவரை, அவருடைய வீடு வரை சென்று வழிவிட்டு வருகின்ற அந்தப் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். அன்று அமாவாசை நாள். நாங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. எங்கும் ஒரே கும்மிருட்டு. வழக்கமாக, எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள செய்தியைச் சொல்லிக் கொண்டுதான் அவர் நடப்பார். அன்றும் அவ்வாறே சொல்லிக் கொண்டு சென்றார். இடையில் நாய்கள் சில எங்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தன. நான் நாய்களை அதட்டுவேன். "வேண்டாம், அமைதியாக என்னோடு வா" என்றார். நானும் அவ்வாறே செய்தேன். நாய்களின் குரைப்பு மட்டும் ஓயவில்லை.

வீட்டின் வாயிலில் சென்று உள்ளே நுழையும் முன், "போகும்போது சில சிறிய கற்களைப் பொறுக்கிக் கையில் வைத்துக் கொள். நாய் குரைத்தால், கல்லோடு கல்லைத் தட்டி ஓசையை எழுப்பு. ஒரு கல்லை அதன் மீது எறிவது போல் பாவனை காட்டு, ஒன்றும் செய்யாது, பத்திரமாகப் போ. நாளை என்னைச் சந்திக்கவேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்.

மறுநாள் அவரைச் சந்தித்தேன். "நேற்று பத்திரமாகப் போனாயா?" என்றார். நான் அவர் சொன்னபடி செய்ததால் ஊறு ஏதும் இல்லை என்று சொன்னேன். ஒர் ஐந்து நிமிடத்தில் நாயின் குணங்களைப் பற்றி, சில பாடல்களைச் சொல்லி எனக்கு விளக்கினார். கல்விக் கடலான அவர், பழகுவதில் குழந்தையைப் போன்றவர். அவர் ஒருமுறை ஒரு செய்தியைச் சொன்னால், அது அப்படியே மனதில் பதிந்துவிடும். அப்படிப்பட்ட மகான் அன்று காட்டிய எளிமையை அவ்வபோது நான் நினைத்துப் பார்ப்பேன். அவர் அன்று சொன்னதை,  இப்போது சற்று விளக்கமாகத் தருகின்றேன்.

அருளாளர்கள், "நாயினும் கடையேன்" என்று தம்மைப் பாடும்போதெல்லாம் நாய்க்கு உரிய நல்ல குணங்கள் தம்மிடமும் மக்களிடமும் இல்லாத நிலையைக் காட்டித் தான், "நாயில் கடையேன், நாயினும் இழிந்தவன்" என்றும் பாடினார்கள். நாயை அவர்கள் இழித்து உரைக்கவில்லை.

அதே சமயத்தில், நாய்க்கு உள்ள இழிந்த குணங்கள் தம்மிடமும், மக்களிடமும் உள்ளதைக் காட்டி, "நாயைப் போன்றவன்", "நாய் அனையேன்", "நாயேன்" என்றெல்லாம் பாடி வைத்தார்கள்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது அறிவு உடைமை. எந்தப் பொருளில் பாடினார்கள் என்பதைக் கொஞ்சம் உணர்ந்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும்.

இன்னொன்றும் இங்கே சொல்லியாக வேண்டும். 'நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னக் குப்பைமேட்டை நாடிச் செல்லும்' என்ற வழக்கு மொழியை நாம் எல்லோரும் அறிவோம்.

பின்வரும் நாலடியார் பாடல்கள் இதனைத் தெளிவுபடுத்தும்....

"அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்கும்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.

கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய், பால் சோற்றின்

செவ்விய கொளல் தேற்றாதாங்கு".

இதன் பொருள் ---

இறைச்சியை எடுத்துக் கொண்டு, வீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்கு, பால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாதவர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.

"பொற்கலத்து ஊட்டிப் புறம்தரினும் நாய் பிறர்

எச்சிற்கு இமையாது பார்த்து இருக்கும், --- அச்சீர்

பெருமை உடைத்தாக் கொள்ளினும், கீழ் செய்யும்

கருமங்கள் வேறு படும்".

இதன் பொருள் ---

பொன்னால் செய்த பாத்திரத்தில்,  வெண்மையான சோற்றை ஊட்டிப் பாராட்டினாலும், நாயானது பிறர் எறியும் எச்சில் இலைச் சோற்றுக்குக் கண்ணை இமையாமல் விழித்துக் கொண்டு காத்துக் கிடக்கும். அதுபோல, கீழ்மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும், அவர்கள் குணமும் செயலும் நல்ல வழியில் செல்லாது, தீய வழியையே நாடும்.

நற்குணம் இல்லாதவர் பேயினது தன்மையை உடையவர் ஆவார். அவரிடத்து நல்லது சொன்னாலும், அவர் கொண்ட பேயின் குணமே மிகுந்து இருக்கும். நல்லனவற்றின் அருமையை நாய் உணராது. ஒரு சந்திப் பானையின் அருமையை நாய் அறியாது, தனது வாயை வைக்கும் என்பதால், அதனைத் தனியே வைத்திருப்பர் என்னும் பொருள்பட, "தண்டதலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

"தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்

     நெறிநாதர் தாமே தந்தை

ஆய் அறிவார் எமது அருமை! பரவையிடம்

     தூதுசென்றது அறிந்தி டாரோ?

பேய் அறிவார் முழுமூடர்! தமிழ்அருமை

     அறிவாரோ? பேசு வாரோ?

நாய்அறியாது ஒருசந்திச் சட்டிப்பா

     னையின் அந்த நியாயம் தானே!

இதன் பொருள் --- 

மகள் அருமை தாய் அறிவாள் - தனது மகளின் அருமையை ஈன்ற தாயே அறிவாள், எமது அருமை தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தை ஆய் அறிவார் - தனக்கு அடியவரான எங்கள் அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள  நீள்நெறிநாதர் ஆகிய சிவபரம்பொருளே தந்தையாக இருந்து அறிவார்,  பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ - சிவபெருமான் தனது அடியவரான சுந்தரர் வேண்ட, பரவை நாச்சியாரிடம் தூது  நடந்ததை உலகத்தவர் அறியமாட்டாரோ?,  முழு மூடர் பேய் அறிவார் - முற்றிலும் அறிவு இல்லாத பேதையர் பேய்த் தன்மையையே அறிவார்,  தமிழ் அருமை அறிவாரோ - தமிழின் அருமையை அவர் உணர்வாரோ?,  பேசுவாரோ - தமிழைப் பற்றி ஏதாவது அவர் பேசுவாரோ?   ஒரு சந்திச் சட்டிப் பானையின் அந்த நியாயம் நாய் அறியாது - ஒருபோதுக்குச் சமைக்கும் சட்டிப்பானையின் உயர்வை நாய் அறியாது.

      உலகுக்கு எல்லாம் தந்தை இறைவரே. ஆகையால் திருத்தண்டலை நீள்நெறிநாதர் எமது அருமை அறிவார் என்றார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பரவையின் ஊடலைத் தவிர்க்க அவர்பால் தூது சென்றது அடியவரின் அருமையையும் தமிழின் அருமையையும் உணர்ந்தே. "பாவலான் ஒருவன் சொல் தமிழ்க்கு இரங்கி, பரவையார் ஊடலை மாற்ற, ஏவல் ஆள் ஆகி, இரவு எலாம் உழன்ற இறைவனே" என்றார் பட்டினத்து அடிகள். ஆகையால் ‘அறிந்திடாரோ?'  என்றார். அறிந்து தெளிந்தவர்கள் அறிவார் என்பது இதனால் விளங்கும். 

தான் உணர்ந்ததையே அறிந்து இருக்கும் பேய்த் தன்மை கொண்ட மக்கள், தாம் கொண்டதையே அறிவார். அவருக்குத் தமிழின் அருமை தெரியாது. தெரியாததால் அவர் தமிழைப் பேசவும் மாட்டார். "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பார் மணிவாசகப் பெருமான்.

ஒரு சந்திப் பானை --- முற்காலத்தில் நோன்புக்குச் சமைப்பதற்கு என்று, தனியே வைத்திருக்கும் சமையல் பானை. இதற்கு ஒரு சந்திப் பானை அல்லது ஒரு சந்திச் சட்டி என்று பெயர். நோன்பு முடிந்த பிறகு, அந்தப் பானையை மற்றப் பானைகளோடு வைக்காமல், தனியாகப் பரண் மீது வைத்து விடுவர். அந்தப் பானையின் அருமை அதை வைத்திருப்பவருக்குத் தான் தெரியும். 

நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத் தான் தெரியும். அது எந்தப் பானையிலும் வாயை வைக்கும். அதைப் போலவே, மூடர்கள் எல்லோரையும் ஒரு தன்மையராகவே கருதுவர். இதைக் காட்டத்தான், ‘நாய் அறியுமோ ஒரு சந்திப் பானையை?'  என்றும், ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்றும் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் அமைந்தது. ஒருசந்தி - ஒருபோது.

"யானை சேனை தேர்ப்பரி யாவும் அணியாய்

யமன்வரும் போது துணையாமோ அறிவாய்,

ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்குப் புத்தி

நாடி வரும்படி நீ நின்று ஆடுபாம்பே".

என்பது பாடம்பாட்டி சித்தர் பாடல்.



திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...