திரு ஆரூர் - 0824. கரமும் முளரியின்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரமும் முளரியின் (திருவாரூர்)

முருகா!
விலைமாதரைப் போற்றி அழியாமல்,
தேவரீரது திருவடிகளைப் போற்றி உய்ய அருள்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான


கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
     கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே

கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
     களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்

இரவு பகலற இகலற மலமற
     இயலு மயலற விழியினி ரிழிவர
     இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே

யெழுத அரியவள் குறமக ளிருதன
     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
     யினிமை பெறுவது மிருபத மடைவது ......மொருநாளே

சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
     துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது

துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
     சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்

பரவி யதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
     படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்

படியு லறுமுக சிவசுத கணபதி
     யிளைய குமரநி ருபபதி சரவண
     பரவை முறையிட அயில்கொடு நடவிய .....பெருமாளே.


பதம் பிரித்தல்


கரமும் முளரியின் மலர், முகம் மதி, குழல்
     கனம், அது எணுமொழி கனி, கதிர்முலை நகை,
     கலகம் இடுவிழி கடல்என விடம்என, ......மனதுஊடே

கருதி, அனநடை, கொடிஇடை, இயல்மயில்,
     கமழும் அகிலுடன், இளகிய ம்ருகமத
     களப புளகித கிரியினும் மயல்கொடு ...... திரிவேனும்,

இரவு பகல் அற, இகல்அற, மலம்அற,
     இயலும் அயல் அற, விழியில் நீர் இழிவர,
     இதயம் உருகியெ ஒரு குள பதம் உற ......மடல்ஊடே

எழுத அரியவள், குறமகள் இருதன
     கிரியில் முழுகின இளையவன் எனும் உரை
     இனிமை பெறுவதும், இருபதம் அடைவதும்.....ஒருநாளே?

சுரபி மகவினை எழுபொருள் வினவிட,
     மனுவின் நெறி மணி அசைவு உற, விசைமிகு
     துயரில் செவியினில் அடிபட வினவுமின் ......அதிதீது

துணிவில் இது பிழை பெரிது என வரு மநு,
     உருகி அரகர சிவசிவ பெறும் அதொர்
     சுரபி அலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்

பரவி அதனது துயர்கொடு நடவிய,
     பழுதில் மதலையை உடல்இரு பிளவொடு
     படிய ,ரதம் அதை நடவிட மொழிபவன்.......அருள்ஆரூர்ப்

படியில் அறுமுக! சிவசுத! கணபதி
     இளைய குமர! நிருப பதி! சரவண!
     பரவை முறையிட அயில்கொடு நடவிய ......பெருமாளே.


பதவுரை

      சுரபி மகவினை எழு பொருள் வினவிட --- பசுவானது இறந்த தனது கன்றை எழுப்ப ஆராய்ந்து,

     அ விசை மிகு துயரில் --- அந்த துன்பத்தின் வேகத்தில்,

     மனுவின் நெறி மணி அசைவு உற --- மனுநீதிச் சோழன் அமைத்து இருந்த ஆராய்ச்சி மணியினை நாவை அசைக்க,

     செவியினில் அடி பட --- அந்த ஓசையானது சோழமன்னனின் காதுகளில் வி,

     அதி தீது --- அது தீது நடந்திருப்பதைக் குறிக்கின்றது,

     வினவுமின் --- விசாரியுங்கள் என்று சொல்லி,

      துணிவில் இது பிழை பெரிது என --- துணியப் போனால் இது மிகவும் தவறானது என்று எண்ணி,

     வரும் மநு --- தனது மாளிகையில் இருந்து வெளிப்பட்ட மனுநீதிச் சோழ மன்னன்,

     உருகி --- உள்ளம் உருகி,

     அரகர சிவசிவ ---  அரகர சிவசிவ என இறைவனைத் தியானித்து,
    
     பெறும் அது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட --- கன்றை ஈன்ற தாய்ப்பசு வேதனைப்பட்டு,  கண்ணீர் வடித்தலைப் பார்த்து,

     நடுவாகப் பரவி --- நடுவு நிலைமையோடு அறிந்து,

      அதனது துயர் கொடு நடவிய --- அந்தப் பசுவுக்குத் துயரம் உண்டாகும்படியாகத் தேரைச் செலுத்திய,

     பழுதின் மதலையை --- குற்றத்தைப் புரிந்த தனது மகனை,

     உடல் இரு பிளவொடு படிய --- அவனது உடல் இரு பிளவாகும்படி,

     ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் --- தேரைச் செலுத்தும்படியாகச் சொல்லி, அவ்வாறே செய்து, அருளாட்சி புரிந்த

     ஆரூர்ப் படியில் அறுமுக --- திருவாரூர்* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!

      சிவசுத --- சிவக் குமாரரே!

     கணபதி இளைய --- கணபதிக்கு இளையவரே!

     குமர ---  குமாரக் கடவுளே!

     நிருப பதி --- மன்னர்கள் தலைவரே!

     சரவண --- சரவணபவரே!

     பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே --- கடல் முறையிடும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

      கரமு(ம்) முளரியின் மலர் --- கைகளைத் தாமரை மலர் எனவும்,

     (மலர்) முக(ம்) மதி ---  மலர்ந்துள்ள முகத்தைச் சந்திரன் எனவும்,

     குழல் கனம் அது  ---  கூந்தலை மேகம் எனவும்,

     எ(ண்)ணு(ம்), மொழி கனி ---  மதிக்கத்தக்க சொற்கள் பழரசம் போன்றவை எனவும்,

     கதிர் மு(ல்)லை நகை --- ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலர் எனவும்,

     கலகம் இடு விழி கடல் என, விடம் என --- பூசல் விளைவிக்கும் கண்கள் கடலைப் போன்று கறுத்தும், விடம் போன்று கொடுமை உடையதாயும்,

     மனது ஊடே கருதி --- மனத்தில் நினைத்து,

      அ(ன்)ன நடை --- அன்னத்தை ஒத்த நடை,

     கொடி இடை --- கொடி போன்ற இடை,

     இயல் மயில் --- மயில் போலும் சாயல்,

     கமழும் அகில் உடன் இளகிய --- மணம் வீசும் அகிலுடன் குழைத்து உள்ள,

     ம்ருகமத களப புளகித கிரியினு(ம்) மயல் கொடு திரிவேனும் --- கத்தூரி, சந்தனக் கலவை பூசி, மகிழ்ச்சியைத் தரும் மலை போன்ற முலைகளை உடைய விலைமாதர்கள் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும்,

      இரவு பகல் அற --- இரவு பகல் என்பது அறவும்,

     இகல் அற --- மாறுபாடுகள் அகலவும்,

     மலம் அற --- மும்மலங்கள் அறவும்,

     இயலும் மயல் அற --- பொருந்தி உள்ள ஆசைகள் அறவும்,

     விழியில் நிர் இழிவர --- கண்களில் நீர் கசிய,

     இதயம் உருகியெ --- மனமானது உருகி,

     ஒரு குளபதம் உற ---   பதமான சருக்கரைப் பாகு போன்ற நிலையை அடைந்து,

      மடல் ஊடே எழுத அரியவள் குறமகள் --- கிழியில் ஓவியமாக எழுதுதற்கு அரிதான குறமகளாகிய வள்ளிநாயகியின்,

     இரு தனகிரியில் முழுகின இளையவன் எனும் --- இரு முலைகளாகிய மலைகளில் முழுகிய இளமையை உடையவன் என்னும்,

     உரையின் இனிமை பெறுவதும் ---  சொல்லினால் இன்பத்தை அடைவதும்,

     இருபதம் அடைவதும் ஒரு நாளே --- (அதன் பயனாக) தேவரீரது இருதிருவடிகளையும் அடைகின்றதும் ஆகிய ஒரு நாளும் எனக்கு உண்டாகுமோ?


பொழிப்புரை

         பசுவானது இறந்த தனது கன்றை எழுப்ப ஆராய்ந்து, அந்தத் துன்பத்தின் வேகத்தில், மனுநீதிச் சோழன் அமைத்து இருந்த ஆராய்ச்சி மணியினை நாவை அசைக்க, அந்த ஓசையானது சோழமன்னனின் காதுகளில் வி, அது தீது நடந்திருப்பதைக் குறிக்கின்றது, விசாரியுங்கள் என்று சொல்லி, துணியப் போனால் இது மிகவும் தவறானது என்று எண்ணி, தனது மாளிகையில் இருந்து வெளிப்பட்ட மனுநீதிச் சோழ மன்னன், உள்ளம் உருகி, அரகர சிவசிவ என இறைவனைத் தியானித்து, கன்றை ஈன்ற தாய்ப்பசு வேதனைப்பட்டு,  கண்ணீர் வடித்தலைப் பார்த்து, நடுவு நிலைமையோடு அறிந்து, அந்தப் பசுவுக்குத் துயரம் உண்டாகும்படியாகத் தேரைச் செலுத்திய குற்றத்தைப் புரிந்த தனது மகனை, அவனது உடல் இரு பிளவாகும்படி, தேரைச் செலுத்தும்படியாகச் சொல்லி, அவ்வாறே செய்து, அருளாட்சி புரிந்த திருவாரூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!

      சிவக் குமாரரே!

     கணபதிக்கு இளையவரே!

     குமாரக் கடவுளே!

     மன்னர்கள் தலைவரே!

     சரவணபவரே!

     கடல் முறையிடும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

       கைகளைத் தாமரை மலர் எனவும், மலர்ந்த முகத்தைச் சந்திரன் எனவும்,  கூந்தலை மேகம் எனவும், மதிக்கத்தக்க சொற்கள் பழரசம் போன்றவை எனவும், ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலர் எனவும், பூசல் விளைவிக்கும் கண்கள் கடலைப் போன்று கறுத்தும், விடம் போன்று கொடுமை உடையதாயும் மனத்தில் நினைத்து, அன்னத்தை ஒத்த நடை, கொடி போன்ற இடை, மயில் போலும் சாயல், மணம் வீசும் அகிலுடன் குழைத்து உள்ள கத்தூரி, சந்தனக் கலவை பூசி, மகிழ்ச்சியைத் தரும் மலை போன்ற முலைகளை உடைய விலைமாதர்கள் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும், இரவு பகல் என்பது அறவும், மாறுபாடுகள் அகலவும், மும்மலங்கள் அறவும், பொருந்தி உள்ள ஆசைகள் அறவும், கண்களில் நீர் கசிய, மனமானது உருகி  பதமான சருக்கரைப் பாகு போன்ற நிலையை அடைந்து, கிழியில் ஓவியமாக எழுதுதற்கு அரிதான குறமகளாகிய வள்ளிநாயகியின், இரு முலைகளாகிய மலைகளில் முழுகிய இளமையை உடையவன் என்னும்,
சொல்லினால் இன்பத்தை அடைவதும், அதன் பயனாக தேவரீரது இருதிருவடிகளையும் அடைகின்றதும் ஆகிய ஒரு நாளும் எனக்கு உண்டாகுமோ?

விரிவுரை


கரமு(ம்) முளரியின் மலர் முக(ம்) மதி ---

முளரி - தாமரை.

மலர் என்னும் சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, கைஉம் தாமரை மலர் போன்று இருந்தது எனவும், முகமும் தாமரை மலர் போன்று மலர்ந்து இருந்தது எனவும் கொள்ளலாம்.

பின்வரும் பெரியபுராணப் பாடலைக் காண்க.

"கண்மலர்கள் நீர்ததும்பக்
    கைம்மலர்களால் பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
    மணி அதரம் புடைதுடிப்ப,
எண்ணில்மறை ஒலிபெருக,
    எவ்வுயிரும் குதூகலிப்ப,
புண்ணியக்கன்று அனையவர்தாம்
    பொருமிஅழுது அருளினார்"   --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயில் அழகிய உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லா உயிர் களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார்.

குழல் கனம் அது  ---

குழல் --- கூந்தல்.  கனம் ---  மேகம்.

இரவு பகல் அற ---

இரவு --- அறியாமை, மறதி, துன்பம், நோய் இவற்றைக் குறிக்கும். இது உயிரின் கேவ நிலை.

பகல் - அறிவு, நினைப்பு, இன்பம், நோயின்மை இவற்றைக் குறிக்கும். இது உயிரின் சகல நிலை.

உயிர்களுக்கு நினைப்பும் மறப்பும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இவற்றால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இவற்றால் நோயும், நோயின்மையும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.

இவற்றைத் துவிதங்கள் என்பர் பெரியோர். இவை இரண்டும் அசுத்தமே. துவிதங்கள் இல்லாத தூய நிலையை உயிரானது அடையவேண்டும். இதை "இராப்பகல் அற்ற நிலை" என்றனர் நமது அருளாளர்கள். "அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே" என்று அடிகளார் வேண்டினார் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில்.

இரவு பகல் அற்ற நிலையை இறையருளால் மட்டுமே பெறமுடியும்.  எனவே, "இராப்பகல் அற்ற இடம் காட்டி, யான் இருந்தே துதிக்க" என்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.

அராப்புனை வேணியன் சேய்அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டை அம்தாள் தொழல்வேண்டும், கொடிய ஐவர்
பராக்கு அறல் வேண்டும், மனமும் பதைப்புஅறல் வேண்டும் என்றால்,
இராப் பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.
                 
என்பது கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ----

பாம்பை அணிந்த திருமுடியை உடைய சிவபெருமானுடைய திருமகனாகிய முருகப்பெருமானின் திருவருள் வேண்டும். மலர்ந்து நெகிழ்ந்த அன்பினால் குராமலர் மாலையையும் தண்டையையும் அணிந்துள்ள அப் பெருமானது அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். கொடிய ஐம்புலன்களின்சேட்டை ஒழிய வேண்டும். மனமும் பதைப்பு நீங்குதல் வேண்டும். இந்த நிலையை அடைய வேளண்டுமானால், இரவு பகல் இல்லாத இடத்தில் இருக்கவேண்டும். அது அவ்வளவு எளிது அல்ல.

அதனை முருகப் பெருமான் அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.

"இராப்பகல் அற்ற இடம் காட்டி, யான் இருந்தே துதிக்க,
குராப்புனை தண்டை அம்தாள் அருளாய், கரி கூப்பிட்ட நாள்
கராப்பட கொன்றக் கரி போற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல! நிருத சங்கார! பயங்கரனே!"

இதன் பொருள் ---

கஜேந்திரன் என்னும் யானையானது, ஆதிமூலமே என்ற அழைத்த நாளில், ஓடி வந்து, இந்த யானையைப் பற்றிய முதலை அழியும்படி கொன்று, அந்த யானையானது போற்றி செய்யுமாறு, அதன்முன் சென்று நின்று காட்சி தந்து அருளிய திருமால் பாராட்டுகின்ற ஆற்றலை உடையவரே! வேலாயுதரே! இராக்கதர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவரே! இரவு பகல் என்ற நினைப்பு மறப்பு (கேவல சகலம்) இல்லாத அருள் நிலையைக் காண்பித்து, அடியேன் அந்த நிருவிகற்ப நிலையில் இருந்து துதியாமல் துதிக்க, குரை மலரையும், தண்டையையும் அணிந்த அழகிய திருவடிகளைத் தந்து அருள்வீர்.

"ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார் தினைப்போது அளவு
ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளே முருகன் உருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யமதூதருக்கே".
                                                             --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

மமகாரம் ஆகிய "எனது" என்னும் புறப்பற்றையும், அகங்காரம் ஆகிய "நான்" என்னும் அகப்பற்றையும் ஒழித்து அருள் அனுபவத்திலே அடங்கி இருக்கப் பெறார். பொறிபுலன்கள் ஒடுங்கப் பெறார். பேரின்ப வெள்ளத்தில் முழுகி நிறைவு பெறார். நினைப்பு என்னும் சகல நிலையும், மறப்பு என்னும் கேவல நிலையும் அற்று சமாதி நிலையில் பொருந்தப் பெறார். ஒரு தினை அளவு காலமாயினும், ஓங்காரம் ஆகிய நாதத்துக்குள்ளே ஒளிருகின்ற சோதியில் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தரிசித்து, கருவி கரணங்கள் எல்லாம் ஓய்ந்து, அறிவு மாத்திரம், ஒளிசெய்ய, அந்தப் பரவச நிலையிலே தேங்கி இருக்கமாட்டார். தொண்டு செய்யார். இவர்கள் எமதூதர் வரும்போது என்ன செய்யக்கூடும்.?

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
     இந்திரிய சஞ்சலங்களை அறுத்து,
     அம்புய பதங்களின் பெருமையைக் ......   கவிபாடி,

செந்திலை உணர்ந்து, உணர்ந்து, உணர்வு உற,
     கந்தனை அறிந்து அறிந்து, அறிவினில்
     சென்று செருகும் தடம் தெளிதர, ......     தணியாத

சிந்தையும் அவிழ்ந்து, அவிழ்ந்து, உரைஒழித்து,
     என்செயல் அழிந்து, அழிந்து, அழிய, மெய்ச்
     சிந்தை வர, என்று நின் தெரிசனைப் ...... படுவேனோ?   ---  திருப்பகழ்.

அஞ்சுவித பூதமும், கரணம் நாலும்,
     அந்தி பகல் யாதும் ...... அறியாத,
அந்தம் நடு ஆதி ஒன்றும் இலது ஆன
     அந்த ஒரு வீடு ...... பெறுமாறு,

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
     மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது பாட
     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.    ---  திருப்புகழ்.

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.             --- கந்தர்அநுபூதி.

இதம்அகிதம் விட்டுஉருகி, இரவுபகல்அற்ற இடம்
 எனதுஎன இருக்கைபுரி யோகப் புராதனனும்   --- வேடிச்சிகாவலன் வகுப்பு
 
"நினைப்பு மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற்படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினால் ஆகும், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்று இல்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வன ஆகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டே இருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிற்கும்.

"இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே".---  திருமந்திரம்.

இதன் பொருள் ---

இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும்அறிவும், அறியாமையும் கடந்த சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலே அன்றி வேறில்லை.

"இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே".--- திருமந்திரம்.

இதன் பொருள் ---

இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறு நினைவு இன்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.

"இரவுபகல் இல்லா இன்ப வெளியூடே
 விரவி விரவி நின்று உந்தீபற"       --- திருவுந்தியார்

"அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,
     ஆனந்த பூர்த்தியாகி,
  அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே
     அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும் படிக்குஇச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்
     தழைத்தது எது? மனவாக்கினில்
  தட்டாமல் நின்றது எது? சமய கோடிகள் எலாம்
     தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்குந் தொடர்ந்து, எதிர் வழக்குஇடவும் நின்றது எது?
     எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லஒரு சித்தாகி இன்பமாய்
     என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லை உளது எது? அது
     கருத்திற்கு இசைந்தது. அதுவே
  கண்டன எலாம் மோன உருவெளியது ஆகவும்
     கருதி அஞ்சலி செய்குவாம்".           --- தாயுமானவர்.

இகல் அற ---

இகல் --- மாறுபாடு, பகைமை உணர்வு, சிக்கு.

பிற உயிர்களோடு கூடாமையைக் குறிக்கும். இது அறியையால் வருவதே. அறியாமையால் வருகின்ற காமம் வெகுளி ஆகியவற்றால் துன்பம் வரும்.

"இகல்" என்று ஒரு அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் வைத்தார்.

"இகல் என்னும் எல்ல நோய் நீக்கின், தவல் இல்லாத
தாவில் விளக்கம் தரும்."            ---  திருக்குறள்.

மாறுபாடு என்னும் வேதனை தருகின்ற நலிவை அகற்றிவிட்டால், தவறுதல் இல்லாத, அழிவில்லாத புகழை அது கொடுக்கும்.

"இன்பத்துள் இன்பம் பயக்கும், இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்".     ---  திருக்குறள்.

மாறுபாடு என்று சொல்லக்கூடிய துன்பத்துள் துன்பமானது அழிந்துவிட்டால், அந்நிலையே இன்பத்துள் இன்பத்தைக் கொடுக்கும்.

மலம் அற ---

மலம் - அழுக்கு.

பதி, பசு, பாசம் என்பவை மூன்று உண்மைப் பொருள்கள். கடவுள், உயிர், மலம் என்றும் சொல்லப்படும். இவற்றில் மேற்பொருளாகிய கடவுளும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும், பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

கடவுளும் உயிரும் சித்து என்ற வகையில் ஓர் இனம். என்றாலும், அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டன ஆகும்.

---   கடவுளது அறிவு பேரறிவு.
---   உயிரினது அறிவு சிற்றறிவு.
---   கடவுளது அறிவு தானே அறிவது.
---   உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது.
---   கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது.
---   உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது.
---   கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது.
---   உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்துஅதிலே அழுந்தி 
                                        அதன் வண்ணம் ஆவது.

இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒரு நிகரன அல்ல என்பது விளங்கும்.

கடவுட்பொருள் மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று.

எடுத்துக்காட்டா, கடலாகிய இடத்தில் நீர் நிரம்பி இருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றி இருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது. ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியிருப்பதற்கான காரணத்தை இவ்வுவமையிலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

ஆணவம்

இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை செய்வோமா?

எங்குள் உளன்ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவது அறிவு            ---  (நீதி நெறி விளக்கம்)

என்றார் குமரகுருபர அடிகள். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே ஆணவ மலம் எனப்படுகிறது. எல்லா உயிர்களும் முதலில் இருந்தே ஆணவ மலத்தை உடைய ஆயின. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும், உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவ மலமே ஆகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலம் ஆதலின் "மூலமலம்" எனப்படும். உயிர் என்று உண்டோ, அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்றலின் "சகசமலம்" எனப்படும். கண்ணை மறைக்கும் புற இருள் போல இது அறிவை மறைக்கும் அகவிருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும். மலம் என்று சொன்னாலே அது ஆணவ மலத்தையே குறிப்பதாகும்.

மாயை

ஆணவ மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவும் உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது, ஆன்மா நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் தலைவனாகிய இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப் பொருள்களையே நோக்கி நிற்கிறது.

கன்மம்

இந்நிலையில் ஆணவ மலம் திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

மும்மலங்களின் கட்டு

மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் நான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் (கட்டு) என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு. மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள்.

அவிழ்க்க முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பதற்கு ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அந்த முதல்கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முற்கட்டும், மாயை கன்மங்கள் பிற்கட்டும் ஆகின்றன.

, இந்த மூன்று மலங்களும் அற்று, உயிரானது உய்தி பெறுதல் வேண்டும்.

இயலும் மயல் அற ---

மயல் - ஆசை. ஆசை மயக்கத்தைத் தருவது.

விழியில் நிர் இழிவர ---

"நீர்" என்னும் சொல், "நிர்" என வந்தது.

இதயம் உருகியெ ஒரு குளபதம் உற ---

குளம் - சருக்கரை, வெல்லம்.

குளபதம் - சருக்கரைப் பாகுபதம்.

இதயமானது அன்பினால் உருகி, வெல்லப் பாகுபோல் விளங்கவேண்டும்.
  
சுரபி மகவினை எழு பொருள் வினவிட..... ரதம் அதை நடிய மொழிபவன் ---

இந்த மூன்று வரிகளில் அடிகளார் மனுநீதிச் சோழன் பெருமையை விளக்குகின்றார்.

சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா யிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில் வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.

தன்உயிர்க் கன்று வீயத்
         தளர்ந்தஆத் தரியாது ஆகி
முன்நெருப்பு உயிர்த்து விம்மி
         முகத்தினில் கண்ணீர் வார
மன்உயிர் காக்கும் செங்கோல்
         மனுவின்பொன் கோயில் வாயில்
பொன்அணி மணியைச் சென்று
         கோட்டினால் புடைத்தது அன்றே. --- பெரியபுராணம்.

அம் மணி ஓசை மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.

அவ்வுரை கேட்ட வேந்தன்
         ஆஉறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக்கொண் டால்போல்
         வேதனை அகத்து மிக்குஇங்கு
இவ்வினை விளைந்த வாறுஎன்று
         இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதுஎன் செங்கோல் என்னும்
         தெருமரும் தெளியும் தேறான்.    --- பெரியபுராணம்.

மன்உயிர் புரந்து வையம்
         பொதுக்கடிந்து அறத்தில் நீடும்
என்நெறி நன்றால் என்னும்
         என்செய்தால் தீரும் என்னும்
தன்இளம் கன்று காணாத்
         தாய்முகம் கண்டு சோரும்
அந்நிலை அரசன் உற்ற
         துயரம்ஓர் அளவிற்று அன்றால்.   --- பெரியபுராணம்.

இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள்.

மந்திரிகள் அதுகண்டு
         மன்னவனை அடிவணங்கிச்
சிந்தை தளர்ந்து அருளுவது
         மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்
கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்
         கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை
         வழிநிறுத்தல் அறம்என்றார்.   --- பெரியபுராணம்.

அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார்.

வழக்குஎன்று நீர்மொழிந்தால்
         மற்றுஅதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்துஅலறுங்
         கோஉறுநோய் மருந்துஆமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்று
         எல்லீரும் சொல்லியஇச்
சழக்குஇன்று நான்இயைந்தால்
         தருமம் தான் சலியாதோ.   --- பெரியபுராணம்.

மாநிலம்கா வலன்ஆவான்
         மன்உயிர்காக் கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு
         தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
         கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
         அறம் காப்பான் அல்லனோ.   --- பெரியபுராணம்.

என்மகன்செய் பாதகத்துக்கு
         இருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியன்ஓர் உயிர்கொன்றால்
         அவனைக்கொல் வேன்ஆனால்
தொன்மனுநூல் தொடைமனுவால்
         துடைப்புஉண்டது எனும்வார்த்தை
மன்உலகில் பெறமொழிந்தீர்
         மந்திரிகள் வழக்கு என்றான்.   --- பெரியபுராணம்.

மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.

அவ்வுரையில் வருநெறிகள்
         அவைநிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் நீர்
         சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம்
         இப்பெற்றித்து ஆம் இடரால்
வெவ் வுயிர்த்துக் கதறிமணி
         எறிந்து விழுந்தது விளம்பீர்.  --- பெரியபுராணம்.

போற்றி இசைத்துப் புரந்தரன்மால்
         அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச
வீற்றுஇருந்த பெருமானார்
         மேவிஉறை திருவாரூர்த்
தோற்றம்உடை உயிர்கொன்றான்
         ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவும் மற்று அவற்கொல்லும்
         அதுவே ஆம் எனநினைமின்.  --- பெரியபுராணம்.

அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.

ஒருமைந்தன் தன்குலத்துக்கு
         உள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
         கடன்என்று தன்மைந்தன்
மருமம் தன் தேர்ஆழி
         உற ஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
         அரிதோ மற்று எளிதோதான்.  --- பெரியபுராணம்.

கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.

தண்அளிவெண் குடைவேந்தன்
         செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
         வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணல்அவன் கண்எதிரே
         அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
         வீதிவிடங் கப்பெருமான்.    --- பெரியபுராணம்.

சடைமருங்கில் இளம்பிறையும்
         தனிவிழிக்கும் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும்
         எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
         கண்டுஅரசன் போற்றிஇசைப்ப
விடைமருவும் பெருமானும்
         விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான். --- பெரியபுராணம்.

அந்நிலையே உயிர்பிரிந்த
         ஆன்கன்றும் அவ்அரசன்
மன்உரிமைத் தனிக்கன்றும்
         மந்திரியும் உடன்எழலும்
இன்னபரிசு ஆனான் என்று
         அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்
முன்னவனே முன்நின்றால்
         முடியாத பொருள்உளதோ.   --- பெரியபுராணம்.

ஆரூர்ப் படியில் அறுமுக ---
                 
திருவாரூர் சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகைநீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணி தீர்த்தம்

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தான். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திரு அந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

இத்தலம் பிறக்க முத்தி தருவது என்று புகழப்படும் சிறப்பினை உடையது.

 இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர். ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டுக் கணங்கள் சூழ வருவாராம்.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரைத் திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
"மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

 இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்
          அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
          வழிபாடு              : லிங்க வழிபாடு.
          முத்தித் தலம்         : திருநாவலூர்
          குருபூசை நாள்        : சித்திரை - சித்திரை.


நமிநந்தி அடிகள் வரலாறு

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நமிநந்தி அடிகள் பிறந்த குலத்தின் சார்பாகச் சில நடைமுறைகள் அக்காலத்தில் வகுக்கப்பட்டன. அதன்படி, வெளியில் எங்காவது சென்று வந்தால், குளித்து முடித்தே வீட்டுக்குள் புகவேண்டும் என்பது நியதியாக இருந்தது.

அடியவர்களுக்கு இந்த நியதி எல்லாம் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டவே, நமிநந்தி அடிகள் வாழ்வில் இந்த நிகழ்வு காட்டப்பட்டது. இது இறைவன் திருவிளையாடல்.

இறைவனுக்கு அடியவராக இருப்பவர் யாவராயினும் அவர் நம்மால் வணங்கத் தக்கவர். அடியாராக இல்லாதார் எப்படிப்பட்டவர் ஆயினும் அவர் நம்மால் போற்றத் தக்கவர் அல்லர் என்னும் கருத்து அமைந்த, அப்பர் பெருமான் திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்.

"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;
         நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்;
         இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை;
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான
         சங்கரன் நல் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
         கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே".

இதன் பொழிப்புரை :

தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.

ஆதலின் .நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் இதனையே தமது திருப்பாடல்களில் வலியுறுத்திக் காட்டினார்.

அடிமையில் குடிமை இல்லா
     அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
     குக்கரில் பிறப்பரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்!
     மொய்கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்
     அரங்கமா நகர் உளானே.

இதன் பொழிப்புரை ---

திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! எனக்குக் கைங்கரியம் செய்வதில் ஊற்றம் இல்லாதவர்களாய், அடிமைக்க் மாறுபட்டவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கூழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புபவன் நீ.

குக்கர் - நாய்.

வேத அத்யயனம் (கற்பதன்) பண்ணுவதன் மூலம் அவர்கள் உண்மையில் அறிய வேண்டியது என்ன? என்றால் எம்பெருமான் நாராயணனே எல்லா உலகுக்கும் ஜகத் காரணன், ரக்ஷகன், ஸ்வாமி. நாம் அவனுக்கு சொத்து போல உடைமை. நமது ஆத்ம சொரூபத்தின் பலனே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்வது தான் என்கிற உணர்வு, ஞானம் வர வேண்டும். வந்தால்தான் வேதம் அறிந்தவர்களுக்கு வர வேண்டிய ஞானமாகிய உணர்வு வந்த்தாக அர்த்தம். அப்படி வந்தவர்கள் தான் சதுர்வேதிகள்.

ஆழ்வார் சதுப்பேதிமார்கள் என்கிறார். இந்த ஞானம் வராதும்- அதனை அறியாமலும், வேறு பயன்களைப் பெற்று வாழ இருப்பவர்களை "அயல் சதுப்பேதிமார்கள்" என்று பாசுரத்தில் சொல்லுகிறார்.

விஷ்ணு பக்தி இல்லாது, வேதம் அறிந்தாலும் வீண் என்கிறது சாஸ்திரம். இப்படி கைங்கர்யத்தில் நாட்டம் இல்லது நாலு வேதங்களையும் கற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் யார்? என்பதை அருளுகிறார்.

வேதநெறி காட்டிய வழிகளைக்  கடைப்பிடிக்காது,
வேதம் செய்யாதே என்று விலக்கி வைத்தது எல்லாம் செய்தும், பகவானுக்கு எதிராக இருந்தும், பலபல பாவங்களைச் செய்து, அதனால் பல பல தாழ்ந்த பிறவிகளில் மீண்டும் பிறந்து உழல்கிறோம். அப்படி மிகவும் கீழான தாழ்ந்த சண்டாள ஜாதியைத் தான் "குக்கர்" என்கிறார். இப்படி குடிப்பிறப்பால் மிகவும் சண்டாளனாக பிறந்தாலும், அரங்கனிடத்தில் அன்பு பூண்டு, வாழும் சோம்பராக நல்ல ஞானம் கொண்டவரானால் அவரது பிறப்பு தாழ்ந்தது அல்ல என்கிறார் ஆழ்வார்

இராமன் காட்டில் இலக்குவமனிடம் ஜடாயுவைப் பார்த்த பின்பு, "லக்ஷ்மணா! நல்ல சாதுக்கள்-, தர்மம் அறிந்தவர்கள், சூரர்கள், எல்லாம் சரணம் அடையத் தகுந்த மஹா புருஷர்களே. அவர்கள் விலங்குகளாயும் இதர தாழ்ந்த யோநிகளிலும் உண்டு" என்றார். இதனால், பகவானைப் பற்றிய ஞானம் விலங்குகள் பறவைகளுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது.

வேதத்தின் பொருளை விளக்க வந்த இராமாயணத்தில், காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவச்சிகளும், அனுமான், சுக்ரீவன் போன்ற வானரங்களும், ஜடாயு போன்ற பறவைகளும், விபீடணன் போன்ற அரக்கர்ர்களும் எம்பெருமானைப் பற்றிய ஞானத்தோடு இருந்தார்கள் என்பது தெரியும்.

மற்றொரு இதிகாசமான மகாபாரதத்திலும், தாழ்ந்த ஜாதியில் பிறந்த விதுரர், வேடனாய் மாமிச வியாபாரம் செய்து வந்த தர்மவ்யாதன்,  ஆய்ப்பாடியில் வாழ்ந்த எல்லா இடைச்சியர்கள் போன்ற அனைவரும் எம்பெருமானை உணர்ந்து, எல்லாம் கண்ணன் என்று இருந்தார்கள்.

அடியவர்களைப் பழிப்பவர்கள், உயர்ந்த சாதியர் ஆனாலும், அவர்களைப் புலையர் என்கின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

"அமர ஓர் அங்கம் ஆறும்,
     வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய
     சாதி அந்தணர்களேலும்,
நுமர்களைப் பழிப்பர் ஆகில்,
     நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்,
     அரங்கமா நகர் உளானே".

இதன் பொழிப்புரை ---

அரங்க மாநகர் உள்ளானே! ஒப்பற்ற சிட்சை, வியாபகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறு வகையான வேத அங்கங்களையும், நிகர் அற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி, உன் அடியார்களில் முதல்வராய் பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், தேவரீருடைய அடியார்களை, அவர்களுடைய பிறப்பு நோக்கிப் பழித்தால், அந்த நொடியிலேயே, அப்போதே, அந்தப் பிராமணர்கள் சண்டாளர்கள் ஆவார்.


நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

செருத்துணை நாயனார் வரலாறு

செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார். அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழே தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர். வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார். அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார். அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது. கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார். அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள். கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார். அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று. சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

 திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

 கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

கருத்துரை

முருகா! விலைமாதரைப் போற்றி அழியாமல், தேவரீரது திருவடிகளைப் போற்றி உய்ய அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...