கன்னபுரம் - 0819. அன்னமிசை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அன்னம் மிசை (கன்னபுரம்)

முருகா!
அடமார்க்கத்தை விடுத்து, பத்திநெறியில் நின்று
பேரின்ப வாழ்வினை அடைய அருள்வாய்.


தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
     தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான


அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
     தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென்

றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
     கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம்

என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
     டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென்

றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
     தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ

கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
     கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
     கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே

பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
     பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா

பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
     பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.

பதம் பிரித்தல்

அன்னமிசைச் செம்நளிநச் சென்மி கணக்கு அந் நியமத்து,
     அன்ன மயப் புலால் யாக்கை ...... துஞ்சிடாது, ன்று

அல் நினைவு உற்று, ல் நினைவு உற்று, ன்னியரில் தன்நெறி புக்கு,
     அன்னிய சற்று உலா மூச்சு ...... அடங்க, யோகம்

என்னும் மருள் கின்னம் உடைப் பல் நவை கற்று, ன்னவை விட்டு,
     இன்னணம் எய்த்து, அடா மார்க்கம் ...... இன்புறாது, ன்று,

இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து, ன்னல் விடுத்து,
     இன்னது எனப் படா வாழ்க்கை ...... தந்திடாதோ?

கன்னல் மொழி, பின்அளகத்து, ன்னநடை, பன்ன உடைக்
     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!

பொன் அசலப் பின் அசலச் சென்னியில் நல் கன்னபுரப்
     பொன்னி நதிக் கரா நீர்ப்  ...... புயங்க நாதா!

பொன்மலையில் பொன்னி நகர்ப் புண்ணியர் பொற்பொன்மவுலிப்
     பொன் உலகத்து இராசாக்கள் ...... தம்பிரானே.


பதவுரை

      கன்னல் மொழி --- கரும்பு போலும் இனிய சொல்லை உடையவளும்,

     பின் அளகத்து --- பின்னிய கூந்தலை உடையவளும்,

     அன்ன நடை --- அன்னம் போன்ற நடையினை உடையவளும்,

     பன்ன உடை --- தழைகளால் ஆன ஆடையினை அணிந்திருப்பவளும்,

      அச் சுறா வீட்டு கண் அவிர் கெண்டையாளை --- அந்தச் சுறா மீனையும் வெற்றி கொள்ளும், விளக்கம் பொருந்திய கெண்டைமீன் போன்ற கண்களை உடையவளும் ஆகிய வள்ளிநாயகியை

      கன்னம் இட --- களவு கொண்டு செல்வதற்கா,

     பின் இரவில் --- பின் இரவுக் காலத்தில்,

     துன்னு புரைக் கல் முழையில் --- நெருங்கித் துளைக்கப்பட்டுள்ள கல் குகையில்,

      கல் நிலையில் புகா --- கற்சிலை போன்று அசைவற்று, அரவமற்றுப் புகுந்து இருந்து,

     வேர்த்து நின்ற வாழ்வே --- காலம் பார்த்துக் காத்திருந்த செல்வமே!

      பொன் அசலப் பின் அசலச் சென்னியில் ---  பொன் மலையாகிய மேருவுக்குப் பிற்பட்டுப் போகாமல், கலக்கம் ஏதும் இன்றி நல்லாட்சி புரிந்திருந்த சோழனுடைய நாட்டில்,

     பொன்னி நதிக் கரா நீர் நல் கன்னபுர --- முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள கன்னபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,

     புயங்க நாதா --- பாம்பினைத் திருச்சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவரே,

      பொன் மலையில் --- திருக்கயிலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும்,

     பொன்னின் நகர்ப் புண்ணியர் --- பொன்மகளாகிய திருமகள் வீற்றிருக்கும் திருவைகுண்டத்தில் எழுந்தருளி இருக்கும் திருமாலுக்கும்,

      பொன் பொன் மவுலிப் பொன் உலகத்து இராசாக்கள் தம்பிரானே --- அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தனிப்பெருந்தலைவரே!.

      அன்னம் மிசை --- அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவரும்,

     செம் நளினம் சென்மி --- தாமரையில் வாசம் புரிபவரும் ஆகிய பிரமதேவன் விதித்த,

     கணக்கு அந் நியமத்து --- கணக்கின் நியமப் படிக்கு வந்த,
        
     அன்ன மயப் புலால் யாக்கை --- அன்னமய கோசமான இந்த புலால் உடம்பு,

     துஞ்சிடாது என்ற --- அழிந்து போகாது என்ற

     அந் நினைவு உற்று --- அந்த நினைவினை அடைந்து,

     அல் நினைவு உற்று --- அல்லாத நினைவுகளைக் கொண்டு,

     அன்னியரில் தன்னெறி புக்கு --- திருவருளுக்கு அயலானவர்கள் காட்டும் வழியில் ஒழுகி,

     அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் என்னும் --- வெளியில் விடுகின்ற மூச்சுக் காற்றானது அடங்கும்படிக்குப் புரிகின்ற யோகம் எனப்படும்,

     மருள் கின்னம் உடை --- மயக்க அறிவையும், துன்பத்தையும் தருகின்,

     பல் நவை கற்று --- இழிந்த நூல்களைக் கற்று, (அவற்றின் வழி ஒழுகி),

     இன்னவை விட்டு --- இனிமையானவற்றை விடுத்து,

      இன்னணம் எய்த்து --- இவ்வாறாக இளைப்பினை அடைந்து,

     அடா மார்க்கம் --- பொருத்தமற்ற இந்த வழியானது,

     இன்புறாது என்று --- உயிருக்கு இன்பத்தைத் தராது என்று உணர்ந்து,

      இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து --- இந்த நெறிதான் எனக்கு இனியது என்று கொண்ட கொள்கையினால் விளைந்த இழிவினை ஒழித்து,

     இன்னல் விடுத்து --- துன்பத்தை விடுத்து,

      இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ --- இத் தன்மையது என்று சொல்லமுடியாத பேரின்பத்தைத் தரும் வாழ்வினை தேவரீரது திருவருள் அடியேனுக்குத் தராதோ?


பொழிப்புரை


         கரும்பு போலும் இனிய சொல்லை உடையவளும், பின்னிய கூந்தலை உடையவளும், அன்னம் போன்ற நடையினை உடையவளும், தழைகளால் ஆன ஆடையினை அணிந்திருப்பவளும், அந்தச் சுறா மீனையும் வெற்றி கொள்ளும், விளக்கம் பொருந்திய கெண்டைமீன் போன்ற கண்களை உடையவளும் ஆகிய வள்ளிநாயகியைக் களவு கொண்டு செல்வதற்காகப் பின் இரவுக் காலத்தில், நெருங்கித் துளைக்கப்பட்டுள்ள கல் குகையில், கற்சிலை போன்று அசைவற்று, அரவமற்றுப் புகுந்து இருந்து, காலம் பார்த்துக் காத்திருந்த செல்வமே!

         பொன் மலையாகிய மேருவுக்குப் பிற்பட்டுப் போகாமல், கலக்கம் ஏதும் இன்றி நல்லாட்சி புரிந்திருந்த சோழனுடைய நாட்டில், முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள கன்னபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பாம்பினைத் திருச்சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவரே,

         திருக்கயிலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும், பொன்மகளாகிய திருமகள் வீற்றிருக்கும் திருவைகுண்டத்தில் எழுந்தருளி இருக்கும் திருமாலுக்கும், அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தனிப்பெருந்தலைவரே!.

         அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவரும், தாமரையில் வாசம் புரிபவரும் ஆகிய பிரமதேவன் விதித்த கணக்கின் நியமப் படிக்கு வந்த அன்னமய கோசமான இந்த புலால் உடம்பு, அழிந்து போகாது என்ற நினைவினை அடைந்து, அல்லாத நினைவுகளைக் கொண்டு, திருவருளுக்கு அயலானவர்கள் காட்டும் வழியில் ஒழுகி, வெளியில் விடுகின்ற மூச்சுக் காற்றானது அடங்கும்படிக்குப் புரிகின்ற யோகம் எனப்படும் மயக்க அறிவையும், துன்பத்தையும் தருகின்இழிந்த நூல்களைக் கற்று, அவற்றின் வழி ஒழுகி, இனிமையானவற்றை விடுத்து, இவ்வாறாக இளைப்பினை அடைந்து, பொருத்தமற்ற இந்த வழியானது உயிருக்கு இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இந்த நெறிதான் எனக்கு இனியது என்று கொண்ட கொள்கையினால் விளைந்த இழிவினை ஒழித்து, துன்பத்தை விடுத்து, இத் தன்மையது என்று சொல்லமுடியாத பேரின்பத்தைத் தரும் வாழ்வினை தேவரீரது திருவருள் அடியேனுக்குத் தராதோ?

விரிவுரை

 
அன்னம் மிசை ---

அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவர் பிரமதேவர்.

செம் நளினம் சென்மி ---

நளினம் - தாமரை.

சென்மி - சென்மித்து இருக்கின்,

கணக்கு அந் நியமத்து அன்ன மயப் புலால் யாக்கை ---

பிரமதேவன் விதித்த அந்தக் கணக்கின் நியமப் படிக்கு வந்தது
அன்னமய கோசமான ஆகிய இந்தப் புலால் உடம்பு,

துஞ்சிடாது என்ற அந் நினைவு உற்று அல் நினைவு உற்று ---

இந்தப் புலால் உடம்பானது அழிந்து போகக் கூடியதாகும். உடம்புக்கு வேறாக உள்ள உயிரையும், அந்த உயிர்க்கு உயிராக உள்ள இறைவனையும் அறிந்து கொள்ள முடியாமல்படிக்கு, அறிவினை மறைப்பது உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள ஆணவ மலம். எனவே, தான் அல்லாத உடம்பினைத் தான் என்று எண்ணுகின்ற அறிவு மயக்கம் உண்டாகும். அதன் காரணமாக, அழிய உள்ள இந்த உடம்பு அழியாது நிலைத்திருக்கும் என்னும் நினைவு இருக்கும். அல்லாத நினைவுகளை நிறைந்து இருக்கும்,
   
அன்னியரில் தன்னெறி புக்கு ---

அன்னியம் - அயலானது.

அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் என்னும் மருள் கின்னம் உடை பல் நவை கற்று ---

மருள் - மயக்கம். ஒன்றை ஒன்றாக அறிவது மயக்க அறிவு ஆகும்.

கின்னம் - துன்பம், கீழ்மை. கீழ்மை நெறியில் சென்றால் விளைவது துன்பமே ஆகும்.

"கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம்" என்னும் கந்தர் அலங்காரப் பாடல் வரிகளை எண்ணுக.

"நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே" என்னும் கந்தர் அநுபூதிப் பாடல் வரியையும் எண்ணுக.

வெளியில் விடுகின்ற மூச்சுக் காற்றானது அடங்கும்படிக்குப் புரிவது யோகம் என்பர் ஒரு சாரார்.

அட்டாங்க யோகத்தின் ஒரு கூறு பிராணாயாமம் ஆகும். அட்டாங்கயோகத்தனி கூறுகளும் அவற்றின் விளக்கமும் வருமாறு ---

1. இயமம் - விலக்கியன ஒழித்தல்.

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் நியமத்து இடையில் நின்றானே.  ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

இயமத்தின் பயனாவது ......

போது உகந்து ளறும் புரிசடையான் அடி
யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர்,
ஏது உகந்தான் இவன் என்று அருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடையோனே. --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப்பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பி வைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.

2. நியமம் - நன்றாற்றல்.

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே.           --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.

குறிப்புரை : `சிவபெருமானது ஒறுக்கும் ஆற்றலையும், அருளும் ஆற்றலையும் உணர்பவனே இயம நியமங்களில் நிற்க வல்லவனாவான். ஆயினும், இயமத்தையும் அன்பின் வழிக்கொள்ளுதலே சிறப்பு என்பார் இதனை இங்குக் கூறினார். இயமம் இறைவனது ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினாலும், நியமம் அவனது அருளை விரும்பும் அன்பினாலும் ஆகற்பாலனவாதலை அறிந்துகொள்க.

``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``                    -தி.5 ப.23 பா.9

என அப்பரும் அருளிச்செய்தார்.

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின், - வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு.
                                   
என்றார் குமரகுருபர அடிகள்.

இயமத்தோடு, நியமத்தில் நிற்றலின் பயனாவது.....

பற்றி, பதத்து அன்பு வைத்து, பரன்புகழ்
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்ற எழுந்தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.       ---  திருமந்திரம்.

         பொழிப்புரை : சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

3. ஆதனம் - ஆசனம், இருக்கை.

ஆதனமாவது, யோகம் புரிவதற்கு கை, கால், உடல் உறுப்புக்களைத் தக்கவாறு அமைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் முறை.

பங்கயம் ஆதி பரந்தபல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும், அவற்றினுள்
சொங்கு இல்லை யாகச் சுவத்தி எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.       --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : ``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோகமுறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.

யம, நியமத்தோடு, ஆதனத்தில் நிற்றலின் பயனாவது ....

வருந்தித் தவம்செய்து வானவர் கோவாய்த்
திருந்து அமராபதிச் செல்வன் இவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.


4. பிராணாயாமம் - வளிநிலை.

பிராணாயாமம் என்பது மூச்சை அடக்கல். 
பிராணன் - மூச்சுக் காற்று. ஆயாமம் - அடக்குதல்.

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும், கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை :ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

யம, நியமத்தில் நின்று, ஆதனத்தையும் பயின்று,, பிராணாயாமத்தைப் பயில்வதின்  பயனாவது .....

செம்பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர்கொள்ள
எம்பொன் தலைவன் இவன் ஆம் எனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலும் ஆமே.        ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும்பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மையலுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.


5. பிரத்தியாகாரம் - தொகை நிலை.

பிரத்தியாகாரமாவது, மனத்தைப் பொறிவழிகளினின்றும் பிரித்து அகமுகமாக ஆதாரங்களில் நிற்கச் செய்தல்.

கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்
கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்;
பண்டுஉகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.  ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டுதொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதியோடு இருத்தலும் கூடும்.

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம் ஆகியவற்றோடு பிரத்தியாகாரத்தின் பயனாவது .....

சேர் உறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆர் இவன் என்ன, அரனாம் இவன் என்ன,
ஏர்உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார் உறு கண்டனை மெய்கண்ட வாறே.    ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மையாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.

6. தாரணை - தொகை நிலை.

பொறிவழிச் சென்ற மனத்தை மூலாதாரம் முதலிய ஆதாரங்களின் வழிச் செலுத்துதல் பிரத்தியாகாரம். அங்ஙனம் சென்ற மனத்தை மீளவும் புறத்தே பொறிவழிச் செல்லாது தடுத்து அவ்வவ்வாதாரங்களிலே நிறுத்துதல் தாரணை,

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி,
வீணாத்தண்டு ஊடே வெளி உறத் தான்நோக்கி,
காணாக்கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே.      ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரத்தோடு, தாரணையில் நிற்றலின் பயனாவது ....

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடும்,
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்திசைப்
பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே.     ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : மக்கள் நல்வழி ஒழுகும் ஆற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி உடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.


7. தியானம் - இடைவிடாது நினைத்தல்.

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப்படி அவ்வவ் ஆதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம்.

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,, தாரணையோடு, தியானத்தின் பயனாவது .....

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடம்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்க வல்லார்க்கும் தன் தன்இடம் ஆமே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.


8. சமாதி - நொசிப்பு நிலை.

சமாதி அமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி அமாதியில் தான் எட்டுச் சித்தி
சமாதி அமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி அமாதி தலைப்படும் தானே.      ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : ``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதியேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,, தாரணை, தியானத்தோடு சமாதி நிலையினை எய்துவதின் பயனாவது .....

காரியம் ஆன உபாதியைத் தான்கடந்து,
ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற,
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தார்இயல் தற்பரம் சேர்தல் சமாதியே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை : தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

அட்டாங்க யோகத்தைப் பயில்வதினால் பின்வரும் சித்திகள் கைவரப் பெறலாம்.

1.   அணிமா --- அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2.   மகிமா --- மலையைப் போல் பெரிதாதல்.

3.   இலகிமா --- காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4.   கரிமா --- கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5.   பிராப்தி --- எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல்,
மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
   
6.   பிராகாமியம் --- தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
   
7.   ஈசத்துவம் --- நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
   
8.   வசித்துவம் --- அனைத்தையும் வசப்படுத்தல்.

ஆனால், இறையருளைப் பெறுவதே நோக்கமாகக் கொண்ட அடியவர்களுக்கு இந்த எண்வகைச் சித்திகளில் பற்று உண்டாகாது. அவற்றை அடியவர்கள் விரும்பமாட்டார்கள்.

"இந்து இரங்கும் முடி அடியவர் இச்சியா எண்சித்தி" என்று திருவிளையாடல் புராணம் கூறும்.

"மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருள் என நினையாது, ன் அருளினை நினைந்து,
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர்" 

என்று திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்தடிகள் காட்டினார்.


 இன்னவை விட்டு இன்னணம் எய்த்து ---

உயிருக்கு இனிமை தருபவற்றை எல்லாம் விடுத்து, புலன்களுக்கு இன்பம் தருபவற்றை எலாம்ம் விரும்புவதை விடுத்தல் நன்று என்றார். உலக இன்பங்கள் யாவும் பிறப்பு இறப்பைத் தொடர்ந்து தந்து, உயிருக்கு இளைப்பைத் தருபவை என்பதால், "இன்னணம் எய்த்து" என்றார்.

"எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்" என்ளார் மணிவாசகப் பெருமான்.

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண! நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி!
யான் ஒன்று உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்தநாள் தொடங்கி,

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை; யான் அவர்
தந்தையர் ஆகியுந் தாயர் ஆகியும்
வந்து இராததும் இல்லை; முந்து
பிறவா நிலனும் இல்லை; அவ்வயின்
இறவா நிலனும் இல்லை; பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை;
யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை;
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்
மேல் இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்
நந்தாச் சோதி! நின் அஞ்செழுத்து நவிலும்

தந்திரம் பயின்றதும் இலனே; தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே; ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பு எனும் இரண்டின்
கடல் படாவகை காத்தல்நின் கடனே.

என்று பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பாடி அருளியது காண்க.

அடா மார்க்கம் இன்புறாது என்று ---

அட்டாங்க யோகம் என்னும் இந்த வழியானது பொருத்தம் அற்றது. அது உயிருக்கு இன்பத்தைத் தராது என்பதை உணர்தல் வேண்டும்.

காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டில் புகுதல் மிக எளிதே; விழி நாசிவைத்து
மூட்டி, கபால மூலாதார நேர் அண்ட மூச்சை உள்ளே
ஓட்டிப்பிடித்து, எங்கும் ஒடாமல் சாதிக்கும் யோகிகளே.

என்று அடிகளார் கந்தரலங்காரத்தில் காட்டியதன் அருமையை உணர்க.  இத் திருப்பாடலில் அடிகளார் யோகமார்க்கத்தின் அருமையையும், அன்பு மார்க்கத்தின் எளிமையையும் விளக்கி அருளுகின்றார். வேதாகம வழி நின்று, விலக்கியன தவிர்த்தும், விதித்தன செய்தும், அணு அளவும் மாறுமாடு இன்றி நடப்பது விதிமார்க்கம் என்னும் யோகமார்க்கம்.

அன்பு மார்க்கம் என்னும் பத்தி மார்க்கமாவது, அன்பு மயமாக நிற்பது.

விதிமார்க்கத்தில் நிற்போர் இறைவனைத் தேடிச்சென்று திருவடியை அடைவர்.

அன்பு மார்க்கத்தில் நின்றோரை இறைவன் தேடிச் சென்று வலிதில் ஆட்கொண்டு அருள்வான்.

"தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே" என்பது மணிவாசகம்.

"மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
தேடி, விளையாடியே, அங்ஙனே நின்று
வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே".

என்று திருச்செந்தூர்த் திருப்புகழில் அடிகளார் காட்டியது காண்க.

"காடே திரிந்து என்ன, காற்றே புசித்து என்ன, கந்தை சுற்றி
ஓடே எடுத்து என்ன, உள்ளன்பு இலாதவர், ஓங்கு விண்ணோர்
நாடே இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர்பால்
வீடே இருப்பினும் மெய்ச்சான வீட்டு இன்பம் மேவுவரே"

எனப் பட்டினத்தடிகள் கூறுவதால், அன்பு மார்க்கமே மேலானது என்பது விளங்கும்.

இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து ---

இந்த நெறிதான் இனியது என்று தன்னறிவால் கொண்டவை எல்லாம் இழிவினையே தரும். மதவாதிகள் யாரும் தத்தமது கொள்கையே சிறந்தது என்று வாதிடுவார். அந்த வாதத்தினால் அவர்க்கு உண்மை அறிவு விளங்காது. வாதிட்டே மடிவர்.

எனவே, "மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்" என்று வேண்டினாரு வள்ளல் பெருமான். பேய் பிடித்தவனுக்கு பேய்த் தன்மையே மேலோங்கி இருக்கும். மனிதத் தன்மை இருக்காது.

"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்றார் மணிவாசகப் பெருமான்.

"வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வு அரிய பெரிய பொருளே" என்றார் தாயுமானார். வெறும் சமய உணர்வால் இறையருளைப் பெறமுடியாது.

எனவே, அடிகளார் "மதப் புன்மை" என்றார்.


இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ ---

பேரின்பமானது இப்படிபட்டது என்று விளக்க முடியாத பெருநிலை வாய்ந்தது. அனுபவத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் என்பதால், "இன்னது எனப்படா வாழ்க்கை" என்றார் அடிகளார். அப்படிப்பட்ட பெருவாழ்வை முருகப் பெருமான் அருள் புரிய வேண்டுகின்றார்.

கன்னல் மொழி ---

கரும்பு போலும் இனிய சொல்லை உடையவள் வள்ளிநாயகியார்.

பின் அளகத்து ---

அளகம் - கூந்தல். பின்புறம் தொங்கும் கூந்தல் என்றும் கொள்ளலாம். பின்னிய கூந்தல் என்றும் கொள்ளலாம்.

பன்ன உடை ---

பர்ணம் என்ற சொல் தமிழில் பன்னம் என வழங்கும்.

பர்ணம் - இலை, தழை.

வேடர்கள் காட்டில் உள்ள தழைகளைத் தைத்து உடையாக உடுத்துக் கொள்வார்கள்.

காட்டில் வாழும் வேடர்களிடை வளர்ந்திருந்த வள்ளிநாயகியை, "தழை உடுத்த குறத்தி" என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் போற்றி எள்ளார்.

மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்துஉலவு
வனசர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்”

என்று வேடிச்சிகாவலன் வகுப்பில் அடிகளார் போற்றி உள்ளார் என்பதையும் அறிக.


அச் சுறா வீட்டு கண் அவிர் கெண்டையாளை கன்னம் இட, பின் இரவில், துன்னு புரைக் கல் முழையில், கல் நிலையில் புகா, வேர்த்து நின்ற வாழ்வே ---

அந்தச் சுறா மீனையும் வெற்றி கொள்ளும், விளக்கம் பொருந்திய கெண்டைமீன் போன்ற கண்களை உடையவளும் ஆகிய வள்ளிநாயகியை களவு கொண்டு செல்வதற்கா, பின் இரவுக் காலத்தில், நெருங்கித் துளைக்கப்பட்டுள்ள கல் குகைகள் நிறைந்த வள்ளிமலையில், கற்சிலை போன்று அசைவற்று, அரவமற்றுப் புகுந்து இருந்து, காலம் பார்த்துக் காத்திருந்தவர் முருகப் பெருமான்.

அந்த வரலாறு வருமாறு.....

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன்நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன்கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

இதனைக் கந்தபுராணம் கூறுமாறு காண்க....

"வல்லியை நாடுவான்போல்
     மாண் பகல் கழித்து வாடிக்
கொல்லை அம் புனத்தில் சுற்றிக்
     குமரவேள் நடுநாள் யாமம்                        
செல் உறும் எல்லை வேடர்
     சிறு குடி தன்னில் புக்குப்
புல்லிய குறவர் செம்மல்
     குரம்பையின் புறம் போய் நின்றான்".                              
    
"பாங்கி செவ் வேளைக் கண்டு
     பணிந்து நீர் கங்குல் போதில்                                    
ஈங்கு வந்திடுவது ஒல்லாது,
     இறைவியும் பிரியின் உய்யாள்,
நீங்கள் இவ்விடத்தில் கூட
     நேர்ந்தது ஓர் இடமும் இல்லை,                                   
ஆங்கு அவள் தன்னைக் கொண்டே
     அகலுதிர் அடிகள் என்றாள்".                                   
    
"என்று இவை கூறிப் பாங்கி
     இறைவனை நிறுவி ஏகித்
தன் துணை ஆகி வைகும்
     தையலை அடைந்து, "கேள்வர்
உன் தனை வவ்விச் செல்வான்
     உள்ளத்தில் துணியா இங்ஙன்                                  
சென்றனர் வருதி" என்னச்
     "சீரிது" என்று ஒருப்பாடு உற்றாள்".                                 
    
"தாய் துயில் அறிந்து தங்கள்
     தமர் துயில் அறிந்து துஞ்சா
நாய் துயில் அறிந்து மற்ற அந்
     நகர் துயில் அறிந்து வெய்ய                           
பேய் துயில் கொள்ளும் யாமப்
     பெரும் பொழுது அதனில் பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி
     வள்ளியைக் கொடு சென்று உய்த்தாள்".                            

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

"அறுமுக ஒருவன் தன்னை
     ஆய் இழை எதிர்ந்து தாழ்ந்து,
சிறுதொழில் எயினர் ஊரில்
     தீயனேன் பொருட்டால் இந்த
நறு மலர்ப் பாதம் கன்ற
     நாள் இருள் யாமம் தன்னில்
இறைவ நீர் நடப்பதே என்று
     இரங்கியே தொழுது நின்றாள்".                                    

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

பொன் அசலப் பின் அசலச் சென்னியில் பொன்னி நதிக் கரா நீர் நல் கன்னபுர புயங்க நாதா ---  

பொன் அசலம் - பொன் மலையாகிய மேரு மலையைக் குறிக்கும்.

சென்னி என்னும் சொல் சோழமன்னர்களைக் குறிக்கும்.

கன்னபுரம். இது நன்னிலம் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கண்ணபுரம் என்பது ஒரு சாரார் கருத்து. கொங்கு நாட்டிலும் ஒரு கன்னபுரம் உள்ளது எனத் தணிகைமணி அவர்கள் கூறுகின்றார்..காங்கேயத்துக்கருகே உள்ளது. விக்ரமசோழீசுவரர் கோயிலே திருப்புகழ்த் தலம் என்பர் ஒரு சாரார். இத்திருத்தலம் திருப்பூரில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், கரூரில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், வெள்ளக்கோயிலுக்கு அருகில் உள்ளது.

கருத்துரை

முருகா! அடமார்க்கத்தை விடுத்து, பத்திநெறியில் நின்று பேரின்ப வாழ்வினை அடைய அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...