திரு ஆரூர் - 0825. கூசாதே பார் ஏசாதே




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கூசாதே பார் (திருவாரூர்)

முருகா!
வாழ்நாள் வீண்நாள் ஆகாமல் அருள்வாய்.


தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
  
கூசா தேபா ரேசா தேமால்
     கூறா நூல்கற் ...... றுளம்வேறு

கோடா தேவேல் பாடா தேமால்
     கூர்கூ தாளத் ...... தொடைதோளில்

வீசா தேபேர் பேசா தேசீர்
     வேதா தீதக் ...... கழல்மீதே

வீழா தேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான்

நேசா வானோ ரீசா வாமா
     நீபா கானப் ...... புனமானை

நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்

தேசா தீனா தீனா ரீசா
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

கூசாதே பார் ஏசாதே மால்
     கூறா நூல் கற்று, ...... உளம்வேறு

கோடாதே, வேல் பாடாதே, மால்
     கூர் கூதாளத் ...... தொடை தோளில்

வீசாதே, பேர் பேசாதே, சீர்
     வேத அதீதக் ...... கழல்மீதே

வீழாதே, போய் நாயேன் வாழ்நாள்
     வீணே போகத் ...... தகுமோதான்?

நேசா! வானோர் ஈசா! வாமா!
     நீபா! கானப் ...... புனமானை

நேர்வாய் ஆர்வாய்! சூர்வாய் சார்வாய்!
     நீள் கார் சூழ் கற் ...... பக சாலத்

தேச ஆதீனா! தீனார் ஈசா!
     சீர் ஆரூரில் ...... பெருவாழ்வே!

சேயே! வேளே! பூவே! கோவே!
     தேவே! தேவப் ...... பெருமாளே.


பதவுரை


      நேசா --- அன்பு வடிவானவரே!

     வானோர் ஈசா --- தேவர்களின் தலைவரே!

     வாமா --- அழகியவரே!

      நீபா --- கடப்ப மலர்மாலையைப் புனைந்தவரே!

     கானப் புனமானை நேர்வாய் ஆர்வாய் --- காட்டில் தினைப்புனத்தினைக் காவல் கொண்டு இருந்த மான்போன்ற வள்ளிநாயகியைச் சந்தித்து உள்ளம் குளிர்ந்தவரே!

      சூர்வாய் சார்வாய் --- சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்புரிந்தவரே! (சூரனாகிய மயிலை வாகனமாகக் கொண்டவரே! )

      நீள்கார் சூழ் கற்பக சாலத் தேச ஆதீனா --- பெரிய கருமேகங்கள் சூழப்பட்டு, கற்பக மரங்கள் நிறைந்துள்ள பொன்னுலகை உரிமையாக உடையவரே!

      தீனார் ஈசா --- வறியவர்களைக் காக்கும் கடவுளே!

      சீர் ஆரூரில் பெருவாழ்வே --- சிறப்புப் பொருந்திய திருவாரூரில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருஞ் செல்வமே!

      சேயே --- செம்மையானவரே!

     வேளே --- முருகவேளே!

     பூவே --- பொலிவு மிக்கவரே!

     கோவே --- உயிர்களுக்குத் தலைவரே!

     தேவே --- கடவுளே!

     தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      கூசாதே --- உள்ளத்தில் நாணம் இன்றி,

     பார் ஏசாதே --- உலகத்தோர் ஏசலில் படாமல்,

      மால் கூறா நூல்கற்று --- அறிவு மயக்கத்தைக் கூறாத அருள் நூல்களைக் கற்று,

      உளம் வேறு கோடாதே ---  அதனால் உள்ளம் மாறுபடாமல்,

      வேல் பாடாதே --- ஞானசத்தியாகிய வேலாயுதத்தைப் பாடிடாமல்,

      மால் கூர் கூதாளத் தொடை தோளில் வீசாதே --- விருப்பத்தைத் தருகின்ற கூதாள மலர்மாலையை உமது திருத்தோள்களில் வீசாமல்,

      பேர் பேசாதே --- உமது பொருள்சேர் புகழைப் பேசாமல்,

      சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே --- சிறப்பான வேதங்களுக்கும் எட்டாததும், வீரக்கழல்களை அணிந்ததுமான திருவடிகளில் வீழ்ந்து பணியாமல்,

      போய் --- இப்படியாகப் போய்,

     நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான் --- நாயினும் கீழான அடியேனுடைய வாழ்நாள் வீணில் கழிந்து போவது நீதியாகுமோ? ஆகாது.

பொழிப்புரை

    அன்பு வடிவானவரே!

     தேவர்களின் தலைவரே!

     அழகியவரே!

      கடப்ப மலர்மாலையைப் புனைந்தவரே!

     காட்டில் தினைப்புனத்தினைக் காவல் கொண்டு இருந்த மான்போன்ற வள்ளிநாயகியை நாடிச் சென்று உள்ளம் குளிர்ந்தவரே!

      சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்புரிந்தவரே! (சூரனாகிய மயிலை வாகனமாகக் கொண்டவரே! )

      பெரிய கருமேகங்கள் சூழப்பட்டு, கற்பக மரங்கள் நிறைந்துள்ள பொன்னுலகை உரிமையாக உடையவரே!

      வறியவர்களைக் காக்கும் கடவுளே!

      சிறப்புப் பொருந்திய திருவாரூரில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருஞ் செல்வமே!

     செம்மையானவரே!

     முருகவேளே!

     பொலிவு மிக்கவரே!

     உயிர்களுக்குத் தலைவரே!

     கடவுளே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      அடியேனது உள்ளத்தில் நாணம் இன்றியும், உலகத்தோர் ஏசலில் படாமலும், அறிவு மயக்கத்தைக் கூறாத அருள் நூல்களைக் கற்று, அதனால் உள்ளம் மாறுபடாமலும், தேவரீரது ஞானசத்தியாகிய வேலாயுதத்தைப் பாடிடாமலும், விருப்பத்தைத் தருகின்ற கூதாள மலர்மாலையை உமது திருத்தோள்களில் வீசாமலும், உமது பொருள்சேர் புகழைப் பேசாமலும், சிறப்பான வேதங்களுக்கும் எட்டாததும், வீரக்கழல்களை அணிந்ததுமான திருவடிகளில் வீழ்ந்து பணியாமலும், இப்படியாகப் போய்,
நாயினும் கீழான அடியேனுடைய வாழ்நாள் வீணில் கழிந்து போவது நீதியாகுமோ? ஆகாது.


விரிவுரை

கூசாதே ---

கூசல் - கூச்சம் உடைமை, மனம் குலைதல்.


பார் ஏசாதே ---

உலகில் உள்ள நல்லோர் ஏசாமல் படிக்கு வாழ்க்கை நடத்துதல் வேண்டும்.

"செகத்தவர் ஏசலில் படவோ" என்று திருத்தணிகைத் திருப்பகழில் அடிகளார் இரங்கி உள்ளதை அறிக.

மால் கூறா நூல்கற்று ---

மால் - மயக்கம். இங்கே அறிவு மயக்கத்தைக் குறித்து நின்றது.

உண்மை அறிவை விளங்கச் செய்யாமல், அறிவு போன்று அறிவுற்றவைகளைக் கூறுகின்ற உலக நூல்களைக் கல்லாமல், அருள் நூல்களைக் கற்று உள்ளம் தெளியவேண்டும்.

பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும்.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப்பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள்,  "மன்னர் பெருமானே! இது அவ நூல். இதனைப் பயில்வதனால் பயனில்லை.  சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினார் என்பர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.

"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்".

இதன் பொருள் --- பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று "அறநெறிச்சாரம்" கூறுமாறு..

"நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு".

இதன் பொருள் ---   பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என "அறநெறிச்சாரம்" கூறுமாறு...

"தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று".

இதன் பொருள் ---   தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து "அறநெறிச்சாரம்" கூறுமாறு....

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்"

இதன் பொருள் ---   மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

வாரி விடப்பட்ட கூந்தலின் அழகும், உடுத்துள்ள வண்ண உடையின் அழகும், முகத்தில் ஒப்பனையாகப் பூசப்பட்டுள்ள மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையில் அழகைத் தருவன ஆகா. உள்ளத்தால் நல்லவர்களாக வாழும், நடுநிலை தவறாத நெறியில் செலுத்தும் கல்வியே சிறந்த அழகினைத் தருவதாகும்.

குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டுஅழகும்,
மஞ்சள் அழகும் அழகு அல்ல, --- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.                 --- நாலடியார்.

அழகினைத் தரும் கல்வியானது,  உலகவாழ்க்கைக்குத் தேவையான நூல்களைக் கற்பது அல்ல. உலக நூல்களால் பெறும் அறிவு வெறும் ஆரவாரத்திற்கு மட்டுமே பயன்படும். அவற்றை விடுத்து, அறிவு நூல்களேயே ஒருவன் கற்கவேண்டும். அந்த நூல்களால் வரும் அறிவே, பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து ஒருவனைக் காப்பாற்றும் கல்வியாகும்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவது எல்லாம், --- கலகல
கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒந் துணை அறிவார் இல்.  ---  நாலடியார்.

அறிவு நூல்களைக் கற்று அதனால் விளங்கும் நுண்ணறிவே சிறந்த அறிவு. அதுவே மெய்ப்பொருளை விளங்கச் செய்யும்.

நீர்அளவே ஆகுமாம் நீராம்பல், தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு, --- மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,
குலத்து அளவே ஆகும் குணம்.  ---  மூதுரை.


உளம் வேறு கோடாதே ---

கோடுதல் - வளைதல். நன்னெறியில் இருந்து திரிதல்.

அறிவு நூல்களைக் கற்று,  அவற்றின் வழி ஒழுகினால், உள்ளம் தடுமாற்றம் அடையாது. தெளிவு பெறும்.

வேல் பாடாதே ---

பழி உறு சட்டகம் ஆன குடிலை எடுத்து, இழிவான
     பகரும் வினைச் செயல்மாதர் ...... தரும் மாயப்
படுகுழி புக்கு, இனிது ஏறும் வழி தடவித் தெரியாது
     பழமை பிதற்றிடு லோக ...... முழுமூடர்

உழலும் விருப்புடன் ஓது பல சவலைக் கலைதேடி,
     ஒரு பயனைத் தெளியாது, ...... விளியாமுன்,
உன கமலப் பதம் நாடி, உருகி உளத்து அமுது ஊற,
     உனது திருப்புகழ் ஓத ...... அருள்வாயே.

சவலை - வருத்தம், மனக்குழப்பம்.

கலை - நூல்கள்.

முழுமூடர்கள் ஓதுவது சவலை நூல்கள். அதனால் பயன் விளையாது. முருகப் பெருமானது திருப்புகழை ஓதி வழிபட்டால் பயன் விளையும் என்று அருணகிரிநாதப் பெருமான் அறிவுறுத்தவது அறிக.

வேலை வணங்குவதை வேலை ஆக அமையவேண்டும். அதுவே, பிறவியாக வேலையில் இருந்து உயிர்களை, முத்தியாகிய கரையில் ஏற்றி அருளும்.

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன், எழுந்தே மகிழ்ந்து
தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்,தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன், அடியேன் உடலம் விழும்போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

எனப் பாம்பன் அடிகளார் பாடியருளுமாறு காண்க.

மால் கூர் கூதாளத் தொடை தோளில் வீசாதே ---

எம்பெருமான் முருகனுக்கு விருப்பதைத் தருவது கூதாள மலர் ஆகும். "வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்" என்பது திருமுருகாற்றுப்படை. பெருமானுக்கு உகந்த மலர்மாலைகளை அவரது திருத்தோள்களில் அணிந்து வழிபட வேண்டும்.


பேர் பேசாதே ---

இறைவனது பொருள்சேர் புகழை எப்போதும் ஓதவேண்டும். அதுவே, இருள்சேர் இருவினையும் சேராமல் நம்மைக் காத்து அருளும்.

சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே ---

சீர் - சிறப்பு.

சிறப்பான வேதங்களுக்கும் எட்டாதது பெருமானுடைய திருவடிகள். "வேதத்தில் காண ஒணாதது" பெருமானுடைய திருவடிகள்.

கழல் - வீரக் கழல். வெற்றிக்கு அணியாக கால்களில் அணிந்து கொள்வது.

அஞ்ஞானத்தில் பிறவிகள் தோறும் உழன்றுவரும் ஆன்மாக்களை, அதில் இருந்து விடுவிக்கும் வெற்றிக்கு அறிகுறியாவது பெருமானுடைய திருவடிகளில் அணிந்துள்ள வீரக்கழல்கள்..  பெருமானுடைய திருவடிகளை வழிபட்டு உய்வதே பிறவியின் பயன் ஆவது.

 
நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான் ---

"நாள் என ஒன்று போல் காட்டி, உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்"

என்றார் திருவள்ளுவ நாயனார்.

எனவே, வாழ்நாளை வீணாக்குதல் கூடாது.

கிடைத்தற்கு அரிய வாழ்நாளை அவத் தொழில்களிலும் களியாடல்களிலும் வீண் சிந்தனைகளிலுமாக வாளா கழிக்காமல், “இரை தேடுவதோடு இறையையும் தேடுஎன்ற அமுதவசனப்படி உடம்பை வளர்ப்பதற்காக உழைப்பதோடு உயிரை வளர்ப்பதற்கும் பாடுபடவேண்டும். சிவசிந்தனையும், சிவ வழிபாடுமே உயிருக்கு உறுதி பயப்பன.

"ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,
பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே;
ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித்
தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!"

என்பது திருவாசகம்.

"ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
     உவர்ப்புக் கேணியில் உழைத்து அகம் இளைத்தேன்,
வீங்கி நீண்டது ஓர் ஒதி என நின்றேன்,
    விழலுக்கே இறைத்து அலைந்தனன், வீணே
தாங்கினேன் உடல் சுமைதனை, சிவனார்
    தனய! நின் திருத்தணிகையை அடையேன்,
ஏங்கினேன் சுழல்படு துரும்பு எனவே,
    என் செய்வான் பிறந்தேன் எளியேனேனே"

என்று இரங்குகின்றார் வள்ளல்பெருமான்.

வீணே நாள் போய்விடாமல் ஆறாறுமீதில்
    ஞானோப தேசம் அருள்வாயே 

என்று முருகப் பெருமானை வேண்டினார் அடிகளார் பிறிதொரு திருப்பகழில்.


கொம்பு அனையார் காது மோது இரு
     கண்களில், ஆமோத சீதள
     குங்கும பாடீர பூஷண ......      நகமேவு
கொங்கையில், நீர் ஆவி மேல்வளர்
     செங்கழு நீர்மாலை சூடிய
     கொண்டையில், ஆதார சோபையில் ...மருளாதே,

உம்பர்கள் ஸ்வாமி! நமோநம,
     எம்பெரு மானே! நமோநம,
     ஒண்தொடி மோகா! நமோநம, ......    என, நாளும்
உன் புகழே பாடி நான் இனி
     அன்புடன் ஆசார பூசை செய்து
     உய்ந்திட, வீண்நாள் படாது, அருள் ...... புரிவாயே.

எனப் பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார்.

எனவே, நமது வாழ்நாள் வீணாகக் கழிதல் கூடாது.
  
நேசா ---

நேசம், நேயம் - அன்பு.

இறைவன் உயிர்கள்பால் பெருங்கருணை மிக்கவன். அவன் அன்பு வடிவானவன். அன்பு என்றாலும் சிவம் என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. அன்பு வேறு சிவம் வேறு என்பவர் அறிவு இல்லாதவர் என்கின்றார் திருமூல நாயனார்.

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்"

அன்பு இருக்கின்ற இடத்திலே சிவம் வெளிப்பட்டு விளங்கும் என்பதை, "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்னும் மணிவாசகத்தால் தெளியலாம்.

வாமா ---

வாமம் --- அழகு, ஒளி.

இறைவன் எம்பெருமான் என்றும் இளையவன். "என்றும் அகலாத இளமைக்கார" என்றார் அடிகளார். "என்றும் இளையாய், அழகியாய்" என்று திருமுருகாற்றுப்படைச் சிறப்பு வெண்பா கூறும்.

நீபா ---

நீபம் - கடப்ப மலர்.

நீள்கார் சூழ் கற்பக சாலத் தேச ஆதீனா ---

கார் - கருமேகம்.

சாலம் - கூட்டம்.

ஆதீனம் - ஆளுகை, உரிமை.

கற்பகசாலத் தேசம் - கற்பக மரங்கள் நிறைந்துள்ள இந்திரலோகத்தைக் குறிக்கும்.

தேவாதி தேவன். தேவர்களுக்கு எல்லாம் தலைவன் முருகப் பெருமான். தேவர்களுக்குத் தலைவர் என்பதால், தேவலோகத்துக்கும் தலைவர் ஆவார்.


தீனார் ஈசா ---

தீனம் - வறுமை. தீனர்களைக் காத்து அருள் புரிபவன் இறைவன். வடமொழியில் தீனரட்சகன் என்பர்.


சேயே ---

சேயவன் - செம்மையானவன். செம்பொருள் இறைனவ் என்பதால் சேயே எனப்பட்டார்.

சேய் - குழந்தை. குழந்தேவேலர்.

வேளே ---

வேள் - விரும்பப்படுபவர்.

உலகவர்களால் விரும்பப்படுபவன் மன்மதன். அவன் கருநிறம் பொருந்திய திருமாலின் திருமகன். எனவே, அவன் "கருவேள்" எனப்பட்டான்.

எம்பெருமான் முருகன் அருள் நாட்டம் உள்ள அணியவர்களால் பெரிதும் விரும்பப்படுபவர். அவர் "செவ்வேள்" எனப்பட்டார்.

பூவே ---

பூ - பொலிவு.

சீர் ஆரூரில் பெருவாழ்வே ---

சிறப்புப் பொருந்திய திருவாரூரில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருஞ்செல்வமானவர் முருகப் பெருமான்.

திருவாரூர் சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை,                                     நீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணி தீர்த்தம்
  
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தான். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

 கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திரு அந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

இத்தலம் பிறக்க முத்தி தருவது என்று புகழப்படும் சிறப்பினை உடையது.

 இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர். ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டுக் கணங்கள் சூழ வருவாராம்.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரைத் திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
"மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

 இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்
          அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
          வழிபாடு                 : லிங்க வழிபாடு.
          முத்தித் தலம்          : திருநாவலூர்
          குருபூசை நாள்       : சித்திரை - சித்திரை.

நமிநந்தி அடிகள் வரலாறு

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.
  

செருத்துணை நாயனார் வரலாறு

செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார். அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழே தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர். வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார். அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார். அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது. கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார். அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள். கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார். அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று. சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

 திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

 கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

கருத்துரை

முருகா!
வாழ்நாள் வீண்நாள் ஆகாமல் அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...