பொது --- 1033. தோடுபொரு மைக்கண்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தோடுபொரு மைக்கண் (பொது)

 

முருகா! 

உனது திருப்புகழைப் பாடி உய்ய அருள்

 

                        

தானதன தத்த தானதன தத்த

     தானதன தத்த ...... தனதான

 

தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற

     தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம்

 

தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு

     தோகையர்ம யக்கி ...... லுழலாதே

 

பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி

     யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே

 

பாவவினை யற்று னாமநினை புத்தி

     பாரிலருள் கைக்கு ...... வரவேணும்

 

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

     ஆண்மையுட னிற்கு ...... முருகோனே

 

ஆதியர னுக்கு வேதமொழி முற்றி

     யார்வம்விளை வித்த ...... அறிவோனே

 

வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு

     வேளையென நிற்கும் ...... விறல்வீரா

 

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி

     மீளவிடு வித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

தோடு பொரு மைக்கண் ஆட, வடிவு உற்றது

     ஓர் தனம் அசைத்து, ...... இளைஞோர்தம்

 

தோள்வலி, மனத்து வாள் வலி உழக்கு

     தோகையர் மயக்கில் ...... உழலாதே,

 

பாடல் இசை மிக்க ஆடல் கொடு, பத்தி-

     யோடு நினை பத்தர் ...... பெருவாழ்வே!

 

பாவ வினை அற்று, உன் நாம நினை புத்தி

     பாரில் அருள்கைக்கு ...... வரவேணும்.

 

ஆடல் அழகு ஒக்க ஆடு மயில் எற்றி

    ஆண்மையுடன் நிற்கும் ...... முருகோனே!

 

ஆதி அரனுக்கு வேதமொழி முற்றி,

     ஆர்வம் விளைவித்த ...... அறிவோனே!

 

வேடை மயல் உற்று, வேடர் மகளுக்கு

     வேளை என நிற்கும் ...... விறல்வீரா!

 

மேல் அசுரர் இரட்ட தேவர்சிறை வெட்டி,

     மீள விடுவித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

 

     ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி --- வெற்றி பொருந்தியதும்அழக மிக்கதும்நடனம் புரிகின்றதும் ஆன மயிலின் மீது இவர்ந்து,

 

     ஆண்மையுடன் நிற்கு(ம்) முருகோனே --- அடியார்களை ஆட்கொள்ளும் தன்மையோடு விளங்கும் முருகப் பெருமானே!

 

     ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே --- ஆதிமுதற் பொருளாகிய சிவபரம்பொருளுக்கு வேதப் பொருளை முழுதும் உபதேசித்துமகிழ்வைத் தந்து அருளிய அறிவு வடிவானவரே!

 

     வேடை மயல் உற்று --- காம மயக்கம் கொண்டு,

 

     வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா ---வேடர்கள் மகளாக வளர்ந்து வந்த வள்ளிநாயகிக்கு வேலையாளாக ஏவல் புரிந்த வெற்றி வீரரே!

 

     மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே --- முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி,அவர்கள் தங்கள் பொன்னுலகத்திற்கு மீளும்படி விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

     தோடு பொரு மைக் கண் ஆட --- காதில் அணிந்துள்ள தோடுகளைத் தாக்குகின்றதாக விளங்கும் மை தீட்டிய நீண்ட கண்கள் அசைய,

 

     வடிவுற்றது ஓர் தனம் அசைத்து ---அழகு மிக்கதான முலைகளை அசைத்து,

 

     இளைஞோர் தம் தோள் வலி --- இளைஞர்களின் தோள் வலிமையையும்,

 

     மனத்து வாள் வலி உழக்கு --- உள்ளத்தில் உள்ள ஒளி நிறைந்த வலைமையையும் கலங்கச் செய்கின்,

 

     தோகையர் மயக்கில் உழலாதே --- மயிலின் சாயலை உடைய மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு உழலாமல்படிக்கு,

 

     பாடல் இசை மிக்க ஆடல் கொடு --- இனிய இசேயோடு கூடிய பாடல்களைப் பாடி ஆடுதல் கொண்டு,

 

     பத்தியோடு நினை பத்தர் பெரு வாழ்வே --- பத்தியோடு நினைக்கின்ற அடியார்களுக்குப் பெருவாழ்வு ஆனவரே!

 

     பாவ வினை அற்று --- எனது பாவ வினைகள் தொலைந்து,

 

     உன் நாமம் நினை புத்தி --- தேவரீரது திருநாமங்களை நினைக்கின்ற புத்தியை,

 

     பாரில் அருள்கைக்கு வர வேணும் --- இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும்.

 

                        

பொழிப்புரை

 

 

            வெற்றி பொருந்தியதும்அழக மிக்கதும்நடனம் புரிகின்றதும் ஆன மயிலின் மீது இவர்ந்து,அடியார்களை ஆட்கொள்ளும் தன்மையோடு விளங்கும் முருகப் பெருமானே!

 

            ஆதிமுதற் பொருளாகிய சிவபரம்பொருளுக்கு வேதப் பொருளை முழுதும் உபதேசித்துமகிழ்வைத் தந்து அருளிய அறிவு வடிவானவரே!

 

            காம மயக்கம் கொண்டுவேடர்கள் மகளாக வளர்ந்து வந்த வள்ளிநாயகிக்கு வேலையாளாக ஏவல் புரிந்த வெற்றி வீரரே!

 

            முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி,அவர்கள் தங்கள் பொன்னுலகத்திற்கு மீளும்படி விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

            காதில் அணிந்துள்ள தோடுகளைத் தாக்குகின்றதாக விளங்கும் மை தீட்டிய நீண்ட கண்கள் அசையஅழகு மிக்கதான முலைகளை அசைத்துஇளைஞர்களின் தோள் வலிமையையும்உள்ளத்தில் உள்ள ஒளி நிறைந்த வலைமையையும் கலங்கச் செய்கின்மயிலின் சாயலை உடைய மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு உழலாமல்படிக்குஇனிய இசேயோடு கூடிய பாடல்களைப் பாடி ஆடுதல் கொண்டுபத்தியோடு நினைக்கின்ற அடியார்களுக்குப் பெருவாழ்வு ஆனவரே!

 

            எனது பாவ வினைகள் தொலைந்து,தேவரீரது திருநாமங்களை நினைக்கின்ற புத்தியைஇந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும்.

 

 

விரிவுரை

 

 

பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெரு வாழ்வே--- 

 

இறைவன் திருப்புகழை பத்தி உணர்வோடும்,இன்னிசையோடும் பாடி ஆடுதல் அடியார்களின் பண்பு என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

 

பாடி ஆடும்மெய்ப் பத்தர்கட்கு அருள்செயும்

         முத்தினை,பவளத்தை,

தேடி மால்அயன் காணஒண் ணாதஅத்

         திருவினை,தெரிவைமார்

கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நல்

         கொழுந்தே என்று எழுவார்கள்

நீடு செல்வத்தர் ஆகி இவ் வுலகினில்

         நிகழ்தரு புகழாரே.               --- திருஞானசம்பந்தர்.

 

சாடிக் காலன் மாளத் தலைமாலை

சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்

பாடி ஆடிப் பரவு வார்உள்ளத்து

ஆடி சோற்றுத் துறைசென்று அடைவோமே.

                                         --- திருஞானசம்பந்தர்.

 

பாட வேண்டும்நான் போற்றி,நின்னையே

         பாடி நைந்து நைந்து உருகி நெக்குநெக்கு

ஆட வேண்டும்நான் போற்றி,அம்பலத்து

         ஆடும் நின்கழற் போது நாயினேன்

கூட வேண்டும்நான் போற்றி,இப்புழுக்

         கூடு நீக்கு எனைப் போற்றி,பொய்யெலாம்

வீட வேண்டும்நான் போற்றி,வீடுதந்து

         அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. -- திருவாசகம்.

 

உருகியும்,ஆடிப் பாடியும்,இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும்,...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற,நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?-- திருப்புகழ்.

 

பெண்கள் தரும் சுகத்தை அச்சித்துஅவர்களைப் போற்றிக் கொண்டு,தம்மிடத்து உள்ள கொருளையும் அவர்க்கு வாரி வழங்குவதால் ஒரு பயனும் இல்லை. ஆனால்பண்ணிசையோடு கூடபித்தனே என்று இறைவனை இகழ்ந்தாலும்,அருள் புரிவான் என்பதை உணர்ந்து இறைவன் திருப்புகழைப் போற்றிப் பாடி வழிபட்டு உய்யவேண்டும்.

 

பெண்அருங் கலமேஅமுதமே எனப் பெண்

      பேதையர்ப் புகழ்ந்துஅவம் திரிவேன்,

பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ

      பயன்தரல் அறிந்துநின் புகழேன்;

கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்

      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்

தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண

      சைலனே கைலைநா யகனே.  --- சோணசைலமாலை.

 

ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில்--- 

 

ஆடல் --- வெற்றி.

 

ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே---

 

திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே,இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

 

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு,"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

 

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்வாழ்வில் மிகுந்தவன் என்றால்,எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்இப்போதுஎன் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில்,உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும்நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகுபடைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

 

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கிநான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறிவிடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

 

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

 

தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

 

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து,அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து,அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

 

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே,"அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில்,அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

 

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள்,உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,மறையினால் இசைப்பது அல்லால்".

 

என்றலும்,நகைத்து,"மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்,உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

 

"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.     --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி 

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது.ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்,மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணரமுருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்தழங்கி நின்றாடினான்.   --- தணிகைப் புராணம்.

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு,எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.   --- அபிராமி அந்தாதி.


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.  --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.  --- சிவஞான சித்தியார்.

 

வேடை மயல் உற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா--- 

 

வேடை --- வேட்கைகாமநோய்.

 

வள்ளிமலையில் இருந்த தினைப்புனத்தைக் காவல் புரிந்து இருந்பக்குவ ஆன்மாவாகிய வள்ளிநாயகியாருக்குத் திருவருள் புரிய வேண்டிமுருகப் பெருமான் அவர் இருக்கும் இடம் தேடி வந்துபோது போக்கிக் களித்தி இருந்து தக்க வேளை பார்த்து ஆட்கொண்டார். "விந்தை குறமாது வேளைக்கார" என்றும், "சுத்த மறவர் மகள் வேளைக்கார" என்றும் முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமான் தமது திருப்புகழ்ப் பாடல்களில் போற்றி உள்ளார். "திருவேளைக்காரன் வகுப்பு" என்னும் திருவகுப்பு ஒன்றையும் அருளி உள்ளார்.

 

கருத்துரை

 

முருகா! உனது திருப்புகழைப் பாடி உய்ய அருள்

 

 

 

 

 

            

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...