"விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார், வளம்பெற வாழ்வார், நின் நாமத்தைப் போற்றி, நித்தம்
அருந்தா முலைபங்கர் என்னார், அப் பாதகர் அம்புவியில்
இருந்து ஆவது ஏது கண்டாய், இறைவா கச்சி ஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! விருந்தினராக வந்தவருக்கு வேண்டிய அளவு உணவு இட மனம் கொள்ளமாட்டார். செல்வ வளத்திலே திளைப்பார். உனது திருநாமத்தைத் துதித்து வழிபாடு ஆற்றி, உண்ணாமுலை அம்மையை ஒரு பாகத்தில் உயைடவரே என்று போற்ற மாட்டார். இந்தப் பாவிகள், அழகிய இந்த நிலவுலகத்தில் வாழ்வதால் என்ன பயன் விளையும்?
விளக்கம் --- "இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு" என்றார் திருவள்ளுவ நாயனார். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனால், செல்வ வளம் மிக்க வாழ்வினைப் பெற்று இருப்பர். "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே, தப்புந பலவே" என்பதால், இருக்கின்ற செல்வத்தைக் கொண்டு இல்லாதவர்களுக்கு, வயிற்றுக்குச் சோறு இட்டு உண்டு வாழ்தல் சிறந்தது. அதைச் செய்யாமல் செல்வக் களிப்பிலே மிதந்து கொண்டு இருப்பதால், இந்த உடம்பால் பெறவேண்டிய நன்மையைப் பெற முடியாமல் போகும்.
"பொருபிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான்
தருபிடி காவல, சண்முகவா எனச் சாற்றி நித்தம்
இரு, பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒரு பிடி சாம்பரும் காணாத மாய உடம்பு இதுவே."
என்றார் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதப் பெருமான்.
உயிரை முடியுள்ள ஆணவ இருள் அகலவேண்டுமானால், அகவிளக்கை ஏற்றவேண்டும். "நல் அக விளக்கு அது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். சிவ நாமத்தைச் சொல்லாதவர்கள், தீவினையாளர் என்பதால், "சிவசிவ என்கிலர் தீவினையாளர்", என்றார் திருமூல நாயனார். "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்பதால், சிவ நாமத்தைப் போற்ற வேண்டும்.
அருந்தா முலை - உண்ணாமுலை. அருந்துதல் - உண்ணுதல்.
"உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண்ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ,
மண்ஆர்ந்தன அருவித் திரள் மழலைம் முழுவு அதிரும்,
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே"
என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
ஆக, தன்னை நோக்கியும் நோக்காதும் வந்த விருந்தினரின் பசிப்பிணியைப் போக்காது, செல்வ வளத்திலே திளைத்திருப்பவர் பாவியர். இறைவன் திருநாமத்தைப் போற்றாதவர் பாவியர். இவர்களால், தனக்கும் பயனில்லை. பிறருக்கும் பயனில்லை. ஆதலால், இவர்கள் உலகத்தில் இருந்து ஆகவேண்டியது என்ன உண்டு என்பார், "பாதகர் அம்புவியில் இருந்து ஆவது ஏது கண்டாய்" என்றார்.
No comments:
Post a Comment